Sunday, May 25, 2014

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்......!

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்......!




இது கவிஞர் சமு எழுதிய அழகான கவிதை....

சகோதரர் விஜயரங்கம் அகால மரணம் அடைந்த துயர நேரத்தில்...

அவருடைய உள்ளத்தில் எழுந்த கண்ணீர் துளிகள் இவை...

நட்பின் உண்மை வெளிப்பாடு

இந்த கவிதையில் தெரிகிறது...

கவிஞர் சமுவைப் பற்றி நான் நிறைய சொல்ல ஆசைப்பட்டாலும்...

இந்த நேரத்தில் அவருடைய புகழை பாட விரும்பவில்லை...

சகோதரர் விஜயரங்கம் குறித்து

கவிஞர் எழுதிய அழகான வரிகள் இதோ....

இறந்தவன் இருக்கிறான் இதயத்தில்....!
=====================================

இறந்தவன் பேசுவதில்லை...!
  இருப்பவன் பேசுகிறேன்....
இறந்தவன் புகழை பற்றி....

 வாழ்க்கையே மேடு பள்ளம்...
மேட்டில் நின்ற போது
  பள்ளத்தை நிரப்பியவன் நீ...
அதனால் இறந்த போதும் பேசுகிறோம்...
    உன்னை பற்றி...

விஜயரங்கம், பல கனவுகளை
  சுமந்தவன் நீ
இன்று களிமண்ணை சுமக்கின்றாய்..!
  குறைந்த வயதில்
நடந்த கொடுமை...!

குழந்தைகளுக்கு இல்லாத தகப்பனாய்...!
  மனைவிக்கு இல்லாத கணவனாய்...!
பூ உலகை விட்டு சென்றவன் நீ...
   நம்மிடையே புகழை மட்டுமே
 விட்டு சென்றாய்...!
அழிக்க முடியாத பதிவுகள்...!

நீ ஒலி ஒளி நாடாவில்
  இருந்தாலும்....!
நாங்கள் காணாத இடம் தேடி
  ஓடி ஒளிந்து கொண்டாய்...!

இறப்பை பொதுவாக்கிய
   இறைவன்...!
நாட்களை வித்தியாச
  படுத்தி விட்டதால்
நாங்களும் உனை வந்து
  சேருவோம்....
அங்கும் காண்போம்..
 அதிசய நட்பை...


நீங்கா நினைவில்
  விஜயரங்கனின் பதிவுகளுடன்...

                           கவி.சமு

=============================================

                                    

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (84)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 84


பேருந்தில் குடிபோதையில் தகராறு செய்தவர்களை பாதி வழியில் இறக்கி விட்டதால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட நடத்துனர்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு கடந்த மே 20-ந்தேதி (20.05.2014)  மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.

பேருந்தில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியை சேர்ந்த செல்வா என்பவர் நடத்துனர் இருந்தார்.

பேருந்து, நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது பேருந்தில் 3 இளைஞர் ஏறினார்கள். அவர்கள், 3 பேரும் நெல்லைக்கு டிக்கெட் எடுத்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகளிடம் தகராறு செய்தார்கள்.

இதனால் தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் 3 இளைஞர்களையும் பேருந்தில் இருந்து நடத்துனர் செல்வா இறக்கி விட்டார்.

இதனால் அவர்களுக்கு, செல்வா மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

பின்னர் பேருந்து புறப்பட்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று சேர்ந்தது. பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் நடத்துநர் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்ட இளைஞர்கள்  உள்பட 4 பேர் நெல்லை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்துநர் செல்வாவிடம், பேருந்தை விட்டு இறக்கி விட்டது தொடர்பாக மீண்டும் தகராறு செய்தனர்.


திடீரென்று செல்வா மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த செல்வா ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நடத்துநர் மீது தீ வைத்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பயணிகள் அவர்களை துரத்தினார்கள். இதில் 2 பேர் மட்டும் சிக்கினார்கள்.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பாத்துரை,  பெத்த பெருமாள் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் உடந்தையாக இருந்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டுடன்காடு கிராமத்தை சேர்ந்த வேல்ராஜ், என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் செல்வா, 5 நாட்களுக்கு பிறகு 24.05.2014 அன்று காலை 11.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

செல்வா இறந்ததை அடுத்து மேலப்பாளையம் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

இந்த வழக்கில் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக முறப்பநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த பொன் இசக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பார்த்தீர்களா நண்பர்களே....

மது போதை எப்படி மனிதனை மிருகமாக மாற்றுகிறது என்பதை...

போதையில் கலாட்டா செய்ததுடன்,  நடத்துநரை எரித்து  கொலையும் செய்த அந்த நான்கு இளைஞர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுவால் தங்களது வாழ்க்கையை சிதைத்துக் கொண்டனர். சீரழித்துக் கொண்டனர்.

இதன்மூலம்,  அவர்களது குடும்பத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டனர்.

இப்படிப்பட்ட மது மனிதனுக்கு தேவையா....?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Monday, May 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (83)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  

நாள்  -  83


உலகத்தில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

மது அருந்திவிட்டு டிரைவர்கள், ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகள் ஒருபக்கம் இருக்கட்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வளவு...!

விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் ஒரேஒரு பழக்கத்தால்,  மது பழக்கதால் பலியாகின்றன.

இதே சாலை விபத்துக்கு நல்ல ஒரு உதாரணம்...

இந்தி நடிகர் சல்மான் கான், இதுபோன்றுதான், மது அருந்திவிட்டு காரை ஓட்டினார். நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றினார். அதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முன்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில்,  நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கு: சல்மான் கான் மது அருந்தியிருந்ததாக வெயிட்டர் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக 5 நட்சத்திர விடுதி வெயிட்டர் மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.


மோலே பாக் என்ற இந்த வெயிட்டர், நீதிபதி தேஷ்பாண்டே முன்பு சாட்சியம் அளிக்கையில், காக்டெயில் மற்றும் ரம் ஆகியவற்றை சல்மான் கான் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு தான் சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

ஆனால் சல்மான் குடித்தாரா என்பது தனக்குச் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அரசுத் தரப்பு வக்கீல் ஜகன்னாத் கெஞ்ச்ரால்கர், அவரை குடைந்து எடுத்து சல்மான் கான் அன்று குடித்திருந்தார் என்பதை நிரூபித்தார்.

விடுதியில் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் யார் யார் குடித்தார்கள் என்பதை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றார் வெயிட்டர்.

மற்றொரு சாட்சியான போலீஸ் காவலர் லஷ்மண் மோர் கூறுகையில், சல்மான் கானும் அவரது சகோதரர் சோகைலும் ரைன் பாருக்குச் சென்றனர்.

சகோதரர் சோகைல் நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் காலை 3 மணியாகியும் சல்மான் திரும்பவில்லை, அப்போது ஒருவர் வந்து எங்களிடம் சல்மான் காரை நடைபாதைவாசிகள் மீது ஏற்றிய சம்பவத்தைக் கூறினார் என்றார்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சல்மான் கான் மது அருந்திவிட்டு  வாகனம் ஓட்டியதால், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார்.

சல்மான் கான் மட்டுமல்ல, பலர் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் பகலில் மட்டுமல்ல, இரவு நேரங்களிலும் விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகின்றன.

இதுபோன்ற இழப்புகள் நமக்கு தேவையா....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (82)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்)  போர்....!"

 நாள் -  82



குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் கைது...!

மது போதையில் மதுப்பிரியர்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஏன், சில நேரங்களில் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நம்மில் பலருக்கு காமடியை வரவழைக்கும்...சிரிப்பை வரவைக்கும்..

ஒருசிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், மதுப்பிரியர்கள் சில நேரங்களில் நல்ல சிரிப்பு நடிகர்களாகவே செயல்படுவது பல சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.

இதுபோன்ற ஒரு சம்பவம்தான் இப்போது நீங்கள் படிக்க போகிறீர்கள்...

ஆம்...

குடிபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் அண்மையில் நடந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் தனது பேருந்தை எடுப்பதற்கு பதிலாக அருகில் பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

பேருந்து காணமல் போனதை அறிந்த அரசு பேருந்து ஓட்டுனர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அரசு பேருந்தை தேடிவந்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே அரசு பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.

மேலும் போதை டிரைவரையும் கைது செய்தனர்.



பார்த்தீர்களாக நண்பர்களே, மது உள்ளே சென்றதும், மதி இழந்துவிடுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் அல்லவா...

இப்படி மதி இழந்து போதையில் தள்ளாட வேண்டிய அவசியம் மக்களுக்கு ஏன் ஏற்படுகிறது...

அது தேவைதானா.....

சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால், நாட்டில் மதுப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் அல்லவா...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (81)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்)  போர்...!" 

நாள் -  81


மதுபோதையில் இருந்த மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்....!

மதுவால் அந்த பழக்கத்திற்கு ஆளாகும் ஆண்களுக்கு மட்டும் பாதிப்புக்கு ஆளாகுவதில்லை. மாறாக அதிகளவு பெண்கள்தான் பாதிப்புக்குஆளாகிறார்கள்.

பல சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாக இருந்து வருகின்றன.

தற்போது மதுவுக்கு எதிராக பெண்களும் போராட முன்வந்துள்ளனர்.

துணிச்சலுடன் களத்தில் இறங்கியுள்ளன.

மதுவுக்கு எதிராக ஒரு பெண் துணிச்சலுடன் எடுத்த முடிவை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

சத்திஷ்கர் மாநிலத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆம்...

மதுபோதையில் இருந்த மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்த முடியாது என்று சத்திஷ்கர் மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார்.

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டதில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம்  நிச்சயக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணதிற்கான சங்ககுள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை மது அருந்தி போதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியைடந்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தினார்.

குடிகாரரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த தனக்கு விருப்பம் இல்லை என்று திருமண மேடையில் கூறினார் அந்த பெண்.

இதனையடுத்து அங்கு திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் மற்றும் ஊர்காரர்கள் மனப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக மணப்பெண்ணின் தந்தை தொடர்ந்து குடித்ததால் பலியானதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சத்திஷ்கர் பெண்ணின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை தமிழக பெண்களும் எடுக்க வேண்டும்.

மதுவுக்குஅடிமையாகும் ஆண்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

சிகரெட் வாங்க தடை.....!

நியூயார்க்கில் 21 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்க தடை.....!



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த நியூயார்க் நகர் முன்னாள் மேயர் பூளூம்பெர்க் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்தார்.

தற்போது  இந்த மசோதா அமலுக்கு வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி பூளூம்பெர்க் தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதையும் 21ஆக பரிந்துரை செய்திருந்தார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோவின்படி இனி சில்லறை விற்பைன நிலையங்கள் அனைத்திலும் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்கள் விற்கப்படமாட்டது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகரெட் வாங்குபவர்களின் அடையாள அட்டைகளை விற்பனையாளர்கள்  ஸ்கேன் செய்து வயதை சரிபார்த்தபின்னரே சிகரெட்டை விற்பனை செய்துவருகின்றனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் பூங்காக்கள், ,உணவகங்கள், பார்கள்,  பொது சதுக்கங்கள் போன்ற இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டிற்கான விற்பனை வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுதது அமெரிக்காவில் சட்டம் நடைமுறைக்கு வந்தையடுத்து 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் புகைப்பது முற்றிலும் குறைற்துள்ளது.

அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை போன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இதுபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

இளைஞர்களின் வாழ்வில் வதந்தம் வரும் அல்லவா....! புகைப்பிடிக்கும் பழக்கம் குறையும் அல்லவா...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, May 18, 2014

சகோதரர் விஜயரங்கம்....!

சகோதரர் விஜயரங்கம்....!



அச்சு ஊடகத்தில் இருந்து விஷுவல் ஊடகத்திற்கு தாவிய காலம் அது...

சன் தொலைக்காட்சியில் சேர்ந்த நேரம் அது....

பல ஜாம்பவான்கள் கோலோச்சிய சன் டி.வியின் மையின் நியூஸ் பிரிவில் சேர்ந்தபோது,  எனக்கு எல்லாமே வியப்பாக இருந்தது...

அங்குதான் முதல் முறையாக  சகோதரர் விஜயரங்கத்தை நான் சந்தித்தேன்...

என்னைவிட வயதில் குறைந்தவர்...

ஆனால், விஷுவல் ஊடகத்தில் அனுபவம் வாய்ந்தவர்...

புதிதாக விஷுவல் மீடியாவில் சேர்ந்தபோது, பல விஷயங்கள் எனக்கு உடனே புரியவில்லை...

பைட்.... என்றார்கள்...

பினாக்கிள்.... என்றார்கள்...

இன்டர்கட்...என்றார்கள்...

இப்படி பல புரியாத வார்த்தைகளில், பாஷைகளில் அடிக்கடி பேசிக் கொண்டார்கள் செய்திப்பிரிவில் இருந்த நண்பர்கள்...

அப்போது, எனக்கு பல விஷயங்களை புரிய வைத்தவர் விஜயரங்கம்...

அச்சு ஊடகத்திற்கு எழுதுவது தனி கலை...

ஆனால், விஷுவல் மீடியாவிற்கு எழுதுவது அதைவிட தனி கலை எனலாம்...

அந்த கலைகளை சொல்லித்தந்த பல சகோதரர்களில் விஜயரங்கமும் ஒருவர்...

பல நாள் அவருடன் இரவு நேர பணிகளில் சேர்ந்து நானும் பணிபுரிந்து இருக்கிறேன்.

உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் மட்டுமல்லாமல், முதல் கட் செய்திகளையும் எழுத ஊக்குவிப்பார் சகோதரர் விஜயரங்கம்...

சன் தொலைக்காட்சியை விட்டு அவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்றபோதுகூட அவருடன் இருந்த நட்பு குறையவில்லை.

ஏன், சத்தியம் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராக அவர் சேர்ந்தபோதுகூட, அதே பழைய விஜயரங்கமாகவே என்னிடம் பழகினார். பேசினார்...

எப்போது செல்பேசியில் அழைத்தாலும், உடனே, லைனுக்கு வந்துவிடுவார்...

அன்பாக பேசுவார்...

ஒவ்வொரு நாளும்  நண்பர்களுக்கு நான் எஸ்.எம்.எஸ. அனுப்புவது வழக்கம்..

அதில் பல பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், ஏன் ஜோக்குகள்கூட இருக்கும்...

நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களை படித்து மகிழ்வார்...சில நேரங்களில் பாராட்டு தெரிவிப்பார்..

என்னால் தொடர்ந்து உங்களை போன்று எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப முடியவில்லை சார் என்பார்...

அண்மையில்கூட அவரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, உடனே லைனுக்கு வந்து பேசினார்.

நலம் விசாரித்தார்.

இப்படி நல்ல உள்ளம் கொண்ட விஜயரங்கம், திடீரென மரணம் அடைந்தது, பலரை போல என்னையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது.

அவரது மரணம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை...

ஆனால், எல்லாம் இறைவனின் நாட்டம்....

இயற்கையை யாராலும் வெல்ல முடியாது...

அதேநேரத்தில்,

ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்கள் தங்களது உடல்நலத்தில் சிறிது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விஜயரங்கத்தின் மரணம் மூலம் நமக்கு பாடம் கிடைத்துள்ளது.

குறிப்பாக விஷுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு அதிகம்...

எனவே,  பணி பணி என்றும் உழைக்காமல், தேவைப்படும்போது, மனதை அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது.

சகோதரர் விஜயரங்கமே

உங்களுடைய மரணம், பலரை போல எனக்கும் பெரிய இழப்புதான்...

ஒவ்வொரு நாளும் இனி செய்திகளை பார்க்கும்போது, படிக்கும்போது உங்கள் நினைவு எனக்குள் வந்து செல்லும்...

உங்களை என்னால் மறக்கவே முடியாது...

எப்படி அய்யா உங்களை மறக்க முடியும்...

நாம் நெருங்கி பழகவில்லை....

ஆனாலும், நம் இருவரிடமும் உண்மையான அன்பு இருந்தது...

நேசம் இருந்தது..

.பாசம் இருந்தது...

புரிதல் இருந்தது...

உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்...

உங்கள் இழப்பால், உங்கள் குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை, துயரங்களை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும்.

எஸ.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Tuesday, May 13, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (80)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

 நாள் - 80



இந்தியாவில் தொடர்ந்து மதுப் பழக்கம் அதிரிப்பு....!

உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்....!!

இந்தியாவில் மதுப்பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் மதுப் பழககத்திற்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மதுவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்களின் எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மதுப் பழககம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

குடிப்பழக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  15 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

32 சதவீத ஆண்களும், 10.6 சதவீத பெண்களும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.



மதுப்பழக்கம் காரணமாக மட்டும், கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும் 3.3 மில்லியன் மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

அதேசமயம் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு 2.8 சதவீத பேரும், காசநோய்க்கு 1.7 சதவீதம் பேரும், கலவரங்கள் போன்ற சம்பவங்களில் 0.9 சதவீதம் பேரும் பலியானதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



சீனா, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குடிப்பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Saturday, May 10, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (79)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

நாள்  - 79




புகை, மதுவினால் ஏற்பட இருக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

புகை பிடித்தல், மதுபான பயன்பாடு, அதிக அளவிலான உப்பு பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு மற்றும் தொப்பை ஆகியவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் வருகிற 2025ம் ஆண்டிற்குள் 3.7 கோடி பேர் விரைவாக இறப்பதில் இருந்து அவர்களை தடுத்திடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தி லேன்சர் என்ற மருத்துவ நாளிதழில் குழுவாக ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ள தகவலில், கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இருதயம் அல்லது நுரையீரல் வியாதி, ஸ்டிரோக், புற்றுநோய் அல்லது நீரிழிவு ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களை மேற்கூறிய காரணிகளை கட்டுப்படுத்துவதால் ஆண்களில் 22 சதவீதம் பேரும், பெண்களில் 19 சதவீதம் பேரும் வருகிற 2025ம் ஆண்டிற்குள் உலக அளவில் விரைவாக மரணமடைவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கட்டுப்படுத்தும் காரணிகளை கடைப்பிடிக்காவிட்டால், வருகிற 2025ம் ஆண்டில் 3.88 கோடி பேர் விரைவில் மரணமடையும் வாய்ப்பு உள்ளது என்றும் இது கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மரண விகிதத்தை காட்டிலும் 1.05 கோடி எண்ணிக்கையில் அதிகம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இதற்காக ஆய்வு குழுவினர், தேசிய மக்கள் தொகை தகவல் மற்றும் மக்கள் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல்களை கணக்கிட்டு உள்ளனர்.  மக்கள் மரணத்தை தள்ளி போடுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் என்றால், 30% புகையிலை கட்டுப்பாடு, 10% மதுபான கட்டுப்பாடு, 30% உப்பு கட்டுப்பாடு, 25% உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு மற்றும் பரவலாக காணப்படும் கொழுப்பு சேருவதால் உண்டாகும் தொப்பை மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது ஆகியவை அதிக பலன் தரும்.


அதனுடன், வருகிற 2025ம் ஆண்டிற்குள் புகைப்பிடித்தலை 50% கட்டுப்படுத்துவதால், ஆண்களில் 24% பேரும், பெண்களில் 20% பேரும் மரணத்தை விரைவில் எதிர்கொள்வதை தள்ளிபோடலாம் என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.  பெரும்பாலும், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், 3.1 கோடி பேர் இதனால் அதிக பயன் அடைவார்கள். இதனால் 30-70 வயது உடையவர்களில் 1.6 கோடி பேரையும் மற்றும் 70 அல்லது அதற்கு மேல் 15 வருடங்கள் வயதுடையோரில் 2.1 கோடி பேரையும், விரைவாக மரணம் அடைவதில் இருந்து அவர்களை தடுத்து காத்திடலாம்.  இது உலக அளவிலான மக்களுக்கு பொருந்தும் என்பது ஆய்வின் சிறப்பம்சம்.

குறைந்த வயதில் மரணம் என்பது 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரை குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு உள்ளது.  மேலும், 2010 மற்றும் 2025ம் ஆண்டிற்குள் 25 சதவீதம் பேரை விரைவாக மரணம் அடைவதில் இருந்து தடுக்க ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது போன்ற வியாதிகள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளான, புகையிலை பயன்பாடு, உடலை வளைத்து வேலை செய்யாமை, தீங்கு தரும் மதுபான பயன்பாடு மற்றும் சுகாதாரமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றன.

நன்றி மாலை மலர் நாளிதழ் (04.05.2014)

எஸ்..அப்துல்அஜீஸ்

====================