Saturday, September 30, 2023

சும்மா.....!

 ஓர் தமாஷ்......! ரசிக்க மட்டுமே.....!!



தோழர் அண்ணாதுரை....!

கல்லூரி தோழர் அண்ணாதுரையுடன் இனிய நினைவுகள்.....!




 

என்ன செய்ய வேண்டும்....?

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள்....!

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்....!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவான பிறகு, நடைபெறும் முதல் பொதுதேர்தல் இதுவாகும். அண்மையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளை கைப்பற்றி, தங்களது வெற்றி கணக்கை தொடங்கின. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின.

நம்பிக்கை தரும் வெற்றி:

இந்தியா கூட்டணி ஏற்பட்ட பிறகு நடந்த இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளது. பணபலம், ஆள் பலம், அதிகார பலம் என பல்வேறு பலங்களுடன் இடைத்தேர்தலில் களம் இறங்கிய பாஜகவிற்கு, இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்:

இடைத்தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மற்றும் தெலுங்கானாவில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இலக்குடன் தன்னுடைய பணிகளை நிறைவேற்றி வருகிறது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சி, அந்த இருமாநில மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.  

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு மற்றும் ஊழல்கள் குறித்த எந்த புகாரும் எழவில்லை. மேலும், மக்கள் நலன்களை அடிப்படையாக கொண்டு, அங்கு காங்கிரஸ் கட்சி நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பாஜக, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. விவசாயிகள் உட்பட அடித்தள மக்களின்  நலனுக்காக எந்த திட்டங்களையும் பாஜக நிறைவேற்றவில்லை. மேலும் பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பாஜக அரசு மீது மத்திய பிரதேச மக்கள் மிகுந்த கோபத்துடன் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக அங்கும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தெலுங்கானா மாநில உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி, புதிய மாநிலம் அமைந்த பிறகு, அங்கு நடந்த இரண்டு சட்டப்பேரவை பொதுதேர்தலிலும், தோல்வியே சந்தித்தது. இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி, இந்த முறையும், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

எனினும், தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், மக்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும், அக்கட்சியைச் சேர்ந்த பலர், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என மிகப்பெரிய இலக்குடன், காங்கிரஸ் கட்சி, 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும், தாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியது போன்று, தெலுங்கானாவிலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 6 வாக்குறுதிகள் உள்ளதால், தெலுங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.  இதேபோன்று, மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. 

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்:

கர்நாடகா மாநிலத்தில் மிக வலிமையாக கருத்தப்பட்ட பாஜக, தனது ஆட்சி காலத்தில், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்பட்டது. இதனால் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்த முஸ்லிம்கள், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தங்களது வாக்குரிமையை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், தங்களது வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் உறுதியாக இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே ஒற்றுமையாக வாக்கு அளித்தனர். அத்துடன் தேர்தல் நேரத்தில் அலட்சியாக இருந்து விடாமல் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். இதன்மூலம், முஸ்லிம்களின் ஆதரவுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது என உறுதியாக கூறலாம். 

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், முந்தைய பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்திவிட்டது. ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, சரியான முறையில் சென்றுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது, அளித்த ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் பெற்றுள்ளது. 

இத்தகையை சூழ்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தங்களது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு தொகுதியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், வலிமையாக இருக்கும் கட்சிக்கு மட்டுமே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். மேலும் பாஜகவா அல்லது காங்கிரசா என்ற கேள்வி வந்தால், தயக்கம் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன்மூலம் வாக்குகள் பிரிந்து போகாது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து போவதால், அதன்மூலம் பலன் அடைந்து பாஜக வெற்றி பெறுகிறது என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. 

கர்நாடகா மாநில முஸ்லிம்கள் கடைப்பிடித்த சரியான பார்முலாவை, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம்கள் கட்டாயம் பின்பற்றினால், நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும். இதன்மூலம், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தடுத்த நிறுத்த முடியும். நாட்டில் அமைதி, அன்பு, சகோதரத்துவம், மகிழ்ச்சி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, ஐந்து மாநில முஸ்லிம்கள் செயல்பட வேண்டும் என்பதே சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 

கடைசியாக, ஐந்து மாநில மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, பல்வேறு நெருக்கடிகள் இந்தியா கூட்டணிக்கு ஏற்படும். இந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, இந்தியா கூட்டணி உறுதியுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இனி வரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி பயணிக்க முடியும் அதன்படி செயல்பட்டால், நாட்டுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, September 29, 2023

இந்து சகோதரி வெளிப்படுத்திய அன்பு.....!

 

கேரளாவில் நடந்த மீலாது விழா ஊர்வலத்தில்

இந்து சகோதரி வெளிப்படுத்திய அன்பு.....! 

மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடு என

குவியும் பாராட்டுகள்...!!

 

நாடு முழுவதும் கடந்த 28ஆம் தேதி மீலாது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாளில், முஸ்லிம்கள், அனைத்து மத சகோதரர்களுக்கும், தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், உணவுகளை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இது அனைவரின் பாராட்டை பெற்றது.

கேரளாவில் மனித நேயம்:

இதேபோன்று, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மீலாது விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து அனைத்து சமுதாய மக்களுக்கும் எடுத்துக் கூறும் வகையில் முஸ்லிம்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில் மலப்புரம் வலியாடு பகுதியில் உள்ள மதரஸா மாணவர்கள் கலந்துகொண்ட, மீலாது பேரணி நடைபெற்றது. இதில் கம்பீரமான நடையில் மாணவர்கள் அணிவகுத்து சென்றது அனைவரையும் கவர்ந்தது. கொட்டும் மழையிலும் மதரஸா மாணவர்களின் அணிவகுப்பை சாலையோரங்களில் நின்று ஏராளமானோர் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது பேரணியை கண்டு மகிழ்ச்சி அடைந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஷீனா கருவந்தோடி என்ற பெண்மணி, திடீரென, சாலையை கடந்து, பேரணியை தலைமை ஏற்று நடத்திச் சென்ற மதரஸா மாணவர் ஹாதி ஷாமிலுக்கு ரூபாய் நோட்டு மாலையை அணிவித்து, கன்னத்தில் அன்பாக முத்தமிட்டு, தனது மனிதநேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

குவியும் பாராட்டுகள்:

இந்த மனிதநேய, மத நல்லிணக்க சம்பவத்தின், காணொலி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. அத்துடன், தொலைக்காட்சிகளும் சகோதரி ஷீனாவின் அழகிய செயலை செய்தியாக வெளியிட்டு, மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்திற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என கருத்துகளை வெளியிட்டனர்.

இதையடுத்து ஒரு அழகிய செயல்மூலம், கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும்  மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சகோதரி ஷீனா தற்போது உருவெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ஷீனாவின் ஒன்றுவிட்ட சகோதரி, கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றும், அதை தான்  தனது சகோதரி அன்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது இளம் வயது முதல் ஷீனா, மீலாது பேரணிகளை கண்டு வளர்ந்து வந்ததாகவும், அப்போது ஊர்வலத்தில் பங்கேற்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வகையில், எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பதாகவும், அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார். அந்த கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் பாராட்டு:

சகோதரி ஷீனா, முஸ்லிம் மதரஸா மாணவர்கள் மீது வெளிப்படுத்திய இந்த அன்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது அலுவலத்தின் சக ஊழியராக பணிபுரியும் முகமது நிப்ராஸ் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீலாது பேரணிகள் நடத்தப்பட்டதாகவும், அந்த பேரணிகளில் மதரஸா மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், முகமது நிப்ராஸ் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்து சகோதரி ஷீனாவின் அழகிய செயல் இப்போது நாடு முழுவதும் சிறந்த முறையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது நிகழும் சம்பவங்களை கவனிக்கும்போது,  கேரளா மாநிலம் சகோதரி ஷீனா மூலம் நல்ல ஓர் அழகிய மத நல்லிணக்கத்தை நாட்டிற்கு எடுத்துக் கூறி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

ஆட்டம்.....!

 இது ஆட்டம்.....! செம ஆட்டம்.....!!



நட்பே வலிமை.....!

நல்ல நட்பு வலிமை தரும்.....!


 

Thursday, September 28, 2023

வேண்டாம் வெறுப்பு பேச்சு..!

நாட்டில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள்.....!

இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக அதிகளவு வெறுப்பு பேச்சுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய வெறுப்பு பேச்சுகளை தடை செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களே, முன்வந்து வெறுப்பு பேச்சை பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், நாட்டில் வெறுப்பு பேச்சுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேர்தல் காலம் நெருங்க, நெருங்க வெறுப்பு பேச்சுகளின் தன்மைகள் மேலும் பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மாநில அரசுகளும் கண்டுக் கொள்வதாக தெரியவில்லை. 

அறிக்கையில் தகவல்:

இந்நிலையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஹிந்துத்வா வாட்ச் என்ற அமைப்பு,  சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் 2023-ன் முதல் பாதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ஆபத்தான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் சராசரியாக, முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றுக்கும் மேற்பட்ட வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, வரும் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் உச்சரிக்கப்படும் அதிகரிப்புடன், சராசரியாக நடந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது முஸ்லிம்களைக் குறிவைத்து மொத்தம் 255 வெறுப்புப் பேச்சுகளை  இந்த அமைப்பு, பதிவு செய்துள்ளது. 

சாதாரணமாகிவிட்ட வெறுப்பு பேச்சு:


மதம், இனம், தேசியம், நிறம், பாலினம் அல்லது பிற அடையாளம் காணும் காரணிகளின் அடிப்படையிலான தகவல்தொடர்புகளை உள்ளடக்கிய, உலகெங்கிலும் உள்ள நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெறுப்பு பேச்சுக்கான வரையறை, சூழ்நிலையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெறுக்கத்தக்க பேச்சு இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது என்று அறிக்கை எச்சரிக்கிறது, இந்த சம்பவங்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் 2023 மற்றும் 2024 இல் நடைபெறும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. 

அதிகமாக நடக்கும் மாநிலங்கள்:

குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெறுப்புப் பேச்சுகள் அதிகம் நடந்ததாக ஹிந்துத்வா வாட்ச் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பாஜக ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிராவில் மட்டும் இதுபோன்ற 29 சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த வெறுக்கத்தக்க பேச்சு சம்பவங்களின் போது சதி கோட்பாடுகளின் ஆபத்தான பரவலை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, பெரும்பாலும் உறுதியான உண்மை அடிப்படை இல்லாமல். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்கவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களைப் புறக்கணிக்குமாறு பேச்சாளர்கள் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பிடத்தக்க வகையில், இதில் ஏறக்குறைய 80 சதவீத சம்பவங்கள், பாஜக ஆளும் மாநிலங்களில் வெளிப்பட்டது. தேர்தல் வெற்றியைப் பின்தொடர்வதில் வெறுப்பூட்டும் பேச்சு உத்திகள் மூலம் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்த அறிக்கை கவலைகளை எழுப்புகிறது.

அதிகரிக்கும் வெறுப்பு சம்பவங்கள்:

இந்துத்வா வாட்ச்  அமைப்பு, சரியான வழிமுறையில் இந்துத்துவ தேசியவாத குழுக்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்புப் பேச்சுகளின் வீடியோக்களை சரிபார்ப்பது மற்றும் ஊடகங்களில் பதிவாகும் சம்பவங்களின் அடிப்படையில் அவற்றின் அறிக்கையைத் தொகுப்பது ஆகிய பணிகளை செய்து வருகிறது.

இந்துத்வா கண்காணிப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மோடி அரசு இன்னும் பதிலளிக்காத நிலையில், 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த அறிக்கை, வெறுப்பு பேச்சுகளை தடுத்து நிறுத்துவதின் அவசர நடவடிக்கையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி,  சிறுபான்மையின் மக்களின் உரிமைகளுக்காக, வெறுப்பு பேச்சு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


வேகம்....வேகம்...!

வந்தே பாரத் ரயிலின் வேகமான பயணம்...!




 

சென்னையில் நான்....!

தமிழகத்தின் தலைநகர் சிங்காரச் சென்னையில் நான்...!


 

மக்களவையில் உரை....!


டெல்லியில் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை உறுப்பினர் அப்துஸ் ஸமத் சமதானி ஆற்றிய உரை....!


 

மத நல்லிணக்கம்....!

கேரள மாநிலம் மலப்புரம் வழியாடு பகுதியில் நடந்த மீலாது விழா நிகழ்ச்சியில் ஒரு நல்லிணக்க காட்சி.....!



 



அழகு.....!


அழகோ....அழகு.....!


 



ரயில் பயணங்களில்....!

வேலூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம்.....!


 

Wednesday, September 27, 2023

இரவு உணவு......!

இரவு உணவு - சில பயனுள்ள தகவல்கள்....!

மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கு இரவு உணவு மிகவும் முக்கியமானது. மக்கள் பெரும்பாலும் இரவு உணவில் எண்ணெய் பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரவு உணவு இலகுவாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை அனைவரும் பெறலாம். 

லேசான உணவின் நன்மைகள்:

இரவில் லேசான இரவு உணவை உட்கொள்வதால், உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதன் காரணமாக, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆரோக்கியமான வயிறு,  நல்ல ஆரோக்கியத்திற்கு  மிகவும் அவசியம்.

இரவில் லேசான உணவை உண்பவர்கள் தங்கள் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். எனவே, இரவு உணவிற்கு குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வயிறு நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். நம்மில் பலர் இரவு நேரத்தில் வயிறு முட்ட உண்பதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இது சரியான முறையல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

அத்துடன், இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்க செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை கூறுகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல், உணவை உண்பது சரியான அணுகுமுறை இல்லை என்றும், அதனால் உடல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். 

இரவு தூக்கம்:

மனிதனின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகமிக அவசியம். நீங்கள் இரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை என்றால், இன்றிலிருந்து லேசான இரவு உணவைத் தொடங்குங்கள். உண்மையில் முடிவு ஆச்சரியமாக இருக்கும். வயிறு நிறைந்த உணவு மற்றும் எண்ணெய் உணவுகள் தூக்கத்தை கெடுக்கும். அதை உங்களில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கலாம். 

அத்துடன், இரவு உணவின் போது லேசான உணவை உண்பவர்கள், உடலின் ஆற்றல் அமைப்பான மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும். இது தவிர, அவர்களின் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

கொழுப்பு குறைந்த உணவு:

இரவு உணவிற்கு கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர லேசான உணவும் உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

இரவில் இலகுவான உணவுகளை உண்பதால், உடலை நீண்ட நேரம் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பதால் உடல் வேகம் குறைந்து பாரமாக இருக்கும் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை இரவில் சாப்பிடுவதன் மூலம், நீங்கள் அமிலத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். சாப்பிட்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், இனி லேசான உணவுகளை விரும்புங்கள். லேசான உணவுகளை உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரவு உணவு மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பதால், அதை தவிர்க்க வேண்டாம். அதேநேரத்தில், சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்ளும் பழக்கதை கடைபிடித்து வாழுங்கள். சரியான அளவு உணவு, சத்தான உணவு ஆகியவற்றை இரவு உணவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டு, இரவு 8 மணிக்குள் உணவை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இதன்மூலம், உடலும், மனமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான மற்றும் லேசான உணவு, பல்வேறு உடல் பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, September 26, 2023

அழகு.....!


கடல் அழகு.....! நீந்தும் மீன்கள் அழகு...!!


 

வீணான உணவு....!

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் வீணான உணவு....!




ஜைனப் யுனானி கிளினிக்...!

வேலூர் ஜைனப் யுனானி கிளினிக் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா...!



 

வேர்கடலை....!

வேர்கடலை....! 

சக்கரை நோய் உள்ளவர்கள்  வேர்கடலையை சாப்பிடுவதினால், அவர்களுக்கு வரும் மாரடைப்பு பிரச்சனை குறைகிறது. இருதயத்தை பலப்படுத்த இது உதவுகிறது.

வேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.

வாழ்க்கை.....!

மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.....!

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது!

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்"

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.

இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.

ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வதில் கோடீஸ்வரர் ஆகிறார்.

எம்ஜியாருக்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம். கடைசி 30 வருடங்கள் சாகும்வரை  ராஜயோக வாழ்க்கை.

சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.

பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.

டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் 

I Cannot Be Silent என்றார்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

யார் கண்டது,  அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். 

எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

இங்கே இப்போது இந்த நொடியில்  என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ  அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். 

அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் 

ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

இது தான் வாழ்க்கை 

இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே 

மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!...

Monday, September 25, 2023

சென்னையில் இஸ்லாமிய சின்னங்கள்...!

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு 
மிக அழகிய முறையில் அழகு சேர்க்கும் 
இஸ்லாமிய நிறுவனங்கள், சின்னங்கள்...!


 

மணிச்சுடர் நாளிதழ் அச்சு பணி....!

தமிழக முஸ்லிம்களால் இந்தியாவில் நடத்தப்படும் ஒரே தமிழ் 
இஸ்லாமிய நாளிதழ் மணிச்சுடர் நாளிதழாகும். 
கடந்த 39 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் 
மணிச்சுடர் வந்துகொண்டிருக்கிறது. 
இதன் அச்சு பணி குறித்த ஓர் வீடியோ....!


 

Sunday, September 24, 2023

மனித சமுதாயத்தை காப்பாற்ற....!...!

 

அழிவில் இருந்து மனித சமுதாயத்தை காப்பாற்ற

ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்....!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த மர்ஹும் சிராஜுல் மில்லத் .கா..அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வேலூர் ஆர்.என்.பாளையத்தில் இயங்கி வரும் இஸ்லாமிக் சென்டருக்கு சென்ற அவர், அங்குள்ள சிறப்பு விருந்தினர்களின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு, சென்டரின் பணிகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து குறிப்பு எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிராஜுல் மில்லத் உரை:

பின்னர், இஸ்லாமிக் சென்டர் நிர்வாகிகள் சார்பில், சிராஜுல் மில்லத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் வேலூர் நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பின்னர் உரையாற்றிய சிராஜுல் மில்லத், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். வேலூரில் இயங்கி வரும் இஸ்லாமிக் சென்டர் சிறிய அளவில் இருந்தாலும் மிகப்பெரிய பணிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதன் பணிகளை ஏக இறைவன் ஏற்றுக் கொண்டு, மேலும் உற்சாகத்துடன் பணிகளை நிறைவேற்ற நிர்வாகிகளுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் துஆ செய்தார்.

அழிவில் மனித சமுதாயம்:

தொடர்ந்து பேசிய அவர், ஏக இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதித்தூதராக அறிவிப்பதற்கு முன்பு, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பியாவில் இருந்த கொடூர நிலைமைகளை குறிப்பிட்டார். மனித சமுதாயம் மிகவும் கொடுமையான ஒரு சமுதாயமாக இருந்ததாகவும், அட்டூழியங்கள், அட்டகாசங்கள், பாவங்கள் என அனைத்தும் அப்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்து வந்ததாகவும் கூறிய அப்துஸ் ஸமத் அவர்கள், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அரேபியா, ஐரோப்பியா உட்பட முழு உலகமும் அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. இந்த அழிவின் தன்மை மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மனிதர்கள் மத்தியில் தீமைகள் தொடர்ந்து அதிகரித்தன. நன்மைகள் என்ற பேச்சே இருக்கவில்லை. இதனால், உலகம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலை மாற வேண்டும் என அப்போது வாழ்ந்த நல்லவர்கள் சிலர் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருந்தனர். இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் தான், ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

 

ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்:

அந்த அற்புதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் ஏக இறைவன் நடத்திக் காட்டினான். ஆம், அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மனித சமுதாயம் படுபாதாளத்தில் விழ தாயராக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏக இறைவன் இறைத்தூதராக அறிவித்து, அவர்கள் மூலம், மனித சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக மாற்றிக் காட்டினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட பின்பு, அவர் சந்தித்த துன்பங்கள், தொல்லைகள் ஏராளம். எனினும், மிகவும் பொறுமையுடன் செயல்பட்டு, ஏக இறைவனின் கட்டளையை அவர் நிறைவேற்றினார். உலகில் இன்று நாம் முஸ்லிம்களாக மிகப்பெரிய கவுரவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

எனவே, நம்முடைய வாழ்வு இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வாழும் நல்ல பண்புள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த நல்ல ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து நல்ல இஸ்லாமியர்களாக வாழ வேண்டும். நல்ல முஸ்லிம்களாக வாழ்வதே, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாகும். இதன்மூலம், பிறருக்கும் நாம், சிறந்த முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஒவ்வொரு நாளும், திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகளை நாம் படித்து, அதன்படி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் நிலையில் உள்ள உரை:  

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் இஸ்லாமிக் சென்டரில் சிராஜுல் மில்லத் அவர்கள் ஆற்றிய இந்த உரையை கேட்கும் வாய்ப்பு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கும் கிடைத்தது. அழிவில் இருந்து மனித சமுதாயத்தை காப்பாற்ற  ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என சிராஜுல் மில்லத் சொல்லிய அந்த வார்த்தைகள் இன்னும் என் மனதை விட்டு மறையவில்லை. அகலவில்லை. மர்ஹும் சிராஜுல் மில்லத்தை அடிக்கடி நான் நினைக்கும்போது, அவர் இஸ்லாமிக் சென்டரில் ஆற்றிய உரையின் முக்கியத்துவம் எனக்கு நினைவுக்கு வரும்.

ஏக இறைவனால், இறுதித்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படாமல் இருந்திருந்தால், உலகம் எப்படிப்பட்ட அழிவை நோக்கிச் சென்று இருக்கும் என நினைத்து நான் வேதனை அடைவேன். எனவே, மனித சமுதாயத்தை காப்பாற்ற  ஏக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டிய வாழ்வு நெறியை நாமும் பின்பற்றி, ஏக இறைவனுக்கு எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


-    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்