Wednesday, April 1, 2026

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான்....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:


அமைச்சர் கே.என்.நேருவிற்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம்.....!

தமிழ்நாட்டில் மீண்டும் நிச்சயமாக திமுக ஆட்சி தான் அமையும்....!!

இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்

கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் பேச்சு.....!

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாத்தில் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் களப் பணியில் இறங்கி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.. குறிப்பாக, திருச்சியில் உள்ள திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

செயல்வீரர்கள் கூட்டம்:

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோரை, இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் நேரில் சந்தித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் வெற்றிக்காகவும் இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று உறுதி அளித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், திருச்சி மேற்குதொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவிற்கு ஆதரவாக திருச்சியில் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இ.யூ.முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தினர்.

கொள்கையே முக்கியம் :

செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான், இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் திமுகவிற்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டணி உறவு, அரசியலையும் தாண்டி, கொள்கை அடிப்படையிலான உறவு என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவுடன் இ.யூ.முஸ்லிம் லீக் கூட்டணி வைத்து இருப்பது அதிகாரத்தில் வர வேண்டும் என்ற ஆசையுடன் இல்லை. திமுக மற்றும் இ.யூ.முஸ்லிம் லீகின் கொள்கை, இலக்கு ஆகியவை இரண்டு இயக்கங்களுக்கும் ஒத்துபோகின்றன. நாட்டில் தற்போது அமைதியை சீர்குலைத்து மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை திமுக கடுமையாக எதிர்க்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு தோழனாக திமுக இருந்து வருகிறது. எனவே தான் கொள்கை அடிப்படையில் நாங்கள் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து வருகிறோம்.

தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல :

திமுகவுடன் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்து இருக்கும் காரணத்தினால் தான், தொகுதி எண்ணிக்கை குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் கவலைப்படவில்லை. எனவே தான் பல தியாகங்களை செய்து, தற்போது இரண்டு தொ.குதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடுகிறது. எங்களது இலக்கு, இலட்சியம் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியே மலர வேண்டும் என்பதாகும். பாசிசம் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்பது தான்.

நாட்டில் அமைதியை சீர்குலைத்து அதன்மூலம் அரசியல் லாபம் அடைய பாசிச சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. அதை தடுத்து நிறுத்தும் சக்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மட்டும் தான் உள்ளது. டெல்லியின் சதிகளை, பாஜகவின் அரசியல் விளையாட்டுகளை வலிமையான திமுக அணியால் தான் வீழ்த்த முடியும்.

மீண்டும் திமுக ஆட்சி :

தமிழ்நாட்டில் தற்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் திமுக ஆட்சியை மலர வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மிகச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டிலேயே சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன், அமைதியாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு ஒரே காரணம் திமுக அணி தான். எனவே தான் மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதை முடிவு செய்துவிட்டார்கள். அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பு ஏற்றுக் கொள்வார் என்பது உறுதி.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் மலர, இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் 234 தொகுதிகளிலும் கடுமையாக உழைப்பார்கள். அதற்கான பணிகளை தற்போது தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வரை நிச்சயம் செய்வார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் பேசினார்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: