தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி.....!
தமிழ்நாட்டில் 17வது சட்டமன்றத் தேர்தல் களம் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றபிறகு, ராக்கெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கும் வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவுபெற இன்னும், 14 நாட்களே எஞ்சியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து, வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் கூட, 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இப்படி, சட்டமன்றத் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், இந்த முறை அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் மொத்தம் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளன என்ற தகவல்களையும் முஸ்லிம் சமுதாயம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதன் மூலம், தேர்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை நாம் உறுதி செய்ய முடியும். இப்படிப்பட்ட சில புள்ளிவிவரங்களை, தகவல்களை இஸ்லாமிய சமுதாயம் அவசியம் அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே, சமுதாயத்தில் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படும். அதன்மூலம் சமுதாயம் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு, இனிவரும் காலங்களில் மிகச் சிறந்தமுறையில் செயல்பட வாய்ப்பு உருவாகும்.
முஸ்லிம் வேட்பாளர்கள் சில சுவையான தகவல்கள் :
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிட்டார்கள் என்ற ஒரு சுவையான தகவல்களை கொஞ்சம் அலசி ஆராயந்தால், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 5 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. பின்னர் 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், இந்த எண்ணிக்கை சரிய தொடங்கியது. 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க 3 முஸ்லிம் வேட்பாளர்களையும், அ.தி.மு.க ஒரு முஸ்லிம் வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது.
தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகம் சுமார் 6 முதல் 7 சதவீதம் வரை இருந்தபோதிலும், இந்த இரு முக்கிய திராவிடக் கட்சிகளில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் காலப்போக்கில் சுருங்கி வருவதாகவே தெரிகிறது. குறிப்பாக அ.தி.மு.க.வில் இது அதிகமாக உள்ளது. கடந்த 2 ஆண்டு கால தரவுகள், இரு கட்சிகளும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி இருந்தாலும், 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க 7 முஸ்லிம் வேட்பாளர்களையும், அ.தி.மு.க 4 முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தின. இவர்கள் அனைவரும் அந்தந்தக் கட்சிகளின் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட்டனர். தொடர்ந்து 2011 தேர்தலில் தி.மு.க மீண்டும் 7 வேட்பாளர்களையும், அ.தி.மு.க 3 வேட்பாளர்களை நிறுத்தியது. அடுத்து 2016 தேர்தலில் இரு கட்சிகளும் தலா 5 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. 2021 தேர்தலில், இந்த எண்ணிக்கை சரிய தொடங்கி, தி.மு.க 3 முஸ்லிம் வேட்பாளர்களையும், அ.தி.மு.க ஒரு முஸ்லிம் வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது.
தேர்தல்களின் போது தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம், அந்தச் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தைச் சமன்படுத்த முயற்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 2026 தேர்தலில் அவர்களின் பங்கு 2 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு 2021-ல் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2026 தேர்தலில் அவர்கள் கூடுதல் இடங்களை கேட்ட போதிலும் அதே 2 இடங்களே வழங்கப்பட்டுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் :
வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கும், தி.மு.க 4 முஸ்லிம் வேட்பாளர்களையும், அ.தி.மு.க ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் மட்டுமே அறிவித்துள்ளது. 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவாகும். குறிப்பாக, அ.தி.மு.க கடந்த தேர்தலிலும் 2021 மற்றும் 2026 தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை மட்டுமே நிறுத்தியுள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்குப் பிறகு இந்த வீழ்ச்சி மிகவும் வெளிப்படையாகத் தெரிவதாகக் கருதப்படுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளன என்பதை ஒரு புள்ளிவிவரம் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். திமுக 4 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 பேரையும், இ.யூ.முஸ்லிம் லீக் 2 பேரையும் மனிதநேய மக்கள் கட்சி 2 பேரையும் வேட்பாளர்களாக அறித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்,டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா ஒரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளன.
ஆக மொத்தம் 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மட்டும் 13 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் மொத்தம் 16 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவரது கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தற்போது 13 பேர் போட்டியிடுவது கொஞ்சம் ஆறுதல் அளிக்கவே செய்கிறது.
திமுக கூட்டணி முஸ்லிம் வேட்பாளர்களின் விவரங்கள் :
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக பாளையங்கோட்டை தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அப்துல் வஹாப்பையே மீண்டும் நிறுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் தொகுதியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரகுமான் கானின் மகன் டாக்டர் சுபேர் கானுக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. செஞ்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இதேபோன்று சென்னை ஆவடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஆவடி நாசருக்கு திமுக தொகுதியை ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமை, சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஹெச்.எம்.ஹசன் மௌலானாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜமால் யூனுஸ் முஹம்மது என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். பாரம்பரியம் மிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் மிகச் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியுள்ளது. அதன்படி, பாபநாசம் தொகுதியில், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாரம்பரியமான வாணியம்பாடி தொகுதியில், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் இருவரும் இயக்கத்தின் தனிச் சின்னமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
இதேபோன்று, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றான நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின் தலைவர் முனைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த முறை பாபநாசம் தொகுதியில் போட்டியிட அவர், இந்த முறை, நாகப்பட்டினம் தொகுதியில் களம் காண்கிறார். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல் சமத் மீண்டும் போட்டியிடுகிறார். மமக வேட்பாளர்கள் இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
தோழர் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பண்ருட்டி தொகுதியில், எம்.பி.ஏ., பட்டதாரியான அப்துர் ரஹ்மானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கட்சியின் தனிச் சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக் கட்சியின் சார்பில் சிதம்பரம் தொகுதியில், தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். மற்றொரு கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆக 2026 தமிழ்நாடு சட்மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 13 முஸ்லிம் வேட்பாளர்களில் 8 பேர் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் மற்ற 5 வேட்பாளர்கள் தங்களது கட்சியின் தனிச் சின்னத்திலும் களம் காணுகிறார்கள்.
வெற்றிவாய்ப்பு பிரகாசம் :
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 13 முஸ்லிம் வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தை அலங்கரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயம் விரும்புகிறது. இதன்மூலம் சமுதாயத்தின் குரல் சட்டமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்று உறுதியாக நம்பலாம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. அத்துடன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும், நல்ல ஒத்துழைப்பை வழங்கி, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது உழைத்து வருகிறார்கள்.
அதன் காரணமாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 13 முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏக இறைவன் விரும்பிவிட்டால், இந்த 13 பேரின் வெற்றியை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 13 முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதற்கு நாம் ஏக இறைவனை பிரார்த்திப்போம். சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, உறுதியான நம்பிக்கையுடன் ஏக இறைவனிடம் துஆ கேட்போம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்














No comments:
Post a Comment