ஹஜ் விதிமுறைகளை மீறியவர்கள் கைது.....!
மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.....!!
ஜித்தா ஏப்.30- ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாத நபர்கள் மக்காவிலும் புனிதத் தலங்களிலும் நுழைவதையோ அல்லது தங்குவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறுபவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத புனிதப் பயணங்களுக்குத் துணை நிற்பவர்கள் கைது மற்றும் சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பாதுகாப்பு படைகள் எச்சரித்துள்ளன.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் அனுமதிச் சீட்டு கட்டாயம் பெற வேண்டும் என சவூதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மக்காவில் நுழைய அனுமதிச் சீட்டு கட்டாயம் என்ற விதி தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
தொடரும் கைது நடவடிக்கை :
இந்நிலையில், மக்காவிற்குள் நுழைவதற்கான போலி அனுமதிச் சீட்டுகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் மோசடியான மற்றும் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, யேமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை மக்கா காவல்துறை கைது செய்தனர். இதேபோன்று, மற்றொரு சம்பவத்தில், ஹஜ் அனுமதிச் சீட்டு பெறாமல் மக்காவிற்குள் நுழைந்து தங்கியதன் மூலம் ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஐந்து பேரை மக்கா காவல்துறை கைது செய்தது.
மேலும், ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஐந்து சக நாட்டுக்காரர்களை ஏற்றிச் சென்று மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் ஹஜ் பாதுகாப்புப் படைகள் கைது செய்தன.
மற்றொரு சம்பவத்தில், ஒரு சரக்கு வாகனத்தில் மறைக்கப்பட்ட அறைகளில் இரண்டு சக எகிப்தியர்களை ஏற்றிச் சென்று ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்தன. இதேபோன்று, ஹஜ் விதிமுறைகளை மீறி ஆறு குடியிருப்பாளர்களை மக்காவிற்குள் அழைத்துச் செல்ல முயன்றதற்காக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை :
ஹஜ் பருவம் தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பான மற்றும் சுமுகமான புனிதப் பயணத்தை உறுதி செய்வதற்காக, அனுமதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 18 முதல் மே 31 வரை மக்கா அல்லது புனிதத் தலங்களுக்குள் நுழையும் அல்லது தங்கியிருக்கும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் உட்பட, அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்களுக்கு 20 ஆயிரம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே காலகட்டத்தில், அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்கள், அல்லது மக்கா மற்றும் புனிதத் தலங்களுக்குள் நுழைபவர்கள் அல்லது தங்குபவர்களுக்காக விசிட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட விதிமீறல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்படும்.
இந்தக் காலகட்டத்தில் வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கோ அல்லது புனிதத் தலங்களுக்கோ ஏற்றிச் செல்பவர்கள் அல்லது ஏற்றிச் செல்ல முயற்சிப்பவர்களுக்கும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும்.
வருகை விசா வைத்திருப்பவர்களுக்குத் தங்குமிடம் வழங்குபவர்கள் அல்லது வழங்க முயற்சிப்பவர்கள், அல்லது அவர்களுக்கு உதவுபவர்கள் அல்லது அவர்களை மறைத்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தண்டனைகள் அதிகரிக்கும்.
கடுமையான தண்டனை அறிவிப்பு :
குடியிருப்பாளர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் உட்பட ஊடுருவுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு இராச்சியத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கும் புனித தலங்களுக்கும் அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தால், அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கா, ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் 911 என்ற எண்ணிலும், இராச்சியத்தின் பிற பகுதிகளில் 999 என்ற எண்ணிலும் அழைத்து, ஹஜ் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், விதிமீறுபவர்களைப் பற்றித் தெரிவிக்குமாறும் பொதுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகம் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் வலியுறுத்தியுள்ளது.
எனவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மக்கா, மதீனாவிற்கு செல்லும் பயணிகள் அனைவரும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, சிறப்பான முறையில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். விதிகளை மீறினால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment