Saturday, April 4, 2026

2026 சட்டமன்றத் தேர்தலும், திமுக தேர்தல் அறிக்கையும்....!

  " 2026 சட்டமன்றத் தேர்தலும், திமுக தேர்தல் அறிக்கையும் "

- ஜாவீத் -

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 23ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 23க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எனவே இதுஒரு மெகா கூட்டணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட சில இயக்கங்கள் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாய சூழல் உருவானது. அதன்படி கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட தற்போது குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டின் நலன் தான் மிகவும் முக்கியம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இ.யூ.முஸ்லிம் லீக் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. 

திமுக தேர்தல் அறிக்கை :

இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அதன்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். அதில் பல முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகள், அறிவிப்புகளோடு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக, வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லததரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்., அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்., புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் உருவாக்கப்படும்., நெல் கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்பன உள்ளிட்ட 525 அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

சிறுபான்மையின மக்களுக்கான வாக்குறுதிகள் :

வழக்கம் போல, தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன. திமுக தேர்தல் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வாழும் மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின்  உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை 1989-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைத்தார்கள். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 2010-ஆம் ஆண்டு  நிறைவேற்றினார்கள். 

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக  சென்னை நங்கநல்லூரில், 65 கோடிரூபாய்  மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக  மானியமாக 80 இலட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனாளி  ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக அரசு 24 கோடியே 56 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள்  வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில்  405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டுள்ளது என கடந்த காலங்களில் மட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் சில தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான வாக்குறுதிகள் :

இதன் தொடர்ச்சியாக,  திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் பணிகள், திட்டங்கள் குறித்தும் திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முக்கிய அறிவிப்புகள் குறித்து நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். 

1. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள்  அமைக்கப்படும்.

2. சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

3. சிறுபான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு சிறப்புத் திறன் பயிற்சி  வகுப்புகள் துவக்கப்படும். ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு இப்பயிற்சி  வழங்கப்படும்.

4. இசுலாமிய மக்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.

5. சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

6. இசுலாமியப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃபு வாரியத்தின் வாயிலாக  கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும்.

7. சிறுபான்மையினர் அயலக பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மையினருக்கும் ஒரு புதிய திட்டம்  உருவாக்கப்படும்.

8. சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு  30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

9. பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக்  கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று  வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும்  செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

10. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உருது ஆசிரியர்  பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைந்து நிரப்பப்படும். 

மனதை கவரும் அறிவிப்புகள் :

இப்படி, இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் மனதை கவரும் பத்து அறிவிப்புகளை 2026 திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பத்து அறிவிப்புகள், வாக்குறுதிகள் அடுத்துவரும் திமுக ஆட்சியில் நிச்சயம் நிறைவப்படும் என்று இஸ்லாமிய சமுதாயம் உறுதியாக நம்புகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ள பத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டால், உண்மையில் இஸ்லாமிய சமுதாயம் ஆனந்தம் அடையும். இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் உருவாகும். 

எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தையும் முஸ்லிம் சமுதாயம் நன்கு உள்வாங்கிக் கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பதை தங்களது ஜனநாயகக் கடமையாக கருத வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று முதல் பணியாக வாக்கு அளிக்க வாக்குச்சவாடிகளுக்குச் செல்ல வேண்டும். 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதுடன், ஜனநாயக நெறிமுறைகள் சிறந்த முறையில் அமைய இஸ்லாமிய சமுதாயம் முழு ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். 

=======================================


No comments: