Tuesday, June 28, 2011

சென்னை ராணுவ பயிற்சி நடுவம் - சில தகவல்கள்

பாதுகாப்புத் துறை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சென்னை ராணுவப் பயிற்சி நடுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. தகவல் தொழில் நுட்பம் போன்ற சொகுசான பணிகளிலேயே இளைஞர்கள்  கவனம் செலுத்துவது இதற்கு முக்கிய காரணம். நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சென்னை ராணுவப் பயிற்சி நடுவம் வழி காட்டுகிறது. இது  குறித்து ஓர் செய்தித் தொகுப்பு.

பரங்கிமலை!  சென்னையில்  பரந்து விரிந்து கிடக்கும் இந்த இடத்தில்தான்   இயங்கி வருகிறது சென்னை ராணுவப் பயிற்சி நடுவம்!!  அதிகாலை நேரத்தில், ராணுவ வீரர்கள் அணி அணியாய் இங்கு பயிற்சி பெறும் காட்சியை காணும்போது பார்வையாளர்களை மெய்ச்சிலிக்க வைக்கும். ராணுவத்தில் சேர ஆர்வத்தை தூண்டும்.   நாட்டிலேயே, சென்னை பரங்கிமலையில் மட்டுமே  இயங்கி வரும் இந்த ராணுவ பயிற்சி நடுவத்தில்   சேரும் இளைஞர்களுக்கு  ராணுவ தடவாளங்களை கையாளுதல், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துதல், ஆகியவை குறித்து 10 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு பிறகு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,   ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகளாக பணிபுரிய வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

பாதுகாப்புத்துறை குறித்து நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைக்கும் உத்தரவாதம் அளிக்கும் சென்னை ராணுவ பயிற்சி நடுவம் குறித்து ஏனோ இளைஞர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தகவல் தொழில் நுட்பம் போன்ற சொகுசான துறைகளையே இளைஞர்கள் விரும்புவதால், ராணுவ பயிற்சி நடுவத்தில் சேர இளைஞர்கள்  சிறிதும் ஆர்வம் செலுத்துவதில்லை.

பாதுகாப்பு துறையில் குவிந்துக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞர்கள் இடையே நல்ல விழிப்புணர்வு மலர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, நாட்டின் பாதுகாப்பிற்கும், வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி பிறக்கும்.

S.A.ABDUL AZEEZ

Sunday, June 26, 2011

கூடுதல் தங்க நகை கேட்ட மணமகன் திடீர் மாயம் - திருமணம் நின்றதால் கலங்கி நிற்கும் மணமகள்: சென்னையில் நடந்த சோகம்.

ஆசை ஆசையாய் வளர்த்த மகளின் திருமணத்தை பார்க்க துடித்த தந்தை.
கூடுதல் நகை கேட்டு திடீரென மாயமான மணமகனால் திருமணம் தடைப்பட்டு கலங்கி நிற்கும் பரிதாபம்.
புகார் கொடுத்தும் மூன்று நாட்கள் அலைக்கழிக்க வைத்து வழக்குப்பதிவு செய்த போல¦சார்.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பெண்ணுக்கு வரன் தேடும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது.
இப்படி ஆன்லைன் மூலம்  பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பலர், கடைசியில் ஏமாற்றத்திற்கே ஆளாகி வருகின்றனர். 
பொய்யான தகவல்களை அள்ளி தரும் ஆன்லைன் விளம்பரங்கள், பல பெண்களின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி விடுகின்றன.
திருமண தகவல் மையங்கள் என்ற பெயரில்  இண்டர்நெட் ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள்,  உண்மையில் போலியானவை என்பது திருமணத்திற்கு பிறகு தெரிய வருகிறது.
நல்ல வசதிப் படைத்த பெண்களை மட்டுமே  தேடும், சிலர் ஆன்லைன் மூலம்  லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதை,  நம்பும் பெண்ணின் பெற்றோர்களும் தடல்புடலாக செலவு செய்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
ஆனால், திருமணத்திற்கு பிறகு உண்மை வெளிச்சத்திற்கு வந்து மணம் முடித்த பெண்ணின் வாழ்க்கையே  சூனியமாகி விடுகிறது.
இப்படிதான், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் திவ்யா,  ஆன்லைன் விளம்பரம் மூலம் இன்று ஏமாற்றம் அடைந்து உள்ளார். 
பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இளைஞன் ஒருவன், வரதட்சணையாக கூடுதலாக 100 பவுன் தங்க நகை கேட்டும், அதையும் கொடுக்க தயாராக இருந்தார் திவ்யாவின் தந்தை.
திருமண மண்டபத்தில், உறவினர்கள், உற்றார்கள் சூழ்ந்து இருக்க, கழுத்தில் தாலி ஏறப்போகிறது என்ற மகிழ்ச்சியில், மணமகள் திவ்யா கனவுடன் மிதந்து கொண்டிருக்க, ஆனால் நடந்ததோ வெறும் சோகம்தான். 
திருமண நாள் அன்று, திடீரென மாயமானார் மணமகன். என்ன காரணம் என்றே புரியவில்லை மணப்பெண்ணுக்கு.
போல¦சில் புகார் கொடுத்தும், மூன்று நாட்கள் அலைக்கழித்து கடைசியில் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
இப்படி, தொடர் சோகங்களால், மகிழ்ச்சி துள்ளிக் கொண்டிருந்த ஒரு நல்ல அமைதியான குடும்பத்தில் இன்று வெறும் மயான அமைதியே  காணப்படுகிறது.
சென்னை பெண் திவ்யாவுக்கு  நடந்த அந்த சோகக் கதையை இப்போது பார்க்கலாம்.



சென்னை ஆதம்பாக்கம் டெலிபோன் காலணி, கணேஷ் நகரில் உள்ள முதல் மெயின் ரோட்டில்  வசிப்பவர் ஆறுமுகம்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆறுமுகத்தின் மனைவி மங்கையர் அரசி.
இந்த தம்பதிக்கு, பல ஆண்டுகளுக்கு பிறந்த ஒரே பெண்தான் திவ்யா
(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.)
செல்லக் குழந்தை திவ்யாவை ஆசை, ஆசையாய் அன்பு பாலூட்டி வளர்த்தனர் ஆறுமுகம்-மங்கையர் அரசி தம்பதி.
நன்றாக படித்த திவ்யாவை எம்.பி.ஏ.வரை படிக்க வைத்தார் ஆறுமுகம்.
சொந்த வீடு, நிலப்புலன்கள் என நன்கு வசதி இருந்ததால், நல்ல வசதியான இடத்தில், தன்னுடைய  ஆசை மகள் திவ்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் ஆறுமுகம்.
இதற்காக பல இடங்களில் வரன்களை தேடி வந்த ஆறுமுகம், இண்டர்நெட்டையும் விட்டு வைக்கவில்லை.
இண்டர்நெட்டில் ஆன்லைன் மூலம் பல தனியார் திருமண தகவல் மையங்களின் விளம்பரங்கள்  வருவது ஆறுமுகத்தின் கண்ணிலும்  பட்டன.
ஆசை மகள் திவ்யாவுக்கு அழகான,  படித்த, வசதியான மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஆறுமுகம் நினைத்தார்.
இப்படி, ஆன்லைன் மூலம் பெண் திவ்யாவிற்கு வரன் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு தனியார் திருமண ஏஜென்சியின் விளம்பரம் பார்த்து மகிழ்ந்து போனார் ஆறுமுகம்.
மும்பை ஐ.டி.நிறுவனத்தில் மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பையனுக்கு மணமகன் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
வசதியான தன்னுடைய மகளுக்கு நல்ல வரன் கிடைத்து விட்டதாக நினைத்தார் ஆறுமுகம்.
உடனே, விளம்பரம் கொடுத்த  தனியார் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு, பையனின் முகவரியை வாங்கிக் கொண்டார்.
இதற்கான கமிஷன் கட்டணமாக அந்த திருமண தகவல் மையத்திற்கு 2 ஆயிரத்து 700 ரூபாயும் கொடுத்தார் ஆறுமுகம்.
விளம்பத்தில் இருந்த பையனின் வீடு பெரம்பூர் தண்டலம் பகுதியில் இருந்தது.
அங்கு சென்று விசாரித்தபோது, பையனின் பெயர் சதீஷ் என்பது தெரிய வந்தது.
எம்.பி.ஏ. படித்த சதீஷின் தந்தை காலமாகி விட்டதால், அவரது தாயார் சந்திரிகாவுடன் வசித்து வந்தார் சதீஷ்.  கூடவே, தாத்தா ராமனுஜம், பாட்டி கந்தா ஆகியோரும் இருந்து வந்தனர்.
சதீஷ்க்கு சென்னையில் சொந்த வீடு. இப்படி அனைத்தும் நன்றாகவே பட்டது ஆறுமுகத்திற்கு.
மேலும் தங்களது பூர்விகமான வேலூரைச் சேர்ந்தவர் சதீஷ் என்பதும்  தெரியவந்தது.
ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் ஆறுமுகத்திற்கு மேலும் நம்பிக்கை பிறந்து மகிழ்ச்சி கூடியது.
சரி, வரனை பேசி முடித்து விடலாம் என முடிவு செய்தார். 
தனக்கு ஒரே பெண் என்பதால், மணமகன் வீட்டில் கேட்டப்படியே மணமகனுக்கு 100 பவுன் தங்க நகை, 5 கிலோ வௌ¢ளி ஆகியவை வரதட்சணையாக கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.
ஏராளமான தட்டுமுட்டு சாமான்கள், கட்டில் பிரோ என அனைத்தையும் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்.
மணமகன் சதீஷுக்கு ஆறுமுகத்தின் பெண் திவ்யா பிடித்து போனதால், கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி  மணமகனின் வீட்டாரின் விருப்பப்படியே, கோயம்பேட்டில் உள்ள பெரிய ஹோட்டலில் தடல்புடலாக நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார் ஆறுமுகம்.
நிச்சயதார்த்திற்கு பிறகு அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டனர் திவ்யாவும் சதீஷ்சும்.
இரண்டு மாதத்திற்கு பிறகு, கடந்த 15 ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் வரவேற்பு நிகழ்ச்சியும், மறுநாள் திருமணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, திருமண அழைப்பு பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டு, உற்றார், உறவினர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைத்தார் ஆறுமுகம்.
நேரில் சென்றும் மகளின் திருமணத்திற்கு அவசியம்  வந்து வாழ்த்த வேண்டும் என உறவினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
திருமண வரவேற்பிற்காக, 15 ஆம் தேதி மாலை முதலே ஜீவன் ஜோதி மகாலில் கூட்டம் கூட ஆரம்பித்தது.
மணமகள் வீட்டில் அனைவரும் வந்து மாப்பிள்ளைக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
மாப்பிள்ளை அழைப்புக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது.
ஆனால் மாப்பிள்ளையோ, அவரது தாய் மற்றும் உறவினர்களோ ஏனோ வரவேயில்லை. 
துடிதுடித்து போனார் ஆறுமுகம். என்ன விஷயம் என்று அவருக்கு புரியவில்லை.
மாப்பிள்ளை சதீஷ் வீட்டிற்கு போன் செய்து கேட்கலாம் என முடிவு செய்தார்.
போன் செய்தபோது, எதிர்முனையில் மணி அடித்ததே தவிர, யாருமே எடுக்கவில்லை.
உற்றார், உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர், திரண்டு இருக்க, மாப்பிள்ளை வராதது பெரும் அவமானமாகவே போனது ஆறுமுகத்திற்கு.
உடனே, கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, மாப்பிள்ளை சதீஷ் வசிக்கும் பெரம்பூர் வீட்டிற்கு ஓடினார்.
அங்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்தார் ஆறுமுகம். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, யாரும் சரியாக பதில் சொல்லவில்லை.
100 பவுன் தங்க நகை, 5 கிலோ வௌ¢ளி , மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகை என அனைத்து கொடுக்க தயாராக இருந்தும், மேலும் 100 பவுன் நகை கொடுக்க வேண்டும் என மாப்பிள்ளையின் மாமன் ராகவன் டிமாண்ட செய்து இருந்தார்.
அதையும் கொடுக்க தயார் என உறுதி அளித்தார் ஆறுமுகம்.
இப்படி, ஒரே பெண்ணிற்காக தனது சொத்து பத்து அனைத்தும் கொடுக்க தயாராக இருந்தும், திடீரென மாப்பிள்ளை சதீஷ் மாயமானது பெரும் அதிர்ச்சியுடன் அவமானத்தையும் தந்தது ஆறுமுகத்திற்கு.
என்ன செய்வது என்றே தெரியவில்லை. உற்றார் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே ஆறுமுகத்திற்கு புரியவில்லை.
அதைவிட கல்யாண கனவுகளை சுமந்துக் கொண்டு இருக்கும் தனது பெண் திவ்யாவை எப்படி ஆறுதல் கூறி தேற்றுவது என்று விளங்காமல் தவியாய் தவித்தார் ஆறுமுகம்.
கூடுதலாக 100 பவுன் நகை கேட்ட மணமகன் சதீஷ், குடும்பத்துடன் மாயமானதால், திவ்யாவின் திருமணம் நின்று போனது.
மணநாள் அன்று, மாயமான மணமகன் சதீஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் முதலில் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ஆறுமுகம்.
ஆறுமுகத்தின் வீடு ஆதம்பாக்கத்தில் இருப்பதால் அங்குச் சென்று புகாரை பதிவு செய்யும்படி கூறினர் நந்தம்பாக்கம் போல¦சார்.
உடனே, ஆதம்பாக்கம் காவல்நிலையத்திற்கு  சென்ற ஆறுமுகம், அங்கும் ஒரு புகார் மனுவை அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல், விசாரணை குழு அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கினாலும், மணமகனின் வீடு பெரம்பூர் பகுதியில் உள்ளதால், அங்குச் சென்று புகார் செய்யுங்கள் என பரிந்துரை செய்தார்.
இப்படி, போல¦சாரால் அலைக்கழிக்கப்பட்ட ஆறுமுகம், வேதனையை சுமந்துக் கொண்டு, நேராக சென்னை மாநகர போல¦ஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று நடந்த விவரங்களை எழுதி புகார் அளித்தார்.
ஆனால், ஆதம்பாக்கம், புறநகர் பகுதியில் இருப்பதால், புறநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலக ஊழியர்கள் கூறி ஆறுமுகத்தை அனுப்பி வைத்தனர். 
உடனே புறநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஓடோடி சென்ற ஆறுமுகம், ஆணையர் கரண் சிங்காவை சந்தித்து மணமகன் மாயமானது குறித்து புகார் அளித்தார்.
காவல் ஆணையர் கரண் சிங்காவை உடனே, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார்.
இப்படி, தன் மகளின் திருமணம்,  மணமகன் அதிக வரதட்சணை கேட்டு, திடீரென மாயமானதால் தடைப்பட்டு, வேதனையின் உச்சியில்  இருந்தபோது, அது குறித்த புகாரை வாங்காமல் அனைத்து காவல்நிலையத்திலும் அலைக்கழிக்கப்பட்டது ஏன் என்றே ஆறுமுகத்திற்கு  விளங்கவில்லை.
ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல், மூன்று நாட்களுக்கு பிறகு மாயமான மணமகன் சதீஷ் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கடந்த 17 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
ஆனால், இந்த மூன்று நாட்களில் ஆறுமுகமும், அவரது மனைவி மங்கையர் அரசியும் அடைந்த மனவேதனைக்கு என்ன மருந்து.
ஒரே பெண்ணிற்காக அனைத்தும் தியாகம் செய்ய தயாராக இருந்தும், கூடுதலாக 100 பவுன் தங்க நகை கொடுக்க தயார் என்று கூறியபோதும், மணமகன் சதீஷ் ஏன் மாயமாக வேண்டும்.
உண்மையில் என்னதான் நடந்தது. மணமகன் சதீஷைப் பற்றி விசாரித்தபோது, பல உண்மையாக வெளிவர ஆரம்பித்தன.
சதீஷ் உண்மையில் மும்பை ஐ.டி.கம்பெனியில் பணி செய்யவில்லை என்பதும், எம்.பி.ஏ. படிக்கவில்லை என்பது தெரியவந்தது. அவருக்கு மாதம் 45 ஆயிரம் சம்பளமும் இல்லை.
இப்படி, பொய்யான தகவல்கள், இண்டர்நெட் ஆன்லைன் விளம்பத்தில் கொடுத்த ஏமாற்றி இருக்கிறார் சதீஷ்.
இண்டர்நெட்டில் விளம்பரம் செய்த தனியார் திருமண தகவல் மையமோ, தன்னுடைய கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு, தவறான தகவலால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சிரழித்து உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காவும், திருமணத்திற்காகவும், மணமகளின் உறவினர்கள் வந்து காத்துக் கொண்டு இருக்க,  மணமகன் சதீஷ்  வராமல் மாயமானது, எவ்வளவு பெரிய அவமானம்.
ஒரு இளம் பெண் திவ்யாவால்  இதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.
நல்ல கலகலப்பாக இருந்த ஆறுமுகத்தின் குடும்பத்தில் இன்று வெறும் மயான அமைதியே நிலவுகிறது.
தமிழ் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றிக்கு எதிரான வரதட்சணை என்ற அரக்கணை, பெண்ணின் நலனுக்காக கொடுக்க ஆறுமுகம், தயாராக இருந்தும் அதற்கு மேலும் கொடுக்க வேண்டும் என கூறிய மணமகன் சதீஷ், திடீரென மாயமானதில் பல புதிர்கள் புதைந்து கிடைப்பதாகவே தெரிகிறது.
இதுபோன்று பல பெண்களின் வாழ்க்கையில் சதீஷ் விளையாடி இருக்கலாம்.
இதெல்லாம், சதீஷையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து காவல்துறை நடத்தும் விசாரணையின் மூலம் மட்டுமே தெரிய வரும்.
நல்ல வரதட்சணை கொடுக்க தயாராக இருந்தும், திடீரென ஓடிய மணமகன் சதீஷை இனி திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார் மணப்பெண் திவ்யா.
அதிக பணமும், நகையும் கொடுத்து சதீஷை திருமணம் செய்துக் கொள்வதால், தன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என அடித்துக் கூறுகிறார் திவ்யா.
திருமண நடக்க வேண்டிய ஒரு நாளுக்கு முன்பு குடும்பத்துடன் மாயமான சதீஷ் மீது இனி காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திவ்யா.
இப்படி துணிச்சலாக திவ்யா கூறினாலும், அவரது மனம் பெரிதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆறுமுகம்-மங்கையர்அரசி தம்பதியினர் மகளின் திருமணம் தடைப்பட்டதால், கண் கலங்கி கண்ணீர் சிந்துகின்றனர்.
ஆன்லைனில் பொய்யான திருமண விளம்பரங்களை அள்ளி வீசும் தனியார் திருமண தகவல் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற புகார்களை அளிக்கும்போது, பல இடங்களுக்கு அலைக்கழிக்க வைக்காமல், போல¦சார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆறுதல் கிடைக்கும்.
பெண்களின் வாழ்க்கையில் இது போன்று தொடர்ந்து விளையாடும் ஆண்களை சட்டத்தின் முன் நிறுத்தி  தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே, பெண்கள் சந்திக்கும்  பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இல்லையென்றால், பெண்களை துணிச்சலுடன் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இளம் பெண்களின் வாழ்க்கை சிதைந்து போவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

S.A.ABDUL AZEEZ


படித்தது  பயன் உள்ளது - மாம்பழம் பல சுவையான தகவல்கள் :
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம்.
ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.
மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.
மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.




மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.
மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது. மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
ஒரு சிலரது உடல் மிகவும் நோஞ்சானாக காணப்படும்.இத்தகையவர்களுக்கு மாம்பழம் கொடுக்க, வேறு எந்த உணவும் செய்யாத மாய வித்தையை மாம்பழம் செய்து, அவர்களை கொழு கொழு உடலோடு புஷ்டியாக ஆக்கிவிடும்.ஏனெனில் இதில் ஏராளமான கலோரிகள் மற்றும் ஹார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன.

அத்துடன் சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தை கூட மாம்பழம் தடுத்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.

சீன மருத்துவத்தில் மாமபழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய சக்தியாக கருதப்படுகிறது. ரத்த சோகை, ஈறுகளில் ரத்தம் வடிதல், இருமல், காய்ச்சல், குமட்டல் மற்றும் கடல் ஒவ்வாமை நோய் போன்றவற்றிற்கு மாம்பழத்தை பரிந்துரைக்கிறது சீன மருத்துவம்.
தேர்வு காலங்களில் படிக்கும் குழந்தைகள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிப்ஸ், மிக்சர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொறிப்பார்கள். அவர்கள் இத்தகைய உணவுகளுக்குப் பதிலாக மாம்பழத் துண்டுகளை சாப்பிட அதிலிருக்கும் குளுடாமின் அமிலம்,கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான சமாச்சாரமும் மாம்பழத்தில் அடங்கியுள்ளது. அது செக்ஸ் ஹார்மோன்களை சீராக வைத்து, ஒருவரது பாலுணர்வை தூண்டும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பதுதான் அது. இதில் உள்ள வைட்டமின் 'ஈ' சத்துதான் இந்த ஜாலவித்தையை புரிகிறதாம்.
இவையெல்லாவற்றையும் விட காரணமே இல்லாமல் கூட மாம்பழத்தை அதன் சுவைக்காக சாப்பிடலாம்.ஏனெனில் மாம்பழம் எல்லா நேரமும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே என்பதால் கிடைக்கும்போது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்காத மாம்பழம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்!

அப்துல் அஜீஸ்

Wednesday, June 22, 2011

மருத்துக்கடைகள் - சில விபரீதங்கள்

மருந்துகள்  கெட்டுப்போகாமல் இருக்க மருந்துக்கடைகளில்  ஒரே சீரான தட்பவெப்பபத்திற்காக குளிர்சாதன வசதி செய்ய வேண்டும் என்பது அரசின் ஆணை. இந்த ஆணை சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் நோய்களை குணமாக்கும் மருந்துகளே எமனாக மாறுகின்றன.



போலி மருந்துகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல அதிரடி ஆணைகளை தமிழக அரசு பிறப்பித்தது. அதில் ஒன்றுதான், மருந்துக்கடைகள் அனைத்தும் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்ய வேண்டும் என்பது. மருந்துகளின் தரத்தை பாதுகாக்கவும், விரைவில் காலாவதியாகாமல் இருக்கவுமே இந்த நடவடிக்கை. ஆனால் மாநிலம் முழுவதும் ஒருசில நிறுவனங்களை தவிர, மற்ற மருந்துக்கடைகளில் குளிர்சாதன வசதிகள் செய்யப்படவில்லை. கடுமையான வெப்பம், குளிர் என பல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பவே, மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய மருந்துக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் மூலம் நோயாளிகளுக்கு உண்மையில் முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.


நோய்கள் குணமாகாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், சரியான சூழலில் விற்கப்படாத மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. மருந்துக்கடை உரிமையாளர்களின் அலட்சியத்தால், சில நேரங்களில், நோயாளிகளுக்கு உயிர் போகும் ஆபத்தும் உண்டு. 
தமிழகம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகள் அனைத்தும், உடனடியாக குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும். புதிய உரிமம் கொடுக்கும்போது, விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நலவாழ்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இப்படி உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே, மக்களை ஆபத்துகளில் இருந்து காப்பற்ற முடியும்

                                     அப்துல் அஜீஸ்
அஞ்சலக சேமிப்பு வரி - பாதிப்புகள்
அஞ்சல் அலுவலக சேமிப்பு பணத்திற்கான வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால்,  சேமிக்கும் பழக்கம் குறைந்து,  அஞ்சல் அலுவலகங்களை மக்கள் மறந்தே விடுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.


அஞ்சல் அலுவலகங்களில் பணத்தை சேமிப்பதை, கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அஞ்சலக சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வைத்துக் கொள்ள முடியும். சேமிப்பு தொகையில் இருந்து வழங்கப்படும் வட்டிக்கு, இதுவரை வருமான வரி விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது  அஞ்சல் சேமிப்பு தனி நபர் கணக்கில் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு அதிகமாக பெறப்படும் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கூட்டாக வைத்திருக்கும் கணக்கில் 7 ஆயிரத்துக்கு மேலான வட்டி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்கிறது அரசு. இந்த அறிவிப்புகள், கிராமப்புறங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அஞ்சலக சேமிப்பு பணம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, வட்டிக்கு வரி என்ற அறிவிப்பால், அஞ்சலகங்களில் சேமிப்பு குறைந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியும் தடைபடும். நடுவண் அரசு தனது முடிவில் மாற்றம் செய்வதன் மூலம்  மட்டுமே, அஞ்சலக சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே தொடரச் செய்ய முடியும்.

S. A. ABDUL AZEEZ

Monday, June 20, 2011

மதுப் பழக்கம் - அதிகரிக்கும் விழுக்காடு 

தமிழகத்தில் தெருக்கு தெரு திறந்துள்ள மதுக்கடைகளால், படித்த இளைஞர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் இவர்களுக்கு அளிக்கப்படும் கொடுமையான சிகிச்சைகளால், உயிரிழப்பும் நேரிடுகிறது. முழு மது விலக்கு மூலம்  மட்டுமே, மதுவால் சீரழியும் தமிழகத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும்.

விடிந்ததும் அரசு மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! மதுவை அருந்தி விட்டு சுயநினைவு இழந்து சாலை ஓரங்களில் வீழ்ந்து கிடக்கும் கூலித் தொழிலாளிகள் !! மாநிலத்தில் ஆறாக ஓடும் மது கலாச்சாரத்தால்,  படித்த இளைஞர்கள் இடையே, அதிகரித்து வரும் மதுப்பழக்கம்.




இப்படி தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,  ஆண்டுக்கு 2 ஆயிரம் இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக விதிகள் இருந்தாலும், அவை காற்றில் பறக்க விடப்படுவதால், பெண்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை.

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சில தனியார் நடுவங்கள்  சிகிச்சை அளிக்கின்றன. ஆனால், சிகிச்சை என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்கள் இங்கு கடுமை தாக்கப்படுகின்றனர். இதனால் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகள் மதுப்பழக்கம் வீட்டின் அமைதியை சீர்குலைத்து விடுகிறது.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக நலனில் அக்கறையுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனை ஏனோ அரசு காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. வருவாயை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்காலமான, இளைஞர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 அப்துல் அஜீஸ்