Friday, April 3, 2026

திமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு....! 

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம், மிகமிக வித்தியாசமான ஒரு களமாக இருந்து வருகிறது. ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒவ்வொரு தேர்தல் திருவிழாவிலும், இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்கு விருப்பமான அணிக்கு அல்லது கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கி, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால், இந்த முறை, முதல்முறையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ள பிற முஸ்லிம் அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

களப்பணி ஆற்ற முடிவு :

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட பல இயக்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் அமைப்புகளும் திமுக அணிக்கே ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம் இயக்கங்களில் பட்டியல் ஒரு மிகப்பெரிய நீண்ட பட்டியலாக இருந்து வருகிறது.  இப்படி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் களப்பணி ஆற்றுவது என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தீர்மானம் செய்துள்ளன.  தீர்மானம் செய்ததோடு நிற்காமல், களப்பணி ஆற்றவும் செயலில் இறங்கி மிகமிக உறுதியோடு தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றன. 

திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன் ?

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க ஏன் முன்வந்து இருக்கின்றன? அதற்கு என்ன காரணம்? என்ற பல கேள்விகளை எழுப்பினால், அதற்கு முக்கிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அதாவது, தமிழ்நாட்டில் தற்போது  இருக்கும் மதநல்லிணக்கம், அமைதி ஒருபோதும் சீர்குலைந்து போய்விடக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்புகின்றன. அதனால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறலாம். வட மாநிலங்களில் சில பாசிச அமைப்புகள் சிறுபான்மையின மக்கள் மீது விரோதம் கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு நிலைமை தமிழகத்தில் வரவேக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் நினைக்கின்றன. அமைதியை விரும்புகின்றன.  மேலும் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக சிறுபான்மையினரின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. 

குறிப்பாக, இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தது. தமிழ்நாடு உர்தூ அகாடமியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் திமுக அரசு வழங்கியது. நிதியுதவி செய்தது. வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் கட்சியாக திமுக இருந்தது. அதுதொடர்பான போராட்டங்களிலும் திமுக தலைமை ஏற்று நடத்தியது. 

மேலும், தமிழ்நாட்டில் மஸ்ஜித்துகள் கட்ட உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி உத்தரவிட்டது. முஸ்லிம்களுக்கான கபரஸ்தானுக்கு தேவையான நிலத்தை வழங்க நடவடிக்கை என பல்வேறு திட்டங்களை திமுக அரசு எடுத்தது. அதைவிட முக்கியமான விஷயம், தமிழகத்தில் மத மோதல்கள் நடக்க ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்கவில்லை. மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக அமைதியாக, சகோதர பாசத்துடன் வாழ திமுக அரசு பணிகளை ஆற்றியது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் சென்று கல்விப் பயில கல்வித் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அருமையான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது. 

இப்படி நிறைய பணிகளை திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த காரணத்தினால் தான், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் திமுகவிற்கு ஆதரவாக தற்போது தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்பி, அதற்கு துணையாக நின்று உழைக்க முன்வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு குறைகள் இருந்தாலும், மாநிலத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து செய்து வருகிறது. அதில் சமரசம் செய்துகொள்ளாமல் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது. 

இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால், உடனே வந்து நின்று குரல் கொடுக்கும் கட்சியாக திமுக உள்ளது. எனவே தான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன என்று கூறலாம். 

பிற முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு :

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் இத்தகைய முடிவை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் எடுத்து இருக்கின்றன. அத்துடன், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு வழங்க முன்வந்து இருப்பது, திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். திராவிட மாடல் ஆட்சியில் நிறைய முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன. பெண்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஆர்வம் செலுத்தும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுத்துறையில் முஸ்லிம் இளைஞர்கள் சாதிக்க முன்வந்தால், அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் உலக அரங்கில் இஸ்லாமிய இளைஞர்கள் சாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக தான், இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. 

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் அவற்றில் ஒருசில அமைப்புகளை தவிர மற்ற அமைப்புகள், பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன என்று கூறலாம். இப்படி பெயரளவில் இயங்கும் அமைப்புகள் கூட, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது, திமுக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றே கூற வேண்டும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று கூறலாம். இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையின அமைப்புகள் கூட திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளன. இது திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: