Wednesday, June 8, 2016

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!

ரமலான் நோன்பு - சில டிப்ஸ்கள்......!


ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

புனித ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டது. ரமலான் நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
.
பொதுவாக ரமலான்  நோன்பின்போது இஸ்லாமியர்கள் 16 மணிநேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள்.

எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும் போது ஒருசில உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒருசில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

1. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை குறைப்பாடு மற்றும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், ரமலான் நோன்பு இருக்கும் முன், மருத்துவரை சந்தித்து உடல்நலத்தை பரிசோதித்து, நோன்பு இருக்க உங்களின் உடல்நலம் ஒத்துழைப்பு தருமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.

2. நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவை சரியாக திட்டமிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் உணவை உட்கொள்ளாமல் இருந்து, உணவை உட்கொள்ளும் போது சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்

3. விடியற்காலையில் எழுந்து உண்பது என்பது கடினம். இருப்பினும் இந்நேரத்தில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். மேலும் விடியற்காலையில் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பே உணவை உட்கொண்டுவிட வேண்டும். விடியற்காலையில் உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதோடு, போதிய அளவில் நீரையும் குடிக்க வேண்டும்.

4. நோன்பு இருக்கும் போது வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவில் ஓய்வு எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

5. சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பு விடும் போது, உணவை அள்ளி அள்ளி விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் பேரிச்சம் பழம் மற்றும் பால் அல்லது தண்ணீர் குடித்து நோன்பை விட்டு, பின் மஃரிப் தொழுகைக்கு பின் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள வேண்டும்.

6. நோன்பு விடும் போது, அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதைத் தவிர்த்து, பொறுமையாகவும், நிதானமாகவும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி நீரை அதிகம் குடிக்க வேண்டும்.

7. மாலை வேளையில் டீ, காபி மற்றும் சோடாவை குடிக்கத் தோன்றும். இருப்பினும், அவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.

8. நோன்பு விட்ட பின்னர், ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பழங்கள் மற்றும் நட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது நல்லது.

9. நோன்பு விட்ட பின்னர், தூங்க செல்லும் முன், 8 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10, மாலை வேளையில் நோன்பு விட்ட பின்னர், 15-20 நிமிடம் ஈஸியான உடற்பயிற்சியை அளவாக செய்து வாருங்கள்.

11. எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

12. ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கான நோக்கங்களில் ஒன்று, கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் என்பது தான். எனவே இக்காலத்தில் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதை தவிர்த்திடுங்கள்.

13. உண்ணும் உணவில் மட்டும் திட்டம் தீட்டக் கூடாது. சரியான நேரத்தில் தூங்கி எழவும் திட்டம் தீட்ட வேண்டும்.

No comments: