Saturday, June 25, 2016

திருக்குர்ஆன் காட்டும் ஒளி.....!

திருக்குர்ஆன் காட்டும் ஒளி.....!


இந்தாண்டு புனித ரமலான் மாதத்தில், திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை முழுவதும் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த நல்ல வாய்ப்பை ஏக இறைவன் எனக்கு வழங்கினான்.

அதற்கு இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.

உலக புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவுலானா மௌதூதி சாஹிப் அவர்கள் , உருது மொழியில் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனை, சென்னை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது.

தமிழ் பேசும் மக்கள் அனைவரின் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற இந்த  மொழியாக்கத்தைதான், இந்த ரமலானில் நான் படித்து (வாசித்து) முடித்தேன்.

திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்கத்தை படிக்கும்போது, படித்தபோது,   ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது. புரிந்தது.

அது,

மனிதன் தன் விருப்பப்படி கண்டமெனிக்கு எப்படியும் வாழ முடியாது.

அப்படி வாழலாம் என நினைப்பதும் நடக்காது. நிச்சயம் முடியாது.

ஒரு வரையறைக்குள்தான், ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் மனிதனுடைய வாழ்வு இருக்க வேண்டும்.

அதன்மூலம் மட்டுமே, அவன் இருளில் இருந்து விலகி ஒளியின் பக்கம் நடைபோட முடியும்.

எப்படியும் வாழலாம் என நினைத்தால், மனிதனுக்கு அழிவு நிச்சயம்.

அவனுடைய அமைதி சீர்குலைந்து போகும்.

இம்மை (உலக) வாழ்வில் மட்டுமல்ல, மறுமை வாழ்விலும், மனிதன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

சரி,

இறைவனின் கட்டளைகள் ஏற்று அதன்படி தம்முடைய வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொண்டால், மனிதன் எப்படி இருப்பான்.

அவனுடைய வாழ்வில் நாள்தோறும் ஒளி வீசும்.

தனி மனித பண்புகள் வளரும்.

ஒழக்க மாண்புகள் மேலோங்கும்.

அனைத்து தரப்பு மக்களை மதிக்க மனம் விரும்பும்.

மனிதர்களை நேசிக்க ஆசை பிறக்கும்.

அண்டை வீட்டார், ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும்.

அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும்.

மனிதனுக்கு என்றென்றும் ஆனந்தம் கிடைக்கும்.

அவனுடைய வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

பிறருடன் சண்டை சச்சரவுகள் இருக்காது.

வீண் பிரச்சினைகள் ஏற்படாது.

இதனால் சமூகத்தில் எப்போதும் ஓர் நல்லிணக்கம் இருக்கும்

இறை கட்டகளை மறுத்து, தன் போக்கில் வாழும் மனிதனுக்கு மேற்சொன்ன அனைத்தும் நிச்சயம் கிடைக்காது.

அதனால், அவன் வாழ்வு சூனியமாகிவிடும்.

அதனால், அமைதி இழந்து, கற்பனையான உலகத்தில் மனிதன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவான்.

போலி மகிழ்ச்சிதான் மனிதனுக்கு கிடைக்கும்.

பிறருடன் நல்ல இணக்கமான சூழல் மனிதனுக்கு கிடைக்காது.

இதனால் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளைதான் மனிதன் சந்திக்க வேண்டி இருக்கும்.

அத்துடன், நல்ல அமைதியான ஆன்மிக வாழ்வு அவனுக்கு கிடைக்காது என்பதால், மனிதில் சைத்தான் குடி புகுந்து, நாள்தோறும் தொல்லை தருவான்.

இதைவிட மிகப் பெரிய கொடுமை மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்.

ஆக,

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, மனிதனின் அழகிய வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி என்ன என்பது நம் கண்முன் வந்து நிற்கிறது.

அதனை அழகிய முறையில் மனிதன் பின்பற்றி வாழ்ந்தால், அவனது வாழ்வு சுமையாக இல்லாமல் சுகமாக மாறும்.

இதுதான்,

திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வாசிக்கும்போது, எனது சிறிய  அறிவிற்கு கிடைத்த அற்புதமான படிப்பினை.

திருக்குர்ஆனை வாசிக்க, வாசிக்க நம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் எப்படி வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் பிறந்துக் கொண்டே இருக்கும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அது உண்மைதான்.

ஒருமுறை வாசித்தபோதே, என் சிறிய அறிவுக்கு பல தகவல்களை இறைவன் ஏற்றினான் என்றால், மொழியாக்கத்தை விளக்க உரையுடன், வரலாற்று பின்னணிகளுடன் படித்தால், சொல்லவா வேண்டும், மனிதனுடைய வாழ்வு புனிதமாகும் என்பதை.

ஏன்,

நீங்களும் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை ஒருமுறை படித்துதான் பாருங்களேன்.

மனிதன் இருளில் இருந்த வெளிச்சத்தற்கு வர, ஒளியின் பக்கம் நடைபோட அதில் என்னதான் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அறியும் நல்ல வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும் அல்லவா.

இந்த ரமலானில் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை படிக்கக் கூடிய வாய்ப்பை நல்கிய ஏக இறைவனுக்கு மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இருளில் இருந்து ஒளியின் பக்கம் நானும் நடைபோட, இனி வரும் நாட்களில் இறைவன் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.

அதன்மூலம், என்னுடைய வாழ்வை தூய்மை நிறைந்த வாழ்வாக நான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதுவே,  என்னுடைய இந்த ரமலான் மாத பிரார்த்தனை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர். 

Thursday, June 23, 2016

யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்?

நிதிஷ் குமார் கேள்வி.....!



ஜுன் 21-ந்தேதி 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோகா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வராமல் யோகா நிகழ்ச்சியை நடத்துவதால் என்ன பயன்? என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் சிறுவயது முதல் யோக பயிற்சி செய்து வருகிறேன்.

ஆனால், நான் அதை பெருமையாக சொல்லிக் கொண்டது இல்லை.

குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது.

இதில் பிரதமர் மோடிக்கு எந்த பங்கும் இல்லை.

எனவே, அதற்கான பெருமை அவரை சேராது.

யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான்.

ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையை கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

மதுவுக்கு அடிமையானவர்களால் யோகப்பயிற்சியை செய்ய இயலாது.

மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து மாற்று வழிகளில் வருமானத்தை தேட வேண்டும்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சி பொது நிகழ்ச்சி அல்ல.

அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.

யோகா தினம் குறித்தும், மதுவிலக்கு குறித்தும் நிதிஷ் குமார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உண்மையை உரக்க சொன்ன நிதிஷ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

S.A.Abdul Azeez
Journalist.

பூரண மதுவிலக்கு....!

உ.பி.யில் பூரண மதுவிலக்கு....!


உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபூரை அடுத்த சிவஷங்கரி தாம் பகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,

மதுவிலக்கு என்பது நாட்டிற்கும், சமுதாயத்திற்கு தேவையானது என்றார் அவர்.

உத்தரப்பிரதேச மக்கள் தங்கள் கைகளை வலுப்படுத்தினால், இங்கும் (உ.பி.) மது விலக்கை கொண்டு வருவோம் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

பீகார் மக்கள் மது பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுமாறு கேட்டுக் கொண்ட போது, தங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் செய்கிறோம் என்று சொன்னோம் என்று கூறிய அவர், அந்த வாக்குறுதியை தாங்கள் நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. என்று குற்றம்சாட்டிய நிதிஷ்குமார், தான் அளித்த வாக்குறுதிகளை அவர் (பிரதமர் மோடி) நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Tuesday, June 14, 2016

என்ன ஒரு கருணை.....!

என்ன ஒரு கருணை.....!


இறை வேதமான திருக்குர்ஆனை, பொருள் அறிந்து, ஆழ்ந்து படித்து சிந்தித்தால்,  ஓர் உண்மை நமக்கு மிக தெளிவாக புரிகிறது.

நம் கண் முன் வந்து நிற்கிறது.

மனித சமுதாயம் மீது இறைவன் காட்டும் அளப்பரிய கருணைதான் அது.

மனித சமுதாயம் மிக அழகிய சமுதாயமாக வாழ வேண்டும் என ஏக இறைவன் விரும்புகிறான்.

மனிதர்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, ஒற்றுமையாக    மிக சிறப்பாக வாழ வேண்டும் என்பது இறைவனின் ஆசையாக இருக்கிறது.

அதைத்தான் இறைவன் விரும்புகிறான்.

திருக்குர்ஆனில், மனிதர்களே,  உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

இறைவனின் கட்டளைகளை மீறாதீர்கள்.

ஏக இறைவனை நம்புங்கள்.

அவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

அதன்மூலம் நீங்கள் உயர்வை பெறலாம் என திரும்ப திரும்ப இறைவன் கூறி மனிதர்களை, நன்மையின் பக்கம் அழைக்கிறான்.

நபிமார்களின் வரலாறுகளை கூறுகின்றான்.

நம்ப மறுத்து, தங்கள் போக்கில் சென்ற மனிதர்கள் எப்படி அழிந்தார்கள் என்று விவரித்து கூறுகின்றான்.

அதன்மூலம் படிப்பினைகள் பெற்று மனிதர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்.

இம்மை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் மறுமை வாழ்க்கையிலும் மனிதன் நன்மை பெற வேண்டும்.

அதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கிறது.

பல இடங்களில் மனிதர்களை எச்சரிக்கை செய்து நன்மையின் பக்கம் அழைக்கின்றான்.

இந்த எச்சரிக்கைகள் கூட மனிதர்களின் நன்மைக்காகவே இருக்கிறது.

மனித சமுதாயத்தின் ஆனந்த வாழ்விற்காகவே இருக்கிறது.

இதைத்தான் திருக்குர்ஆனியில் நாம் காண முடிகிறது.

மனித சமுதாயம் நல்ல சமுதாயமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் ஆசையாக, விருப்பமாக இருக்கிறது.

ஆக,

மனித சமுதாயம் மீது இறைவனுக்கு என்ன ஒரு கருணை...!

ஆனால்,

இறைவனின் இந்த விருப்பத்தை மனிதர்கள், சரியாக புரிந்துக் கொள்ளாமல், விளங்கிக் கொள்ளாமல் என்ன ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள்.

இறைவனுக்கு மாறு செய்வதாக நினைத்துக் கொண்டு, தங்களை தாங்களே அல்லவா அழித்துக் கொள்கிறார்கள்.

அதன்மூலம் அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.

இப்படி தம் போக்கில் செல்லும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் எத்தனை.

திருக்குர்ஆனை பொருள் அறிந்து, கொஞ்சம் படித்து சிந்தித்து பாருங்கள்.

மனிதர்கள் மீது இறைவன் காட்டும் பரிவு, கருணை, உங்களுக்கே தெரியவரும்.

புரியும்.

மனித சமுதாயம் மீது அளப்பரிய கருணை காட்டும்  ஏக இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.

S.A.Abdul Azeez
Journalist.

Wednesday, June 8, 2016

வாங்க....வாங்க....!

வாங்க....வாங்க....!


சென்னை வர்த்தகர் இஸ்மாயில் சாஹிப் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டபோது எடுத்தப்படம்.


விழாவில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகீதன், மாநில பொருளாளர் ஷாஜகான், பேராசிரியர் சேமுமு முகமது அலி, மற்றும் வர்த்தகர் மில்லத் முகமது இஸ்மாயில் ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.



S.A. Abdul Azeez
Journalist.

பாமகவிற்கு கிடைத்த வெற்றி...!

பாமகவிற்கு கிடைத்த வெற்றி...!


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் குறைப்பு.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவை பாராட்டி வரவேறுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது பாமகவின் மதுவிலக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான்.

அதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பாமக நடத்தி வரும் போராட்டங்களை யாரும் மறந்து விட முடியாது.

இதேபோல், மதிமுக, காங்கிரஸ், பிஜேபி, இடதுசாரி கட்சிகள், தமாகா, முஸ்லிம் இயக்கங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட கட்சிகள், தொண்டு இயக்கங்கள், சமூக அக்கறை கொண்ட தனி மனிதர்கள், ஏன் நான் மதுவிற்கு எதிராக நானும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.

எனவே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மதுவிற்கு எதிராக போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று கூட தாராளமாக கூறலாம்.

அதில் பாமக முதல் இடம் என்பதால் மருத்துவர் ராமதாசை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.

S.A.Abdul Azeez 
Journalist.

ஒரு கணம் யோசியுங்கள்...!

ஒரு கணம் யோசியுங்கள்...! ஓட்டுப்போடுமுன்....!!


கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உலக புகழ் பெற்ற குமுதம் வார இதழ் வாசகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தது.

எம்.எல்.ஏ.வுக்கு வேண்டிய பத்துத் தகுதிகள் என்ன ? என்பதுதான் அந்த போட்டி.

நாமும் ஒரு கட்டுரையை அனுப்பி வைத்தோம்.

என்ன ஆச்சரியம்.

எமது கட்டுரை தேர்வு குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்டது.

பரிசு தொகையும் காசோலையில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

27 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய, வைத்த கோரிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...!

1. எம்.எல்.ஏ.வாக வருபவருக்கு கல்வித் தகுதி அவசியம். குறைந்தபட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

2. ஓரே கட்சியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அங்கம் வகிப்பவராக இருக்க வேண்டும்.

3. எம்.எல்.ஏ. நம்ம சாதியைச் சேர்ந்தவர் அல்லது மதத்தைச் என்று மக்கள் சொல்லாமல் நம்ம ஊரைச் சேர்ந்தவர் என்று பெருமையுடன் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்.

4. சட்டப்பேரவையில் கண்ணியமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். மைக், பேப்பர் வெயிட் போன்ற பொருட்களைத் தூக்கி வீசுபவராக இருக்கக்கூடாது.

5. ஆடம்பரம் இல்லாதவராக ஏழை எளியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்யக்கூடியவராக எம்.எல்.ஏ. என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் மக்கள் பார்த்துப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும்.



6. சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் தன்னுடைய தொகுதியில் இருப்பவராக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள குறைகளை அறிந்து வர வேண்டும்.

7. பணத்திற்கு விலை போகக் கூடியவராக இருக்கக்கூடாது. நீதி, நேர்மை, உண்மை எங்கும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய துணிச்சல்காரராக இருக்க வேண்டும்.

8. நல்ல ஆரோக்கியமான உடல்நலம் பெற்றவராக இருக்க வேண்டும். மது மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் கூடாது.

9. எம்.எல்.ஏ. பதவியினால் வரும் வருமானத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்துபவராக இருக்கக்கூடாது. தனக்கென்று ஒரு தனித் தொழிலைக் கொண்டவராக இருக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துபவராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ. பதவி மூலம் தன்னை அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் இந்த எம்.எல்.ஏ. பதவி என்று கருதக்கூடியவராக இருக்க வேண்டும்.

10. தன்னுடைய பதவிக் காலத்தில் தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பவராக இருக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

அந்த உத்தமர் எங்கே....?


என்னை அரைவேக்காடு என விமர்சனம் செய்த அந்த உத்தமர் எங்கே....?


கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நான் பதிவு செய்த கருத்து ஒன்றில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளும் மிகவும் பலவீனமானவை என பலரும் பேசிக் கொள்கிறார்களே, உண்மையா...!

வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும், கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே, அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஊடக நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அதுவும், கடையநல்லூரில் அதிமுக அணியில், ஷேக் தாவூத் போட்டியிடுவதால்தான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த வெற்றியும் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

என ஊடக நண்பர்கள் சொன்ன கருத்து மற்றும் அனுபவ அடிப்படையில் ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தேன்.

மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீது இயற்கையாகவே எனக்கு இருந்த பற்று காரணமாக, வலுவான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கட்சி தலைமை பெற்று இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தேன்.

இதற்கு உடனே Iuml Central Chennai என்ற ஒரு உத்தமர், யாரோ ஒரு பைத்தியம் சொன்னதை வைத்து நீங்கள் உண்மயா உண்மையா என கேட்கிறிர்களே நீங்கள் ஒரு அரைவேக்காடு பத்திரிகையாளர் என சொல்கிறார்களே உண்மையா என என்னை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்போது, நான் கணித்தப்படி, கடையநல்லூர் தொகுதியில் மட்டும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சகோதரர் முகமது அபுபக்கர் வெற்றி பெற்று இருக்கிறார்.

மற்ற நான்கு தொகுதிகளில், அதாவது, வாணியம்பாடி, பூம்புகார், விழுப்புரம், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்து இருக்கிறது.

உண்மையை சொன்னதற்காக என்னை அரைவேக்காடு, அரை லூஸ் என கடுமையாக விமர்சனம் செய்த அந்த Iuml Central Chennai என்ற அந்த உத்தமர் இப்போது என்ன சொல்ல போகிறார்.

மீண்டும் ஏதாவது பாணியில் திட்ட போகிறாரா...இல்லை, பத்திரிகையாளர்களின் கணிப்பில் ஒரளவுக்கு உண்மை இருக்கும் என ஒப்புக் கொள்ள போகிறாரா...!

இதுதான் எனது கேள்வி...!

S.A.Abdul Azeez
Journalist.

இஸ்லாமிய வாக்கு வங்கி...!

இஸ்லாமிய வாக்கு வங்கியால் வென்ற கார்த்திகேயன்....!


வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 25 ஆயிரத்து 588 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

இந்த சாதனைக்கு முக்கிய காரணமே, இஸ்லாமியர்களின் வாக்குகள் என்பது நிதர்சன உண்மை.

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எப்போதும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்த தொகுதியில் யார் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகமாக பெறுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி என்பது கடந்த கால வரலாறு.

காங்கிரஸ் சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஞானசேகரன், இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றே தொடர்ந்து வெற்றியை ஈட்டி வந்தார்.

அதேபோன்று, கடந்த முறை அதிமுக சார்பில் நின்ற டாக்டர் விஜய்யும் வெற்றி பெற்றார்.

இந்த முறை, திமுக சார்பில் நின்ற கார்த்திகேயன், இஸ்லாமியர்களின் வாக்குகளை கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதன்மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில், ஹாரூன் ரஷீத் நின்றாலும், அவர் வெளியூர்காரர் என்பதால், அவருக்கு இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் தங்களது வாக்குகளை அளிக்கவில்லை.

குறிப்பாக, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், சைதாபேட்டை, சத்துவாச்சாரி, உள்ளிட் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எங்களை ஊரை சேராத, ஹாரூன் ரஷீத்திற்கு நாங்கள் வாக்கு அளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், மண்ணின் மைந்தன் கார்த்திகேயனுக்கு இஸ்லாமிய மக்கள் கண்ணியம் வழங்கி, மதிப்பு அளித்து தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

இதனை திமுகவும், வேலூர் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலூர் நகரில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுவே நமது வேண்டுகோள். கோரிக்கை.

S.A.Abdul Azeez
Journalist.

நம்ம எம்.எல்.ஏ.....!

நம்ம எம்.எல்.ஏ.....!


1996ஆம் ஆண்டு சென்னை வாலஸ் கார்டன் பகுதியில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில்தான் நான் முதல்முதலாக முகமது அபூபக்கரை சந்தித்தேன்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து மறைந்த சிராஜுல் மில்லத் அவர்களின் அழைப்பின் பேரில், வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து, மணிச்சுடர் நாளிதழில் பணியில் சேர்ந்த நேரம் அது.

அப்போது, ஒருமுறை மணிச்சுடர் அலுவலகத்திற்கு வந்த அபூபக்கரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியது.

நல்ல இளைஞர்.

எப்போதும் பாசத்துடன் பழகும் பண்பாளர்.

என்ன அஜீஸ் பாய் என உரிமையுடன் அவர் அழைக்கும்போது அதில் ஒரு அன்பு இருக்கும். நேசம் இருக்கும்.

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அபூபக்கருடன் நல்ல நட்பு தொடர்கிறது.

தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடையநல்லூர் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வாக முகமது அபூபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உண்மையிலேயே இது எனக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்திற்கே மகிழச்சி அளிக்கும் ஒரு அருமையான நிகழ்வு ஆகும்.

அதற்காக ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினராக அடியெடுத்து வைக்கும் அபூபக்கருக்கு எமது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் நிச்சயம் குரல் கொடுப்பார் என உறுதியாக நம்புகிறோம்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, முஸ்லிம் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு காண அபூபக்கர் நிச்சயம் முயற்சி செய்வார்.

அதற்காக அவரை மீண்டும் வாழ்த்துகிறோம்.

அவரது பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் தொகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களின் நலனுக்காகவும் அபூபக்கர் உழைக்க வேண்டும்.

இதுவே எமது வேண்டுகோள்.

S.A.Abdul Azeez
Journalist.

மறக்க முடியுமா....!

எடிட்டர் சார்.....!


இன்று (27.05.2016) மாலை 5.30 மணிக்கு நண்பர் ஆனந்த்திடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது.

சார் விஷயம் தெரியுமா என்றார் ஆனந்த்.

இல்லையே சார் என்றேன் நான். என்ன தகவல் என அவரிடம் மேலும் கேள்வி எழுப்பினேன்.

நம்ம அன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டாராம் சார் என்றார் ஆனந்த்.

ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போனேன்.

என்ன சார் சொல்றீங்கே என ஆனந்திடம் கேட்டேன்.

ஆமாம் சார். உண்மையான தகவல்தான் என்றார் அவர்.

அந்த நிமிடம் முதல், என் மனம் சோகத்தில் மூழ்கிவிட்டது.

அன்பு என்ற பெயருக்கு ஏற்ப, எல்லோரிடமும் உண்மையான அன்பை செலுத்தி பழகியவர் அன்பரசன்.

எடிட்டர் சார், எடிட்டர் சார் என நான் அவரை பாசத்துடன் அழைக்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவார்.

என்னைவிட வயதில் சின்னவர் என்றாலும், அவரிடம் விஷுவல் எடிட்டங் திறமை சிறப்பாக இருந்ததால், அந்த திறமைக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அன்பரசனை எடிட்டர் சார் என்றே அழைத்து வந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் பழகிய நாட்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

இரவு நேர பணியின்போது, பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்வோம்.

கலைத்துறையில் ஆர்வத்துடன் இருந்த அவரை, திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைத்து வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டேன்.

அவரும் நிச்சயம் தருவதாக உறுதி அளித்து இருந்தார்.

இப்படி, வாழ்க்கையில் பல கட்டங்களை தாண்டி உயரத்திற்கு செல்ல வேண்டிய அன்பு, இன்று (27.05.2016) சாலை விபத்தில் பலியான சம்பவம் எனக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

எல்லாம் இறைவனின் நாட்டம் என்றாலும், சில மரணங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு சோகத்தைதான் அன்பரசனின் மரணம் ஏற்படுத்திவிட்டது.

அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.
அன்பரசனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.

இதுவே எமது பிரார்த்தனை.

மறக்க முடியுமா....!



ராஜ் டீவியில் பணி புரிந்த செய்தி பிரிவு படத்தொகுப்பாளர் அன்பு என்கிற அன்பரசு சாலை விபத்தில் மரணம் அடைந்த துயரச் செய்தி நம்மை மேலும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

எடிட்டர் சார் என நான் அன்புடன், பாசத்துடன் அழைத்த அன்பு இன்று நம்மிடம் இல்லை.

எனினும் அவருடன் பழகிய இனிய நாட்கள் எம் கண் முன்வந்து செல்கின்றன.

நிழலாடுகின்றன.

அந்த இனிய நாட்களை மறக்க முடியுமா.

அத்துடன் நல்ல பண்பாளர் அன்புவையும் மறக்க முடியுமா..
.
நிச்சயம் முடியாது.

S.A.Abdul Azeez
Journalist.

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!


ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

புனித ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டது. ரமலான் நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
.
பொதுவாக ரமலான்  நோன்பின்போது இஸ்லாமியர்கள் 16 மணிநேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள்.

எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும் போது ஒருசில உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

1. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை குறைப்பாடு மற்றும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், ரமலான் நோன்பு இருக்கும் முன், மருத்துவரை சந்தித்து உடல்நலத்தை பரிசோதித்து, நோன்பு இருக்க உங்களின் உடல்நலம் ஒத்துழைப்பு தருமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.

2. நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவை சரியாக திட்டமிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் உணவை உட்கொள்ளாமல் இருந்து, உணவை உட்கொள்ளும் போது சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்

3. விடியற்காலையில் எழுந்து உண்பது என்பது கடினம். இருப்பினும் இந்நேரத்தில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். மேலும் விடியற்காலையில் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பே உணவை உட்கொண்டுவிட வேண்டும். விடியற்காலையில் உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதோடு, போதிய அளவில் நீரையும் குடிக்க வேண்டும்.

4. நோன்பு இருக்கும் போது வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவில் ஓய்வு எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

5. சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பு விடும் போது, உணவை அள்ளி அள்ளி விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் பேரிச்சம் பழம் மற்றும் பால் அல்லது தண்ணீர் குடித்து நோன்பை விட்டு, பின் மஃரிப் தொழுகைக்கு பின் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள வேண்டும்.

6. நோன்பு விடும் போது, அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதைத் தவிர்த்து, பொறுமையாகவும், நிதானமாகவும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி நீரை அதிகம் குடிக்க வேண்டும்.

7. மாலை வேளையில் டீ, காபி மற்றும் சோடாவை குடிக்கத் தோன்றும். இருப்பினும், அவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.

8. நோன்பு விட்ட பின்னர், ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பழங்கள் மற்றும் நட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது நல்லது.

9. நோன்பு விட்ட பின்னர், தூங்க செல்லும் முன், 8 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10, மாலை வேளையில் நோன்பு விட்ட பின்னர், 15-20 நிமிடம் ஈஸியான உடற்பயிற்சியை அளவாக செய்து வாருங்கள்.

11. எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

12. ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கான நோக்கங்களில் ஒன்று, கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் என்பது தான். எனவே இக்காலத்தில் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதை தவிர்த்திடுங்கள்.

13. உண்ணும் உணவில் மட்டும் திட்டம் தீட்டக் கூடாது. சரியான நேரத்தில் தூங்கி எழவும் திட்டம் தீட்ட வேண்டும்.