Monday, March 11, 2013

முள்வேலியை தாண்டும் வினோதம்......


முள்வேலியை தாண்டும் வினோதம்’

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.,

தமிழகத்தின் புகழ் பெற்ற  விஷுவல் மீடியா ஒன்றில் பணிபுரியும் செய்தியாளர் ஆனந்த் என்பவரை (அவர் என் நண்பர் என்ற முறையில்) சந்திக்க அண்மையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்தேன்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர் அறைக்கு என்னை அழைத்துச் சென்ற நண்பர் ஆனந்த்,  அறையில் இருந்த செய்தியாளர்கள் பலரை அறிமுகப்படுத்தியும் வைத்தார்.

நாள்தோறும் வரும் வழக்குகள்.... குறிப்பாக பரபரப்பான அரசியல் வழக்குகள்… அரசுக்கு எதிரான வழக்குகள்… பொதுநல மனுக்கள்… குடும்ப உறவுகளை சிதைக்கும் வழக்குகள்…. மணவிலக்கு கேட்டு நீதிமன்றங்களை நாடும் பெண்கள்… இப்படி பல செய்திகள்  இங்கிருந்துதான், ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர் இந்த செய்தியாளர்கள்… அவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும்போது, உண்மையிலேயே எனக்கு வியப்பு ஏற்பட்டது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் சிலரையும் ஆனந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். வழக்கறிஞர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.

ஆம்….

நவீன உலகில், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவையெல்லாம், எப்படி சிதைந்து போகிறது என்பதை அறியும்போது உண்மையிலேயே வேதனை ஏற்பட்டது.


உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
இந்த உரையாடலின்போது, அவர் கூறிய பல தகவல்கள் என்னை வேதனையின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

ஆம்…

இஸ்லாமிய இளம் பெண்கள் எப்படி பாதை தவறி சென்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தாம் நாள்தோறும் சந்திக்கும் பல வழக்குகளை ஆதாரமாக வைத்து விவரங்களை அடுக்கினார் அந்த வழக்கறிஞர்.

கல்வி குறித்து விழிப்புணர்வு இஸ்லாமிய குடும்பங்களில் தற்போது, மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பல பெண்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேல்படிப்புகளில் சேர துடிக்கும் இஸ்லாமிய இளம் பெண்கள், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்… இதுவே பின்னர் பெரிய ஆபத்தாக முடிந்து விடுகிறது என்றார் அந்த வழக்கறிஞர்.

இஸ்லாமிய இளம் பெண்கள் பாதை தவறுவதற்கு அவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்துவது மட்டுமே காரணம் இல்லை…

தற்போது நிலவும் சூழ்நிலைகள் முக்கிய காரணிகளாகவே உள்ளன. கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் இஸ்லாமிய இளம் பெண்கள், அங்கு மாணவர்களை சந்திக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.


தற்போது பல கல்லூரிகள்,  இருபாலார் படிக்கும் கல்லூரிகளாகவே இருந்து வருகின்றன. இதனால், இளம் பெண்கள் அதனை தவிர்க்க முடியாத நிலை இருந்து வருகிறது.

எனவே, ஆண் நண்பர்களுடன் பழக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.  

இதுவே, அவர்களுடைய வாழ்க்கையில்,  பின்னர் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது.

மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, குடும்ப சூழல் ஆகியவற்றையெல்லாம், கவலை பட வைப்பதில்லை விடலைப் பருவம்.
எனவேதான், விடலைப் பருவத்தின் விபரீதத்தை அறியாமல் ஆபத்தான  வலையில் வீழ்ந்துவிடுகின்றனர் பல இஸ்லாமிய இளம் மாணவிகள்…
மாற்று மத நண்பர்களுடன் மலரும் உறவு, பின்னர் குடும்ப உறவுகளை சிதைக்க காரணமாக அமைந்து விடுகிறது.

வசதி படைத்த மாணவிகள் மட்டுமல்லாமல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் மாணவிகள்கூட,  இப்படிப்பட்ட உறவுகளில் சிக்கிக் கொண்டு தவியாய் தவிப்பது, நீதிமன்றங்களில் வரும் வழக்குகளின் எண்ணிக்கைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்றார் வழக்கறிஞர்.


இஸ்லாமிய இளம் பெண்களின்,  மனதை கவர, கல்லூரிகள், பள்ளிகள், மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் நண்பர்கள் பல வித்தைகளை கையாளுகின்றனர்… குறிப்பாக, அழகான உடைகளை அணிந்து வந்தால், பாராட்டு தெரிவிப்பது.., பிறந்தநாளின்போது, வாழ்த்துக்களை தெரிவிப்பது என இளம் பெண்களை கவர பல உத்திகளை கடைப்பிடிக்கின்றனர்.

இதில் மயங்கி விழுந்துவிடும் இளம் பெண்கள், பின்னர், வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இஸ்லாமிய இளம் பெண்கள் இப்படிப்பட்ட நிலையில் வேதனை தாங்கி வாழ்ந்து வருவது வழக்கறிஞரின் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

காதல் வலையில், அன்பு வலையில் சிக்கிக் கொள்ளும் இளம் பெண்கள், பின்னர், குடும்ப உறவுகளை உதாசீனம் செய்கின்றனர்.
ஏன்… இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுகின்றனர்….

வழக்கறிஞர் தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டு வரும்போது, இதற்கு முக்கிய காரணம் என்ன… யார் பொறுப்பு…. இப்படி பல கேள்விகள் என் உள்ளத்தை தொலைத்து எடுத்தன.


இஸ்லாம் குறித்து நாம் மாற்று மத சகோதரர்கள், சகோதரிகளுக்கு விளக்கம் அளித்து வரும் நிலையில், இஸ்லாத்தை விட்டு இளம் பெண்கள், ஏன் ஆண்கள் கூட வெளியேறி வருவது அதிர்ச்சி அல்லவா…
இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்…
ஓர் இறைக் கொள்கையை மிக தெளிவாக எடுத்துக் கூறும் இஸ்லாம், மிக சிறந்த வாழ்வியல் மார்க்கம் அல்லவா…

அதனால், பல அறிஞர்கள், பல மதத்தினர் இஸ்லாத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒருசில இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், பண்பாட்டிற்கு மாறாக நடந்து கொள்வது ஏன்….

இந்த வினாவிற்கு விடை தேடினால், ஒன்று மட்டும் மிகத் தெளிவாக தெரிய வருகிறது.

தற்போது, இஸ்லாமிய குடும்பங்களில், குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, ஒழுக்கம் மிகத் தெளிவாக சொல்லித் தருவதில்லை.
இஸ்லாம் குறித்தும், ஓர் இறைக் கொள்கை குறித்தும் இளம் பருவத்திலேயே உள்ளத்தில் ஆணி அடிப்பது போன்று பதிய வைப்பதில்லை.


இஸ்லாம், குறித்த போதனைகள், வரலாறு, நபிமொழி., திருக்குர்ஆன் கூறும் வாழ்வியல், குடும்பவியல், சமூகவியல், பொருளாதாவியல் ஆகியவற்றை குறித்து நாம், நம் குழந்தைகளுக்கு அவர்களின் இளம் பருவத்திலேயே சொல்லித் தர மறந்து விடுகிறோம்… அல்லது மறுக்கிறோம்.

இதுவே, பின்னர் மிகப் பெரிய பிரச்சினையாக நம் கண் முன்வந்து நிற்கிறது. என்ன செய்து என அறியாமல், பல குடும்ப தலைவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

குடும்பத்தில் அமைதி காணாமல் போய் விடுகிறது. உறவுகள் சிதைந்து போய்விடுகின்றன..

மகள் அல்லது மகன் விடலை பருவத்தின் மோகத்தில், தாய் தந்தையரை கைவிட்டு சென்று விடுகின்றனர்.

எதிர்வரும் மிகப் பெரிய ஆபத்துக்களை அறியாமல், முள்வேலியை தாண்டி சென்று விடுகின்றனர். வேதனையில் சிக்கி விடுகின்றனர்.

இப்படிதான், அண்மையில் கோவையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இஸ்லாமிய இளைஞன் ஒருவன், மாற்று மத பெண்ணிடம் காதல் கொண்டு, அதனை ஏற்க அப்பெண் மறுக்கவே, அவள் மீது  ஆசிட் ஊற்றி கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துக் கொண்டான்.

இவையெல்லாம், ஒருசில சம்பவங்கள்தான்… உதாரணங்கள்தான்….

ஆனால், நீதிமன்றங்களில் இஸ்லாமிய பெண்கள் குறித்து வரும் வழக்குகள் தற்போது அதிகமாகவே உள்ளன. .

இந்த வழக்குகளுக்கு தீர்வு காண முடியாமல் திகைக்கின்றனர் வழக்கறிஞர்கள்…


நீதிபதிகள் நல்ல ஆலோசனைகளை கூறினாலும் அதனை ஏற்க மறுக்கின்றனர் சில இஸ்லாமிய பெண்கள்…

அதேநேரத்தில், இஸ்லாமிய ஒழுக்கத்துடன், அடிப்படை கல்வி ஆரம்பத்திலேயே சொல்லி கொடுக்கப்படும் குடும்பங்களில், இதுபோன்று சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன.

உள்ளத்தில் உறுதியான அடிப்படை கல்வி, ஒழுக்கம், இஸ்லாம் குறித்து தெளிவு இருந்துவிட்டால், எந்த ரூபத்திலும், மற்றவர்களின் வலையில் இஸ்லாமிய பெண்கள் வீழ்ந்து விட மாட்டார்கள்.

இது நிச்சயம்… இதற்கு பல இஸ்லாமிய பெண்கள் சாட்சிகளாக உள்ளனர்… நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்…

இஸ்லாமிய பெண்கள் மத்தியில் கல்வியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களிடம், இஸ்லாம் குறித்தும் விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் உயர்கல்வி கற்கும் இளம் பெண்களுக்கு அடிக்கடி ஒழுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். 

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.

இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க என்ன வழி…. அதை மனத்தத்துவ அறிஞர்கள் மூலம் இஸ்லாமிய பெண்கள் உள்ளத்தில் மிகத் தெளிவாக பதிய வைக்க வேண்டும்.

குடும்ப உறவுகளை புறம் தள்ளிவிட்டு, நீதிமன்றங்களுக்கு வரும் இஸ்லாமிய பெண்களின் நிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்தும், அந்த வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் மூலம், இளம் பெண்களுக்கு எடுத்து கூற வேண்டும்.



இது உடனடியாக செய்ய வேண்டிய மிக முக்கிய பணி… இஸ்லாம் மார்க்கம் குறித்து நாம் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்து கூறும் முன்பு, நம் குடும்பங்களில் இஸ்லாம் குறித்து நம் பிள்ளைகளுக்கு நம் சகோதரிகளுக்கு, நம் உறவினர்களுக்கு, நம் நண்பர்களுக்கு, மிக தெளிவாக எடுத்து கூற முன்வர வேண்டும்.

அப்போதுதான், தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆபத்துக்களை தவிர்க்க முடியும்…

அப்போதுதான், இஸ்லாமிய பெண்கள் கல்வியில் நல்ல ஆர்வம் செலுத்த முடியும்… இஸ்லாமிய உறவுகளை பேண முடியும்…

மேலும், இஸ்லாமிய கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை சிதைக்காமல் பாதுகாக்க முடியும்….

இந்த விவகாரத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் உடனே தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும்… இது காலத்தின் கட்டாயம்…

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சொன்ன இந்த ஆலோசனைகள் என்னை உண்மையிலேயே மிகவும் சிந்திக்க வைத்தன…

அவற்றை உங்கள் பார்வைக்கும் வைத்து விட்டேன்…

____________________________________________________________________

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்