Sunday, July 24, 2011

மருத்துவர் அய்யா !


இப்படிதான் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாஸ் அவர்களை நாங்கள் அழைப்பது வழக்கம்.

சமூக நீதிப் போராளி ! தமிழ் குடித்தாங்கி !! 

என  பல அடை மொழிகளில் தமிழக மக்களால் மருத்துவர் ராமதாஸ் மரியாதையுடன் அழைக்கப்பட்டாலும்,  அவரை மருத்துவர் அய்யா என்று அழைக்கும்போது, ஒரு அன்னோன்னியம் பிறக்கும்.

அவரை அய்யா,  என்று அழைக்கும்போது,  எங்கள் உள்ளத்தில் தனி சுகம் கிடைக்கும்.  

மருத்துவரை,  நாங்கள் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இப்போது அய்யா என்றே அழைக்க தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் அனைத்தையும் பெற்று  இன்பமாக,  மகிச்சியாக வாழ வேண்டும் என்பது மருத்துவர் அய்யாவின் கொள்கை.

· தமிழக்காக
· தமிழ் மக்களுக்காக
· இலங்கைத் தமிழர்களுக்காக
· சமூக நீதிக்காக
· பெண்ணடிமையை வேறோடு அழிப்பதற்காக
· வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காப்பதற்காக
· சமச்சீர் கல்விக்காக
· அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைப்பதற்காக
· மது என்ற சமூக சீர்க்கேட்டை ஒழிப்பதற்காக
· இடஒதுக்கீடு கொள்கைக்காக
· நதிநீர் கொள்கைக்காக
· நீதித்துறையில் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக
· மண்ணின் மணம் மாறாமல் கலை, கலாச்சாரம் வளர்வதற்காக
· திரைப்பட மோகத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் வாழ்க்கையின் வெளிச்சத்திற்கு வருவதற்காக

இப்படி, மருத்துவர் அய்யா ஆற்றிவரும், பணிகள், சேவைகள் கணக்கில் அடங்காதது.

மருத்துவர் அய்யா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார் என்றால்,  அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, மது பழக்கத்தால், இளம் தலைமுறை அழிந்து வருவதை சுட்டிக் காட்டாமல் இருப்பதில்லை. 

அவர் வெளியிடும் எந்த அறிக்கையாக இருந்தாலும், அதில் தமிழகத்தில் இருந்து மதுவை விட்டு விரட்ட வேண்டும் என்று குறிப்பிட தவறுவதில்லை.

மதுவினால் இளம் பெண்கள் விதவைகளாக மாறி வருவதை கண்டு வேதனை அடையும் மருத்துவர் அய்யா, அதற்காக பெண்களை திரட்டி மாநிலம் முழுவதும் தனி போராட்டமே நடத்தினார்.

இன்றும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

பள்ளிக்கூடங்கள், வழிப்பாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகே அரசு மதுக்கடைகளை திறந்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் மருத்துவர் ராமதாஸ், அக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என பல போராடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என பல கட்சிகள் குரல் கொடுத்தாலும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறார்.

மதுப்பழக்கம் மிக கொடுமையான பழக்கம்.

குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.

இதனால்தான் மது அருந்த இஸ்லாத்தில் அதற்கு அனுமதியில்லை.

மதுக் கொடுமையை சுட்டிக் காட்டும்  இஸ்லாமிய அமைப்புகள்,  மதுவை ஒழிக்க குரல் கொடுத்தாலும்,  அந்த அமைப்புகளால் ஏனோ பல காரணங்களால், வீதிக்கு வந்து தொடர்ந்து போராட முடிவதில்லை. 

ஆனால், மதுக் கொடுமையால் ஏற்படும் தீமைகளை புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்களுடன் ஒவ்வொரு நாளும், அரசின் முன் வைத்துக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அய்யா.

மது விற்பனை மூலம் அரசுக்கு கோடி கோடியாக வருவாய் கிடைத்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளால், அரசுக்கு கிடைக்கும் வருவாய்க்கு அதிகமாக,  செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதையும் மருத்துவர் அய்யா சுட்டிக் காட்ட தவறுவதில்லை.



தமிழகம் குடிகார நாடாக மாறி வருகிறது என்பதை வேதனையுடன் குமறும் மருத்துவர் அய்யா, பூரண மது விலக்கு கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனை தருகிறார்.

இளைஞர் சமூதாயம் மதுவினால் சீரழிந்து போய், சின்னபின்னமாகி கிடப்பதை அவர் மனம் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை, ஆணித்தரமாக முழங்கும் மருத்துவர் அய்யா, மதுக்கடைகள் முன்பு அவர்கள் வரிசையாக நின்று, தங்களது வாழ்க்கை வீணடிப்பது சரியா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

திண்டுக்கல்லில், பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு வீதியில் விழுந்து கிடந்த தலைமை காவலர், தனது சக அதிகாரியுடன் அடித்து சண்டையிட்ட காட்சியை மக்கள் தொலைக்காட்சியில் கண்ட அய்யா, அடைந்த வேதனையை  சொல்லி மாளாது.

திண்டுக்கல்லில் மட்டுமல்ல, சென்னையிலும் இதேபோன்று, காவல் பணியில் இருக்கும் காவலர்கள் இருவர், மது அருந்திவிட்டு, வீதியில் விளையாடியது பலரை முகம் சுளிக்க வைத்தது. 

இப்படி பணியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், மீசை முளைக்காத இளைஞர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு ஆளாக்கி வருவது சரியா என்றும் வினா எழுப்புகிறார் மருத்துவர் அய்யா.

இதற்கு அரசே மதுக்கடைகள் நடத்துவதுதான் முக்கிய காரணம் என்றும் இதற்கு அரசே பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளே மதுவின் தீமைகள் குடி புகுந்து விட்டதற்கு  அரசே காரணம் என்பது அய்யாவின் குற்றச்சாட்டு.

தீமைகளுக்கு ஆணிவேராக இருக்கும் மதுவை ஒழிக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும் அவர் வினா எழுப்புகிறார்.


மது இல்லாத தமிழக மாநிலம் எப்படி இருக்கும்.

அய்யாவின் கற்பனையில் அமைதியான, ஆறுதலான தமிழகம் வந்து செல்கிறது.

பெண்கள் வீட்டில் மகிழ்ச்சியுடன் வசிப்பார்கள். 
ஒவ்வொரு நாளும், குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு கணவன்அடித்து உதைக்கும் காட்சிகள், வீட்டில் நடக்காது. 
கணவன் மனைவி சண்டை இல்லாததால், வீட்டில் குழந்தைகளின் அழுகைக்குரல் இருக்காது.
வீட்டில். வேதனை இல்லை. எப்போதும் அமைதி. குதுகலம்.
மதுவிற்கு செலவழிக்கும் காசு, வீட்டின் நலனுக்கு செலவாகும்.
குழந்தைகளின் படிப்புகளுக்கு செலவாகும். 
நல்ல ஆரோக்கியமான உடல்நலத்திற்கு செலவாகும். 

இதுயெல்லாம், மது இல்லாத தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் காண கிடைக்கும் கண்கொள்ளக் காட்சிகள்.

இப்படிப்பட்ட தமிழகத்தைதான் அய்யா விரும்புகிறார்.

தமிழகம் அமைதி பூங்காவாக விளங்க வேண்டும்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது மதுவை ஒழிப்பதுதான்.
இதற்காகதான், மதுவிற்கு எதிராக அய்யா நாள்தோறும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 



முழுமையான மது விலக்கு நடைமுறைக்கு வரும்வரை அய்யா ஓயாப்போவதில்லை.

மதுவிற்கு அடுத்தப்படியாக அய்யா அதிகம் முழக்கமிடுவது, குரல் கொடுப்பது, அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகதான்.

தமிழகத்தில் பிறந்த அனைவரும் கட்டாயம் நல்ல கல்வியை கற்க வேண்டும்.

கல்வி கற்பது அனைவரின் அடிப்படை கடமை.

அனைவரும் கட்டாயம் கல்வி பெற வேண்டுமானால், தற்போதுள்ள, கல்வி முறைகள், சூழ்நிலைகள் மாற வேண்டும்.

அரசாங்கமே, அனைவருக்கும் இலவச கல்வியை அளிக்க முன்வர வேண்டும்.

தரமான கல்வி
இலவச கல்வி
சமச்சீர் கல்வி

ஒரு பைசா கூட செலவழிக்காமல்,  அனைத்து தரப்பு மக்களும் தரமான கல்வியை பெற வேண்டும்.

அதற்கான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.

தற்போது, கல்வி வணிகமாக மாறிவிட்டதால், ஏழைகளுக்கு தரமான  நல்ல கல்வி கிடைப்பதில்லை.

நல்ல கல்வியை பெறும் உரிமைகள் ஏழை மக்களுக்கு  மறுக்கப்படுகின்றன.

பணம் உள்ளவன், கோடிகளை செலவு செய்து, நல்ல உயர்கல்வியை பெற்று விடுகின்றான்.

ஆனால், நன்கு படித்தும், ஏழைக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை. 
இது நியாயமா ?

அய்யா இப்படி கேள்வி எழுப்புகிறார். அய்யாவின் கேள்வியில் உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது.

அனைவருக்கும் தரமான கல்வி, இலவச கல்வி கிடைத்து விட்டால், தமிழகம் எப்படி இருக்கும்.

அறிவாளிகளின் சொர்க்கப் பூமியாக அல்லவா தமிழகம் காட்சி அளிக்கும்.
தமிழக இளம்  அறிவாளிகளை தேடி, நாடி, உலகம் ஓடோடி  வரும்.

அய்யாவின் ஆசையில், கனவில் ஆர்த்தம் உள்ளது. உண்மை உள்ளது. நியாயம் உள்ளது.

கடும் போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி நடைமுறையில்  வந்து இருக்கிறது.

இதற்கு முழு காரணம் யார் ?

மருத்துவர் அய்யாவை தவிர வேறு யாருமே இல்லை.

இப்படிதான் சொல்லியாக வேண்டும்.

காரணம். சமச்சீர் கல்விக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவர்  மருத்துவர் அய்யா மட்டுமே.

மருத்துவர் அய்யாவின் முயற்சியால்தான், கடந்த ஆண்டு தி.மு.க. அரசு ஒன்று மற்றும் ஆறாவது வகுப்புகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு,  சமச்சீர் கல்வி திட்டத்தை இந்தாண்டு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என  அறிவித்த மறு வினாடியே கண்டனம் தெரிவித்த முதல் தலைவர்  மருத்துவர் அய்யாதான்.

சமச்சீர் கல்வி விவகாரம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல நிலைகளை கடந்து, தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.



இதற்கு அய்யா ஆற்றிய பணிகள் ஏராளம்.

சமச்சீர் கல்வி முறையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நாம் படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம்.

முதலில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதுதான் நமது இலக்கு.
இப்படி சொல்லி அந்த  இலக்கை மருத்துவர் அய்யா தற்போது அடைந்து விட்டார்.

பல ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு, சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது அய்யாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைத்த வெற்றி.

இடஒதுக்கீடு.

அய்யாவின் முழக்கங்களில் மிகவும் முக்கியமானது இடஒதுக்கீடு.

கல்வி, வேலைவாய்ப்புகளில்,  பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை  கொடுத்து விடுங்கள் என்பதுதான் அய்யாவின் கோரிக்கை.

அனைத்தரப்பு மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளியுங்கள்.
அதற்காக, சாதிவாரிக் கணக்கெடுப்பை உண்மையாக,  நேர்மையாக நடந்துங்கள் என்கிறார் அய்யா.

இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் மக்கள்தான். அவர்களுக்கும் நல்ல கல்வியை, தரமான கல்வியை அளிப்பது அரசின் கடமை.

இஸ்லாமியர்களுக்கும் அவர்களின் மக்கள் தொகை விழுக்காட்டின்படி இடஒதுக்கீட்டு அளவை ஒதுக்குங்கள்.

இப்படி இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீட்டிற்கு உரிமையோடு குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர் மருத்துவர் அய்யா.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்களுக்கு 3 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்றால், அதற்கு மருத்துவர் அய்யாவும் ஒரு முக்கிய காரணம்.



இதை இஸ்லாமியர்களும் மறக்கவில்லை. நன்றி மறந்து விடவில்லை.

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்கள் நடத்தும் மாநாடு, கருத்தரங்கள் எதுவாக இருந்தாலும் சரி, ஏன், பா.ம.க. நடத்தும் உரிமை மாநாடுகளிலும், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்காக,  அய்யா குரல் கொடுக்க தவறுவதே இல்லை..

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமஅளவு ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் எது பிரச்சனை.

தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் அல்லவா.

இந்த வரதட்சணை கொடுமை இருக்கிறதே, அதனால் பெண்கள் படும் இன்னல்கள் இருக்கிறதே.

அப்பப்பா, அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.

இதற்கு முழுமையான  தீர்வு காண வேண்டும் என்கிறார் மருத்துவர் அய்யா.

பெண்ணடிமையை வேறோடு அறுத்து எரிய வேண்டும் என்பது அய்யாவின் கனவு.

வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்வு சின்னபின்னமாகி போய் விடுகிறது. 

பல பெண்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறிவிடுகிறது.

எனவேதான்,  பெண்ணடிமைக்கு எதிராக மருத்தவர் அய்யா தொடர்ந்து போராடி வருகிறார்.

இது மிகப் பெரிய போராட்டம்.

இந்த போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், எதிர்காலத்தில் பெண்ணடிமை கொடுமை முற்றிலும் ஒழிந்து விடும்.

பெண்கள் அமைதியாக வாழுவார்கள்.

எல்லாம் அய்யாவின் முயற்சிகள்தான் காரணம்.



மது ஒழிப்பு.
சமச்சீர் கல்வி.
இடஒதுக்கீடு.
பெண்ணடிமை ஒழிப்பு.

இதற்கெல்லாம் அய்யா குரல் கொடுப்பது இருக்கட்டும்.

மருத்துவர் அய்யா உனக்கு என்ன செய்தார் ? அதை முதலில் சொல்லுப்பா.
இப்படி பலர் கேள்வியை எழுப்பலாம். 

என் வாழ்க்கையின் இறுதி காலம் வரை மறக்க முடியாத தலைவர்களில்  ஒருவர் மருத்துவர் அய்யா.

காரணம் பல உண்டு.

ஆனால் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியின் ஊழியன் நான்.

ஊழியன் என்று சொல்வதைவிட குடும்ப உறுப்பினர். இப்படிதான் மக்கள் தொலைக்காட்சியின் ஊழியர்களை அய்யா அழைப்பது வழக்கம்.

ஒரு குடும்பமாக நாங்கள் வாழ்கிறோம்.

இப்படி குடும்பமாக வாழும் எங்களின் இன்பம், துன்பம் ஆகியவற்றில் அய்யாவும் பங்கேற்று கொள்கிறார்.



சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் நான், கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு, 10 மணி.  வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

பணியை தொடங்கும் முன்பு, தேநீரை அருந்தினால் நன்றாக இருக்கும் என மனம் விரும்பியது.

அதனால், தேநீர் அருந்தி வர அலுவலகத்தில் இருந்த கேண்டீனுக்குச் சென்றேன்.

கேண்டீன் தரையில் சாம்பார் கொட்டிக் கிடந்தது.

என்னப்பா இது, இப்படி சாம்பார் கொட்டிக் கிடக்கிறதே, யாராவது வழுக்கி விழுந்தால் என்ன ஆவது என்று அங்கிருந்த ஊழியனிடம் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றேன்.

தேநீர் வாங்கி அருந்தினேன்.

களைப்பு தீர்ந்தது. சரி பணி தொடங்கலாம் என நினைத்து திரும்பியபோது, என்னையும் அறியாமல் சாம்பாரில் காலை வைத்து விட்டேன்.
அவ்வளவுதான்.

வழுக்கி  தரையில் விழுந்துவிட்டேன்.

எழ முயற்சி செய்தபோதுதான், விஷயம் மெல்ல புரிந்தது.

எனது வலது கால் முட்டி எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு, எழ முடியாமல் போனது.

கத்தினேன்.

உடனே ஓடோடி உதவிக்கு வந்தார்கள் என்னுடன் பணியில் இருந்த சகோதரர்கள் விஜய்தேவ், சக்திவேல் ஆகிய இருவரும்.

மற்றொரு ஊழியர் சங்கரப்பாண்டியன் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

என்னை தூக்கிச் சென்று, மக்கள் தொலைக்காட்சியின் ஊர்தியில் அமர வைத்தார்கள். 

இரவு நேர செய்திச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஜெயக்குமாருக்கு போனில் விஷயம் பறந்தது. அவரும் உடனே அலுவலகம் திரும்பினார்.

அனைவரும் கலந்து பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என்னை முதலில் அழைத்துச் சென்றார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எனக்கு முதலுதவி செய்யப்பட்டது.

காலில் கட்டு கட்டப்பட்டது.

பிறகு என்னை, என்னுடைய அறைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மறுநாள் காலை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதன்மைச் செய்தி ஆசிரியர் கோமல் அன்பரசன், இணையாசிரியர்கள் பாஸ்கர் சந்திரன், மணிமாறன் ஆகியோர், என் அறைக்கு  வந்து என்னை பார்த்துச் சென்றார்கள்.

கவலைப்பட வேண்டும் என்றார்கள்.

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் எல்லா உதவிகளையும் செய்யும் என்று நம்பிக்கை ஊட்டினார்கள். .

சொன்னப்படி, எனக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மருத்துவர் அய்யா ஆணையிட்டார்.



எல்லாவற்றிற்கும் மேலாக அய்யாவின் ஒரு செயல் என் கண்களில்
ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

ஆம்.

என் வலது கால் முட்டி எலும்பு முறிவுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதுதான் சரி என எலும்பு முறிவு சிகிக்சை மருத்துவர் நல்லி யுவராஜ் ஆலோசனை தெரிவித்து இருந்தார்.

மருத்துவர் நல்லி யுவராஜின் ஆலோசனைப்படி எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

எல்லாம் மருத்துவர் அய்யாவின் செலவில்தான்.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பு, டாக்டர் நல்லி யுவராஜை செல்பேசியில் தொடர்பு கொண்ட மருத்துவர் அய்யா, தம்பி அஜீசுக்கு நல்ல சிகிச்சை அளியுங்கள். அறுவைச் சிகிச்சையை  வெற்றிகரமாக முடியுங்கள் என அன்பு கட்டளையிட்டார்.

இந்த செய்தியை டாக்டர் நல்லி யுவராஜ் என்னிடம் சொன்னபோது, என் கண்களில் ஆனந்த கண்ணீர்.

மக்கள் தொலைக்காட்சியில் நான் ஒரு சாதாரண ஊழியன். அவ்வளவுதான்.

ஆனால், மக்கள் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் நமது குடும்ப உறுப்பினர்கள் என்ற வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல், தன் செயலின் மூலம் அய்யா செய்துக் காட்டினார்.

வாழும் தலைவர்களில் மருத்துவர் அய்யா ஒரு மகான்.



அரசியலில் அவரது நிலைபாடு வேறுவிதமாக இருக்கலாம். சிலருக்குபிடிக்காமல் போகலாம்.

ஆனால், சமூக நீதிக்காக அவர் செய்து வரும் பணிகள் மகத்தானவை.

இவை தமிழகம் மறக்க முடியாதவை.

ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்.

மருத்துவர் அய்யாவை வசைப்பாடியவர்கள், திட்டியவர்கள் இன்று அவரால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர் பதவிகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் அன்புடன் பழகும் குணம்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற விருப்பம்.

இதுதான் மருத்துவர் அய்யா.

இதனால்தான், என்னை கவர்ந்த இனிய தலைவர்களில்,  சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் மருத்துவர் அய்யா முக்கியமானவர்.

அய்யாவின் பிறந்த நாள் ஜுலை 25.  அதையொட்டி இந்த கட்டுரை எழுதப்பட்டது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

1 comment:

Unknown said...

மருத்துவர் அய்யா,
இந்த கட்டுரை மிக நன்றாக இருந்தது. மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு தன் குடும்ப நலனை மட்டுமே முக்கியம் என நினைக்கும் பல தலைவர்களில் மருத்துவரும் ஒருவர் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் உங்கள் கட்டுரையை படித்த பிறகுதான் அவபை¢பற்றிய ஒரு தெளிவு வந்துள்ளது.

பா.ம.க என்பது ஒரு சாதிக்கட்சி என்றும் அது வன்னியர்களுக்காக மட்டுமே போராடும் என எண்ணிக்கொண்டிருந்தேன், அந்த எண்ணமும் இக்கட்டுரையின் மூலம் தகர்ந்தது. மேலும் குறிப்பாக உங்கள் உடல்நிலை குறித்து அவர் எடுத்துக்கொண்ட அக்கறையும் என்னை நெகிழ வைத்தது, மக்கள் தொலைக்காட்சியில் ஊழியனாக இருப்பதற்கு பெருமையடைகிரேன்.

ஆனந்த்குமார்