Wednesday, April 1, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லியை தமிழ்நாடு அணி வெல்லும்....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி அணியை, தமிழ்நாடு அணி வெல்லும்....!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதி....! 

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா, தற்போது பெருவிழாவாக களைகட்டியுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விறுவிறுப்பு அடைந்துள்ளது. அத்துடன், தேர்தல் பிரச்சாரமும், சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் தாண்டி அனல் பறந்துகொண்டிருக்கிறது. 

இத்தகைய சூழ்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், முஸ்லிம் லீகின் ஏணி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். 

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே போட்டி :

தனது பிரச்சாரத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை போன்ற ஒரு போட்டி என வர்ணித்தார். அதன்படி இந்த தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டப் பணிகளை பட்டியலிட்டார். தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், குறிப்பாக சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தான் நாம் இந்த தேர்தலை டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என குறிப்பிடுகிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

திமுக - முஸ்லிம் லீக் உறவு :

குறிப்பாக, சிறுபான்மையின சமுதாய மக்களுக்காக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளையும், திட்டங்களையும் தனது பேச்சில் குறிபிட்ட உதயநிதி ஸ்டாலின், திமுகவிற்கும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு உள்ள உறவு தேர்தல் காலத்தில் ஏற்பட்ட உறவு இல்லை என தெரிவித்தார். இந்த உறவு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் காலத்தில் தொடங்கி, தற்போது திமுக தலைவர் தளபதி  மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக்  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், வரை தொடர்கிறது என்று அவர் பெருமையாக கூறினார். 

வாணியம்பாடியின்  முக்கியத்துவம் : 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நயீம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். ஆனால், வாணியம்பாடி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. தற்போது வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் அன்பு அண்ணன் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் அவர்களின் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும். தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்து இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். 

அவரை வெற்றிபெறச் செய்வது ஒவ்வொரு திமுக உறுப்பினர்களின் கடமையாகும். தலைவர் தளபதி அவர்களின் விருப்பத்தையும் உத்தரவையும் திமுகவினர் அனைவரும் ஏற்றுக் கொண்டு, வாணியம்பாடி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். திமுகவிற்கு எப்போதும் தோழமையாக இருக்கும், இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் இரண்டு பேரும் இந்தமுறை சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெறும். அந்த வெற்றியில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் இருப்பார்கள். 

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: