Monday, June 20, 2011

மதுப் பழக்கம் - அதிகரிக்கும் விழுக்காடு 

தமிழகத்தில் தெருக்கு தெரு திறந்துள்ள மதுக்கடைகளால், படித்த இளைஞர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் இவர்களுக்கு அளிக்கப்படும் கொடுமையான சிகிச்சைகளால், உயிரிழப்பும் நேரிடுகிறது. முழு மது விலக்கு மூலம்  மட்டுமே, மதுவால் சீரழியும் தமிழகத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும்.

விடிந்ததும் அரசு மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! மதுவை அருந்தி விட்டு சுயநினைவு இழந்து சாலை ஓரங்களில் வீழ்ந்து கிடக்கும் கூலித் தொழிலாளிகள் !! மாநிலத்தில் ஆறாக ஓடும் மது கலாச்சாரத்தால்,  படித்த இளைஞர்கள் இடையே, அதிகரித்து வரும் மதுப்பழக்கம்.




இப்படி தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,  ஆண்டுக்கு 2 ஆயிரம் இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக விதிகள் இருந்தாலும், அவை காற்றில் பறக்க விடப்படுவதால், பெண்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை.

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சில தனியார் நடுவங்கள்  சிகிச்சை அளிக்கின்றன. ஆனால், சிகிச்சை என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்கள் இங்கு கடுமை தாக்கப்படுகின்றனர். இதனால் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகள் மதுப்பழக்கம் வீட்டின் அமைதியை சீர்குலைத்து விடுகிறது.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக நலனில் அக்கறையுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனை ஏனோ அரசு காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. வருவாயை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்காலமான, இளைஞர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 அப்துல் அஜீஸ் 




No comments: