Friday, February 8, 2013

கொடுக்கும் விலை..........


கொடுக்கும் விலை

கொஞ்சம் அதிகம்…!!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி.

போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள்..

நான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என இந்தியாவிலும் ஏராளமான திட்டங்கள்  நடைமுறையில் இருந்து வருகின்றன….

டெல்லியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை என அனைத்து முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்…

நாட்டின் அனைத்து நகரங்களிலும் கட்டப்பட்டு வரும் ஏராளமான மேம்பாலங்கள்….


இவையெல்லாம், மக்களின் நலன்களுக்காகவே செய்வதாக மத்திய, மாநில அரசுகள் சொல்லிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் இப்படிதான் சொல்லப்படுகிறது. அது முற்றிலும் மறுக்க முடியாத உண்மைதான்.

ஆனால், இந்த திட்டங்களுக்காக மிகப் பெரிய விலையை மனித சமுதாயம் தந்துக் கொண்டிருக்கிறது.

ஆம். வளர்ச்சி பணிகளுக்காக இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பசுமை வளம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அடர்த்தியாக இருந்த வனவளம் தற்போது மெலிந்து வருகிறது.

மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வனவளத்தை குறித்து ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழங்ககளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இந்த ஆராய்ச்சியாளர்கள், வனவளம் குறித்து துள்ளியமாக ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த பல தகவல்கள், ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.


இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, மக்களின் நன்மைக்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நட்டு, பசுமையாக வளர்ந்து ஆண்டாண்டு காலமாக பலன் அளித்து வந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிச்  சாய்க்கப்பட்டன.

நான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என பல சாலைகள் வந்தது என்னவோ உண்மைதான்…. வாகனங்கள் அதிவேகத்தில் சென்று, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே இலக்கை அடைவது மக்களுக்கு நல்ல வசதியாகதான் இருக்கிறது.

ஆனால், அதற்கு மனிதன் கொடுக்கும் விலை…. ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் அதிர்ச்சியூட்டும் பட்டியலை பார்ப்போமா….

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான மிகப் பெரிய ராட்சத மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

இந்த அற்புதமான அதிசய மரங்களின் வயசு என்ன தெரியுமா… 100 முதல் 300 ஆண்டுகள்…



300 ஆண்டு காலமாக மக்களுக்கு நிழலாக, இருந்து,  இயற்கையை தூய்மைப்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான நல்ல மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை… ஐரோப்பிய நாடுகள்… வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் ஆசிய நாடுகள் என உலகின் அனைத்து நாடுகளிலும் வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது என பட்டியலிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்…

வனவளம் திடீரென ஏற்படும் காட்டுத் தீயால்  மட்டும் அழிக்கப்படுவதில்லை.

மனிதன் சுயநலத்திற்காக திட்டமிட்டு வனவளத்தை அழித்து வருகின்றான் என்பது ஆராய்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு.


வனவளம் குறித்து சுவிடன் நாட்டில் கடந்த 1890ஆம் ஆண்டு பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன..

இந்த ஆவணங்களில் உலகம் முழுவதும் இருந்த, இருக்கும் வனவளம்… இயற்கை வளம். மிகப் பெரிய மரங்கள்… நூறு வயதை கடந்த மரங்கள் ஆகியவை குறித்து பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சுவீடன் நாட்டின் இந்த ஆவணங்களில் உள்ள மரங்கள் தற்போது உலகில் உள்ளதா என்றால்… நிச்சயம் இல்லை என்ற பதிலே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, மெல்ல மெல்ல பசுமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால், சுவீடன் ஆவணங்களில் இந்த அரிய மரங்கள் குறித்து தற்போது உள்ள தகவல்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.  


இது ஆஸ்திரேலிய, அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

காட்டுத் தீயால் மட்டும் அல்லாமல், மனிதன் செயல்படுத்தும் திட்டங்களால், 10 மடங்கு வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது.

இப்படி தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால், பசுமை வளத்தால், பூமியின் வெப்பத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால், நீர்வளம் குறைந்து வேளாண்மை பாதிப்பு அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான போக்கு என எச்சரிக்கிறார் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக பேராசிரியர் பில் லாரன்ஸ்.(Bill Laurance. James University)
வனவளங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை, வனவளங்கள் அழிக்கப்படுவதால், பறவை இனங்களும் அழிந்து வருவது என்பதுதான்.  உலகம் முழுவதும் பல்லாயிரணக்கான ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி திரிந்த அரிய வகை பறவை இனங்கள் பல, தற்போது, அழிக்கப்பட்டு வரும் பசுமை வளத்தால், அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
பெரிய மரங்கள், வனவளம்,  பறவை இனங்களுக்கு நிழலாக மட்டுமல்லாமல், தங்குவதற்கு இடம் வழங்கி, நல்ல உணவை அளித்து வந்தன.


ஆனால், வளர்ச்சி என்ற பேரில் வனவளம் அழிக்கப்பட்டு வருவதால், பறவை இனத்திற்கு தங்க இடம் கிடைக்காத நிலை… உணவு பற்றாக்குறை… இப்படி பல காரணங்களால் அரிய வகை பறவை இனங்கள் தற்போது, மனித சமுதாயம் காண முடியாத நிலை. இதனால் 30 சதவீத பறவை இனங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பறவை இனம் மட்டுமல்ல, விலங்கு இனங்களும் அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

வனவளம் அழிக்கப்படுவதால், பறவை இனம், விலங்கு இனம் அழிக்கப்படுவதுடன், பூமியின் வெப்பமும் அதிகரித்து வருகிறது.  இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மனிதன் நீருக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.


எனவே, இந்த விஷயத்தில் உலக நாடுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அழிந்து வரும் வனவளத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பசுமை வளத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நவீன விஞ்ஞான திட்டங்களை நிறைவேற்றும்போது, வனவளம் நிச்சயம் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம், ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆலோசனைகள்….

வனவளம் குறித்து இனி வரும் நாட்களில் கவனக்குறைவாக இருந்தால், உலகம் இப்போது சந்தித்து வரும் ஆபத்தைவிட  மிகப் பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டியது கட்டாயம்  என்பது ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை…

முதியோர்களை எப்படி மதித்து போற்றுகிறோமோ, அப்படிதான், மிகவும் வயதான மரங்களையும் மனித சமுதாயம் பாதுகாக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோள்.


உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களை பார்க்கும்போது, நாம் எங்கே முதியோரை போற்றி மதிக்கிறோம் என்று நீங்கள் வினா எழுப்புவது எனக்கு கேட்கிறது..

இனி, முதியோரையும் மதித்து போற்றி பாதுகாப்போம்…. முதிய மரங்களை, வனவளங்களை அழிவில் இருந்து மீட்போம். 

____________________________________________________________

இயற்கை வளம் பாதுகாப்பது குறித்த கட்டுரை இது. படியுங்கள்.... இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: