Friday, December 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (105)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 105

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக  அறிவிக்கப்பட்டு, அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும்.....!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்......!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (19.12.2014) அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்ற பள்ளி  சிறுமியும், வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்ற பள்ளி சிறுமியும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம்  நிகழ்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அவலம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், செல்போனிலும், கணினிகளிலும் பாலுறவு காட்சிகளை கொண்ட இணையதளங்களால்  இளைஞர்கள் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்கு கட்டாயப்படுத்திப் படுகொலை செய்த மாணவன் இணையதளங்களில்  காட்சிகளைப் பார்க்க கூடியவன் என்று கூறப்படுவதாகவும், அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 சதவீதம் தடை செய்தை சுட்டிக் காட்டியுள்ள தொல்.திருமாவளவன்,  இந்திய அரசும் அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மதுபான கடைகளை  அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும், பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொல்.திருமாவளவனின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

இளைஞர் சமுதாயம், இனிய சமுதாயமாக, நல்ல சமுதாயமாக, நாட்டின் வளர்ச்சியில், வீட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சமுதாயமாக மலர வேண்டும் என்றால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இதுதான் எமது விருப்பம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, December 18, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (104)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! 

 நாள் - 104


தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை மதிமுகவின் போராட்டம் ஓயாது....!

வைகோ அறிவிப்பு.....!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுக்கடைகளை இழுத்து மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தெருக்கு தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக் மது கடைகளால் குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் கற்பழிப்பு, விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து நடக்கும் சூழ்நிலை உள்ளது என்றும்,  பெற்றோர்களிடம் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பற்றி தவறாக கூறி பெற்றோர் அடியாட்களை ஏவி ஆசிரியர்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். .

வேலூர் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சரி.....


இவையெல்லாம் வைகோ எங்கே கூறினார் என்று நீங்கள் வினா எழுப்புவது புரிகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டும் செயலை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்திட வேண்டியும் தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்க வேண்டியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கடந்த 18.12.2014 அன்று  மக்களோடு கலந்துரையாடினார்.

அப்போது பேசியபோதுதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மதுவுக்கு எதிராக வைகோவின் போராட்டத்திற்கு நமது ஆதரவு எப்போதும் உண்டு.

மதுவுக்கு எதிரான அவரது பணி தொடரட்டும்.

தமிழகத்தில் இருந்து மது ஒழியட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Wednesday, December 3, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (103)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  நாள் - 103

தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது? 

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி......!

தமிழகத்தில் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளால், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் இளம் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வருகிறது.

இதனால், சமூகம் சீரழிந்து வருகிறது.

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இளம் பெண்கள் விதவைகளாகும் நிலை உருவாகி வருகிறது.

குடும்பங்கள் வறுமையில் தவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் மதுதான்.

இந்நிலையில்,  2011ல் நிகழ்ந்த விபத்துக்கான இழப்பீடு குறித்து மணிவிழி மற்றும் பாலு என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த (03.12.2014) அன்று விசாரித்து உயர்நீதிமன்றம், மதுவால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், மோட்டார் வாகன மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.

டஸ்மாக் கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம்  கிடைகிறது.

தமிழக அரசு, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து விரிவான பதிலை டிசம்பர் 12ம் தேதிக்குள்  தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.


டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வி.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக மதுக்கடைகளை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசின் வழியில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பிறகு நிரந்தரமாக மது கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.

இதுதான், பெண்களின் எதிர்பார்ப்பு....

சமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள்..விருப்பம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Tuesday, October 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (102)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 102

டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலி......!

முசிறி பழைய பஸ் ஸ்டாண்டில், டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலியாயினர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கணபதி. இவர், ஆற்று பாதுகாப்பு உபகோட்டத்தில், தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 13.10.14 அன்று திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நண்பர்களான, ஆட்டோ டிரைவர் செல்வம், கணேசமுருகன், ஆகியோருடன், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள, டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.

மது அருந்தி விட்டு, மூவரும், செல்வத்தின் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, கணபதிக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவரை, முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், வழியில் கணபதி இறந்தார்.இதையடுத்து, செல்வம், கணேசமுருகன் ஆகியோர், கணபதி உடலை முசிறி அரசு மருத்துமனையிலேயே விட்டு விட்டு, மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஆட்டோவிலேயே படுத்து துங்கியுள்ளனர்.காலை, அவ்வழியாக சென்றவர்கள், செல்வம் மற்றும் கணேசமுருகன் ஆகிய இருவரும், ஆட்டோவில் தூங்குவது குறித்து, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.



அவர்கள் வந்து பார்த்த போது, இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. உறவினர்கள், அவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

தகவலறிந்த, ஆர்.டி.ஓ., ஜெய்னுலாப்தீன், ஆட்டோவில் இறந்து கிடந்த கணேசமுருகன், செல்வம் ஆகியோரின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மது பழக்கம் எப்படியெல்லாம் மனிதர்களின் உயிர்களை கொல்கிறது பார்த்தீர்களா சகோதரர்களே..

இருந்தும் நம்முடைய இளைஞர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகி வருகிறது..

எனவேதான் அரசு முன் கோரிக்கை வைக்கிறோம்...

தமிழகத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (101)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 101

சென்னையில் போதை டிரைவரால் நடந்த விபரீதம்....! 

தறிகெட்டு ஓடிய கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி....!!

சென்னை வேளச்சேரி விஜயநகரில் நள்ளிரவில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் நடைபாதையில் படுத்திருந்த தம்பதியும் மூதாட்டியும் உயிரிழந்தனர்.

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது.

குடிபோதையில் காரை ஓட்டிய டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி செல்லும் சாலையில் பாரதி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதை ஒட்டியுள்ள நடைபாதையில் ஆறுமுகம் என்பவர், மனைவி ஐஸ்வர்யா  ஒரு வயது மகன் அன்பு ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஐஸ்வர்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தம்பதியர் இருவரும் தெருக்களில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பால் கவர், பேப்பர், இரும்பு போன்றவற்றை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இரவில் நடைபாதையிலேயே படுத்து தூங்குவர்.

இந்நிலையில், 12.10.14 அன்று இரவு குழந்தையுடன் நடைபாதையில் படுத்திருந்தனர். இவர்களின் அருகில் 63 வயது மூதாட்டி ஒருவரும் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து பயங்கர வேகத்தில் தாறுமாறாக வந்த கார், திடீரென நடைபாதையில் ஏறியது.

அங்கு படுத்திருந்த ஒரு மாடும் நாயும் கார் மோதி இறந்தன. அதன்பிறகும் வேகம் குறையாத கார் தாறுமாறாக சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யா மற்றும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. மூதாட்டியை சிறிது தூரம் இழுத்துச் சென்ற கார், பஸ் நிறுத்தத்தில் இருந்த போர்டை இடித்துத் தள்ளியபடி சாலையில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி, அதே இடத்திலேயே இறந்தார்.



சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஏறி இறங்கியதில் ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது. ஆறுமுகத்தின் மகன் அன்பு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் அமெரிக்கன் பள்ளி மற்றும் ஐ.டி. கம்பெனி இருப்பதால், இரவில் எப்போதும் போலீஸ் ரோந்து வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். நள்ளிரவில் விபத்து நடந்ததும் விரைந்து வந்த போலீஸார், காரில் இருந்து தப்பியோட முயன்ற 3 பேரை விரட்டினர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர்.

பிடிபட்டவர், பெருங்குடி கல்லுக் குட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர் கள் சசிக்குமார் தேவா ஆகியோரும் மது குடித்துவிட்டு காரில் வந்துள்ளனர்.

காரை சிவக்குமார் ஓட்டியுள்ளார். போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, 3 பேரின் உயிரை பறித்து விட்டனர்.

தப்பியோடிய டிரைவர் சசிக்குமார், தேவாவை போலீஸார் கைது செய்தனர்.

தொடரும் நடைபாதை விபத்து சோகங்கள்: கடுமை காட்டாத போலீஸார்.

சென்னையில் 2007-ம் ஆண்டு பணக்கார வியாபாரி ஒருவரின் 14 வயது மகன் தாறுமாறாக ஓட்டிய சொகுசு கார், கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை நடைபாதையில் படுத்திருந்த 11 பேர் மீது ஏறியது. இதில் இருவர் பலியாயினர். இளையோர் நீதிமன்றத்தில் சரண டைந்த அந்த சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளி தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் மீது ஷாஜி என்ற பணக்கார இளைஞர் குடிபோதையில் ஓட்டி வந்த கார் மோதியது. இதில், சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஷாஜி வெளிநாடு தப்பிச்செல்ல, வேறொருவரை சரண் அடைய வைத்து வழக்கை முடிக்கப் பார்த்தனர்.

இதேபோல கடந்த ஜூன் மாதம் சென்னை சூளையில் கீதா என்பவர், நடைபாதையில் அமர்ந்து தனது 3 வயது மகன் ஹிருத்திக் ரோஷனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் மோதியதில் சிறுவனின் 2 கால்களும் துண்டாகின. அதை மருத்துவர்களால் இணைக்க முடியாத நிலையில், தற்போதும் அந்த குழந்தையின் நிலை பரிதாபமாகவே உள்ளது. கீதாவுக்கும் காலில் படுகாயம் ஏற்பட்டது.

மும்பையில் 2002-ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் போதையில் ஓட்டிச் சென்ற கார் நடைமேடையில் ஏறியதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரில் கடந்த ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று எம்.ஜி. சாலையில் ஆட்டோ மீது மோதினார். இதில் ஒருவர் இறந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 A (அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்) பிரிவின்படி கொடுக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனை, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மது போதையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்று தெரிந்தே இந்த தவறை செய்கின்றனர். அதனால் மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு 304(2) பிரிவின் படி (மரணம் விளைவிக்கும் குற்றம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற பயங்கரமான விபத்துகளின்போது போலீஸார் வழக்கு பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுகின்றன. போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களில் பலர், வசதியானவர்களாகவோ அல்லது அதிகார பின்புலம் கொண்டவர் களாகவோ உள்ளனர். அதனால், அவர்களிடம் போலீஸார் கடுமையை காட்டுவதில்லை. சில நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பணத்தின் மூலம் வழக்கை தீர்த்து வைக்கவே முயல்கின்றனர்.

எது எப்படியோ, மதுவால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவது தொடர்கதையாகவே இருக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (100)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!" 

நாள் - 100



தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும்? 

மது அருந்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.......!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு.....!

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி என். கிருபாகரன் விருப்பம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம் பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படங்கள் தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

தற்போது வெளியாகும் சினிமாக்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், காட்டுமிராண்டித்தனமான சண்டைக் காட்சிகள், பெண்களை கேவலமாக சித்தரித்தல், மது குடித்தல் மற்றும் புகைப் பிடித்தல், கெட்ட நடத்தை உள்ளவர்களை நல்லவர்களாக சித்தரிப்பது, குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியன தேவையற்றதாக உள்ளது.

சினிமாக்களுக்கு தவறான தலைப்புகள் வைக்கப்படுகின்றன. தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தவறான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.

தமிழ் சினிமாவில் இவற்றைத் தவிர்ப்பது குறித்து திரையுலகினர் ஆலோசிக்க வேண்டும்.

பழைய சினிமாக்களில் அன்பு, பாசம், குடும்ப உறவு முறைகள் வளர்க்கப்பட்டதுபோல், இப்போது தயாரிக்கப்படும் சினிமாக்களிலும் காட்சிகள், கருத்துகள் இடம்பெற வேண்டும்.

சினிமா பணம் பார்க்கும் தொழிலாக இருந்தாலும், சமூகம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வலிமை சினிமாவுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது.

சினிமா மூலம் அமெரிக்காவில் ரீகன், அர்னால்டு, ஆந்திராவில் என்.டி.ராம ராவ், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

சமூக பிரச்சினைகள் அடிப் படையில் பராசக்தி, ரத்தத் திலகம், நாடோடி மன்னன், பாசமலர், பாலும் பழமும், நெஞ்சில் ஓர் ஆலயம், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, இந்தியன் போன்ற சினிமாக்கள் எடுக்கப்பட்டன. இப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆனால், தற்போது தயாரிக்கப்படும் எல்லா படங்களும் சமூகத்துக்கு எதிர் மறையான கருத்துகளை பரப்புவதாக எடுக்கப்படுகின்றன. சினிமா தொழிலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிக்கக்கூடாது.



சென்சார் போர்டு அனுமதி வழங்கிய சினிமாக்களில்கூட மிருகத்தனமான வன்முறை காட்சிகள், ஆயுத கலாசாரக் காட்சிகள், நடு ரோட்டில் கொலை செய்யும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சென்சார் போர்டு உறுப்பினர்களின் மீதான முறை கேடு புகாரை நிராகரிக்க முடியாது.

சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருப்பவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டில் நியமனம் செய்யப்படுபவர்கள் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு, நேர்மையாக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டு சான்று வழங்கிவிட்டால், மறுபரிசீ லனைக்கு அவசியம் இல்லை என்ற ரீதியில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஹீரோக்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் மற்றும் அதர்ம செயல்களில் வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் இருக்கக்கூடாது. எதிர்மறையான தலைப்புகள், எதிர்மறைவான கதாபாத்திரங்கள், கருத்துகள் இருக்கக்கூடாது, சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகளும் இருக்கக்கூடாது.

நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா இருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மதுவுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரனுக்கு எமது பாராட்டுக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (99)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள்- 99

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம்.....!

இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம்....!!

டாஸ்மாக் கடைகளால் நாள்தோறும் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 14.10.14 அன்று போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஸ்நிலையம், நீதிமன்றம் எதிரில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனை செய்வதை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டம்  நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மதுவிற்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நியாயமான அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமலுக்கு வர வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, October 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (98)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 98


கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்படுவது உறுதி........!

முதலமைச்சர் உம்மன் சாண்டி திட்டவட்டம்.....!!

கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று  உம்மன் சாண்டி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உம்மன் சாண்டி கடந்த 7.10.14 அன்று திருவனந்தபுரத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய உம்மன் சாண்டி,  “மதுபானம் கிடைப்பதை படிப்படியாக குறைத்து, வரும் 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயன்று வருகிறது என்றார்.

அரசின் நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை நோக்கமாகக் கொண்ட தங்கள் செயல்பாடுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நோக்கத்தில் விரும்பிய பலனைப் பெற மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார் உம்மன் சாண்டி.

கேரளத்தில், காந்தி ஜயந்தி, ஸ்ரீநாராயண குரு பிறந்த நாள், நல்ல வெள்ளி போன்ற விடுமுறை நாள்களில் மதுக்கடைகளை மூடுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 5 நட்சத்திர ஹோட்டல்கள் தவிர பிற ஹோட்டல்களில் இயங்கிவந்த சுமார் 700 மதுக்கூடங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கையாக, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது

கேரளாவை போன்று தமிழகத்திலும் விரைவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வர வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆவல். எதிர்பார்ப்பு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, October 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (97)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! "

நாள் - 97


தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உண்ணா விரதப் போராட்டம்......! 

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டி.தனசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் எங்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக்கில் பணி புரியும் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்கக் கோரியும் காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியபோது, “டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பாக பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும், மதுக்கடைகளை மூடிவிட்டு அனைவருக்கும் மாற்றுப்பணியை வழங்க வேண்டும் என்ற டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை ள் நிறைவேறும் வகையில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் நடந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிஜேபி  தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உரையாற்றும் போது, “தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் பணியாளர்களே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது நல்ல தொடக்கம் என்றார்.  இக்கோரிக்கை வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம் என்றும்,  உங்களுக்கு மாற்றுப் பணி கிடைக்க பொதுமக்களோடு இணைந்து போராடுவோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.



போராட்டததிற்கு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டனர். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பேசினர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து பெருந்திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களே போராட்டம் நடத்தியது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, மாநிலத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Tuesday, September 30, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (96)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 96

தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...!

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி வலியுறுத்தல்.....!!

கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அதற்காக அங்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் அரசின் இந்த நல்ல திட்டத்திற்கு அம்மாநில மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்..

குறிப்பாக பெண்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்...

இந்நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 30.09.2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பங்கேற்று பேசினார்.


அப்போது, பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கியதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

உண்மையான, சிறந்த தலைவர் என்றும், அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர் என்றும் உம்மன் சாண்டி கூறினார்.

கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர் காமராஜர் என்று கூறிய அவர், பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.


அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டார்.

அத்துடன் கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் மதுவிலக்கு குறித்தும் தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் உம்மன் சாண்டி.

மேலும், தமிழகத்திலும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்.

கேரளவை போன்று அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தும் என்று நம்புவதாகவும் உம்மன் சாண்டி நம்பிக்கை தெரிவித்தார்.

கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தியது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உம்மன் சாண்டி வேண்டுகோள் விடுத்து இருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று.



அவரது வேண்டுகோளை அதிமுக அரசு ஏற்று, தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதான், தமிழக மக்களின் ஆசை. எதிர்பார்ப்பு...

நல்ல நாள், விரைவில் மலரும் என நம்புவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, September 28, 2014

தீர்ப்பு.....!

தீர்ப்பு.....!  

சில சந்தேகங்கள்.....!!

சில கேள்விகள்.....!!!



அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

நான்கு ஆண்டுகள் சிறை....! 100 கோடி ரூபாய் அபராதம்....!!

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்...

இப்படி, ஜெயலலிதாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பு குறித்து தற்போது பல சந்தேகங்களையும் சில கேள்விகளையும் அதிமுக தரப்பு எழுப்பியுள்ளது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா...

இதனால், கர்நாடக மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.

இதேபோன்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

வழக்கு நடந்த இடம் கர்நாடகா..

நீதிபதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

அரசு தரப்பு வழக்கறிஞர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

இப்படி, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நடைபெற்ற வழக்கில், எப்படி நியாயம் கிடைத்து இருக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் அதிமுகவினர்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக போராடி, வெற்றியை கண்டு தமிழத்திற்கு பெருமையை சேர்த்த ஜெயலலிதாவை எப்படியும் பழி வாங்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார்கள் கர்நாடக மக்கள்...



அதற்கு சொத்துக் குவிப்பு வழக்கு சாதகமாக அமைந்து விட்டது என்பது அதிமுக தரப்பு வாதம்...

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், கோபத்தின் வெளிப்பாடாகவே அவரது தீர்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிமுகவினர்..

தீர்ப்பு நாளான 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாலை வரை நேரத்தை நீட்டி, பிறகு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி..

இதன்மூலம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது நிலையை குன்ஹா ஏற்படுத்தி விட்டதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.



காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவு இல்லாமல், தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த பொய்யான வழக்கிற்கு, திமுக ஆதரவு அளித்தது என்றும் குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு.

கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்ற ஆசையில், வழக்கை நடத்தி அதன்மூலம், தண்டனை பெற வைத்ததாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார்கள் அதிமுகவினர்.

இதனால், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு, தமிழகத்திற்கு திமுக துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு...



இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த தீர்ப்பை மேன்மைமிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, நீதிபதி குன்ஹா தீர்ப்பை வழங்கவில்லை என்றும் ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறியச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி குன்ஹா, நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டதாகவும், அபராதம் விதித்ததில் நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மாலனி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாகவும் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

ஆக, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவில்லை என்பது மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது.

நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை நீதிபதி குன்ஹா ஏற்படுத்திவிட்டதாகவும், நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மலானி கூறி இருப்பதில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது...

எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதிமுக தரப்பு எழுப்பும் சந்தேகங்களில், கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது...



மேலும் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி தெரிவித்த கருத்தால், அதிமுவின் வாதத்திற்கு மேலும் வலு சேர்ந்து இருக்கிறது.

இதன்மூலம், தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் ஓரு புதிய ஆதரவு, செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதற்கு இந்த தீர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================


Tuesday, September 23, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (95)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! "

நாள் - 95



சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சல்....!

டாஸ்மாக் கடை முன் நூதன போராட்டம்......!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுவுக்கு எதிராக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்கள்....

நூதன போராட்டங்கள்

உண்ணாவிரதங்கள்...

சாலை மறியல்...

பேரணிகள்....

என, மதுவிற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் கடந்த 21.09.2014 அன்று நடைபெற்ற நூதன போராட்டம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஆம்,

தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி சென்னை புது வாண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடைமுன் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்க தலைவர் ராமதாசன் தலைமையில் 10 பெண்கள் உட்பட 40 பேர் புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு  திரண்டனர்.

அங்கு சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து மது பானம் குடிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் பதறிப்போய் விலகி  ஓடினர்.

ஆனாலும் விரட்டி விரட்டி சென்று காலில் விழுந்தனர்.



குடிகாரர்களை பார்த்து சில பெண்கள் கைகூப்பி அழுது குடிக்காதீங்க அண்ணே..என்று வேண்டுகோள்  விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் திண்டாடினர்.

காலில் விழுந்து கெஞ்சியதாலும் அழுது கும்பிட்டு கேட்டதாலும் சில  குடிமகன்கள் சரக்கு வாங்காமல் திரும்பி சென்றனர்.

பலர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், பாட்டில்களை வாங்கினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மது பானங்களை வாங்கி சாலையில் போட்டு உடைத்தனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

மதுவிலக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டமும் இந்த  இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

மதுவுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டம் மக்களிடையே, குறிப்பாக மகா குடிகாரர்களிடையே விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இதுபோன்ற நூதன போராட்டங்கள் தொடர வாழ்த்துகிறோம்.

தமிழகம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மாற நாமும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

(நன்றி...தினகரன் நாளிதழ் (22.09.2014)
==================================

Sunday, September 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (94)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள் -94


சுற்றுலா முன்னேற்றத்துக்கு மது முக்கியத் தேவையல்ல....!

சுற்றுலாத்துறை வல்லுநர்கள் கருத்து....!!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுக் கொள்கையால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்கு மது ஒரு முக்கியத் தேவையல்ல என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு விடுதி நடத்தும் சிலர், "மது பானங்கள் கிடைப்பதைக் குறைப்பது, ஆரம்பத்தில் சுற்றுலாத் துறையை சற்று பாதிக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளனர்.



ஆனால், தகுந்த விழிப்புணர்வின் மூலம் அந்தத் தாக்கம் குறைந்துவிடும் என்றும், மதுவுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் வெற்றி, கேரளத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து சர்வதேச வான்போக்குவரத்து கூட்டமைப்பு முகவர்களின் இந்தியச் சங்கத்தின் தேசிய இயக்குநர் பி.பி. போஸ் கூறுகையில், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுவின் மீது ஆர்வமாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தங்களது உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் அதை கடைபிடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது மது அருந்துவதற்காக அல்ல என்றும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றைக் காணவே அவர்கள் வருவதாகவும் போஸ் கருத்து கூறியுள்ளார்.

எனவே, மது விற்பனைக்குக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தை சுற்றுலாப் பயணிகள் மதிப்பார்கள் என்றும் பி.பி.போஸ் தெரிவித்துள்ளார்.

மதுவை தடை செய்வதால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் எவ்வளவு பொய்யானது என்பதை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களே மறுத்துள்ளனர்.

சுற்றுலாச் செல்லும் அனைவரும் மதுவை விரும்பி அருந்துவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.




கேரள அரசின் புதிய மதுக் கொள்கை சரியானது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

தமிழகத்திலும் இதுபோன்ற புதிய மதுக் கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் கொண்டு வருவார்கள் என நாம் நம்புகிறோம்.



மதுவால் பெண்களுக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க உறுதியான நடவடிக்கையை, பெண்கள் மீது இரக்கம் காட்டும் முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுப்பார்கள் என நாம் உறுதியாக நினைக்கிறோம்.

மது இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மலருட்டும்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
======================

சென்னையில் நான்.....! (16)

சென்னையில் நான்.....! (16)




ரயில் பயணங்களில்.....!

என்ன...சினிமா தலைப்பு போன்று இருக்கிறது என நினைக்கிறீர்களா...!

சினிமா தலைப்புதான்..

ஆனால்,

என்னுடைய சென்னை வாழ்க்கையில், புறநகர் ரயில்சேவை முக்கிய இடம் பிடித்துக் கொண்டிருப்பதால், அந்த ரயில் பயணங்களில்போது, எனக்கு ஏற்பட்ட பல சுவையான, கசப்பான அனுபவங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

மின்சார ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை என எப்படி நாம் அழைத்துக் கொண்டாலும்,
என்னை போன்று, சென்னையில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மின்சார ரயில் சேவை மிகவும் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

சென்னையின் முக்கிய அம்சமாக, அடையாளமாக விளங்கும்  மின்சார ரயில் சேவை, மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்..



மின்சார ரயிலில் பயணிப்பது ஒரு தனிச்சுகம்தான்.

அலுவலகம்,
வீடு,
சுற்றுலா,

என பல்வேறு இடங்களுக்கு, குறைந்த கட்டணத்தில், நம்மை விரைந்து சென்று சேர்க்கின்றன இந்த மின்சார ரயில்கள்.

எனவே, என்னை போன்று நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர், சென்னையில் மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கிறோம்.



சென்னையில், கடந்த 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முதல்முதலாக, மின்சார ரயில் சேவை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டபோது, குறைந்த அளவு மக்களே மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால்,

தற்போதே, நிலைமையோ அப்படி இல்லை.

தினமும் லட்சக்கணக்கான மக்கள், மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கின்றனர்.

சென்னை பாரி முனை பகுதியில் என்னுடைய ஊடக அலுவலகம் இருந்தபோது, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நான் தினமும் புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்வது வழக்கம்.

அப்போது, ரயிலில் பயணம் செய்யும்போது, பல விதமான மனிதர்கள், அவர்களில் சிலரின்  வினோத பழக்கங்கள் ஆகியவற்றை கண்டு வியப்பது உண்டு.

பயணச் சீட்டு வாங்காமல் தைரியாக வரும் மனிதர்கள்....

பெண்ணை சீண்டுவதற்காகவே வரும் இளைஞர்கள்...



நல்ல ஆடைகளை அணிந்துக் கொண்டு குடும்ப விளக்காக வரும் பெண்கள்...

ஏமாறும் மனிதர்களிடம், பொருட்களை, பணத்தை ஆட்டையை போடும் ஏமாற்று பேர்வழிகள்

என பலவிதமான மனிதர்களை, மின்சார ரயில் பயணங்களின்போது, நான் கண்டு இருக்கிறேன்.

நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் வந்து சென்றாலும், அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஆசைப்பட்டு, விபத்தில் சிக்கிக் கொள்ளும் பயணிகளை கண்டு கோபம் அடைந்தது உண்டு.

செல்போன்களில் பேசிக் கொண்டு, கடவுப் பாதையை கடந்து, மின்சார ரயிலில் அடிப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்கள், பெண்கள் என பலரை கண்டு நொந்தது உண்டு.



ரயில் பயணங்களின்போது, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி வரும் சிலர், பின்னர் நம்முடைய பொருட்களை, நமக்கே தெரியாமல் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது உண்டு.

சில நேரங்களில் பிறரை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மனித கூட்டங்களையும் நாம் மின்சார ரயில் பயணங்களின்போது பார்க்கலாம்.

இதுபோன்ற, பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது உண்டு.

எனவே, மின்சார ரயிலில் மட்டுமல்ல, பொதுவாக, ரயில் பயணத்தின்போது, பக்கத்தில் உட்காரும் நபர் குறித்து மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பேன்.

அதிகம் பேச்சு கொடுக்க மாட்டேன்.

பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதியில் அமருவதை தவிர்ப்பேன்.

இதற்கு முக்கிய காரணம், மின்சார ரயிலில் பயணித்தபோது எனக்கு கிடைத்த சில கசப்பான அனுபவங்கள்தான்.

சரி..

முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

நம்முடைய நண்பர்களில் சிலர், பயணச்சீட்டு வாங்காமலேயே ரயிலில் பயணம் செய்ததை கண்டு, ஒருநாள் எனக்கும் அந்த விபரீத ஆசை வந்தது.

ஏன் நாமும் பயணச்சீட்டு வாங்காமல் ஒருநாள் பயணம் செய்தே பார்க்கலாமே என நினைத்தேன்.

அப்படி, ஒருநாள் சென்றபோது, எப்போதும் வராத டிக்கெட் பரிசோதகர், நான் பயணம் செய்த அந்த நாள் மட்டும் ஏனோ வந்து, என்னை பிடித்துக் கொண்டார்.



டிக்கெட் கேட்டார்.

விழித்தேன். முழித்தேன்.

அபராதம் கட்டு என்றார்.

வேறு வழியில்லாமல், அபாரதம் கட்டி, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

அவமானமாக இருந்தது.

டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த தவறுக்காக, பின்னர் நான் வருந்தியது உண்டு...

இப்போது, டிக்கெட் வாங்கினாலும், அது பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்து வருகிறேன்.

எல்லாம் அனுபவம் தரும் பாடங்கள்தான்.

சில நேரங்களில் அறையில் தனிமையாக இருக்கும்போது, வெளியே செல்ல மனம் ஆசை கொள்ளும்.

அப்போது,


சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணம் செய்து, பின்னர் மீண்டும் திரும்பி வருவது உண்டு..

இதனால், மனம் லேசுபடும்.

மனிதக் கூட்டத்தைக் காணும்போது, சில கவலைகள் மறந்து போகும்...

இப்படி, பல நேரங்களில் கவலை மறக்க, சிரிக்க, சந்தோஷமாக இருக்க, மனித இனங்களை கண்டு ரசிக்க

மின்சார ரயிலில் பயணிப்பது உண்டு.

அதற்காக மின்சார ரயில் சேவை எனக்கு உதவி செய்து வருகிறது.

என்னுடைய சென்னை வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் பயணம், மின்சார ரயில் பயணம் என்றால் அது மிகையாகாது.

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, September 13, 2014

சென்னையில் நான்.....! (15)

சென்னையில் நான்.....! (15)


சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிதான்.

ஆம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை காண, எப்போதும் நான் ஆவலுடன் இருப்பதும் வழக்கம்.

சென்னை இசை விழா

சென்னை சங்கமம்



போன்ற நிகழ்ச்சிகளை போன்று, முதன்மையான பண்ப்பாட்டு திருவிழாவாக இந்த புத்தகக் கண்காட்சி இருந்து வருகிறது.

ஆனால்,

மற்ற நிகழ்ச்சிகளை போன்று இல்லாமல், அறிவு பசிக்கு விருந்தாக இந்த புத்தகத் திருவிழா அமைந்து இருப்பதால், மற்றவர்களை போன்று நானும், புத்தகக் கண்காட்சிக்கு சென்று, அங்கு அமைக்கப்படும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கண்டு வியப்பது உண்டு.



என்னுடைய நிதி சக்திக்கு ஏற்ப, பல புத்தகங்களை வாங்கி வருவதும் உண்டு.

முதன்முதலாக கடந்த 1977ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலை பகுதியில் இருக்கும் மதரசா இ ஆசாம் பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.

அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.



ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானம்,

சென்னை டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்,

காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகம்

பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் மேனிலைப்பள்ளி வளாகம்

என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழா, தற்போது, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.



புத்தகத் திருவிழாவில், புத்தகங்கள் மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான சி,டி.க்களும் விற்பனை செய்யப்படுவதால், அவற்றையும் மக்களை வாங்கிச் செல்வது உண்டு.

அத்துடன் தினமும் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அறிவு பசிக்கு நல்ல தீனி கிடைக்கிறது.

இந்த புத்தகத் திருவிழாவில், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மட்டுமல்லாமல், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், பதிப்பகங்களும் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கின்றன.



எனவே, இஸ்லாம் தொடர்பான பல அரிய புத்தகங்கள் இங்கு கிடைப்பதால், நான் மட்டுமல்ல, மாற்று மத சகோதரர்களும் அவற்றை ஆர்வத்துடன் அள்ளிச் செல்கின்றனர்.

இதனால்தான், சென்னையில் எனக்கு பிடித்த நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா (கண்காட்சி) இருந்து வருகிறது.



குறைந்த நாட்களே புத்தகத் திருவிழா நடத்தப்படுவதால், மீண்டும் அந்த திருவிழாவை காண எப்போதும் மனம் ஆவல் கொள்ளும்.

வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை காண, மனம் இப்போதே ஏங்கித் தவிக்கிறது.

இறைவன் விரும்பினால், நிச்சயம் அந்த திருவிழாவை கண்டு ரசிப்பேன்.



புத்தகங்களை வாங்கி வருவேன்.

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================