Saturday, April 4, 2026

பேராசிரியர் சேமுமு முகமதலி பேட்டி...!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு  வரலாற்று வெற்றி  நிச்சயம் கிடைக்கும்....!! 

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர்  பேராசிரியர் சேமுமு முகமதலி பேட்டி.....!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் ஆதரவு வழங்க தீர்மானம் நிறைவேற்றி இருப்பதுடன், தேர்தல் களப்பணியிலும் இறங்கி தீவிரம் காட்டி வருகிறது. இயக்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.மன்சூர், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு முகமதலி, மாநில பொருளாளர் எல்.எம்.ஹபீப் முஹம்மது உட்பட தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தில் இணைந்துள்ள அனைவரும் தமிழகத்தின் நலன் மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, முஸ்லிம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு முகமதலியை, மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து, வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எத்தகைய முறையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி, பணிகளை மேற்கொள்ளும் என்பதை அறிய விரும்பி நேர்காணல் ஒன்றை  நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

அனைவரும் இணைந்த இயக்கம் :

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் கடந்த 27 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. எந்தவித அரசியல் சார்பு இல்லாமல், சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து சமுதாய மக்களிடைய கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நல்ல பணிகளை இயக்கம் செய்து வருகிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழை மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்திச் செய்வது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவது, நிதியுதவி அளிப்பது என பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்களும் அங்கத்தினர்களாக உள்ளனர். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை, சமுதாய மக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்கம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் உள்ள தங்களது பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்குச் சென்று,  சட்டப்பேரவைத் தேர்தலின் முக்கியத்துவம், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அவசியம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நூறு சதவீத வாக்கு பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் குறித்தும் நாங்கள் மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் விளக்கம் அளித்து வருகிறோம். 

திமுக அணிக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் :

மேலும், இஸ்லாமிய சமுதாயத்திற்கு யார் உறுதுணையாக இருப்பார்கள்? தற்போது யார் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்? என்பது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், இயக்கத்தின் தார்மீக பொறுப்பை நன்கு உணர்ந்து நாங்கள் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறோம். 

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் என்பது, மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகள், தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் அடைய விரும்புகின்றன. வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சதிகளை போன்று தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளையும் சதிகளையும் முறியடிக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இயக்கத்தின் பொறுப்பு மற்றும் கடமையாகும். அதை உணர்ந்து தான் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தேர்தல் களப்பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. 

தமிழ்நாட்டின் பாரம்பரியம், மரபு, பண்பாடு, மனிதநேயம், ஒற்றுமை, அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க நடக்கும் சதிகளை நாம் முறியடிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயலாற்றி வருகிறது. ஆதிக்க தீயச் சக்திகளிடம் இருந்து தமிழ்நாடு பாதுகாக்கப்பட வேண்டியது மக்களின் பொறுப்பாகும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும். அது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழர்களின் பொறுப்பாகும். 

தவெகவின் திட்டம் நிச்சயம் நிறைவேறாது :

சினிமா கவர்ச்சியை வைத்து தமிழகத்தில் வெற்றி பெறலாம் என தமிழக வெற்றிக் கழகம் நினைக்கிறது. அந்த முயற்சி, எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. மக்கள் தற்போது மிகத் தெளிவாக இருந்து வருகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பாசிச சக்திகள்  நடிகர் விஜய்யை களத்தில் இறக்கியுள்ளன.  இதை நாம் மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக, இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த பணிகளை தான் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செய்து வருகிறது. 

234 தொகுதிகளிலும் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு தமிழ்நாடு மக்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களின் அரணாக திமுக எப்போதும் இருந்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்களின் நலனில் திமுக அக்கறை கொள்கிறது. இதை உணர்ந்து தான் திமுக அணிக்கு கிடைக்க வேண்டிய இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்க சதி நடந்து வருகிறது. அதை நாம் முறியடித்து வருகிறோம். 

திமுக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி கிடைக்கும் :

மக்களிடையே குறிப்பாக, முஸ்லிம் மத்தியில் நமது இயக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தவெகவிற்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் என்பதை மக்கள் மத்தியில் விளக்கமாக கூறி வருகிறோம். இதன்மூலம் தவெகவால் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பை உணர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும் திமுக அணிக்கு ஒற்றுமையாக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பதிவு செய்யும் என்று  நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

இவவாறு பேராசிரியர் சேமுமு முகமதலி தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துக் கூறி நாம் விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: