Sunday, May 31, 2015

நியூ டெல்லி...!

நியூ டெல்லி...!


டெல்லியில் பெருநாள் சந்திப்பு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள் இவை.

டெல்லி லோதி காலனி அருகே இருக்கும் பிரேம் நகரில் நண்பர்கள் சீதாராமன் தீனதயாளன் சந்திரசேகர் ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து தங்கி இருந்தேன்.

ரமலான் பெருநாளில் வேலூருக்கு செல்ல முடியாத நிலை.

டெல்லியிலே நண்பர்களை அழைத்து பெருநாள் கொண்டாடி மகிழ்ந்தேன்.



மாற்று மத நண்பர்கள் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு வாழ்த்து சொன்னது என்றும் மறக்க முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

இளமை காலங்கள்...!

இளமை காலங்கள்...!



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

கண்ணெதிரே தோன்றினாள்...!

கண்ணெதிரே தோன்றினாள்...!


உடனே நீங்கள் கற்பனை வானில் பறந்து தப்பு தப்பாக எதையும் நினைக்க வேண்டாம்.

புகைப்படத்திற்கும் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சமூக அக்கறையுடன் வேலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியபோது எடுத்தப்படம் இது.

முகாமிற்கு வந்த ஒருவருக்கு செவிலியர் கண் பரிசோதனை செய்ய நான் அருகில் நின்று கவனிக்கிறேன்.

அவ்வளவுதான்

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

நான் சிகப்பு மனிதன்...!

நான் சிகப்பு மனிதன்...!


மாலை முரசு நாளிதழ் (வேலூர் பதிப்பு) செய்தி ஆசிரியர் சகோதரர் இ.எம்.மசூத் அகமது அவர்களுடன் நான்.



இந்த புகைப்படம் அநேகமாக 1991-95 ஆண்டின் மத்தியில் எடுக்கப்பட்டு இருக்கலாம். சகோ.மசூத் தற்போது ஓய்வு பெற்று சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

டில்லி - 6....!

டில்லி - 6....!




மறக்க முடியாத டெல்லி வாழ்க்கையின் ஒருசில துளிகள் இவை.



சகோதரர்கள் சீதாராமன் தீனதயாளன் சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும்


என்னிடம் காட்டிய அன்பையும் பாசத்தையும் எப்படி எளிதில் மறக்க முடியும்.



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

பள்ளிகள் திறப்பு....!

பள்ளிகள் திறப்பு....!

மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்....!!

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

மகிழ்ச்சியுடன் மாணவ செல்வங்கள் மீண்டும் தங்களது பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றனர்.

இந்த நல்ல தருணத்தில் இந்தியாவின் எதிர்காலமான மாணவ செல்வங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம், நல்ல அறிவு, நல்ல பண்பு, நல்ல சிந்தனை, நல்ல சகோதரத்துவ எண்ணம் ஆகிய அனைத்தும் இந்த கல்வி ஆண்டில் மாணவ செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும்.

அதன்மூலம் நாட்டில் அமைதி தழைக்க வேண்டும்.


வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேற வேண்டும்.

இதுவே எமது பிரார்த்தனைகள்.

வாழ்க மாணவ செல்வங்கள்.

அவர்களது பள்ளி பருவம் மகிழச்சியுடன் நடை போட மீண்டும் வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

தற்கொலைக்கு சமம்....!

தற்கொலைக்கு சமம்....!


சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமிக்கு திமுக ஆதரவு அளிக்குமா ?

நிச்சயம் அளிக்காது.

எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் கோட்டை.

சென்னையில் திமுக வலுவாக இருந்த காலத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

தற்போது, அந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது.


அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமி, இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி.

இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவு அளித்து திமுக எப்படி தனது செல்வாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

திமுகவின் ஆதரவு முழுமையாக கிடைத்தும் டிராபிக் ராமசாமி டெபாசிட் இழந்துவிட்டார் என தேர்தல் முடிவுக்கு பிறகு விமர்சனங்கள் எழும்.

இதனை திமுக ஏற்றுக் கொள்ள நிச்சயம் தயாராக இருக்காது.



மேலும் இன்னும் ஓராண்டிற்குள் சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமக்கு செல்வாக்கு இல்லை என்பதை மக்கள் மத்தியில் திமுகவே செல்ல முன்வருமா.

எனவேதான், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமிக்கு திமுக நிச்சயம் ஆதரவு அளிக்காது.

அப்படி ஆதரவு அளித்தால், டிராபிக் ராமசாமி, திமுகவின் ஆள் என அதிமுக பிரச்சாரம் செய்யும்.

இதனால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து விட்டு, மறைமுகமாக திமுக தேர்தலை சந்திப்பதாக மக்கள் மத்தியில் அதிமுக பிரச்சாரம் செய்யும்.

இதுபோன்ற பல காரணங்களால் திமுகவிற்கே தர்மசங்கங்கள் ஏற்படும்.


மேலும் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு அளிப்பது தற்கொலைக்கு சமம் என்பது திமுக நன்றாகவே உணர்ந்து இருக்கிறது.

எனவே, டிராபிக் ராமசாமிக்கு நிச்சயம் திமுக ஆதரவு அளிக்காது என்பது என்னுடைய கணிப்பு.

என்ன நான் சொல்வது சரிதானே...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Wednesday, May 27, 2015

வை ராஜா வை....!

வை ராஜா வை....!

ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த திரைப்படத்தில் நாட்டில் சூதாட்டம் எப்படி விறுவிறுப்பாக நடத்தப்படுகிறது என்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடங்கி சர்வதேச அளவில் நடைபெறும் சூதாட்டம் வரை படத்தில் விறுவிறுப்பான காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர்.

அதேநேரத்தில் படத்தின் நாயகன் கெளதம் கார்த்திக்கிற்கு எந்த ஒரு சம்பவம் குறித்தும் முன்பே அறிந்து கொள்ளும் அசாதாரண சக்தி இருப்பதாகவும் அதை பயன்படுத்தி சூதாட்டத்தில் அவர் எப்படி கோடிகளை சம்பாதிக்கிறார் பின்னர் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மற்றொரு கருத்து.

ஒரு திரைப்படத்தை எப்படி எடுத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இயக்குநர் நன்கு அறிந்து காட்சிகளை நகர்த்துவதால் படத்தில் சலிப்பு ஏற்படுவதில்லை.

நடிகர் விவேக்கின் காமடி படத்திற்கு பலம் சேர்க்கிறது.

யுவன்சங்கர் ராஜாவின் இசை சுமார் ரகம்.

வை ராஜா வை ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம். அவ்வளவுதான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, May 26, 2015

நவீன முஸ்லீம்கள்....!

நவீன முஸ்லீம்கள்....!


தமிழக பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும் இளைஞர்கள் இடையே இந்த பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அல்லாஹ்வின் இல்லத்திற்கு மன தூய்மையுடன் உடல் தூய்மையுடன் ஆடை தூய்மையுடன் மட்டுமல்லாமல் நல்ல கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவது சிறப்பான ஒன்று.

ஆனால் டி.சர்ட் போன்ற அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு இளைஞர்கள் பலர் தொழுகைக்கு வரும் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற அரைகுறைவான ஆடையை அணிந்துக் தொழுகைக்கு ஒரு இளைஞர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வர அதை தடுத்து நிறுத்தி பெரியவர் ஒருவர் நியாயம் கேட்க இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை வெடித்தது.

இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.
அலுவலகத்திற்கு செல்லும் ஒரு முஸ்லிம் நல்ல ஆடையை அணிந்து கொண்டு செல்கிறார்.

நேர்முக தேர்வுக்கு செல்லும் ஒரு முஸ்லிம் இளைஞர் நல்ல தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு செல்கிறார்.

டி.சர்ட் அணிந்து கொண்டு அலுவலகத்திற்கோ நேர்முக தேர்வுக்கோ யாரும் செல்வதில்லை.



அப்படி ஒருவர் சென்றால் அவரது நிலைமை என்னவாகும் என்பது சொல்லி புரிய வேண்டியதில்லை.

ஆனால் இறைவனின் வீட்டிற்கு மட்டும் இதுபோன்ற அரைகுறை ஆடைகளை இளைஞர்கள் சிலர் அணிந்து வருவது சரியா என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

தொழுகையை ஒரு கடமையாக மட்டுமே நினைத்துக் செயல்படுவதால் இந்த போக்கு அதிகரித்து வருகிறது எனலாம்.

தொழுகையால் கிடைக்கும் நன்மை பள்ளிவாசலுக்கு சென்று இறைவனிடம் மனம் விட்டு பேசும்போது கிடைக்கும் ஆனந்தம் இதையெல்லாம் இளைஞர் சமுதாயம் உணர்ந்தால் இதுபோன்ற அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு நிச்சயம் வர மாட்டார்கள்.

அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு நாம் சென்றால் நிச்சயம் நம்முடைய கவனம் முழுவதும் இறைவனின் பக்கம் திரும்பாமல் இருக்கும்.
சிந்தனைகள் சிதறும்.

எண்ணங்கள் ஊசலாடும்.

எனவே பள்ளிவாசலின் கண்ணியத்தை காப்போம்.

இனி நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு பயபக்தியுடன் தொழுகையை நிறைவேற்றி இறைவனின் அன்பை பெற முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஏமாற்றம்....!

ஏமாற்றம்....!

தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜெயலலிதாவிடம் தமிழக மக்கள் ஓர் அறிவிப்பை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆம். டாஸ்மாக் போதையில் தள்ளாடும் தமிழகத்தை ஜெயலலிதா தம்முடைய அறிவிப்பின் மூலம் காப்பாற்றுவார் என தமிழக பெண்கள் நம்பிக்கை வைத்தனர்.

ஆனால் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு நேற்று (24.05.15) தலைமைச் செயலகத்திற்கு சென்ற ஜெயலலிதா ஐந்து புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்து போட்டார்.

ஆனால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிபடியாக நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவில்லை.

இது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக தாய்க்குலம் வேதனை அடைந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

காரணம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் தைரியம் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே உண்டு என தமிழக மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.

எனவே மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் வாய் எதுவும் திறக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் எனலாம்.

அதேநேரத்தில் இன்னும் மக்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை.

மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிட்டு போதையில் தள்ளாட்டம் போடும் தமிழகத்தை நிச்சயம் காப்பாற்றுவார் என்று மக்கள் குறிப்பாக பெண்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்

Friday, May 22, 2015

வாழ்த்துக்கள்....!

அம்மாவுக்கு வாழ்த்துக்கள்....!

தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் இன்று பொறுப்பு ஏற்க இருக்கும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பல்வேறு சோதனைகள்....

கடும் இன்னல்கள்....

எப்படியும் உங்களை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகள்...

இதையெல்லாம் தாண்டி, பெரும் போராட்டத்திற்கு பிறகு, அரசியல் விரோதிகளை வீழ்த்தி 5வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று நீங்கள் பதவி ஏற்க இருப்பது உண்மையில் மிகப் பெரிய சாதனைதான்.

இந்த நல்ல நேரத்தில் ஒரே ஒரு வேண்டுகோள்.

தமிழத்தில் எப்படி லாட்டரி சீட்டு கலாச்சாரத்தை ஒழித்தீர்களோ, அதேபோன்று, மது என்ற அரக்கணை நீங்கள் வீழ்த்த வேண்டும்.

அதன்மூலம், தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களின் வாழ்வை காப்பாற்ற வேண்டும்.

அதற்காக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை இன்று நீங்கள் அறிவிக்க வேண்டும்.

இந்த துணிச்சலான முடிவை அறிவிக்கும் துணிவு உங்களிடம் மட்டுமே உண்டு.

எனவே, அம்மா அவர்களே, தமிழக மக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு நல்ல அறிவிப்பை இன்று நீங்கள் வெளியிடுங்கள்.

அதன்மூலம் வரலாற்றில் இடம் பெறுங்கள்.

முதலமைச்சராக பதவி ஏற்கும் உங்களுக்கு மீண்டும் எங்களது வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.

அதன்மூலம் தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும்.
வாழ்த்துக்கள்..!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Wednesday, May 20, 2015

36 வயதினிலே...!

36 வயதினிலே...!

ஜோதிகா மீண்டும் திரை உலகில் மறு பிரவேசம் செய்து சிறப்பாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இது.

புகைப் பிடிக்கும் காட்சிகள்

மது அருந்தும் காட்சிகள்

இளம் பெண்களுடன் கடலை போடும் காட்சிகள்

கட்டிப் பிடித்து காதல் கன்றாவி செய்யும் காட்சிகள்

கற்பனைக்கு எட்டாத சண்டை காட்சிகள்

காமடி என்ற பெயரில் அறுவை ஜோக்குகள்

இப்படி இருந்தால்தான் ஒரு திரைப்படம் ரசிகர்களைக் கவரும் என நினைத்து சமூக சிந்தனை இல்லாமல் திரைப்படம் எடுக்கும் முட்டாள் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் அழகான கதையை கையில் எடுத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் முகம் சுளிக்காமல் தைரியமாக பார்க்கும் வகையில் இந்த படத்தை எடுத்து இருப்பது பாராட்டத்தக்க ஒன்று.


இந்த படத்தில் குத்தாட்டம் கிடையாது.

மது அருந்தும் காட்சிகள் கிடையாது.

புகைப் பிடிக்கும் காட்சிகள் கிடையாது.

மச்சி சொச்சி ஃபிகர் போன்ற வசனங்கள் கிடையாது.

ஆனால் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜோதிகா படத்தில் வாழ்ந்து இருக்கிறார்.


பெண்களை போற்றும் வகையில் அனைத்து காட்சிகளும் இருக்கின்றன.

பெண்கள் மனசு வைத்தால் சாதிக்க முடியும் என்பதை இந்த படம் பெண்களுக்கு பாடம் சொல்கிறது.

நகைச்சுவையுடன் காட்சிகள் நகர்வதால் படத்துடன் ரசிகர்கள் ஒன்றி விடுகிறார்கள் எனலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கருத்துள்ள திரைப்படம் தமிழ் திரை உலகில் வந்துள்ளது எனலாம்.

படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகள்.

36 வயதினிலே படத்தை வாடி ராஜாத்தி வா என வரவேற்பு அனைவரும் தைரியமாக பார்க்கலாம்.

குறிப்பாக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Sunday, May 17, 2015

என்ன கொடுமைடா....!

என்ன கொடுமைடா....!

சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது...!!

இந்த திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆச்சு....!!

எப்போ தியேட்டர்ஸை விட்டு போச்சு என தெரியாது....!!!

ஆனால் அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தை இன்று பார்க்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

காட்சிக்கு காட்சி புகைப்பிடித்தல் மது அருந்துதல் இளம் பெண்களுடன் கடலை போடுதல் சீசனுக்கு சீன் செல்பேசியில் பேசுதல் போன்ற காட்சிகளை தவிர படத்தில் வேறு எதுவும் இல்லை.

திரைப்பட உதவி இயக்குநர்கள் பற்றிய கதை என்றாலும் அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்கள் இல்லை என்ற கருத்தைதான் இயக்குநர் பதிவு செய்ய முயல்கிறார்.

சினிமாவில் நல்லவர்கள் ஜெயித்தவர்கள் என நிறைய பேர் உள்ளனர் என்பதை இயக்குநர் சொல்லவில்லை.


சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று தலைப்பு வைத்து விட்டு இளைஞர்களே சென்னைக்கு வராதீர்கள் என மறைமுகமாக சொல்கிறார் இயக்குநர்.

புகை பிடிக்கும் மது அருந்தும் இளம் பெண்களுடன் செல்பேசியில் கடலை போடும் காட்சிகளை நிறைய அமைத்து இளைய சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்ல தூண்டும் வகையில் இந்த திரைப்படத்தை எடுத்த இயக்குநரின் முகத்தில் காரி துப்புவதை தவிர வேறு வழியில்லை.

சமூக அழிவுக்கு அழைத்து செல்லும் இதுபோன்ற திரைப்படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்கக் கூடாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

செம அறுவை....!

உத்தம வில்லன்...!


கமல்ஹாசன் படம் ஆச்சே. அதனால் படம் செம சூப்பர் என சொல்ல ஆசைதான்.

ஆனால் பொய் சொல்ல மனம் மறுக்கிறது.

எனவே படம் செம அறுவை....அறுவை...அறுவை... என சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.



கமல் ரஜினி இரண்டு பேரும் இனி இளம் நாயகிகளுடன் டூயட் பாடி ஆட்டம் போடுவதை நிறுத்தி விட்டு இந்தி நடிகர் அமிதாப் போன்று வயதுக்கு ஏற்ற பாத்திரங்கள் ஏற்று நடித்தால் நல்லது.

இல்லையெனில் ரசிகர்களின் பாடு திண்டாட்டம்தான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, May 15, 2015

கருணை காட்டு..!

சித்தராமையா கருணை காட்டு..!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுத்தபோது அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை மனு அளிக்கப்படவில்லை.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பகள் வெறியாட்டம் நடத்தியபோது இந்த போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்த மனம் வரவில்லை.

பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தபோது நாம் அனைவரும் அண்ணன் தம்பிகள். எனவே இதுபோன்ற போராட்டங்கள் தேவையில்லை என கர்நாடக தலைவர்களிடம் நேரில் கோரிக்கை விடப்படவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் கூட பிரச்சினையை தீர்க்க நேரில் மனு அளிக்கப்படவில்லை.

கர்நாடக அரசுக்கு எதிராக கன்னட அமைப்புகளுக்கு எதிராக அறிக்கைகள் தமிழகத்தில் போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே செயல்பாடுகள் இருந்தன.

ஆனால் ஜெயலலிதா வழக்கு விவகாரத்தில் மட்டும் அவசர அவசரமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பாமக தலைவர் ஜி.கே.மணி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை அளிக்க சென்ற ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினரை மரியாதைக்கு கூட உட்கார சொல்லாமல் நிற்க வைத்தே மனுவை வாங்கியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.

எப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டாலும் சரி ஜெயலலிதாவை ஒழித்து கட்ட வேண்டும்.

அவர் மீது வழக்கு போடு என்று கர்நாடகவிற்கு கோரிக்கை விட வேண்டும் என்ற நிலை தமிழக எதிர்க்கட்சிகளிடம் இருந்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் ஓரே காரணம்.

ஜெயலலிதாவின் விடுதலையால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதையும் சாதிக்க முடியாது என்ற பயம்தான்.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் அவரை எப்படியும் சிறையில் அடைக்க துடியாய் துடிக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் ஊழல்.

இந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்.

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, May 13, 2015

கெஞ்சல்....!

கர்நாடக அரசே ஜெ. மீது வழக்கு போடு...!

தமிழக எதிர்க்கட்சிகள் கெஞ்சல்....!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 11ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பின் மூலம் கோமா நிலையில் இருந்த அதிமுக மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து அரசியலில் கம்பீரமாக நடைபோட தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி.

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை.

மீண்டும் நாங்கள்தான் ஆட்சியை பிடிக்க போகிறோம் என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருந்த திமுக தலைமைக்கு ஜெ.வின் விடுதலை மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



இதேபோல் ஜெ. இல்லாமல் தேர்தலை சந்தித்தால் தொகுதிகளை நன்கு அறுவடை செய்யலாம்.

அதன்மூலம் திமுகவை பணிய வைத்து பேரம் பேசி ஆட்சியில் இடம் பிடிக்கலாம் என கற்பனை செய்த காங்கிரஸ் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜெ.வின் விடுதலையால் ஆடி போய் உள்ளனர்.



ஜெ. விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

பல அதிரடி திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

கடந்த சில மாதங்களாக நின்று போன திட்டங்களை மளமளவென நிறைவேற்ற இருக்கிறார்.

குறிப்பாக தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து நல்ல அறிவிப்பை ஜெ. வெளியிட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெ.வின் இந்த அறிவிப்புகளால் அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு மேலும் அதிகரித்துவிடும்.



வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடும்.

இப்படி நினைத்து தமிழக எதிர்க்கட்சிகள் வேதனை அடைந்து பொறாமையால் துடிக்கின்றன.

குறிப்பாக திமுக தலைமை மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பார்க்க துடியாய் துடிக்கிறது.

எனவேதான் ஜெ. வழக்கில் அதிக அக்கறை செலுத்துகிறது.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என கர்நாடக அரசிடம் கெஞ்சும் பாணியில் கோரிக்கை விடுக்கிறது.

நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதி கூறுகிறது.
இதேபோல் பிற கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் காவிரியில் எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்.

மேகதாதுவில் நீ அணைக் கட்டிக்கோ ஆனால் ஜெ. மீது மட்டும் வழக்கு போடு.
உச்சநீதிமன்றத்தில் ஜெ.வுக்கு எதிராக மேல்முறையீடு செய் என சொல்லும் அளவுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளதாகவே கூறலாம்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஜெ. விடுதலை ஆகி இருக்கலாம்.

அதற்கு ஜெ. பொறுப்பு இல்லை. இந்திய சட்ட நடைமுறைகள் காரணம்.

தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவரது நேர்மையை விமர்சனம் செய்துள்ளனர்.

ஜெ.வுக்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கி இருந்தால் குமாரசாமியை போன்ற நீதிமான் உலகத்திலேயே இல்லை என பாராட்டி இருப்பார்கள்.

உண்மையில் ஊழலுக்கு எதிராக நீங்கள் போராட நினைத்தால் நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என நினைத்தால் அதை உங்களில் இருந்து தொடங்க வேண்டும்.

மனசாட்சிதான் உயர்ந்த நீதிமன்றம் என கூறும் நீங்கள் ஊழல் விவகாரத்தில் உங்கள் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.

கடைசியாக.

ஜெ. வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தமிழக தலைவர்களிடம் ஊழல் குறித்து சாதாரண நடுத்தர படிப்பறிவு இல்லாத கேட்கும் இதுபோன்ற
கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பிறகுதான் ஜெயலலிதாவின் ஊழல்கள் குறித்து புலம்ப வேண்டும்.

இப்படிதான் சாதாரண பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் கருத்துக்களை பரிமாற்றி கொள்கிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, May 12, 2015

உருக்கமான வேண்டுகோள்...!

ஜெயலலிதாவுக்கு ஓர் (உருக்கமான) வேண்டுகோள்...!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதி வென்று நீங்கள் விடுதலை ஆகியுள்ளீர்கள்.

கர்நாடக உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி தர்மத்தை நிலை நாட்டியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சோதனைகளை இறைவனின் அருளால் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளீர்கள்.

உங்களுடைய அரசியல் வாழ்வில் நீங்கள் சந்தித்த சோதனைகளைப் போன்று மற்ற அரசியல் தலைவர்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள்தான் எத்தனை.

இந்த வழக்குகள் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர் கொண்டு சட்டப்படி தாங்கள் நிரபராதி என்பதை குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து சாதனை புரிந்துள்ளீர்கள்.

அதற்காக எமது பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் இன்று (11.05.2015) மிக முக்கிய நாள்.

மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களிடம் ஓர் வேண்டுகோள்.

தமிழக அரசின் மது கொள்கையால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பள்ளி சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீதிகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

நாள்தோறும் இந்த காட்சிகளை தமிழகம் கண்டு வருகிறது.

மதுவின் கொடுமையால் குடும்ப பெண்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

பல குடும்பங்கள் வறுமையில் தள்ளாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் காரணம் வீதிக்கு வீதி திறக்கப்பட்டு இருக்கும் டாஸ்மாக் மது கடைகள்தான்.

தமிழகத்தில் இருந்து மது என்ற அரக்கனை அகற்ற உங்களால் மட்டுமே முடியும்.

அந்த துணிச்சல் உங்களிடம் மட்டுமே உள்ளது.

பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ள நீங்கள் விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறீர்கள்.

இந்த நல்ல நேரத்தில் தமிழக பெண்களின் கண்ணீர் துடைக்க இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை காப்பாற்ற பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சராக பதவி ஏற்றதும் முதல் ஆணையாக பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் செய்தால் ஒட்டுமொத்த தமிழகமே உங்கள் பின்னால் நிற்கும்.
உங்கள் அரசியல் விரோதிகள் காணாமல் போவார்கள்.

தமிழகம் காலா காலத்திற்கு உங்களை போற்றும்.

உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

அம்மா அவர்களே தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.

உங்கள் அரசியல் விரோதிகளை அடியோடு வீழ்த்தும் நோக்கிலாவது இதை செய்யுங்கள்.

அதன்மூலம் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடியுங்கள்.

வரலாற்று சாதனை புரிந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வரலாறு படையுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஒரு தீர்ப்பு...! பல விமர்சனங்கள்...!!

ஒரு தீர்ப்பு...! பல விமர்சனங்கள்...!!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று (11.05.2015) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அதிமுகவினர் நீதி வென்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக சிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

சட்டம் ஒரு இருட்டறை. அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் என சிலர் கூறியுள்ளனர்.

அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது நீதி வென்று விட்டதாக கருத்து தெரிவித்த சிலர் இப்போது ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் அவர் விடுதலை ஆவதை சிறிதும் விரும்பவில்லை.

தற்போது ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டதால் தங்களுடைய அரசியல் கனவுகள் தவிடு பொடியாக போனதால் தீர்ப்பு குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பு மூன்று மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.

நீதிபதி குமாரசாமிக்கு பெட்டிகள் பல சென்று விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒரு விளக்கம்.
பாதகமாக வந்தால் நீதி செத்து விட்டது. நிதி வென்று விட்டது என அழுகை குரல் எழுப்புவது.

இது எந்த வகையில் நியாயம் ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, May 8, 2015

சமுதாயம் உருபடுமா....?

சமுதாயம் உருபடுமா....?


உலக அளவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கயவர் கூட்டம் முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உலக முஸ்லிம் சமுதாயம் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் வன்முறைகளும் வெடித்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன.

காரணம். உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்துவதை எந்த முஸ்லிமும் தாங்கிக் கொள்ள விரும்பாததே ஆகும்.

ஆனால் இந்தியாவில் அதுவும் நம்ம தமிழகத்தில் அண்மை காலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மையமாக வைத்து முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே வாத போர் தொடங்கி தற்போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் வரை வளர்ந்துள்ளது.

நபியின் போதனைகள் அனைத்தும் உண்மையாகவே நாங்கள்தான் கடைப்பிடித்து வருகிறோம் என ஒரு அமைப்பு கூற மற்றொரு அமைப்போ நபியை இழிவுப்படுத்துவதில் உங்கள் அமைப்பு முதலிடத்தில் உள்ளது என குற்றஞ்சாட்டி சென்னையில் அண்மையில் போராட்டம் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் நீங்கள் என்ன உங்கள் பலத்தை காண்பிப்பது. நாங்கள் காட்டுகிறோம் பார் எங்கள் பலத்தை என மார் தட்டி போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது முதலாவது முஸ்லிம் அமைப்பு.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.

அதற்கு தீர்வு காண முஸ்லிம் அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லை.

மார்க்க விஷயங்ககளில் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது.

சாதாரண முஸ்லிம் மக்கள் எந்த அமைப்பின் சொற்களை கேட்டு நடப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

மாற்று மத தோழர்களோ என்ன இஸ்லாமியர்கள் தங்களுக்குள் இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள்.

முஸ்லிம் விரோதிகளோ மனதில் சந்தோஷம் அடைகிறார்கள்.

இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து சண்டையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் உருப்பட வாய்ப்பே இல்லை.

முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை அரசும் கேட்காது.

பிற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவு கரம் நீட்ட முன்வராது.

ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்கள் இடையே நிலவும் பிளவு குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

எனவே முஸ்லிம் சமுதாயமே இனியாவது விழித்துக் கொண்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக் கொள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?

வாழ்த்து சொல்வதற்கு மார்க்கத்தில் தடையா...?


முகநூல் நண்பர் ஒருவருக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்து நற்செய்தி அனுப்பி இருந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் இஸ்லாத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இனி வாழ்த்துச் செய்திகளை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்ற பாணியில் அந்த சகோதரர் கருத்தை பதிவு செய்திருந்தார்.

நான் அதிர்ச்சி அடைந்தேன்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரை.

இதுவும் வாழ்த்து கூறும் வழக்கத்தின் ஒரு அங்கம் என கூறலாம்.

ஆனால் பிறந்த நாள் வாழ்த்து கூறக்கூடாது என சகோதரர் கூறுகிறார்.

அப்போ வீட்டில் புது வரவாக குழந்தை பிறக்கும் போது சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூறக் கூடாதா ?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பேரில் நடத்தப்படும் கும்மாளம் குத்தாட்டம் ஆகிய செயல்கள்தான் கூடாது என்பது மார்க்க அறிஞர்களின் அறிவுரை.

ஒருவர் தனது பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது மார்க்கம் தடை செய்வதாக எனக்கு தெரியவில்லை.

வாழ்த்து கூறுவதற்கு தடை என வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நபர்களால்தான் தமிழகத்தில் இஸ்லாம் குறித்து முஸ்லீம்களுக்கும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் குழப்பங்கள் தவறான புரிந்துணர்வு அதிகரித்து வருகிறது.

உண்மையிலே பிறந்த நாள் வாழ்த்து கூற இஸ்லாத்தில் அனுமதி இல்லையா ?

விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு செய்தி.

என்னுடைய வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அந்த நபரை என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கி விட்டேன்.

இதுபோன்ற குழப்பவாதிகளின் நட்பு நமக்கு எதற்கு ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!


வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் மரணத்தை சுவைக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

எனவே நாம் அனைவரும் மரணத்தை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் என்னுடைய குடும்பத்தில் கடந்த 16 மாதங்களில் 5 பேர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை மிகவும் நிலைக்குலைய வைத்து விட்டது.

மூத்த சகோதரி ஒருவர் மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் மூத்த சகோதரியின் கணவர் இளைய சகோதரியின் கணவர் என மொத்தம் ஐந்து பேர் கடந்த 16 மாதங்களில் அடுத்தடுத்து மரணத்தை சுவைத்து இந்த உலகத்தை விட்டு பிரிந்தது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த துயரங்களில் இருந்து மீள நாங்கள் முயற்சி செய்தாலும் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் இழப்பு அடிக்கடி கண் முன் வந்து சென்று எங்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

மன மற்றும் பொருள் ரீதியாக காலஞ்சென்ற என்னுடைய சொந்தங்கள் எனக்கு செய்த தியாகங்கள் மதிப்பிட முடியாதவை.

எனவே இவர்களின் மரணம் என்னை மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

எனினும் இந்த துயரமான நேரங்களில் என் நண்பர்கள் ஊடக சொந்தங்கள் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி எனக்கு துணையாக நின்றது என்னால் மறக்க முடியாது.

இதன்மூலம் என்னுடைய சோகங்கள் மெல்ல மெல்ல கரைந்து வருகின்றன.

துயரமான நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறி துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் இறைவனிடம் ஓர் பிரார்த்தனை.

எங்கள் குடும்பத்தில் இனி சில ஆண்டுகளுக்கு மரணங்களை தள்ளி போட வேண்டும் என்பதுதான் அது.

என்னுடைய துஆவில் (பிரார்த்தனையில்) நீங்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.