Wednesday, July 27, 2011

‘‘ரமலான் நோன்பின் மாண்புகள்’’




ரமலான்! 

இஸ்லாமியர்களிடையே இறையச்சத்தை செழித்து வளர்க்கும் வசந்தகாலம் !!

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மூன்றாவது தூணாக கருதப்படும் நோன்பு என்னும் தூய வழிபாட்டை கடைபிடிக்கும் இனிய காலம்!!!

மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது.

நேர்வழியின் தெளிவான அறிவுரைகளை கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் என்னும் சத்திய வேதத்தை தந்த இறைவனுக்கு,  நன்றி கூறுவதற்காக வைக்கப்படுகிறது ரமலான் மாத நோன்பு. 

இதன்மூலம் அனைத்து சகோதரர்களுடன் ஒருங்கிணைந்து அமைதியுடன் வாழ  இஸ்லாமியர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.  பல தொல்லைகளுக்கு மூலக் காரணம் மனம்.

இப்படி பல தொல்லைகளுக்கு காரணமாக இருக்கும் மனதை, 30 நாட்கள் ஒருமுகப்படுத்தி ஓர் இறை சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர்.

ரமலான் மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் உணவு உட்கொண்டு  பகல் நேரத்தில் குடிநீர் உட்பட எந்தவித உணவையும் உண்ணாமல் இறை சிந்தனையை மட்டுமே உள்ளத்தில் குடியமர்த்தும் இஸ்லாமியர்கள், மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பு திறந்து உண்கின்றனர் உணவு. 

இதனால், உடல், உள்ளம் ரீதியாக இவர்கள் பெறும் நன்மைகளோ  ஏராளம்.

இதனை மருத்துவ உலகமும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.
பல ஆராய்ச்சிகளும் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.

நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது.

வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

இதனால் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. அலட்சியம் செய்யும் போக்கு மாறிவிடுகிறது.

ஏழைகளுடன் சகோதரத்துடன் பழக, வாழ பயிற்சி கிடைக்கிறது.

இது ரமலான் மாதத்தில் நடக்கும் அதிசயம்.

ரமலான் மாதத்தின்  இரவு நேரங்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றாலும், சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபா என்னும் இறை இல்லத்தில் நடைபெறும் கூட்டு தொழுகையில் உலகம் முழுவதும் இருந்து  லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்கின்றனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் காபா இறை இல்லத்தில் ஒன்றுகூடி, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வது கண்கொள்ளாக் காட்சி.

உலக அமைதிக்காக அவர்கள் இறைவனிடம் மனம் உருகி கண்ணீர் சிந்தி, கூட்டு வழிபாடு நடத்துவது கல் மனதையும் உருகச் செய்யும்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் ஜம்மு, லக்னோ உள்ளிட்ட அனைத்து நகரங்களும் ரமலான் மாதத்தில் களைகட்டிவிடுகின்றன.

ரமலான் மாதத்தின் முதல் பிறை பார்க்கும் இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பரிமாற்றி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.


சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும் பல உணவு விடுதிகளில்,இரவு முழுவதும் விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு,  நோன்பாளிகளுக்கு விற்பனை  செய்யப்படுவதும் ரமலான் மாதத்தில்தான்.

வணிக நிறுவனங்களில் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காகவே சுவை மிகுந்த பேரிச்சப்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறை.  

ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்து, மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய நாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள்,  அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம்.



பல அரசியல் கட்சிகள்,  நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை¢ நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே.

இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.

ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது.

அது, ஜகாத் என்னும் ஏழை வரியை ஏழைகளுக்கு வழங்குவது.

வசதி படைத்த இஸ்லாமியர்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளை.

இந்த இறைக் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் கொடைதான் ஜகாத் என்னும் ஏழை வரி.

ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழைவரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் ரமலான் மாதத்தில்தான்.

இதன்மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.

இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய நிகழ்வு ரமலான் மாதத்தில் நடைபெற்றதால் இம்மாதம் புனிதமும் கண்ணியமும் பெறுகிறது.

எனவே, ரமலான் மாதத்தில் திருக்குர்ஆனை இஸ்லாமியர்கள் அதிகளவு படித்து தங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்கின்றனர்.

அரபி மொழியில் இருக்கும் குர்ஆனை,  தங்களுடைய தாய் மொழியில் பொருள் உணர்ந்து அறிய வேண்டும் என்பதற்காகவே மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகளைக் வாங்கிப் படிக்கும் இஸ்லாமியர்கள்,  அதன் பொருளை புரிந்து வாழ்க்கையில் கடைப் பிடிக்கவும்  பயிற்சி  பெறுகின்றனர்.

இறைவனுக்காகவே நோன்பு வைத்து 5 வேளை தொழுகையை தொழும் இஸ்லாமியர்கள், ஷவ்வால்  மாதத்தின் முதல் பிறை பார்த்ததும்,  பெருநாள் கொண்டாட்டங்களுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள இறங்கி விடுகின்றனர்.

புத்தாடை,  விதவிதமான அணிகலன்களை  வாங்குவதில் இஸ்லாமிய குழந்தைகள் மற்றும் மகளிருக்கு  தனி ஆர்வம் ஏற்படுவதால், வணிக நிறுவனங்களில் ரமலான் மாதத்தில் கூட்டத்திற்கு குறைவில்லை.

ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக பெருநாள் தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியர்கள், அதற்கு முன்பு பித்ரா என்ற கொடையை அளிப்பது கூடுதல் சிறப்பு.

இதன் முலம் பெருநாள் அன்று எந்த ஒரு ஏழையும் பசித்திருக்க கூடாது என்ற நோக்கம் நிறைவேறுகிறது.

 உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்களிடையே நாட்டிற்கு நாடு வேறுபட்ட கலாச்சாரம், பண்பாடு இருந்து வந்தாலும்,  தொழுகை, நோன்பு ஆகிய இறைவழிபாட்டில் உலகம் முழுவதும் ஒரே முறை கடைபிடிக்கப்படுகிறது.

இதனால், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா,  வளைகுடா நாடுகள் பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரமலான் கொண்டாட்டங்களுக்கு எப்போதும் குறைவு இருப்பதில்லை.

அண்மையில் விடுதலை நாடாக அறிவிக்கப்பட்ட கொசோவோவில், முதல் முறையாக கொண்டாடப்பட்ட ரமலான் விழா பெரும் களைகட்டியது.

இங்குள்ள இஸ்லாமியர்கள் விடுதலை நாளுடன், ரமலான் திருநாளையும் ஒன்றுசேர கொண்டாடி மகிழ்ந்தது தனி சிறப்பு.

உலகத்தில் அமைதி நிலவ மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இது இறைவனின் கட்டளை.

ஒற்றுமையை கடைப்பிடியுங்கள். பிரிந்துவிடாதீர்கள் என்று மனிதர்களை பார்த்து கூறுகின்றான் இறைவன்.

இனம், மொழி, கலாச்சாரம் வேறுபாட்டாலும், மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு.

இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், அந்த மகிழ்ச்சியில் மீண்டும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்றுகூடி கூட்டுத் தொழுகை நிறைவேற்றி  ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். 



இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் தொடர்ந்து நீடித்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும்.

மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறினால்,  பின்னர் மனிதர்களுக்குள் எப்படி பிறக்கும் சச்சரவுகள் ? வேறுபாடுகள் ?

எப்படி வெடிக்கும் மோதல்கள் ?



அனைத்து மனிதர்களின் உள்ளத்தில் சகோதரத்துவம், அன்பு என்றென்றும் குடிபுகுந்து விட்டால் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.

இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைதான் ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்படுகிறது.

 30 நாட்கள் முழுவதும் மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பாடத்தை,  வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதைத்தான் இறைவனும் விரும்புகிறான்..

அது மனித குலத்தின் முழு மகிழ்ச்சிகாக மட்டுமே.

மனித குலத்திற்கு அன்பை போதிக்கும்,  ஒரு அருமையான மாதம்தான் ரமலான்.

இப்படிப்பட்ட மகத்தான மாதம்தான்,  இஸ்லாமியர்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கிறது.

இம்மை, மறுமை வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.






(ஆகஸ்ட் முதல் வாரம் ரமலான் நோன்பு தொடங்குவதையொட்டி, இந்த கட்டுரை எழுதப்பட்டது)


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




Sunday, July 24, 2011

மருத்துவர் அய்யா !


இப்படிதான் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாஸ் அவர்களை நாங்கள் அழைப்பது வழக்கம்.

சமூக நீதிப் போராளி ! தமிழ் குடித்தாங்கி !! 

என  பல அடை மொழிகளில் தமிழக மக்களால் மருத்துவர் ராமதாஸ் மரியாதையுடன் அழைக்கப்பட்டாலும்,  அவரை மருத்துவர் அய்யா என்று அழைக்கும்போது, ஒரு அன்னோன்னியம் பிறக்கும்.

அவரை அய்யா,  என்று அழைக்கும்போது,  எங்கள் உள்ளத்தில் தனி சுகம் கிடைக்கும்.  

மருத்துவரை,  நாங்கள் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இப்போது அய்யா என்றே அழைக்க தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் அனைத்தையும் பெற்று  இன்பமாக,  மகிச்சியாக வாழ வேண்டும் என்பது மருத்துவர் அய்யாவின் கொள்கை.

· தமிழக்காக
· தமிழ் மக்களுக்காக
· இலங்கைத் தமிழர்களுக்காக
· சமூக நீதிக்காக
· பெண்ணடிமையை வேறோடு அழிப்பதற்காக
· வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காப்பதற்காக
· சமச்சீர் கல்விக்காக
· அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைப்பதற்காக
· மது என்ற சமூக சீர்க்கேட்டை ஒழிப்பதற்காக
· இடஒதுக்கீடு கொள்கைக்காக
· நதிநீர் கொள்கைக்காக
· நீதித்துறையில் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக
· மண்ணின் மணம் மாறாமல் கலை, கலாச்சாரம் வளர்வதற்காக
· திரைப்பட மோகத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் வாழ்க்கையின் வெளிச்சத்திற்கு வருவதற்காக

இப்படி, மருத்துவர் அய்யா ஆற்றிவரும், பணிகள், சேவைகள் கணக்கில் அடங்காதது.

மருத்துவர் அய்யா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார் என்றால்,  அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, மது பழக்கத்தால், இளம் தலைமுறை அழிந்து வருவதை சுட்டிக் காட்டாமல் இருப்பதில்லை. 

அவர் வெளியிடும் எந்த அறிக்கையாக இருந்தாலும், அதில் தமிழகத்தில் இருந்து மதுவை விட்டு விரட்ட வேண்டும் என்று குறிப்பிட தவறுவதில்லை.

மதுவினால் இளம் பெண்கள் விதவைகளாக மாறி வருவதை கண்டு வேதனை அடையும் மருத்துவர் அய்யா, அதற்காக பெண்களை திரட்டி மாநிலம் முழுவதும் தனி போராட்டமே நடத்தினார்.

இன்றும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

பள்ளிக்கூடங்கள், வழிப்பாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகே அரசு மதுக்கடைகளை திறந்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் மருத்துவர் ராமதாஸ், அக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என பல போராடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என பல கட்சிகள் குரல் கொடுத்தாலும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறார்.

மதுப்பழக்கம் மிக கொடுமையான பழக்கம்.

குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.

இதனால்தான் மது அருந்த இஸ்லாத்தில் அதற்கு அனுமதியில்லை.

மதுக் கொடுமையை சுட்டிக் காட்டும்  இஸ்லாமிய அமைப்புகள்,  மதுவை ஒழிக்க குரல் கொடுத்தாலும்,  அந்த அமைப்புகளால் ஏனோ பல காரணங்களால், வீதிக்கு வந்து தொடர்ந்து போராட முடிவதில்லை. 

ஆனால், மதுக் கொடுமையால் ஏற்படும் தீமைகளை புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்களுடன் ஒவ்வொரு நாளும், அரசின் முன் வைத்துக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அய்யா.

மது விற்பனை மூலம் அரசுக்கு கோடி கோடியாக வருவாய் கிடைத்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளால், அரசுக்கு கிடைக்கும் வருவாய்க்கு அதிகமாக,  செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதையும் மருத்துவர் அய்யா சுட்டிக் காட்ட தவறுவதில்லை.



தமிழகம் குடிகார நாடாக மாறி வருகிறது என்பதை வேதனையுடன் குமறும் மருத்துவர் அய்யா, பூரண மது விலக்கு கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனை தருகிறார்.

இளைஞர் சமூதாயம் மதுவினால் சீரழிந்து போய், சின்னபின்னமாகி கிடப்பதை அவர் மனம் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை, ஆணித்தரமாக முழங்கும் மருத்துவர் அய்யா, மதுக்கடைகள் முன்பு அவர்கள் வரிசையாக நின்று, தங்களது வாழ்க்கை வீணடிப்பது சரியா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

திண்டுக்கல்லில், பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு வீதியில் விழுந்து கிடந்த தலைமை காவலர், தனது சக அதிகாரியுடன் அடித்து சண்டையிட்ட காட்சியை மக்கள் தொலைக்காட்சியில் கண்ட அய்யா, அடைந்த வேதனையை  சொல்லி மாளாது.

திண்டுக்கல்லில் மட்டுமல்ல, சென்னையிலும் இதேபோன்று, காவல் பணியில் இருக்கும் காவலர்கள் இருவர், மது அருந்திவிட்டு, வீதியில் விளையாடியது பலரை முகம் சுளிக்க வைத்தது. 

இப்படி பணியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், மீசை முளைக்காத இளைஞர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு ஆளாக்கி வருவது சரியா என்றும் வினா எழுப்புகிறார் மருத்துவர் அய்யா.

இதற்கு அரசே மதுக்கடைகள் நடத்துவதுதான் முக்கிய காரணம் என்றும் இதற்கு அரசே பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளே மதுவின் தீமைகள் குடி புகுந்து விட்டதற்கு  அரசே காரணம் என்பது அய்யாவின் குற்றச்சாட்டு.

தீமைகளுக்கு ஆணிவேராக இருக்கும் மதுவை ஒழிக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும் அவர் வினா எழுப்புகிறார்.


மது இல்லாத தமிழக மாநிலம் எப்படி இருக்கும்.

அய்யாவின் கற்பனையில் அமைதியான, ஆறுதலான தமிழகம் வந்து செல்கிறது.

பெண்கள் வீட்டில் மகிழ்ச்சியுடன் வசிப்பார்கள். 
ஒவ்வொரு நாளும், குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு கணவன்அடித்து உதைக்கும் காட்சிகள், வீட்டில் நடக்காது. 
கணவன் மனைவி சண்டை இல்லாததால், வீட்டில் குழந்தைகளின் அழுகைக்குரல் இருக்காது.
வீட்டில். வேதனை இல்லை. எப்போதும் அமைதி. குதுகலம்.
மதுவிற்கு செலவழிக்கும் காசு, வீட்டின் நலனுக்கு செலவாகும்.
குழந்தைகளின் படிப்புகளுக்கு செலவாகும். 
நல்ல ஆரோக்கியமான உடல்நலத்திற்கு செலவாகும். 

இதுயெல்லாம், மது இல்லாத தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் காண கிடைக்கும் கண்கொள்ளக் காட்சிகள்.

இப்படிப்பட்ட தமிழகத்தைதான் அய்யா விரும்புகிறார்.

தமிழகம் அமைதி பூங்காவாக விளங்க வேண்டும்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது மதுவை ஒழிப்பதுதான்.
இதற்காகதான், மதுவிற்கு எதிராக அய்யா நாள்தோறும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 



முழுமையான மது விலக்கு நடைமுறைக்கு வரும்வரை அய்யா ஓயாப்போவதில்லை.

மதுவிற்கு அடுத்தப்படியாக அய்யா அதிகம் முழக்கமிடுவது, குரல் கொடுப்பது, அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகதான்.

தமிழகத்தில் பிறந்த அனைவரும் கட்டாயம் நல்ல கல்வியை கற்க வேண்டும்.

கல்வி கற்பது அனைவரின் அடிப்படை கடமை.

அனைவரும் கட்டாயம் கல்வி பெற வேண்டுமானால், தற்போதுள்ள, கல்வி முறைகள், சூழ்நிலைகள் மாற வேண்டும்.

அரசாங்கமே, அனைவருக்கும் இலவச கல்வியை அளிக்க முன்வர வேண்டும்.

தரமான கல்வி
இலவச கல்வி
சமச்சீர் கல்வி

ஒரு பைசா கூட செலவழிக்காமல்,  அனைத்து தரப்பு மக்களும் தரமான கல்வியை பெற வேண்டும்.

அதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.

தற்போது, கல்வி வணிகமாக மாறிவிட்டதால், ஏழைகளுக்கு தரமான  நல்ல கல்வி கிடைப்பதில்லை.

நல்ல கல்வியை பெறும் உரிமைகள் ஏழை மக்களுக்கு  மறுக்கப்படுகின்றன.

பணம் உள்ளவன், கோடிகளை செலவு செய்து, நல்ல உயர்கல்வியை பெற்று விடுகின்றான்.

ஆனால், நன்கு படித்தும், ஏழைக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை. 
இது நியாயமா ?

அய்யா இப்படி கேள்வி எழுப்புகிறார். அய்யாவின் கேள்வியில் உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது.

அனைவருக்கும் தரமான கல்வி, இலவச கல்வி கிடைத்து விட்டால், தமிழகம் எப்படி இருக்கும்.

அறிவாளிகளின் சொர்க்கப் பூமியாக அல்லவா தமிழகம் காட்சி அளிக்கும்.
தமிழக இளம்  அறிவாளிகளை தேடி, நாடி, உலகம் ஓடோடி  வரும்.

அய்யாவின் ஆசையில், கனவில் ஆர்த்தம் உள்ளது. உண்மை உள்ளது. நியாயம் உள்ளது.

கடும் போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி நடைமுறையில்  வந்து இருக்கிறது.

இதற்கு முழு காரணம் யார் ?

மருத்துவர் அய்யாவை தவிர வேறு யாருமே இல்லை.

இப்படிதான் சொல்லியாக வேண்டும்.

காரணம். சமச்சீர் கல்விக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவர்  மருத்துவர் அய்யா மட்டுமே.

மருத்துவர் அய்யாவின் முயற்சியால்தான், கடந்த ஆண்டு தி.மு.க. அரசு ஒன்று மற்றும் ஆறாவது வகுப்புகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு,  சமச்சீர் கல்வி திட்டத்தை இந்தாண்டு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என  அறிவித்த மறு வினாடியே கண்டனம் தெரிவித்த முதல் தலைவர்  மருத்துவர் அய்யாதான்.

சமச்சீர் கல்வி விவகாரம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல நிலைகளை கடந்து, தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.



இதற்கு அய்யா ஆற்றிய பணிகள் ஏராளம்.

சமச்சீர் கல்வி முறையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நாம் படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம்.

முதலில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதுதான் நமது இலக்கு.
இப்படி சொல்லி அந்த  இலக்கை மருத்துவர் அய்யா தற்போது அடைந்து விட்டார்.

பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு, சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது அய்யாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைத்த வெற்றி.

இடஒதுக்கீடு.

அய்யாவின் முழக்கங்களில் மிகவும் முக்கியமானது இடஒதுக்கீடு.

கல்வி, வேலைவாய்ப்புகளில்,  பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை  கொடுத்து விடுங்கள் என்பதுதான் அய்யாவின் கோரிக்கை.

அனைத்தரப்பு மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளியுங்கள்.
அதற்காக, சாதிவாரிக் கணக்கெடுப்பை உண்மையாக,  நேர்மையாக நடந்துங்கள் என்கிறார் அய்யா.

இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் மக்கள்தான். அவர்களுக்கும் நல்ல கல்வியை, தரமான கல்வியை அளிப்பது அரசின் கடமை.

இஸ்லாமியர்களுக்கும் அவர்களின் மக்கள் தொகை விழுக்காட்டின்படி இடஒதுக்கீட்டு அளவை ஒதுக்குங்கள்.

இப்படி இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீட்டிற்கு உரிமையோடு குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர் மருத்துவர் அய்யா.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்களுக்கு 3 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்றால், அதற்கு மருத்துவர் அய்யாவும் ஒரு முக்கிய காரணம்.



இதை இஸ்லாமியர்களும் மறக்கவில்லை. நன்றி மறந்து விடவில்லை.

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்கள் நடத்தும் மாநாடு, கருத்தரங்கள் எதுவாக இருந்தாலும் சரி, ஏன், பா.ம.க. நடத்தும் உரிமை மாநாடுகளிலும், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்காக,  அய்யா குரல் கொடுக்க தவறுவதே இல்லை..

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமஅளவு ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் எது பிரச்சனை.

தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் அல்லவா.

இந்த வரதட்சணை கொடுமை இருக்கிறதே, அதனால் பெண்கள் படும் இன்னல்கள் இருக்கிறதே.

அப்பப்பா, அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.

இதற்கு முழுமையான  தீர்வு காண வேண்டும் என்கிறார் மருத்துவர் அய்யா.

பெண்ணடிமையை வேறோடு அறுத்து எரிய வேண்டும் என்பது அய்யாவின் கனவு.

வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்வு சின்னபின்னமாகி போய் விடுகிறது. 

பல பெண்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறிவிடுகிறது.

எனவேதான்,  பெண்ணடிமைக்கு எதிராக மருத்தவர் அய்யா தொடர்ந்து போராடி வருகிறார்.

இது மிகப் பெரிய போராட்டம்.

இந்த போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், எதிர்காலத்தில் பெண்ணடிமை கொடுமை முற்றிலும் ஒழிந்து விடும்.

பெண்கள் அமைதியாக வாழுவார்கள்.

எல்லாம் அய்யாவின் முயற்சிகள்தான் காரணம்.



மது ஒழிப்பு.
சமச்சீர் கல்வி.
இடஒதுக்கீடு.
பெண்ணடிமை ஒழிப்பு.

இதற்கெல்லாம் அய்யா குரல் கொடுப்பது இருக்கட்டும்.

மருத்துவர் அய்யா உனக்கு என்ன செய்தார் ? அதை முதலில் சொல்லுப்பா.
இப்படி பலர் கேள்வியை எழுப்பலாம். 

என் வாழ்க்கையின் இறுதி காலம் வரை மறக்க முடியாத தலைவர்களில்  ஒருவர் மருத்துவர் அய்யா.

காரணம் பல உண்டு.

ஆனால் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியின் ஊழியன் நான்.

ஊழியன் என்று சொல்வதைவிட குடும்ப உறுப்பினர். இப்படிதான் மக்கள் தொலைக்காட்சியின் ஊழியர்களை அய்யா அழைப்பது வழக்கம்.

ஒரு குடும்பமாக நாங்கள் வாழ்கிறோம்.

இப்படி குடும்பமாக வாழும் எங்களின் இன்பம், துன்பம் ஆகியவற்றில் அய்யாவும் பங்கேற்று கொள்கிறார்.



சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் நான், கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு, 10 மணி.  வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

பணியை தொடங்கும் முன்பு, தேநீரை அருந்தினால் நன்றாக இருக்கும் என மனம் விரும்பியது.

அதனால், தேநீர் அருந்தி வர அலுவலகத்தில் இருந்த கேண்டீனுக்குச் சென்றேன்.

கேண்டீன் தரையில் சாம்பார் கொட்டிக் கிடந்தது.

என்னப்பா இது, இப்படி சாம்பார் கொட்டிக் கிடக்கிறதே, யாராவது வழுக்கி விழுந்தால் என்ன ஆவது என்று அங்கிருந்த ஊழியனிடம் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றேன்.

தேநீர் வாங்கி அருந்தினேன்.

களைப்பு தீர்ந்தது. சரி பணி தொடங்கலாம் என நினைத்து திரும்பியபோது, என்னையும் அறியாமல் சாம்பாரில் காலை வைத்து விட்டேன்.
அவ்வளவுதான்.

வழுக்கி  தரையில் விழுந்துவிட்டேன்.

எழ முயற்சி செய்தபோதுதான், விஷயம் மெல்ல புரிந்தது.

எனது வலது கால் முட்டி எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு, எழ முடியாமல் போனது.

கத்தினேன்.

உடனே ஓடோடி உதவிக்கு வந்தார்கள் என்னுடன் பணியில் இருந்த சகோதரர்கள் விஜய்தேவ், சக்திவேல் ஆகிய இருவரும்.

மற்றொரு ஊழியர் சங்கரப்பாண்டியன் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

என்னை தூக்கிச் சென்று, மக்கள் தொலைக்காட்சியின் ஊர்தியில் அமர வைத்தார்கள். 

இரவு நேர செய்திச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஜெயக்குமாருக்கு போனில் விஷயம் பறந்தது. அவரும் உடனே அலுவலகம் திரும்பினார்.

அனைவரும் கலந்து பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என்னை முதலில் அழைத்துச் சென்றார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எனக்கு முதலுதவி செய்யப்பட்டது.

காலில் கட்டு கட்டப்பட்டது.

பிறகு என்னை, என்னுடைய அறைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மறுநாள் காலை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதன்மைச் செய்தி ஆசிரியர் கோமல் அன்பரசன், இணையாசிரியர்கள் பாஸ்கர் சந்திரன், மணிமாறன் ஆகியோர், என் அறைக்கு  வந்து என்னை பார்த்துச் சென்றார்கள்.

கவலைப்பட வேண்டும் என்றார்கள்.

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் எல்லா உதவிகளையும் செய்யும் என்று நம்பிக்கை ஊட்டினார்கள். .

சொன்னப்படி, எனக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மருத்துவர் அய்யா ஆணையிட்டார்.



எல்லாவற்றிற்கும் மேலாக அய்யாவின் ஒரு செயல் என் கண்களில்
ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

ஆம்.

என் வலது கால் முட்டி எலும்பு முறிவுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதுதான் சரி என எலும்பு முறிவு சிகிக்சை மருத்துவர் நல்லி யுவராஜ் ஆலோசனை தெரிவித்து இருந்தார்.

மருத்துவர் நல்லி யுவராஜின் ஆலோசனைப்படி எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

எல்லாம் மருத்துவர் அய்யாவின் செலவில்தான்.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பு, டாக்டர் நல்லி யுவராஜை செல்பேசியில் தொடர்பு கொண்ட மருத்துவர் அய்யா, தம்பி அஜீசுக்கு நல்ல சிகிச்சை அளியுங்கள். அறுவைச் சிகிச்சையை  வெற்றிகரமாக முடியுங்கள் என அன்பு கட்டளையிட்டார்.

இந்த செய்தியை டாக்டர் நல்லி யுவராஜ் என்னிடம் சொன்னபோது, என் கண்களில் ஆனந்த கண்ணீர்.

மக்கள் தொலைக்காட்சியில் நான் ஒரு சாதாரண ஊழியன். அவ்வளவுதான்.

ஆனால், மக்கள் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் நமது குடும்ப உறுப்பினர்கள் என்ற வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல், தன் செயலின் மூலம் அய்யா செய்துக் காட்டினார்.

வாழும் தலைவர்களில் மருத்துவர் அய்யா ஒரு மகான்.



அரசியலில் அவரது நிலைபாடு வேறுவிதமாக இருக்கலாம். சிலருக்குபிடிக்காமல் போகலாம்.

ஆனால், சமூக நீதிக்காக அவர் செய்து வரும் பணிகள் மகத்தானவை.

இவை தமிழகம் மறக்க முடியாதவை.

ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்.

மருத்துவர் அய்யாவை வசைப்பாடியவர்கள், திட்டியவர்கள் இன்று அவரால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர் பதவிகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் அன்புடன் பழகும் குணம்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற விருப்பம்.

இதுதான் மருத்துவர் அய்யா.

இதனால்தான், என்னை கவர்ந்த இனிய தலைவர்களில்,  சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் மருத்துவர் அய்யா முக்கியமானவர்.

அய்யாவின் பிறந்த நாள் ஜுலை 25.  அதையொட்டி இந்த கட்டுரை எழுதப்பட்டது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, July 10, 2011

மியாவ்



வாடா  மியாவ்.

இப்படிதான், என் செல்லப் பூனை குட்டியை  நான் அழைப்பது வழக்கம்.

வீட்டில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால், என்ன செய்வது என்று விழி பிதுங்கியபோது, பூனை ஞாபகம் வந்தது.

பூனையை வளர்த்தால், எலிகள் காணாமல் போய்விடும் என நண்பர் ஒருவர் ஆலோசனை சொல்ல, பூனைக்காக தேடி அலைந்தேன்.

அப்போதுதான், பக்கத்து வீட்டில், பெண் பூனை ஒன்று அழகான 6 குட்டிகளை ஈன்றது காதில் விழுந்தது. அந்த வீட்டிற்கு சென்று,  அதில் இருந்து ஒரு  அழகான பூனை குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

பூனை குட்டியை பார்த்ததும், வீட்டில் குழந்தைகள் எலலாருக்கும் புதிய குதூகலம் பிறந்தது. பூனைக்குட்டியை ஆசையுடனும் அன்புடனும் தடவி மகிழ்ந்தனர் குழந்தைகள்.

புதிய வரவு பூனைக்குட்டிக்கு வீட்டில் ராஜமரியாதை கிடைத்தது.

சிறிய தட்டு ஒன்று ஏற்பாடு செய்து, அதில் பூனைக்குட்டிகாகவே, ஸ்பெஷல் பாலை ஊற்றி வைத்தோம்.

பாலை கண்டதும், பூனைக்குட்டி ஓடோடி வந்து அருந்தி மகிழ்ந்தது. இந்த காட்சி மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.

இப்படிதான், என்னுடைய செல்லப் பூனையுடனான தொடர்பு எனக்குள் வளர்ந்தது.

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும், முதலில் நான் கேட்பது, பூனைக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தீர்களா என்றுதான்.

நான் வீட்டிற்கு வரும் செய்தியை எப்படியோ அறிந்து, வாசற்படிக்கு ஓடோடி வந்து  என்னை வரவேற்கும் என்னுடைய செல்ல மியாவ்.



நான் மட்டுமல்ல, வீட்டில் உள்ள அனைவரும் பூனைக்குட்டிக்கு வைத்த பெயர் மியாவ்தான்.

இப்படி மியாவ் என்று நாங்கள் அன்புடன் அழைத்து பாசத்துடன் வளர்த்த பூனை,  குட்டியில் இருந்து மௌள மௌள, வளர்ச்சியை நோக்கிச் சென்றது.
அதற்கு ஏற்றாற்போல், அதற்கு மாமிச உணவுகளும் அளித்தோம்.

வீட்டின் மிக முக்கிய அங்கத்தினர்களில் ஒன்றாக வளர்ந்த எங்கள் மியாவ், எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு ஜீவன்.

வீட்டில் எலித் தொல்லைகள் தீர்ந்ததோ இல்லையோ, பூனைக்குட்டி மீதான அன்பு மட்டும் குறையவேயில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்.

வாசல்வரை ஓடோடி வந்து, என்னை வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் என்னுடைய செல்ல மியாவ் இன்று எங்களுடன் இல்லை.

குளிருக்கு போர்வையை போர்த்திக் கொண்டு எனது கட்டிலில் அலாதியான உறக்கத்தை போடும் மியாவ் இன்று உயிருடன் இல்லை.

என் மீதும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பை வாரிப் பொழிந்த என் அன்பு மியாவ்,  இன்று எங்களுடன் இல்லாதது, எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

மியாவ்விற்கு நாங்கள் அப்படி ஒன்றும் மிகப் பெரிய நன்மையை செய்து விடவில்லை.

ஆசையுடன் வளர்த்தோம். பாசத்துடன் பாலை ஊற்றினோம்.

பசிக்கு உணவாக சிறிது மாமிசத்தை அளித்தோம்.
அவ்வளவுதான். இந்த சிறிய செயலுக்காக, மியாவ் எங்கள் மீது செலுத்தி அன்பு அளவிட முடியாதது.



இப்படிப்பட்ட அன்பை, அந்த வாயில்லா ஜீவன் எங்கள் மீது செலுத்தியது, எங்கள் நினைவுகளில் இருந்து  எப்படி நீங்க முடியும். 

வழக்கம் போன்று, ஒருநாள் இரவு திடீரென, வெளியே சென்ற மியாவ், இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவே இல்லை.

என்ன ஆயிற்று என கவலையில் நாங்கள் பல இடங்களில் தேடினோம். வெளியே சென்றாலும் எப்படியும் வீடு வந்துவிடும் மியாவ், இரண்டு நாட்களாக வராதது எங்களை கவலையில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிலையில்தான், வீட்டின் வாசற்படியில் மியாவ்வின் சத்தம் கேட்டது. ஓடோடி சென்று  கதவை திறந்து பார்த்தபோது, பலத்த தீ காயத்துடன், மியாவ் துடித்துக் கொண்டிருந்தான்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வெளியே சென்ற மியாவ், எங்கேயோ நடந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டது புரிந்தது.

என் செல்ல மியாவ் தீக் காயங்களுடன் துடித்த காட்சியை கண்டபோது,  அந்த வேதனையை நானே அனுபவிப்பது போன்று இருந்தது. என் கண்களில்  தானாகவே கண்ணீர் அலை அலையாக கொட்டியது.

உடனே, மியாவை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ,  தேவையான மருத்துவ உதவிகள் செய்தோம்.

இப்படி இரண்டு நாட்கள் தொடர்ச்சி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களிலும், மியாவ் எதையும் சாப்பிடவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் காலையில் வழக்கம்போல், நான் அலுவலகத்திற்கு பணிக்கு கிளம்பியபோது, மியாவை பார்த்தேன்.  அதன் தலையை ஆறுதலாக கைகளால் தடவி விட்டேன்.



பின்னர் பணிக்கு சென்று வீட்டேன்.

இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியபோது, ஓர் அதிர்ச்சி செய்தி எனக்காக காத்திருந்தது.

வீடு அமைதியாக இருந்தது.

ஆம்.

நான் ஆசை ஆசையாக, செல்லமாக வளர்த்த என் மியாவ்,  சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டது.

வீட்டில் அனைவரும் அமைதியாக இருந்தனர். 

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் உறங்கிக் கொண்டிருந்தது.
குழந்தைகள் முகத்தில் சோகம்.

மியாவ்வின் இறுதி நேரம்.

அது எனக்காக, என் வருகைக்காக காத்திருந்தது என்ற செய்தி வீட்டில் என் தாயார்  சொன்னபோது, எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

என்ன ஒரு பாசம்.

அந்த செல்ல பிராணிக்கு நான் அப்படி ஒன்றும் செய்துவிடவில்லை.

கொஞ்சம் பால். கொஞ்சம் மாமிசம் இதுதான் அளித்தேன்.

அவ்வவ்போது, பாசத்துடன் அதன் தலையை தடவி விட்டேன். அவ்வளவுதான்.

இதற்கு போய், இப்படி ஒரு அன்பை தன்னுடைய இறுதி நேரத்திலும், மியாவ் என் மீது செலுத்தியதை அறிந்து என் கண்கள் கலங்கின. .

மியாவ்வை வீட்டில் இருந்த தோட்டத்தில் குழித் தோண்டி புதைத்தோம்.

அன்றிரவு வீட்டில் யாருமே உணவு சாப்பிடவில்லை.
காரணம். வீட்டில் ஒரு அங்கத்தினர் குறைந்தால், உணவு பக்கம் யாருடைய கவனமும் செல்லவில்லை.

ஒருநாள் இல்லை, பல நாட்கள் எங்கள் மன பாரம் குறையவேயில்லை.

இப்போது நினைத்தாலும், மியாவ்வின் சேட்டைகள்  என் மனக்கண் முன்பு வந்து செல்கின்றன. அது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

அது,  துள்ளி விளையாடிய காட்சிகள் எங்கள் கண்களுக்கு முன்னால் வந்து செல்லும்போது, சோகம் கரைந்து போய் விடுகிறது. 




மரணத்திற்கு  பிறகும்  ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் உண்டு.

அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு.

அதனால்தான், என் செல்ல மியாவ்மிற்கும் சொர்க்கத்தில் இடம்  கிடைக்க வேண்டும் என்று நான் நாள் நாள்தோறும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது உண்டு.

என் வாழ்க்கையில் மறக்க முடியாது ஒரு ஜீவன் என் செல்லப்பூனை மியாவ்.

அதற்கு சொர்க்கத்தில் இடம் கிடைப்பது உறுதி.
காரணம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதர்கள் மீது அன்பை செலுத்திய வாயில்லா ஜீவனை இறைவன் நிச்சயம் விரும்புவான்.

சொர்க்கத்தில் இடம் அளிப்பான்.




ஓ, மனிதர்களே,  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனிதர்களை நேசியுங்கள்.
பாசத்துடன உலகத்தை வலம் வாருங்கள். 

என் மியாவ் என் மீது செலுத்திய உண்மையான அன்பைபோல்.

அப்போது நிச்சயம் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி துள்ளி விளையாடும்.

இப்படி எனக்கு நானே சொல்லிக் கொள்வது உண்டு.
என்ன மியாவ், உண்மைதானோ.

உன் மூலம் நல்ல ஒரு செய்தியை உலகிற்கு சொல்லி விட்டேன்.

அதற்காக உனக்கு என்னுடைய நன்றிகள்.

மியாவ்,  உனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு. என் மீது நீ செலுத்திய உண்மையான அன்பிற்காக அல்ல.

மனிதர்களிடம் எப்படி உண்மையான அன்பை செலுத்த வேண்டும் என்பதை உன் செயல்களின் மூலம் நீ நிரூபித்ததற்காக.

மனிதர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உன் செயல்களின் மூலம் நீ காட்டியதற்காக.

மியாவ்.... மியாவ்....மியாவ்... நீ. என் இறுதி காலம் உள்ள வரை மறக்க முடியாது ஓர் வாயில்லா ஜீவன்.

வாழ்க்கையின் தத்துவங்களை மிக எளிதாக சொல்லித்தந்த ஜீவன்,  என் மியாவ்.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, July 5, 2011

இணையதள அடிமை -  அதிர்ச்சி  தகவல் :
கோடி நன்மைகளை வாரி வழங்கும் இணையதளங்களுக்கு எளிதில் அடிமையாகும் போக்கு இளைஞர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களால், குடும்ப உறவுகள் சீர்குலைந்து,  மன நோய்க்கும். ஆளாகும் நிலை உருவாகிறது.  இது குறித்த ஓர் அதிர்ச்சி செய்தித் தொகுப்பு.

வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டு பதிவு! வெளிநாட்டு  நண்பர்களுடன் உரையாடல்!! கை நுனியில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள்!!! இப்படி, கோடி நன்மைகளை வாரி வழங்குகின்றன நவீன இணையதளங்கள். இது மட்டுமல்லாமல், கணினி விளையாட்டு முதல், புதிய தொழில்நுட்பம் வரை,  பல தகவல்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் தன்வசமாக்கியுள்ளது இணையதளம்.

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் என்ற நிலை மாறி தற்போது இணையதளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. மடிக்கணினி, கைப்பேசியில் இணையதளம்  என்ற நவீன  தொழில் நுட்ப வளர்ச்சி, இளைஞர்களை சுண்டி இழுத்து பல மணி நேரம் இணையதளத்திலேயே மூழ்கச் செய்கிறது.  இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பு குறைந்து, உறவுகள் சீர்குலைந்து போக இணையதளம் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

இணையதளங்களின் வசதியால் கவரப்பட்ட இளைஞர்கள், தற்போது அதற்கு அடிமையாகி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவர்,  அண்மையில் நடத்திய ஆய்வில், உலக அளவில் 20 விழுக்காட்டினர் இணையதளங்களுக்கு அடிமையாகிய இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீடித்தால் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படும் என மனநல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்ற பொனமொழியை மனதில் ஏற்றிக் கொண்டு இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே, இணையதள பலன்களை அனுபவித்து, மிகப் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். 



அப்துல் அஜீஸ்

Monday, July 4, 2011

மின்கலன் ஊர்தி - மக்கள் ஆர்வம்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் அடிக்கடி உயர்ந்து வருவதால், பொதுமக்களின் கவனம்,  ஈ-பைக் எனப்படும் மின்கலன் ஊர்திகள் பக்கம் திரும்பியுள்ளது. மின்சாரத்தால் இயங்கும் இந்த ஊர்திகள், செலவை மிச்சப்படுத்துவதுடன், தேவையையும் நிறைவு செய்கின்றன.

விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் விலைகள் ! திகைக்கும் பொதுமக்கள்!! பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு,  இரு சக்கர ஊர்திகள் மூலம், அலுவலகம் செல்பவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பெட்ரோல், டீசல்காகவே, தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை, செலவழிக்க வேண்டிய கட்டாயம் பெரும்பாலான ஊர்தி ஓட்டிகளுக்கு  ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவுதான் என்ன என்ற கேள்வி எழுந்தநிலையில் அதற்கு விடை காண வந்துள்ளதுதான்,  ஈ-பைக் எனப்படும் மின்கலன் ஊர்தி.

மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் மின்கலன் ஊர்திகள்,  நீண்ட பயணம் செய்வதற்கும்  பயன்படுவதால், அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நவீன தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த மின்கலன் ஊர்திகளின்  விலைகளும் நடுத்தர மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு இருக்கின்றன.
புகையை கக்காமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, மின்கலன் ஊர்திகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அரசு மானியத்தை வழங்குவதால்,  இரு சக்கர ஊர்தி தயாரிப்பு நிறுவனங்கள், மின்கலன் ஊர்திகளை அதிகம்  தயாரிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதையடுத்து,  சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இந்த நவீன  ஊர்திகள் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.



சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மின்கலன் ஊர்திகள் மீது மக்களின் பார்வை ஏனோ சொல்லவில்லை. தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சாலைகளில் மின்கலன் ஊர்திகள் அதிகம் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
   
 அப்துல் அஜீஸ்

Sunday, July 3, 2011

படித்தது பயன் உள்ளது

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..மலைத்தேன்.. காட்டுத்தேன்...
அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்...
நோயை விரட்டும் தேன்...
தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..
பாடும்போதே நாவினிக்கிறதல்லவா?
ஆம்!
''தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும்.
தேனால் நாம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும்''.
அப்படி என்ன விசேஷம் தேனில் என்று கேட்கிறீர்களா?!
தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் சுத்தமான தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், எந்த வியாதியும் நமக்கு வராது.
உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள்.
மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.



படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.
 நூற்றிருபது (120 ) கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.
 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை,
அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள்,
இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள்,
இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி,
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல்,
மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு,
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள்,
ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.
ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.


காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.
 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.
இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும்.
ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும்.
மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

S.A.ABDUL AZEEZ