Saturday, October 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (97)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! "

நாள் - 97


தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உண்ணா விரதப் போராட்டம்......! 

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டி.தனசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் எங்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக்கில் பணி புரியும் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்கக் கோரியும் காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியபோது, “டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பாக பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும், மதுக்கடைகளை மூடிவிட்டு அனைவருக்கும் மாற்றுப்பணியை வழங்க வேண்டும் என்ற டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை ள் நிறைவேறும் வகையில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் நடந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிஜேபி  தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உரையாற்றும் போது, “தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் பணியாளர்களே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது நல்ல தொடக்கம் என்றார்.  இக்கோரிக்கை வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம் என்றும்,  உங்களுக்கு மாற்றுப் பணி கிடைக்க பொதுமக்களோடு இணைந்து போராடுவோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.



போராட்டததிற்கு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டனர். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பேசினர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து பெருந்திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களே போராட்டம் நடத்தியது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, மாநிலத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: