தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
வாணியம்பாடி தொகுதியில் இந்தமுறை ஏணி சின்னதை வெற்றிபெறச் செய்யுங்கள்.....!
பெரும்பான்மை சமுதாய மக்களுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உருக்கமான வேண்டுகோள்....!!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், வாணியம்பாடி தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகிற்கு ஆதரவாக அண்மையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், எச்.அப்துல் பாசித், வாணியம்பாடி தொகுதியின் பாரம்பரியம், வரலாறு, முக்கியத்துவம் ஆகியவை குறித்து மிகவும் சுருக்கமாகவும் அதேநேரத்தில் வீரியமாகவும் ஏராளமான தகவல்களை எடுத்துக் கூறினார். எச்.அப்துல் பாசிதின் உரையின் முழு விவரம் வருமாறு:
கல்விக்கு முக்கியத்துவம் :
தமிழ்நாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெண்களின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு சமுதாய மக்களின் குழந்தைகளும் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக குழந்தைகள் பசியில்லாமல் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று காலை உணவுத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்து நல்ல கல்வியை பெற்று வருகிறார்கள்.
இதேபோன்று, உயர்கல்விக்கும் திமுக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சிறுபான்மையின மக்களின் உயர்கல்விக்காக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வியின் மூலம் உலகை ஆள முடியும் என்பதை மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் திமுக அரசு மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன் பலன் தற்போது தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது.
வாணியம்பாடியும், இ.யூ.முஸ்லிம் லீகும் :
வாணியம்பாடிக்கும் முஸ்லிம்களுக்கும், இ.யூ.முஸ்லிம் லீகிற்கு ஒரு பாரம்பரியமான நீண்ட தொடர்பு இருந்து வருகிறது. வாணியம்பாடி தொகுதி என்பது திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வரும் தொகுதியாகும். இது தான் இந்த தொகுதியின் வரலாறு. இந்த தொகுதியில் வெற்றிபெற்ற அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும், பெரும்பான்மை சமுதாயத்தின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்காக உழைத்தவர்கள். இதேபோன்று இங்கு போட்டியிட்ட பெரும்பான்மை சமுதாய மக்கள் கூட, சிறுபான்மை சமுதாய மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றது வரலாறு ஆகும்.
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மட்டுமல்ல, அனைவரும் எல்லாமும் பெற்று அமைதியாக வாழ ஒரு நல்லாட்சி கிடைக்க வேண்டும். அந்த நல்லாட்சி வட மாநிலங்களில் உள்ள அடிமை ஆட்சியாக இல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்ல ஆட்சியாக மீண்டும் அமைய வேண்டும். அதற்காக நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டும். அந்த உறுதியான நம்பிக்கையோடு நாம் பணியாற்ற வேண்டும்.
சகோதரத்துவம் மதநல்லிணக்கம் :
நம்முடைய ஒரே குறிக்கோள் சகோதரத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவையாகும். மதம் என்பது மனிதனின் அடையாளம் அல்ல. அது வழிப்பாட்டின் அடையாளம். இப்போது நாம் அனைவரும் இணைந்து வாழ வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்யக் கூடிய ஒரு கூட்டம் நாட்டில் இருந்துகொண்டு இருக்கிறது. அத்தகைய கூட்டம் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த மூன்று முறை வாணிம்பாடி தொகுதி மக்கள் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள். எனினும் அந்த ஆதரவு வெற்றியாக மாறவில்லை. அது காலத்தின் கொடுமை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த முறை நான் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய அருமை சகோதரருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
உருக்கமான வேண்டுகோள் :
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய சமுதாயம் இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க இஸ்லாமிய சமுதாயம் முடிவு செய்துவிட்டது. எனவே பெரும்பான்மை சமுதாயத்தை நம்பி தான் வாணியம்பாடியில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடுகிறது. பெரும்பான்மை வாழ வேண்டும் சிறுபான்மை வாழ வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மதத்தை வைத்து இந்த நாட்டை பிளப்படுத்த ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். சட்டத்தை மதித்து நடக்கிறோம். நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள் என்ற உணர்வோடு வாழ்கிறோம். எங்களுடைய ஒற்றுமையை யாராலும் சிதைக்க முடியாது. நம்மை யாரும் பிரிக்க முடியாது. அந்த உண்மையை உணர்ந்து இறைவனை வணங்கி வாழ்வோம். எளியோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடன் இணைந்து வாழ்ந்வோம்.
எனவே வாணியம்பாடி தொகுதி மக்கள் அனைவரும் இந்த முறை கலைஞரின் அன்பு தம்பி பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் சின்னமான, ஏணி சின்னத்திற்கு அவசியம் ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும். உங்களுடைய எண்ணங்கள், வண்ணங்கள் மாறலம். ஆனால் தமிழகத்தில் தமிழன் தான் ஆள வேண்டும். எனவே நீங்கள் ஏணி சின்னத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மூன்று முறை நாங்கள் உங்களை நம்பினோம். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறையும் நாங்கள் உங்களை நம்பி வந்திருக்கிறோம். அந்த நம்பிக்கை நிச்சயம் வெற்றியாக மாறும் என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம். ஜோலார்பேட்டை தொகுதிகளில் நம்முயை மாவட்ட செயலாளர் தேவராஜ் கடந்த முறை போட்டியிட்டபோது நான் அங்கு சென்று அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதன்.
நாங்கள் இன்பம், துன்பங்கள் ஆகிய அனைத்து காலங்களிலும் பெரும்பான்மை சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே அந்த உரிமையோடு கேட்கிறோம். ஏணிக்கு இந்தமுறை வாய்ப்பு தாருங்கள். கேரளத்தில் 21 இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நாம் நிற்கிறோம். அவர்கள் இருவரும் சட்டப்பேரவைக்கு அவசியம் செல்ல வேண்டும். எனவே இந்த முறை முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
மனிதன் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இ,.யூ.முஸ்லிம் லீக் மாநாட்டில் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அந்த கருத்தை உள்வாங்கிக் கொண்டு, நீங்கள் ஏணி சின்னத்திற்கு ஆதரவு வழங்குகள். உங்களுடைய தோழனாக, நண்பனாக, நீங்கள் கூப்பிடும்போது வரக் கூடியவராக வாணியம்பாடி வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் இருப்பார். தாய்ச்சபை முஸ்லிம் லீகின் பெருமையை அவர் நிச்சயம் காப்பாற்றுவார். எனவே அவரது வெற்றி என்பது உங்களால் தான் முடியும். வாணியம்பாடியில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆதரவு பெற்ற ஏணி சின்னம் ஏற்றம் பெற வேண்டும். வெற்றி வாகை சூட வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு எச்.அப்துல் பாசித் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment