Sunday, September 11, 2016

தியாகம்.....!

தியாகம்.....!


ஏக இறைக் கொள்கை என்ற உன்னத தத்துவத்திற்கு ஒரு மனிதன் எப்படி செயல்பட்டு தியாகம் செய்ய வேண்டும்...?

தன் பகுத்தறிவை எப்படி பயன்படுத்தி சிந்திக்க வேண்டும்....?

அதற்காக வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பங்கள், துயரங்களை துணிச்சலுடன் சந்திக்க வேண்டும்..?

இப்படி, பல கேள்விகளுக்கு

நபி இப்ராஹீம் (அலை)

நபி இஸ்மாயில் (அலை)

ஆகிய இருவரும் தங்களது வாழ்க்கையின் மூலம் நமக்கு அழகிய பாடம் சொல்லி தருகிறார்கள்.

இந்த நபிமார்கள் செய்த பல தியாகங்களின் மூலம்தான், இன்று உலகில் மனித இனம் ஒரளவுக்காவது அமைதியாக வாழ்கிறது.

பல இக்கட்டான நேரங்களில் தியாகங்களை செய்து, துன்பங்களில் இருந்து விடுபடுகிறது.

இந்த தியாகங்களை நினைவுப்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள மனித இனம், சவுதி அரேபியாவின் மெக்காவில் ஒன்று கூடி, நிறைவேற்றும் ஒரு கடமைதான் ஹஜ்.

ஹஜ் ஒரு உலக சகோதரத்துவ மாநாடு என்று கூட கூறலாம்.


பல இனம், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட மனித இனம், ஏக இறைக் கொள்கையை உறுதியாக ஏற்று, அதன்படி வாழ்ந்து, ஏக இறைவன் முன்பு மனிதன் ஒரே இனம்தான் என்பதை உலகிற்கு சொல்லும் ஒரு புனித பயணம்தான் ஹஜ் பயணம்.

அத்துடன், உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் லட்சக்கணக்கில் குவியும் மக்கள், உலக அமைதிக்காக மனம் உருகி துஆ (பிராத்தனை) செய்யும்போது, அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதனால், உலகில் அமைதி தவழ வாய்ப்பு கிடைக்கிறது.

இப்படி தியாகங்கள் பல செய்து, ஹஜ் கடமை நிறைவேற்றி, அதன் ஒருபகுதியாக கொண்டாடும் திருநாள்தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள்.

இந்த தியாகத் திருநாளில் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்...!

ஈத் முபாரக்....!

S.A.Abdul Azeez
Journalist

நேரமில்லை....!

நேரமில்லை....!


ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பு...

ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...

இப்படி,

உலக அளவில் நடக்கும் சர்வதேச மாநாடுகளில் நம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அத்துடன்,

உலக தீவிரவாதம்,

உலக பொருளாதாரம்,

உலக நதிநீர் பிரச்சினை

உலக சுற்றுச்சூழல் குறித்த கவலை...

என


பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாடுகளில் கம்பீரமாக உரையாற்றி நல்ல ஆலோசனைகளை தரும் பிரதமர் மோடி, உலகம் எப்படி வேகமாக முன்னேற வேண்டும் என்றும் பல்வேறு திட்டங்களை முன்வைக்கிறார்.

மேலும்,

அமெரிக்க அதிபர் ஒபாமா,

சீன அதிபர், ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், இலங்கை அதிபர், வங்கதேச பிரதமர் என பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசும்  பிரதமர் மோடி, அந்நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கிறார்.


ஆலோசனை செய்கிறார்.

ஆனால்,

இந்தியாவில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க மட்டும் மோடிக்கு ஆர்வமில்லை.

காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அவர் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.


விரும்பவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தாம் தலையிட முடியாது என்கிறார்.

முல்லைப் பெரியாறு, பாலாறு என பல்வேறு நதிநீர் பிரச்சினைகளும் லைன் கட்டி நிற்கின்றன.

அதற்கு எந்த தீர்வையும் மோடி இதுவரை காணவில்லை.

ஆலோசனைகளை வழங்கவில்லை.

திட்டங்களை அறிவிக்கவில்லை.


இப்படி, நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வு காணப்படவில்லை.

ஆனால்,

உலக அளவில் இருந்து வரும் பிரச்சினைகளுக்கு மட்டும் மோடி, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ஆலோசனைகளை வழங்குகிறார்.

சர்வதேச பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படி, இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் கேட்பது  என் காதில் விழுகிறது.

என்ன செய்வது, நேரமில்லாத காரணத்தால்தான், இந்திய பிரச்சினைகளுக்கு மட்டும், பிரதமர் மோடியால் தீர்வு காண முடியவில்லை.

நேரமில்லாத பிரதமரை நாடு முதல்முறையாக பெற்று இருக்கிறது.

வாழ்க இந்திய ஜனநாயகம்...!

S.A.Abdul Azeez
Journalist.

Saturday, September 10, 2016

ஒழிச்சா போதும்....!

ஒழிச்சா போதும்....!



பாரா லிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை புரிந்ததை தமிழகமே கொண்டாடி வருகிறது.

அதேநேரத்தில்,

தங்கம் வெல்லும் வரை தங்கவேலு மாரியப்பன்கள் ஏன் நம் கண்களிலேயே படுவதில்லை என முகநூல் நண்பர் Parthiban kumar வினா எழுப்பியுள்ளார்.

இது சரியான, நியாயமான கேள்வி.

இதற்கு ஒரே பதில்...

கிரிக்கெட் விளையாட்டை ஒழிச்சா போதும், இந்தியாவில் பிற விளையாட்டுகள் மக்களின் பார்வைக்கு உடனே வந்துவிடும்.

மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் கிரிக்கெட்டிற்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருதால், பேட்மின்டன், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் நம் இளைஞர்களின் கவனம் செல்வதில்லை.

ஆர்வம் செலுத்துவதில்லை.

மத்திய, மாநில அரசுகளும் பிற விளையாட்டுகளை ஊக்குவிக்க போதிய முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இதுவரை எடுப்பதாக தெரியவில்லை.

எனவே,

கிரிக்கெட் ஒழிக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டை பிரபலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு  தடை விதித்து, பிற விளையாட்டுகளை பிரபலப்படுத்த திட்டங்களை திட்ட வேண்டும்.

அப்படி ஒரு திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் செயல்படுத்தினால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா பதக்க மழையில் நனையும்.

இது உறுதி.

ஆனால்,

மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது சந்தேகமே..

ஏனெனில், அனைவரும் கிரிக்கெட்டின் பின்னால் ஓடுவதையை வழக்கமாக கொண்டு பைத்தியமாக இருப்பதால், பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

கிரிக்கெட்டை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது மூலம் மட்டுமே, Parthiban Kumar எழுப்பிய கேள்விக்கு தக்க பதில் கிடைக்கும்.

பிற விளையாட்டு வீரர்கள் நம் கண்களில் படுவார்கள்.

சாதனை மகுடத்தில் ஏறுவார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Friday, September 9, 2016

யார் தீவிரவாதி......!

யார் தீவிரவாதி......!


In the history of the World, who has KILLED maximum INNOCENT HUMAN BEINGS ?

HITLER.... Do you know who he was ?

He was a Christian, but media will never call Christians terrorists.

JOSEPH STALIN...... called as Uncle Joe,

He has killed 20 million human beings including 14.5 million were starved to death.

Was he a Muslim ?

MAO TSE TSUNG (China)..... He has killed 14 to 20 million human beings.

Was he a Muslim ?

BENITO MUSSOLINI (Italy)..... He has killed 400 thousand human beings.

Was he a Muslim ?


ASHOKA..... In Kalinga Battle, He has killed 100 thousand human beings.

Was he a Muslim ?

Embargo put by GEORGE BUSH in IRAQ, 1/2 million children has been killed in Iraq alone.

Imagine these people are never called terrorists by the media.

Was he a Muslim ?

Today the majority of the non-muslims are afraid by hearing the words JIHAD.

JIHAD is an Arabic word. which comes from root Arabic Word JAHADA, Which means TO STRIVE or TO STRUGGLE against evil and for justice.
It does not mean killing innocents.


The difference is we stand against evil. not with evil.

Is ISLAM really the Problem ?

The First World War 17 million dead...(caused by non-muslim).

The Second World War, 50-55 million dead....(caused by non-muslim).

Nagasaki atomic bombs 2,00,000 dead...(caused by non-muslim).

The War in Vietnam, over 5 million dead....(caused by non-muslim).

The War in Bosnia, Kosova, over 5,00,000 dead...(caused by non-muslim).

The War in Iraq (so far) 1, 20, 00,000 deaths....(caused by non-muslim).


Afghanistan, Iraq, Palestine, Burma (monks) etc ongoing....(caused by non-muslim).

In Cambodia 1975-1979, almost 3 million deaths...(caused by non-muslim).

MUSLIMS ARE NOT TERRORISTS AND TERRORISTS ARE NOT MUSLIMS.

AND ABOVE ALL NEITHER OF THE WEAPONS OF MASS DESTRUCTION AS WELL AS ANY ASSAULT WEAPONS ARE INVENTED BY MUSLIMS.

AND ABOVE ALL EVEN THE ARMS GIVEN AND SUPPLIED TO THE SO CALLED MUSLIM TERRORIST ARE NOT BY ANY ISLAMIC INSTITUTE.
TALIBAN AS WELL AS ISIS IS ALL CREATION OF WEST.

NOW TELL, WHO IS REAL TERRORIST ?


உலகை அச்சுறுத்தும், அச்சுறுத்தி கொண்டிருக்கும் உண்மையான தீவிரவாதிகள் யார்.....?

பதில் சொல்லுங்கள் தோழர்களே....

Wednesday, September 7, 2016

என்னத்த சொல்ல.....!

என்னத்த சொல்ல.....!


காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு.

இந்த உத்தரவைத் தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.

இந்த தண்ணீர் திறப்பிற்கு எதிராக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதிலும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை குறி வைத்து, கர்நாடக மக்களில் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததை, கர்நாடக மக்கள் குறை கூறுவது எப்படி நியாயம் என சொல்லலாம்...


ஒரு மாநில மக்கள் தண்ணீருக்காக ஏங்கி தவிக்கும் நிலையில், பக்கத்து மாநிலம் சிறிது தண்ணீர் கூட தர மறுப்பது எப்படி சரி என சொல்லலாம்.

மனித நேய அடிப்படையில் கூட கர்நாடக மக்களின் போராட்டம் நியாயமானதாக தெரியவில்லை.

வாழு, வாழ விடு என்ற தத்துவத்தை கூட கர்நாடக மக்கள் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்பது அவர்களின் தொடர் போராட்டங்கள் மூலம் தெரிகிறது.


தண்ணீர் விஷயத்தில், தமிழர்கள் மீது மிகப் பெரிய அளவுக்கு வெறுப்புணர்ச்சி கர்நாடக மக்களில் சிலருக்கு இருந்து வருவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த போக்கு நீண்ட நாட்களுக்கு  நீடிப்பது சரியல்ல.

ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள், இப்படி தண்ணீருக்காக அடித்துக் கொண்டு வெறுப்புகளை வளர்த்துகொள்வது வரும் காலத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


காவிரியில் தண்ணீர் திறப்பிற்காக கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்று சொல்வது...

வேதனைதான் அளிக்கிறது....

S.A.Abdul Azeez
Journalist 

ஏடிஎம் ஆபத்து.....!

ஏடிஎம் ஆபத்து.....!



கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தேன்.

அதில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்று கிழிந்து இருந்தது.

எனவே, அருகில் இருந்து ஸ்டேட் வங்கிக்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து, சார்உங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்தபோது, ஒரு தாள் கிழிந்து இருந்தது.

தயவு செய்து மாற்றி தாருங்கள் என்றேன்.

அந்த அலுவலர் என்னை மேலும் கீழும் ஆச்சரியமாக பார்த்தார்.

நீங்கள் பணம் எடுத்ததாக கூறும் ஏடிஎம் எந்திரம் கடந்த சில நாட்களாகவே இயங்கவில்லை.

எப்படி அந்த எந்திரத்தில் இருந்து உங்களால் பணம் எடுக்க முடியும் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

சார், நான் பணம் எடுத்ததற்கான ஆதாரம் இதே அந்த ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எனக்கு வந்த ரசீதைப் பாருங்கள் என கூறி, அந்த ரசீதை அலுவலரிடம் காண்பித்தேன்.

அதை வாங்கிப் பார்த்த அவர், எப்படி பணம் எடுக்க முடியும் என்ற  ஒரே கேள்வியை திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுகொண்டே இருந்தார்.

கிழிந்த நோட்டை வேண்டுமானால் மாற்றி தாருகிறேன். ஆனால், நீங்கள் அந்த மையத்தில் பணம் எடுத்ததாக மட்டும் பொய் கூறாதீர்கள் என்றார்.

அய்யா, நான் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளன். அப்படி பொய் சொல்லி உங்களிடம் கிழிந்த நோட்டை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி என்னுடைய ஐ.டி. கார்டை அவரிடம் காண்பித்தேன்.

அப்போதும், அவர் நம்ப தயாராக இல்லை.

அந்த ஏடிஎம் எந்திரம் பழுது என்றே சொல்லிகொண்டே இருந்தார்.

பிறகு, கிழிந்த நோட்டை மாற்றி கொடுத்தார்.

இது எனக்கு நேர்ந்த அனுபவம்.

இதேபோன்ற ஒரு அனுபவம் என் நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்டது.


ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப்.வில் பணியும்  அந்த நண்பர் உயரதிகாரியும் கூட.

அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோது, நான்கு ஆயிரம் ரூபாய் தாள்கள் போலி தாள்களாக வந்துவிழுந்தது.

வணிக நிறுவனத்திற்கு சென்றபோதுதான், இந்த விவரம் அவருக்கு தெரிந்தது.

உடனே, வங்கிக்கு சென்று பணத்தை மாற்றி தரும்படி கேட்டிருக்கிறார் நண்பர்.

அந்த அதிகாரி பணத்தாள்களை வாங்கி, நான்கிலும் பேனாவில் கோடு போட்டு, நண்பரிடமே திருப்பி தந்திருக்கிறார்.

பணத்தாள்களை மாற்றி தரும்படி கேட்டால் இப்படி, கோடு போட்டு மீண்டும் அதை என்னிடமே தருகிறீர்களே என நண்பர் கேள்வி எழுப்ப, உண்மையில் உங்களை போலீசில் பிடித்து தந்திருக்க வேண்டும்.

ஆனால், நான் அப்படி செய்யவில்லை. பிழைத்து போங்கள் என அந்த வங்கி அதிகாரி கூற, நண்பருக்கு கோபம் வந்தது.

உடனே, போலீசை இப்போதே கூப்பிடுங்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

போலீஸ் வரும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன் என கூற, அந்த வங்கி அதிகாரிக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது.

மத்திய பாதுகாப்பு படையில் உயரதிகாரியாக இருக்கும் என்னிடமே, இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றால், சாதாராண மக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய, பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து நான்கு ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றி தந்து இருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தை நண்பர் சொன்னபோது,  அதிர்ச்சியும், சிரிப்பும் ஏற்பட்டது.

ஏடிஎம் மையங்களில் எப்படி போலி பணத்தாள்கள் வைக்கப்படுகின்றன.

அதை எடுக்கும் மக்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறார்கள்.

மாற்றி தரும்படி வங்கி அதிகாரிகளை அணுகும்போது, அவர்களே சந்தேகத்திற்கு உள்ளாகி வேதனைகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்   என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு வங்கி நிர்வாகங்கள் எப்படி தீர்வு காணுமோ என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

அப்படி, தீர்வு காண வங்கி நிர்வாகிகள் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற ஆபத்துகள் தொடரவே செய்யும்.

பொதுமக்கள் பாதிப்பு அடைவது தொடர்கதையாகும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Sunday, September 4, 2016

அநியாயம்.....! அக்கிரமம்....!!

ஐய்யய்யோ...! அநியாயம்.....!!அக்கிரமம்....!!! கேட்பதற்கு யாருமே இல்லையா....!


பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் (Vijaya Bank) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எனக்கு ஒவ்வொரு வாரமும் என்னுடைய செல்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வருவது வழக்கம்.

அதில், என்னுடைய வங்கி கணக்கு இருப்பு குறித்த விவரங்கள் இருக்கும்.

அதேபோன்று, இந்த வாரமும் (04.09.2016) என்னுடைய செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதைப் பார்த்ததும் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம்,

For every txn at Vijaya Bank ATM, we donate 50ps for a social cause. You Transact, we  Donate. Vijaya Bank.

என்ற தகவல் எனக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இனி நான் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுக்கும்போது, என்னுடைய அனுமதி இல்லாமலேயே விஜயா வங்கி, என்னுடைய கணக்கில் இருந்து 50 காசுகளை எடுத்துக் கொள்ளும். அதாவது பிடுங்கிகொள்ளும்.

அந்த 50 காசுகள் சமூக நலப்பணிக்காக அனுப்பி வைக்கப்படும் என விஜயா வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் பொதுத்துறை வங்கி எப்படி அவர்களின் பணத்தில் இருந்து 50 காசுகளை எடுக்கலாம்.

அதை சமூகப் பணிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

விஜயா வங்கியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி பேர் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுத்தால், சுமார் 50 லட்சம் ரூபாய் வரை விஜயா வங்கி தானாகவே எடுத்துக் கொள்ளும்.

இப்படி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தை பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி, ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும், தங்களுடைய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமலேயே 50 காசுகளை பிடித்தம் செய்து வந்தால், நாடு முழுவதும் ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு சுலபமாக வருமானம் கிடைக்கும்.

அந்த வருமானம் மத்திய அரசுக்கு செல்லும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிஜேபி தலைமையிலான மத்திய அரசு, பொது மக்களின் பணத்தை எப்படி,  சுருண்டுகிறது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணமாக இருக்கிறது.

மக்களை வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வைத்து அதை மிகப் பெருமையாக கூறிக் கொள்ளும், பிஜேபி அரசு, அதன்மூலம், எளிதாக பணத்தை சுருண்டும் வழியை ஏற்படுத்தி இருப்பது தெள்ள தெளிவாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை கேட்க யாருமே இல்லையா....?

இதுதான் என்னைப் போன்ற வங்கி வாடிக்கையாளர்களின் கேள்வி.

S.A.Abdul Azeez
Journalist

Saturday, August 27, 2016

விருது.....!

விருது.....! வாழ்த்துக்கள்.....!!


சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு, தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஆந்திரா சமூக மற்றும் காலச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ராஜ் தொலைக்காட்சி தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்ற எங்கள் தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு நாங்களும் பாராட்டுக்களை கூறி மகிழ்கிறோம்.

பொன்.மகேந்திரனின் சிறப்பான பணிகள் இனிவரும் நாட்களிலும் மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

S.A.Abdul Azeez
Journalist

ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!

அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!



சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவுப் பகுதி அருகே இருக்கும் சித்தா, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு வழக்கம் போல சென்று இருந்தேன்.

வாரம் ஒருமுறை செவ்வாய்கிழமையன்று சர்க்கரை குறைபாட்டிற்காக தரும் சித்தா மருந்தை வாங்க நான் அங்கு செல்வது உண்டு.
என்னை போன்று ஏராளமானோர் வருவதால், கூட்டம் அலை மோதும்.

இதனால், நீண்ட வரிசையில் சில மணி நேரம் நின்று மருந்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த வாரம் சென்றபோது, இஸ்லாமிய பெண்மணி ஒருவர், வயது கிட்டத்தட்ட 50க்கு மேல் இருக்கும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்.

மருத்துவரை நெருங்கும் நேரத்தில் அவரை கவனித்த அந்த பெண் மருத்துவர், ஏங்க உங்களைதான் நான் நேரடியாக வந்து சீட்டை வாங்கி செல்லும்படி அல்லவா சொன்னேன்.

ஏன், நீங்க வரிசையில் நின்று வருகிறீர்கள் என அன்புடன் கடிந்துக் கொண்டார்.

ஏராளமானோர் வரிசையில் நிற்பதால், மனம் கேட்கவில்லை என்றார் அந்த பெண்மணி.

நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க என்று அங்கு வந்திருந்த மற்றவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர்.

ரூல்சே ஃபாலோ பண்ணுவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான்.

அதில் தனி சுகம் உண்டு.

மற்றவர்கள் சில மணி நேரம் கால் வலியை தாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க, திடீரென வந்து மருந்தை வாங்கிச் செல்வது சரியான முறையும் இல்லை.

அதை, அந்த முஸ்லிம் பெண்மணி நன்கு புரிந்துக் கொண்டிருந்தார்.

ஆனால்தான், மருத்துவர் சொல்லியும் கூட கேட்காமல், நீண்ட வரிசையில் நின்று மருந்தை வாங்கிச் சென்றார். செல்கிறார்.

சட்டத்தையும், ரூல்சையும் மதிக்காத மனிதர்கள் மத்தியில், இப்படி, சில மனிதர்கள் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடையவே செய்கிறது.

S.A.Abdul Azeez
Journalist

Friday, August 19, 2016

சீரகம்....!

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்...!



மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.


சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

"ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

உனக்கே தங்கம்....!

உனக்கே தங்கம்....!


இந்திய மகளே,
சிந்துவே,
தங்கம்
உனக்கு மட்டும்
கனவு இல்லை,
எங்களுக்கும்தான்....

சாதிக்க பிறந்த நீ,
ஒலிம்பிக்கில்
நிச்சயம்
அசத்துவாய்,
அதன்மூலம்,
தங்கத்தை
உனதாக்கிக் கொண்டு
எங்களை
மகிழ்ச்சி கடலில்
மூழ்கடிக்கச் செய்வாய்....

இன்றிரவு (19.08.2016)
உன்
ஆக்ரோஷ
ஆட்டத்தைக் காண
இந்தியாவே
தொலைக்காட்சி முன்
தவமாக கிடக்கும்,
நீ தங்கம்
வெல்வதை
கொண்டாடும்....

இந்திய மகளே,
சிந்துவே
உனக்கே தங்கம்
வெல்க நீ
=========


(வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு எழுதிய வரிகள்)

உன் கனவு
தங்கம்
என்றாலும்,
வெள்ளி
கிடைத்ததும்
மகிழ்ச்சியே
என்றாய்...

அதன்மூலம்
எங்களையும்
நாட்டிற்கும்
பெருமை
அடையச் செய்தாய்...

தொடரட்டும்
உன் சாதனைகள்
இனி வரும் நாட்களில்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

வேகப் புயல்....!

வேகப் புயல்....!


உலகின் 
வேகப் புயல்
உசேன் போல்ட்டே,
உன்
கால்களில்
என்ன
இறக்கைகளையா
கட்டிக்கொண்டு
ஓடுகிறாய்...
சாரி
பறக்கிறாய்....

நூறு,
இருநூறு
என
அனைத்து
மீட்டர்களையும்
சில நொடியில்
அசால்டாய்
கடந்து
அள்ளுகிறாய்
நீ
தங்கம்....


அதன்மூலம்
ஹாட்ரிக்
சாதனையை
புரிந்து
மற்றவர்களை
வியப்பில்
ஆழ்த்துகிறாய்....

வெற்றிகளை
குவித்தாலும்
சிறிதும்
இல்லை கர்வம்
உன்னிடம்
அதனால்
உயர்ந்து நிற்கிறாய்
மக்கள்
மனங்களில்
நீ.....


உலகின்
அதிவேக மனிதனே
ஜமைக்காவின்
தவப்புதல்வனே
உன்னிடம்
கற்றுக் கொள்ள
இளைஞர்களுக்கு
நிறைய
உண்டு
பாடம்....

கற்றுக்கொண்டால்
சாதிக்க
அவர்களுக்கும்
தேடிவரும்
வாய்ப்புகள்
நிச்சயம்
ஏராளம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, August 12, 2016

விடுதலைக்காக குர்பானி......!

விடுதலைக்காக குர்பானி......!


வழக்கம் போல இந்த வாரமும் ஜும்மா தொழுகைக்காக, சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் 162 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜித்-இ-சைய்யதியா பள்ளிவாசலுக்கு சென்றேன்.

மஸ்ஜித்தில், மவுலானா மவுலவி அழகிய உர்தூ மொழியில் எல்லோருக்கும் புரியும்படி, மிக எளிமையான வார்த்தைகளில் பயான் (பிரசங்கம்) செய்தார்.

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை பட்டியலிட்டு அடுக்கினார்.

மாவீரன் திப்புசுல்தான்,
மன்னர் பகதூர் ஷா ஜபர்,
வள்ளல் ஹபீப் சகி,
மவுலானா முகமது அலி

உள்ளிட்ட பலர், இந்தியாவின் சுதந்திர போரில் ஆற்றிய பணிகளை கூறிய மவுலவி, ஏராளமான முஸ்லிம் மக்களும் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து விடுதலை போரில் பங்கேற்றதையும் அழகாக எடுத்துக் கூறினார்.


செல்வம், பொருள், உயிர் என அனைத்தையும் இழந்து, தியாகங்களை செய்த முஸ்லிம்களின் விடுதலை போராட்டத்தை மறைக்க, வரலாற்றை மாற்றி அமைக்க தற்போது மிகப் பெரிய சூழ்ச்சி நடப்பதாக மவுலவி வேதனை தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு கூட்டம், தற்போது முஸ்லிம்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் காரியங்களை ஆற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன்,

நாட்டில் முஸ்லிம் மக்கள் மூன்றாம் தர மக்களை போன்று நடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த குர்பானி, தியாகம் அளவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் மவுலவி கேட்டுக் கொண்டார்.


மேலும், இளம் சமுதாயத்திற்கு விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ முஸ்லிம்களுக்கு முழு உரிமை உண்டு என்றார் மவுலவி.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தற்போதும் முஸ்லிம்கள் ஆற்றி வரும் பங்கை யாரும் மறைக்க முடியாது என்றும் மவுலவி தெரிவித்தார்.

எனவே,

வரும் 70வது சுதந்திர தினவிழாவை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் அவா கேட்டுக் கொண்டார்.

அழகிய உர்தூ மொழியில் மிக எளிமையான வார்த்தைகள் மூலம், சுதந்திர தியாகங்களை மவுலவி எடுத்துக் கூறிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது.

இதுபோன்ற, பயான்கள் மிகவும் அவசியம் என்றே தோன்றியது.

நவீன உலகில், இளம் சமுதாயம் பல தியாகங்களை அறியாமல் இருந்து வருகின்றனர்.

அவர்களுக்கு முஸ்லிம்களின் தியாகங்களை எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.

அந்த பணியை ஜும்மா பயானில், பிரசங்கத்தில் மவுலவி ஆற்றி, தமது பணியை நன்கு செய்துள்ளார்.

உண்மையிலேயே மவுலவியை பாராட்ட வேண்டும்.

ஆக,

முஸ்லிம் மக்களே உங்களுடைய தியாகங்களை மறந்து விடாதீகள்.

இந்திய நாட்டிற்காக, உங்கள் முன்னோர்கள் செய்த குர்பானிகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்மூலம் மட்டுமே, உங்களுக்கு எதிராக எழும் குரல்களை எதிர்ப்புகளை நீங்கள் எதிர்கொள்ள முடியும்.\

S.A.Abdul Azeez
Journalist

Saturday, July 30, 2016

மகத்தான பணி....!

முதல்வன் விருது....! மகத்தான பணி....!!



ஆண்டுதோறும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி, ராஜ் தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது.

அதன்படி, 18வது ஆண்டாக முதல்வன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதற்காக சென்னைக்கு 3 நாட்களுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மாணவ மாணவிகள், ஆளுநர் ரோசய்யாவுடன் சந்திப்பு, போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை, பிர்லா கோளரங்கத்திற்கு பயணம், வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் உல்லாசப் பொழுதுபோக்கு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன் முதல்வன் விருது பெறும் மாணவர்களுக்காக ராஜ் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

பின்னர், விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில், முன்னாள் டி.ஜி.பி. ராஜகோபால், கனரா வங்கியின் துணை பொது மேலாளர் தங்கவேலு, விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ரவிதாஸ், அமிர்தா கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி பூமிநாதன், திரைப்பட இயக்குநர் மிஸ்கின், நடிகர் ஜெயம் ரவி, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளி தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு ராஜ் தொலைக்காட்சி நிறுவனம், விருதுகளை வழங்கி  தொடர்ந்து கவுரவித்து வருவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஓர் மகத்தான பணி என்றே கூறலாம்.

விருதுகளை மட்டும் வழங்காமல், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்கிளுக்கும் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்வது, மாணவர் சமுதாயம் மீதும், நாட்டின் கல்வி வளர்ச்சி மீது ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு இயக்கும் அக்கறையை பாராட்ட வேண்டும்.

அவர்களது சமூக அக்கறையை எவ்வளவு பாராட்டினால் அது குறைவுதான்.

சாதிக்கும் மாணவர்களை மேலும் சாதிக்க ஆர்வம் தூண்டும் இதுபோன்று விழாக்களை பிற தொலைக்காட்சிகள் நடத்துவதாக எனக்கு தெரியவில்லை.

எனவே, மகத்தான பணியை 18 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு ஒரு சலூட்.....!

வாழ்க ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகள்....!

S.A.Abdul Azeez
Journalist.

Tuesday, July 26, 2016

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!

மது அருந்துபவர்களின் குடும்பத்தினருக்கு சிறை....!

நிதிஷ்குமார் அதிரடி திட்டம்.....!!


பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்,ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்த்ன் முதலமைச்சராக நிதீஷ்குமார் மிக சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீறி மதுகுடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில் புதிய மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, மது அருந்தோர், வீட்டில் மது பாட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவரது குடும்பத்தையை சிறையிலடைக்கவும், மது அருந்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிடவும் சட்டதிருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மக்களின் நலனில் நிதிஷ்குமாருக்கு உள்ள உண்மையான அக்கறையை பாராட்டத்தான் வேண்டும்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள், மதுவை ஒழிக்க அவசியம்.

அந்த வகையில் நிதிஷ்குமாரின், திட்டம் வெற்றி பெற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்

Saturday, July 23, 2016

கனவு நகரம்....!

கனவு நகரம்....!


சென்னை மாநகரம், தற்போது வட இந்திய இளைஞர்களின் கனவு நகரமாக மாறி வருகிறது.

மாறிவிட்டது.

சென்னையின் எந்த பக்கம் திரும்பினாலும்,  இந்தி கலந்த தமிழ் மொழியை பேசும் வட இந்திய இளைஞர்களை, மக்களை காண முடிகிறது.

உணவகங்களில் வேலை செய்யும் பத்து பேரில் 8 பேர் வட இந்திய இளைஞர்கள்.

மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும்போது, வட இந்திய இளைஞர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வட மாநில மக்களின் கூட்டம்தான் அதிகம்.

சினிமா தியேட்டர்களில், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் டிக்கெட் வாங்க அதிகமாக வரிசையில் நிற்கிறார்கள்.

கட்டிட தொழிலாளிகளில் வட இந்திய மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

சின்ன சின்ன தொழில்களை கூட கவுரவம் பார்க்காமல் செய்யும் வட இந்திய இளைஞர்களை சென்னையில் அதிகமாக பார்க்க முடிகிறது.

ஏன்,

பிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் பலரில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

ஒருசில கொள்ளை சம்பவங்களிலும் வட இந்திய இளைஞர்கள் இருப்பது செய்தி ஊடகங்கள் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

சரி,


நம்ம ஆளுங்க என்ன செய்கிறார்கள்.

அதுதான் இருக்கிறதே, அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்.

அதில், கூட்டம் கூட்டமாக மொய்கிறார்கள் தமிழர்கள்.

வேலை செய்யும் ஆர்வம் சிறிதும் இல்லை தமிழர்களுக்கு.

பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பற்ற மனம் இல்லை தமிழர்களுக்கு.

சம்பாதிக்கும் பணத்தைக்கூட,  மது அருந்தி, செலவழிக்கதான் தமிழர்களின் புத்தி செல்கிறது.

அத்துடன்,

கபாலி, கபாலி என சினிமா பின்னாடி ஓடுகிறான்.

நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

முதல்நாள் முதல் ஷோ பார்த்து அதை படம் எடுத்து முகநூலில் போட்டு மகிழ்ச்சி அடைகிறான்.

ஏதோ உலகத்தில் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்து பூரிப்பு அடைகிறான்.

இதே நிலை தொடர்ந்தால்,

சென்னை மட்டுமல்ல, தமிழகவே இனி வட இந்திய இளைஞர்களின், மக்களின் கனவு நகரமாக விரைவில் மாறி விடும்.

S.A.Abdul Azeez
Journalist.

Thursday, July 21, 2016

நெருப்புடா.....!

நெருப்புடா.....!


மெரினா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

மெரினாவில் கூட்டம் அதிகம் என்பதால் பல வழிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஒரு காவலர் எங்களைப் பார்த்து ஏய் நில்லு.

யோவ் திரும்பப் போ..

என கையை நீட்டியபடி கோபத்துடன் கர்ஜனை செய்தார்.

அப்போதுதான் அது ஒருவழிப் பாதை என எங்களுக்கு புரிந்தது.

சரி, வண்டியை திருப்பிக் கொண்டு சொல்லலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

வாகனத்தை ஓட்டிய கவிஞரும் பத்திரிகையாளருமான சம்பந்தன் முரளி, ஏய் என எங்களை அழைத்த போக்குவரத்து காவலரை நோக்கி வண்டியை ஓட்டி நிறுத்தினார்.

அத்துடன் அந்த காவலரை பார்த்து என்ன சொன்னீர்கள்.

ஒரு அரசு ஊழியர் இப்படி மரியாதை குறைவாக பொதுமக்களை அழைக்கலாமா என கோபம் கலந்த புன்னகையுடன் சீறினார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த போக்குவரத்து காவலர் தாம் அப்படி அழைக்கவில்லை என்றும் எங்களுக்கு தவறாக கேட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

சார் என தாம் கூறியதை நாங்கள் யோவ் என நினைத்துக் கொண்டதாகவும் கூறினார்.

நாங்கள் பத்திரிகையாளர் என்பதை தெரிந்துகொண்ட அந்த காவலர் உடனே பல்டி அடித்து சமரச நிலைக்கு வந்துவிட்டதால் நாங்கள் உடனே அங்கிருந்து கிளம்பினோம்.

அதேநேரத்தில், பொதுமக்களிடம் இதுபோன்று கண்ணியம் குறைவாக நடப்பது சரியல்ல என அந்த காவலரிடம் கூறினார் சம்பந்தன் முரளி.

அநியாயம் நடந்தால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா என்ன.

சம்பந்தன் முரளி, ஒரு நெருப்புடா...!

S.A.Abdul Azeez 
Journalist.

உயர்ந்த உள்ளம்....!

உயர்ந்த உள்ளம்....!



தமிழக காட்சி ஊடகத்துறையில் மிக மிக முக்கிய புள்ளி நிஜந்தன்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை அவர், கொண்டு செல்லும் பாணி ஒரு தனி ரகம்.

இதேபோன்று, செய்தி வாசிப்பில், அவரது தமிழ் உச்சரிப்பு நேயர்களை கவர்ந்து இழுக்கும்.

சிறந்த ஊடகவியலாளராக இருக்கும் நிஜந்தன், நல்ல எழுத்தாளரும் கூட.

பேரலை

பாபுஜியின் மரணம்

என் பெயர்

புதிய வெயிலும் நீலக் கடலும்

சுவை மணம் நிறம்

என பல நாவல்களையும் நிஜந்தன் எழுதியுள்ளார்.

ஊடகவியலாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் விளங்கும் நிஜந்தன், சமூக அக்கறை கொண்ட, ஒரு நல்ல மனிதர்.

அனைவரிடமும் அன்புடன் பழகும் சிறந்த பண்பாளர்.

அண்மையில் நிஜந்தனை சந்தித்து பேசியது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்த சந்திப்பின் நினைவாக நிஜந்தனுக்கு நல்ல நூல் வழங்கிய மகிழ்ச்சி அடைந்தேன்.

சில சந்திப்புகள் வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் அமைவது உண்டு.

அந்த வகையில் இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.

S.A. Abdul Azeez 
Journalist.

சுல்தான்.....!

சுல்தான்.....!


மல்யுத்த விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த இந்தி திரைப்படம், சுமார் 3 மணி நேரம் சலிப்பு (போர் அடிக்காமல்) தட்டாமல் செல்வது ஆச்சரியம் அளிக்கிறது.

படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை.

மது அருந்தும் காட்சிகள் இல்லை.

அபாச நடனங்கள் இல்லை.

பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இல்லை.

இருந்தும் சுல்தான் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர்,  தமது அழகான, நேர்த்தியான திரைக்கதை மற்றும் வசனங்களால், படத்தை ரசிகர்களை கவரவே செய்திருக்கிறார்.

பல இடங்களில் வசனங்கள் டச்சிங் ரகம்.

மல்யுத்த வீரராக வரும் நடிகர் சல்மான் கான், தமது நடிப்பால் உண்மையிலேயே கலக்கி இருக்கிறார்.

இதேபோன்று, மல்யுத்த வீராங்கனையாக வரும் அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவே செய்கிறது.

அரியானா மாநிலத்தை ஒட்டியே கதை நகர்வதால், அங்குள்ள இந்தி மொழிக்கு ஏற்ப வசன உச்சரிப்புகள் இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.

விஷால் சேகரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

ரன்தீப் ஹுடா, அமித் சத் ஆகியோரும் தங்களது நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள சுல்தான் திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு,, அதன், அழகான நேர்த்தியான கதை மற்றும் திரைக்கதையே முக்கிய காரணம் எனலாம்.

மொத்தத்தில் விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள சுல்தான், ரசிகர்களை ஏமாற்றவில்லை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Wednesday, July 20, 2016

அப்பாடா.....!

அப்பாடா.....!


காவிரி நதிநீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடகா அரசு ஒப்புக் கொண்டுவிட்டது.

காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிட்டன.

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில்லை என கர்நாடக அரசு முடிவு.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முடிவை கைவிட்டது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணையை உயர்த்திக் கொள்ளும் தமிழக அரசின் முடிவுக்கு தடை செய்வதில்லை என கேரளா முடிவு.

பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிட்டது ஆந்திர அரசு.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படை, இனி மீனவர்களை தாக்குவதில்லை என்றும், இலங்கை கடல்பகுதியில் எங்கு வேண்டுமானாலும், தமிழக மீனவர்கள் மீன் பிடித்துச் செல்லலாம் என அறிவித்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு மாநிலத்தில் மதுவிலக்கு உடனே அமலுக்கு வந்துவிட்டது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும், திட்டத்தை கைவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இனி மக்கள் நலப்பணியில் மட்டுமே முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

நாட்டின் பணவீக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. இதனால், அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

நாடு முழுவதும், வறட்சியால் விவசாயிகள் தற்கொலைகள்  செய்து கொள்வது நின்றுவிட்டன.

வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வந்து, படித்து வேலையில்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை கிடைத்துவிட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்,  கொடுமைகள் நின்றுவிட்டன.

நாடு முழுவதும் ரயில்கள் குறித்து நேரத்தில் இயங்குகின்றன.

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள்  சிரித்துக் கொண்டே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விட்டது.

நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எதுவும் இல்லை.

நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.

அத்துடன், உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிட்டன.

இதனால், ஐ.நா.அவைக்கு சமரச பணிகளில் ஈடுபடும் வேலை போய்விட்டது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா...

ஆம்,

கபாலி திரைப்படம் நாளை (22.07.2016) ரிலீஸ்.

இனி,

நாடு (இந்தியா) சுவிட்சமாக இருக்கும்.

நாட்டில் வெறும் முன்னேற்றம் மட்டும்தான்.

வளர்ச்சியோ வளர்ச்சிதான்.

உலகத்தில் அமைதியோ அமைதிதான்.

இனி எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே.

போங்கடா....

நீங்களும் உங்கள் திரைப்பட மோகமும்...

திரைப்படங்களை, திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம்.

கனவில் மூழ்கி, வாழ்க்கையை தொலைக்கும் மர மண்டைகளே புரிந்துக் கொள்ளுங்கள்.

வேண்டாம், வீணான திரைப்பட மோகம்.

S.A.Abdul Azeez
Journalist.

Sunday, July 10, 2016

கில்லி......!

கில்லி......!


இந்திய ஊடகத்துறையில், குறிப்பாக தமிழக காட்சி ஊடகத்துறையில் ராஜ ராஜ ராஜனை போன்ற மிகத் திறமையான இளைஞர்களை காண்பது மிகவும் அரிது.

ஊடகத்துறையில் நான் சந்தித்த சில திறமையான இளைஞர்களில் ராஜ ராஜ ராஜனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

நமது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, ஒரு சகலகலா வல்லவன் என்றே கூறலாம்.

கவிஞர், இசையமைப்பாளர் என இவரிடம் பல பன்முகத்தன்மைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.

தற்போது, ஊடகத்துறையில் இருந்து விலகி திரைப்படத்துறையில் ராஜ ராஜ ராஜன் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

மிகப் பெரிய உயரத்திற்கு சென்றபோதும், என்னிடம் வழக்கம் போலவே இப்போதும் அவர் அன்புடன் பழகுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

அவரை பற்றி நிறைய கூறிக் கொண்டே போகலாம்.

ஆனால்,

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ராஜ ராஜ ராஜன் ஒரு கில்லி.

அப்படிதான் கூற வேண்டும்.


இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

நல்ல உடல்நலம், நல்ல மன நலம், நல்ல வளம் என அனைத்து வளங்களையும் பெற்று எப்போதும் வளமுடன், நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ ராஜ ராஜ ராஜனை வாழ்த்துகிறேன்.

ராஜ ராஜ ராஜன் சார் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy birthday Greetings Sir.

S.A.Abdul Azeez
Journalist.

Sunday, July 3, 2016

அதிசயம்....!!

அற்புதம்....! அதிசயம்....!!


கடந்த ஜனவரி மாதம் முதல் உடல்நலம் சரி இல்லாமல் 5 மாதங்களாக நான் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தேன்.

எனவே,

இந்தாண்டு ரமலான் மாத நோன்பை எப்படி கடைப்பிடிக்க போகிறேன் என்ற அச்சம் எனக்குள் இருந்து வந்தது.

ஏன இறைவன்தான் கருணை காட்ட வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும் என மனம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தது.

என்ன அதிசயம்...!

என்ன ஓர் அற்புதம்....!!

ரமலான் நோன்பு தொடங்குவதற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில், திடீரென எனக்கு உடல்நலம் தேறியதை  நான் உணர்ந்தேன்.


தொடர்ந்து உடல் வலியால் 5 மாதங்களாக தவித்து வந்த எனக்கு, உடல் வலியெல்லாம் பறந்து போனது.

காணாமல் போனது.

எனினும்,

முதல் நோன்பு வைக்கும்போதும், மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்தது.

ஆனால்,

ஏக இறைவனின் அற்புத கருணையால், இன்று வரை (28வது நோன்பு) அனைத்து நோன்புகளும் மிக சிறப்பாக கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

இன்னும் மீதம் இருக்கும் நோன்புகளும் இன்ஷா அல்லாஹ் (இறைவன் விரும்பினால்) நன்றாகவே நிறைவேறும் என உறுதியாக நம்புகிறேன்.

அத்துடன், இந்தாண்டு, திருக்குர்ஆனின் அழகிய தமிழாக்கத்தை முழுவதுமாக படித்து முடிக்கக் கூடிய வாய்ப்பையும் இறைவன் எனக்கு வழங்கினான்.

இந்த ஒரு மாதம் முழுவதும் எனக்கு நல்ல ஒரு ஆன்மிக பயணமாக இருந்தது.

இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

இந்த அற்புதத்தை செய்துக் காட்டிய ஏக இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

ராமுடு காரு.....!

ராமுடு காரு.....!



கல்லூரி தோழர் ஏ.வி.ராமசுப்ரமணியனை, இப்படிதான் நான் எப்போதும் அன்பாக அழைப்பது வழக்கம்.

சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் தற்போது உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் அவர், நம்முடைய வேலூர் மாவட்டம் குடியாத்தைச் சேர்ந்தவர்.

இதனால், இயல்பாகவே நம் இருவருக்கும் இடையே நல்ல அன்பு, புரிந்துணர்வு இருந்து வருகிறது.

உயரதிகாரியாக இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல், கல்லூரி நாட்களில் பழகியது போன்றே, தற்போதும் அவர் என்னிடம் அன்புடன் நட்பு பாராட்டுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

நல்ல பண்பாளரான ராமசுப்ரமணியனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்ல உடல்நலம், நல்ல மன நலம், நல்ல வளம் என அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ ராமசுப்ரமணியனை வாழ்த்துகிறேன்.

ராமுடு காரு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy birthday Greetings Ramudu Karu.

S.A.Abdul Azeez
Journalist.

ஏன் இந்த வெறுப்பு....?

ஏன் இந்த வெறுப்பு....?


சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால்,

ஒருசில தோழர்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் மனம் மறுக்கிறது.

கொலையாளி ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும் என நினைத்த அவர்களுக்கு ராம்குமார் கைது செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

ராம்குமார் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு மாறிவிட்டார்.

அவர் பெயர் அப்துல்லா என்றெல்லாம் தற்போது கதை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.

இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்னமும் குறையவில்லை.

மாறாக அதிகமாக, கூடிக்கொண்டே போகிறது.

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மார்க்கம் அல்ல.

அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

ஓர் இறைக் கொள்கையை வலுவாக போதிக்கும் இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் நன்மையின் பக்கம் வருமாறு அழைக்கிறது.

மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.

இம்மை, மறுமை வாழ்க்கையில் மனித சமுதாயம் ஆனந்தமாக இருக்க கருணை மிக்க இறைவன் திருக்குர்ஆனில் வழிகளை காட்டி இருக்கிறான்.

ஏக இறைவேதமான திருக்குர்ஆன் படித்தால் இந்த உண்மை மிகத் தெளிவாக புரியும்.

இதன்மூலம் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மறையும்.

கொலையாளி யாராக இருந்தாலும் அவனை மதம், சாதி ரீதியாக பார்க்காமல், அணுகாமல், குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் தோழர்களே.

கடைசியாக,

நீங்கள் எந்த மதக் கொள்கையை கடைப்பிடித்தாலும் சரி, அது உங்கள் விருப்பம்.

ஏனென்றால் திருக்குர்ஆன் அழகாக சொல்லிவிட்டது.

உங்களுக்கு உங்கள் மார்க்கம்.

எங்களுக்கு எங்கள் மார்க்கம்.

மேலும் தவறான வழியில் இருந்து நேர்வழி தெளிவாக எடுத்து கூறப்பட்டு விட்டது.

இனி எல்லாமே மனிதனின் கையில் தான் இருக்கிறது.

மேலும்

நன்மையின் கூலி நன்மையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

எனவே

இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் இருக்கும் தவறான கருத்துக்களை மனதில் இருந்து அகற்றி விட்டு அன்பை விதையுங்கள் தோழர்களே.

அதன்மூலம் மனிதர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் மிக ஆழமாக வளரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, July 2, 2016

மனித நேயம் - ஒற்றுமை ...!

எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும்: 

முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு....!


சென்னையில் அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் உள்ள கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

விழாவில் ஜெயலலிதா ஆற்றிய பேருரை:-

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும்.

இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவை.


ஆனால், ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால்  வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. யார் நோன்பாளி என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கு அறிவார்.

"நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார்.

 இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்புக் கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது.

"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது.

தூய்மை அடைவதன் மூலம் இறைப் பற்றும், அன்பும் மேலோங்குகிறது.

 தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன் மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது.

இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர்.

இறைப் பற்று உள்ளவர்களை  எந்த துன்பமும் அணுக இயலாது.  


இஃப்தார் நோன்பு திறப்பு  கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது.

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும்.

எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும்.  ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.

இறை நம்பிக்கையுடைய, இஸ்லாமியப் பெருமக்களாகிய நீங்கள், இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடித்து  இறைவனின் விருப்பத்திற்கேற்ப மனித நேயத்திற்கும், அன்பிற்கும், எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள்.

தொகுப்பு....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Saturday, June 25, 2016

திருக்குர்ஆன் காட்டும் ஒளி.....!

திருக்குர்ஆன் காட்டும் ஒளி.....!


இந்தாண்டு புனித ரமலான் மாதத்தில், திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை முழுவதும் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த நல்ல வாய்ப்பை ஏக இறைவன் எனக்கு வழங்கினான்.

அதற்கு இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.

உலக புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவுலானா மௌதூதி சாஹிப் அவர்கள் , உருது மொழியில் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனை, சென்னை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது.

தமிழ் பேசும் மக்கள் அனைவரின் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற இந்த  மொழியாக்கத்தைதான், இந்த ரமலானில் நான் படித்து (வாசித்து) முடித்தேன்.

திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்கத்தை படிக்கும்போது, படித்தபோது,   ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது. புரிந்தது.

அது,

மனிதன் தன் விருப்பப்படி கண்டமெனிக்கு எப்படியும் வாழ முடியாது.

அப்படி வாழலாம் என நினைப்பதும் நடக்காது. நிச்சயம் முடியாது.

ஒரு வரையறைக்குள்தான், ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் மனிதனுடைய வாழ்வு இருக்க வேண்டும்.

அதன்மூலம் மட்டுமே, அவன் இருளில் இருந்து விலகி ஒளியின் பக்கம் நடைபோட முடியும்.

எப்படியும் வாழலாம் என நினைத்தால், மனிதனுக்கு அழிவு நிச்சயம்.

அவனுடைய அமைதி சீர்குலைந்து போகும்.

இம்மை (உலக) வாழ்வில் மட்டுமல்ல, மறுமை வாழ்விலும், மனிதன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

சரி,

இறைவனின் கட்டளைகள் ஏற்று அதன்படி தம்முடைய வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொண்டால், மனிதன் எப்படி இருப்பான்.

அவனுடைய வாழ்வில் நாள்தோறும் ஒளி வீசும்.

தனி மனித பண்புகள் வளரும்.

ஒழக்க மாண்புகள் மேலோங்கும்.

அனைத்து தரப்பு மக்களை மதிக்க மனம் விரும்பும்.

மனிதர்களை நேசிக்க ஆசை பிறக்கும்.

அண்டை வீட்டார், ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும்.

அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும்.

மனிதனுக்கு என்றென்றும் ஆனந்தம் கிடைக்கும்.

அவனுடைய வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

பிறருடன் சண்டை சச்சரவுகள் இருக்காது.

வீண் பிரச்சினைகள் ஏற்படாது.

இதனால் சமூகத்தில் எப்போதும் ஓர் நல்லிணக்கம் இருக்கும்

இறை கட்டகளை மறுத்து, தன் போக்கில் வாழும் மனிதனுக்கு மேற்சொன்ன அனைத்தும் நிச்சயம் கிடைக்காது.

அதனால், அவன் வாழ்வு சூனியமாகிவிடும்.

அதனால், அமைதி இழந்து, கற்பனையான உலகத்தில் மனிதன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவான்.

போலி மகிழ்ச்சிதான் மனிதனுக்கு கிடைக்கும்.

பிறருடன் நல்ல இணக்கமான சூழல் மனிதனுக்கு கிடைக்காது.

இதனால் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளைதான் மனிதன் சந்திக்க வேண்டி இருக்கும்.

அத்துடன், நல்ல அமைதியான ஆன்மிக வாழ்வு அவனுக்கு கிடைக்காது என்பதால், மனிதில் சைத்தான் குடி புகுந்து, நாள்தோறும் தொல்லை தருவான்.

இதைவிட மிகப் பெரிய கொடுமை மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்.

ஆக,

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, மனிதனின் அழகிய வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி என்ன என்பது நம் கண்முன் வந்து நிற்கிறது.

அதனை அழகிய முறையில் மனிதன் பின்பற்றி வாழ்ந்தால், அவனது வாழ்வு சுமையாக இல்லாமல் சுகமாக மாறும்.

இதுதான்,

திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வாசிக்கும்போது, எனது சிறிய  அறிவிற்கு கிடைத்த அற்புதமான படிப்பினை.

திருக்குர்ஆனை வாசிக்க, வாசிக்க நம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் எப்படி வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் பிறந்துக் கொண்டே இருக்கும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அது உண்மைதான்.

ஒருமுறை வாசித்தபோதே, என் சிறிய அறிவுக்கு பல தகவல்களை இறைவன் ஏற்றினான் என்றால், மொழியாக்கத்தை விளக்க உரையுடன், வரலாற்று பின்னணிகளுடன் படித்தால், சொல்லவா வேண்டும், மனிதனுடைய வாழ்வு புனிதமாகும் என்பதை.

ஏன்,

நீங்களும் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை ஒருமுறை படித்துதான் பாருங்களேன்.

மனிதன் இருளில் இருந்த வெளிச்சத்தற்கு வர, ஒளியின் பக்கம் நடைபோட அதில் என்னதான் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அறியும் நல்ல வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும் அல்லவா.

இந்த ரமலானில் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை படிக்கக் கூடிய வாய்ப்பை நல்கிய ஏக இறைவனுக்கு மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இருளில் இருந்து ஒளியின் பக்கம் நானும் நடைபோட, இனி வரும் நாட்களில் இறைவன் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.

அதன்மூலம், என்னுடைய வாழ்வை தூய்மை நிறைந்த வாழ்வாக நான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுவே,  என்னுடைய இந்த ரமலான் மாத பிரார்த்தனை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Thursday, June 23, 2016

யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நிதிஷ் குமார் கேள்வி.....!



ஜுன் 21-ந்தேதி 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோகா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்? என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் சிறுவயது முதல் யோக பயிற்சி செய்து வருகிறேன்.

ஆனால், நான் அதை பெருமையாக சொல்லிக் கொண்டது இல்லை.

குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது.

இதில் பிரதமர் மோடிக்கு எந்த பங்கும் இல்லை.

எனவே, அதற்கான பெருமை அவரை சேராது.

யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான்.

ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையை கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

மதுவுக்கு அடிமையானவர்களால் யோகப்பயிற்சியை செய்ய இயலாது.

மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து மாற்று வழிகளில் வருமானத்தை தேட வேண்டும்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி பொது நிகழ்ச்சி அல்ல.

அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.

யோகா தினம் குறித்தும், மதுவிலக்கு குறித்தும் நிதிஷ் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையை உரக்க சொன்ன நிதிஷ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

S.A.Abdul Azeez
Journalist.