Thursday, November 30, 2023

எள்ளும், அதன் பலன்களும் ....!

 

எள்ளும், அதன் பலன்களும் – ஒரு தகவல்….!


இயற்கை மனித சமுதாயத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் உயிரினங்களுக்கு பல அற்புதமான உணவுப் பொருட்களை வாரி வழங்கியுள்ளது. சிலர் சாதாரணமாக நினைக்கும் உணவு வகைகளில், அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதை அறிந்தால், உண்மையிலேயே நாம் வியப்பு அடைவோம். அந்த வகையில் எள்ளும் ஒரு சாதாரண உணவாக மக்கள் மத்தியில் கருதப்பட்டு வருகிறது. ஆனால், சாதாரண இந்த எள்ளில், மிகப்பெரிய பலன்கள் குவிந்து கிடக்கின்றன.

எள்ளின் மருத்துவ குணங்கள்:

அதிக சத்துக்கள் நிறைந்த எள் பழங்காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வகை நோய்களுக்கு நாட்டு வைத்தியர்கள் எள்ளை மருந்தாக பயன்படுத்தி அதை பலவித நோய்களுக்கு ஆளான தங்களது நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அதன்மூலம் அந்த நோயாளிகளும் குணம் அடைந்து வருகிறார்கள்.

தற்போது குளிர்காலம் தொடங்கி இருப்பதால், எள்ளைப் பயன்படுத்துவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளை எள்ளில் அதிக கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. கருப்பு எள் விதைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க சிறந்தது.

எள் விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். இது மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது, சேதமடைந்த முடியை சரிசெய்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள எண்ணெய் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. எள் விதைகள் வீக்கம் காரணமாக தோல் மீது வலி தடிப்புகள் மற்றும் சிவத்தல் சிகிச்சை உதவும். ஆற்றலை வழங்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

எள் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது..

கருப்பு மற்றும் வெள்ளை எள்:


எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைளை அள்ளித்தருகின்றது. எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள்.

போதை பழக்கத்தை மறக்க:

தற்போது, இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் குடும்பங்களில் அமைதி சீர்குலைந்து கொண்டே போகிறது.. இளைஞர்களின் போதைப் பழக்கம் காரணமாக, பெண்களின் வாழ்வில் நிம்மதி அடியோடு போய்விட்டது. போதைப் பழக்கம் காரணமாக இளம் தம்பதிகளிடையே விவகாரத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த போதைப் பழக்கத்தை கைவிட அல்லது மறக்க எள் மிகவும் பயன் அளிக்கும் உணவாக உள்ளது. எனவே போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்.

அத்துடன், தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும். சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

இதேபோன்று, சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிமோனியா மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் தீரும். இவை செரிமான அமைப்புக்கு சிறந்தவை. அவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலை நீக்குகிறது. இது ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

மறக்க வேண்டாம்:


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் எள்ளு உருண்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறிய கடைகளில், எள்ளு உருண்டை அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சாலையோர கடைகளிலும், தள்ளு வண்டிகளிலும் எள்ளு உருண்டை விற்பனை செய்வதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மிகவும் குறைந்த விலை கொண்ட இந்த எள்ளு உருண்டையை, சிறிதும் கவுரவம் பார்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள். சாதாரண எள்ளு உருண்டை தானே என எண்ண வேண்டாம். ஏற்கனவே நாம் மேலே குறிப்பிட்டது போல, எள்ளில் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் ஏராளமாக இருப்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். சாதாரண உணவுப் பொருட்களில் தான் சக்திகள் அதிகம் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நாள்தோறும் அவற்றைப் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள். அந்த வகையில் எள்ளையும் இனி தினமும் ஒரு உணவாக நாம் எடுத்துக் கொள்வோமா…!

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

பொதிகை.....!

பொதிகை தொலைக்காட்சி செய்திக்குழுவின் உறுப்பினர் தீபிகாவிற்கு வாழ்த்துகள் கூறிய இனிய தருணம்...!



மழை பாதிப்பு....!

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுடி வெள்ளம்....!



சென்னையில் மழை...!

சென்னையில் இரண்டாவது நாளாக கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு....!



மீண்டும் மழை....!

சென்னையில் தொடந்து இரண்டாவது நாளாக இன்றும் (30.11.2023) கனமழை பெய்தது....!



மக்கள் வரவேற்பு....!

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு.....!



முஸ்லிம் எலி வளை நிபுணர்கள்....!

உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்களை மீட்க  மனிதநேயத்துடன் உழைத்த எலி வளை முஸ்லிம் நிபுணர்கள்....!

உத்தரகாண்ட் மாநிலம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பாஜக ஆளும் பிற மாநிலங்களில் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோன்ற ஒரு நிலை உத்தரகாண்ட்டிலும் இருந்து வருகிறது. மாநிலத்தில் ஒற்றுமையாக, சகோதர பாசத்துடன் வாழ நினைக்கும் முஸ்லிம் மக்களை, எப்போதும், விரோதிகளாகவே பார்க்கும் ஒரு மனநிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளது. எனவே, உத்தரகாண்டிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனால், ஏழை, எளிய முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாக பணிபுரிந்து தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். எனினும், பிற மத சகோதரர்களை அவர்கள் எப்போதும் தங்களுடைய உறவுகளாகவே நினைத்து, இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைப்படி, அன்பு செலுத்தி வருகிறார்கள். 

சுரங்க விபத்து:

இத்தகையை சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மாதம் 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றபோது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும்,  41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதையடுத்து வெளிநாட்டில் இருந்து ஆகர் ஏந்திரம் வரவழைத்து மீட்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த  சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தனது கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டார். பேராசிரியரான இவர் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அர்னால்ட் டிக்ஸ் அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் பணியாற்றி பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர்.

எனினும், தொழிலாளர்கள் அருகே சென்றபோது ஆகர் ஏந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அர்னால்டு டிக்ஸ் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே இருந்தார். 

எலி வளை சுரங்கம் தோண்டும் முறை:

அவரது முயற்சிக்கு இடையே, மாற்று ஏற்பாடாக, எலி வளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது. எலி வளை முறை என்பது, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு வளைந்தும் நெளிந்தும், பெரிதும், சிறிதுமாக எலி தோண்டுவதைப் போன்று தோண்டுவதுதான் எலி வளை முறையாகும். மேகாலயா போன்ற மாநிலங்களில் நிலக்கரி எடுக்க இந்த எலி வளை முறை பயன்படுத்தப்படுகிறது. சைடு கட்டிங் மற்றும் பாக்ஸ் கட்டிங் என இரண்டு முறைகளில் எலி வளை தோண்டப்படுகிறது. சைடு கட்டிங் மலைச்சரிவின் பக்கவாட்டிலும், பாக்ஸ் கட்டிங் செங்குத்தாக ஆழமாக தோண்டப்படுவதாகும். இந்த எலி வளை முறையை பயன்படுத்தித்தான் சுரங்கத்தில் சுக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 

முஸ்லிம் எலி வளை நிபுணர்கள்:

கடந்த 2014ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எலி வளை முறைக்கு தடை விதித்த நிலையில், மீண்டும் 2015ம் ஆண்டு எலி வளை முறைக்கு தடை நீக்கப்பட்டது. இந்த எலி வளை சுரங்கம் தோண்டும் முறையில் உத்தரகாண்ட்டில் உள்ள முஸ்லிம் தொழிலாளர்கள் நல்ல நிபுணர்களாக இருந்து வருகிறார்கள். எந்தவித அச்சமும் இல்லாமல், துணிச்சலுடன், எலி வளை முறையில் அவர்கள் சுரங்கங்களை தோண்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் தான், விபத்து நடந்த பகுதியில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில், முஸ்லிம் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். குறிப்பாக, முன்னா குரேஷி, பைரோஸ் குரேஷி, நசீர் கான், வகீல் உசேன், இர்ஷாத் அன்சாரி, ரஷீத் அன்சாரி, நஜீம் மாலிக், அன்குர் ஆகிய எட்டு முஸ்லிம் தொழிலாளர்களுடன், மனோ குமார், ஜாட் இன், தேவேந்தர் குமார், சவுராப் ஆகிய மற்ற நான்கு பேரும் இணைந்து கொண்டனர்,. 

மொத்தம் 12 பேர் கொண்ட இந்த எலி வளை குழு, கை வேலைப்பாட்டாகவே 13 மீட்டர் தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். பிறகு இந்த குழாய்கள் வழியாக ஒவ்வொரு தொழிலாளராக 41 பேரும் வெளியே கொண்டு வந்தனர்.

குவியும் பாராட்டுகள்:

நிலச்சரிவு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. 41 தொழிலாளர்களை மீட்க கடுமையாகவும் துணிச்சலுடனும் உழைத்த, முன்னா குரேஷி, பைரோஸ் குரேஷி, நசீர் கான், வகீல் உசேன், இர்ஷாத் அன்சாரி, ரஷீத் அன்சாரி, நஜீம் மாலிக், அன்குர் உள்ள 12 பேர் கொண்டு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிரபல பத்திரிகையாளர், ராஜ்தீப் சர்தேசாய், இது மதங்கள் கடந்த ஒற்றுமையே வெற்றிக்கான வழி என குறிப்பிட்டுள்ளார். சுரங்கத்தில் துளை தோண்டி 41 தொழிலாளர்களை காப்பாற்றிய அனைவரையும் பாராட்டுவதாகவும், குறிப்பாக ஃபெரோஸ், முன்னா குரேஷி, ரஷீது, இர்ஷாத், நசீம், வகில் ஹசன், மோனு நசீர், ஆங்குர், ஜாதின், சவுரப், , தேவேந்தர் ஆகியோரின் துணிச்சலான பணிகளை மறக்க முடியாது என்றும் ஒற்றுமையாக இருக்கும்போது தான் இந்தியா வெல்கிறது என்றும் ராஜ்தீப் சர்தேசாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, இடதுசாரி கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சுபாஷ்னி அலியும் எலி வளை குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  எலி வளை தொழில் நுட்பம் மூலம் 41 தொழிலாளர்களை காப்பாற்றியவர்கள், ஃபைரோஸ், முன்னா குரேஷி, ரஷீத்,, இர்ஷாத், நசீம், மோனு, அங்குர், ஜத்தின், சவுரப், தேவேந்தர், வகீல் ஹாசன், அனைவருக்கும் வணக்கத்தை கூறியுள்ள அவர், பாஜகவும், முதலமைச்சர் தமியும் கூறியபடி உத்தரகாண்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றி இருந்தால், இப்போது யார் இந்த பணியை செய்து இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து-முஸ்லிம் தொழிலாளர்கள் இணைந்துதான் இதனை வெற்றிகரமாக முடித்தனர் என்றும் ஒற்றுமையே வலிமை என்றும் சுபாஷ்னி அலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோன்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 

ஒற்றுமையே வலிமை:

மதசார்பற்ற இந்திய நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, என்ற வெற்று முழக்கங்கள் மூலம் நாட்டில் உள்ள மக்களை மத ரீதியாக பிரித்து, அவர்கள் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த இந்துத்துவா மற்றும் பாசிச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியை தழுவார்கள் என்பது நிச்சயம், மக்கள் இப்போது அமைதியை விரும்புகிறார்கள். குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அனைவரும், நாட்டின் அமைதி, முன்னேற்றத்தை பெரிதும் விரும்பி அதன்படி தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அதன் காரணமாக தான், கனழை, பெருவெள்ளம், நிலச்சரிவு கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முஸ்லிம்கள், எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்களை அர்ப்பணித்து மக்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே போகலாம். அதில் ஒன்றுதான் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 பேரை துணிச்சலுடன் எலி வளை தொழில் நுட்பம் மூலம் முஸ்லிம் தொழிலாளர்கள் காப்பாற்றியதை கூறலாம். எனவே, இந்திய முஸ்லிம்களையும் அவர்களின் சேவைகளையும் பாசிச அமைப்புகள் பாராட்டவில்லை என்றாலும், அவர்களை பார்த்து, இந்தியர்கள் இல்லை என இனி ஒருபோதும் கூறாதீர்கள். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள். நாட்டின் விடுதலைக்காக போராடி, உயிர் தியாகங்களை செய்தவர்கள். இதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, இனி வரும் நாட்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களையும் நேசிக்கும், அன்பு செலுத்தும் பண்யை நாம் வளர்த்துக் கொண்டால், அதன்மூலம் நாடு உண்மையான வளர்ச்சியை எட்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, November 29, 2023

தடையே இல்லை.....!

கல்வியில் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை.....!

கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் எப்போதும் அழிக்க முடியாத பெரும் செல்வமாகும். நாம் சம்பாதிக்கும் பணம், வசதி, வாய்ப்புகள் அனைத்தும் நம்மை விட்டு பிரிந்தால் கூட, கல்வியறிவு மட்டும் நம்மிடையே எப்போதும் குடியிருக்கும். அதன்மூலம் நாம் ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். தற்போது மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, படிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞர்கள் மத்தியில், கல்வி குறித்த தேடல்கள் அதிகரித்து வருகிறது. எந்த படிப்புகளில் சேர்ந்தால், வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கலாம் என்ற ஆர்வம் இளைஞர்களிடையே இருந்து வருகிறது. அதன் காரணமாகதான் சிறந்த பல்கலைக்கழங்களை தேர்வு செய்யும் மனநிலை அவர்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எவை, அங்கு எப்படி கல்வி சொல்லித் தரப்படுகிறது. அதன்மூலம் கிடைக்கும் விசாலமான அறிவு என்ன, பயன் என்ன போன்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் இருப்பதை நாம் தற்போது காண முடிகிறது. 

அதேநேரத்தில், படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், படிப்பு வாழ்க்கைக்கு எந்த பலனையும் தராது என்ற ஒரு சிந்தனை சிலரிடம் இருந்து வருகிறது. அந்த சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. எனவே, கல்வியில் ஆர்வம் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்யும் போக்கு தற்போது நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த மூளை சலவை செய்யும் நடவடிக்கைகளை இளைஞர்கள் புறக்கணித்துவிட்டு, தங்களுடையே முழு கவனத்தை கல்வியில் அதாவது படிப்பில் செலுத்த வேண்டும். அதற்காக ஆர்வம் கொண்டு, கடினமாக உழைத்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். கல்வியை தவறவிட்டவர்கள், தங்களுக்கு வயது ஆகிவிட்டது. இனி படித்து என்ன பயன் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. கல்வியில் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆந்திரா முதியவர் சாதனை:

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள போடோவரிபாலிம் கிராமத்தில் வசிப்பவர்  ரவி ஸ்ரீனிவாஸ் ராவ். 53 வயதான இவரும், இவரது குடும்பமும் விவசாயத் தொழிலுடன் தொடர்புடையது.  கிராமத்தில் பிறந்த வளர்ந்தாலும், ஸ்ரீனிவாஸ் ராவிற்கு கல்வி மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது பட்டப்படிப்பை அவர் கடந்த 1993ஆம் ஆண்டு முடித்தார். அறிவியலில் பட்டம் முடிந்த ராவ்,  மருத்துவமனை நிர்வாகத் துறையில் சேர்ந்து நெல்லூர், ஓங்கோல், கர்னூல் ஆகிய இடங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றினார். தற்போது விஜயவாடாவில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் கிளஸ்டர் தலைவராக  அவர் பணியாற்றி வருகிறார்.

அறிவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ராவ், தனது குழந்தைகளை உயர்கல்விக்கு ஆளாக்குவதில் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை. ராவின் மூத்த மகன் யஷ்வந்த் ஒரு மருத்துவர்  அத்துடன் குழந்தை மருத்துவராகவும் பணிபுரிகிறார். அவரது இரண்டாவது மகன் கரண் ஐஐடி பாட்னாவில் பி.டெக் முடித்து தற்போது தரவு விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

792 ஆன்லைன் படிப்புகளை முடித்த சாதனை:

கற்றலுக்கு வயதை ஒரு தடையாக மக்கள் பார்க்கும் உலகில், 53 வயதான ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் ஆன்லைன் கற்றலில் மூலம் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். கல்வி மற்றும் கற்றல் மீதான அவரது ஆர்வம் காரணமாக, ராவ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 792 ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்து அனைத்துப் படிப்புகளிலும் நன்கு தேர்ச்சிப் பெற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்கள் வரை நடத்தும் இந்தப் படிப்புகளில் சேர்ந்த அவர் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். 

அத்துடன், ரவி ஸ்ரீனிவாஸ் ராவின் கல்வி தாகம் குறையவில்லை. ஆயிரம்  ஆன்லைன் படிப்புகளை முடிக்க வேண்டும் என்பது தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கேம்பிரிட்ஜ் டிஜிட்டல் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலக சுகாதார நிறுவனம், எம்ஐடி போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் படிப்புகளை ராவ் முடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவலாகும். அதுமட்டுமின்றி கேம்பிரிட்ஜ் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் ராவ் முடித்துள்ளார். 

'ஹெல்த்கேர் இண்டஸ்ட்ரியில் டிஜிட்டல் விளக்கம்' என்ற தலைப்பில் அவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தார். ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் தனது சாதனைகளின் மூலம் ஒரு கலங்கரை விளக்கமாக மாறினார், குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு கற்க ஆர்வம் இருந்தால், உலகில் உள்ள அனைத்து அறிவையும் கற்றுக்கொள்ளலாம் என்ற செய்தியை அவர் வழங்கியுள்ளார்.

குடும்பம் அளித்த ஊக்கம்:

தனது கல்வி ஆர்வம் மற்றும் ஆன்லைன் படிப்புகள் குறித்து கருத்து கூறியுள்ள ராவ், “தான் ஆன்லைன் படிப்புகளைப் படிக்கத் தொடங்கியபோது, ​​​​தன்னுடையே குழந்தைகள் தன்னை ஊக்கப்படுத்தினர் என்றும் அவர்களும் தனக்கு வழிகாட்டினார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  இன்று தான் எதைக் கற்றுக்கொண்டாலும், அதற்கு முக்கிய காரணம் தன் குழந்தைகளும் மனைவியும் தனக்கு அளித்த நிறைய உதவிகள், உற்சாகம், ஊக்கம் ஆகியவை முக்கிய காரணம் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுவரை 792 படிப்புகளை முடித்து இருப்பதாகவும்,. குறைந்தபட்சம் ஆயிரம் ஆன்லைன் படிப்புகளைக் கற்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் ராவ் கூறியுள்ளார். ஒருவர் விரும்பினால், உலகில் எதையும் சாதிக்கலாம் என்றும் அதற்கு தாமே நல்ல எடுத்துக்காட்டு என்றும் ரவி ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.  

வயது தடையே இல்லை:

நாம் எந்தவொரு துறையிலும் சாதிக்க வேண்டுமானால், அதற்கு நல்ல கல்வி மிகவும் அவசியம். எனவே, நம் இளைஞர்கள் எப்போதும் கல்வி என்ற உயர்ந்த இலக்கை  அடைய தொடர்ந்து ஆர்வம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் கற்றுக் கொண்டே இருப்பதில் தான் சுகம் அதிகம். கல்வியறிவு என்பது சமூகத்தில் ஒருவரை உயர்ந்த இடத்தில் கொண்டு சென்று வைக்கும் ஒரு  ஆயுதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வயதாகிவிட்டது, இனி படித்து என்ன பயன் என யாரும் நினைத்துவிடக் கூடாது. கல்வியில், படிப்பில் சுவை கண்ட மக்களை பார்த்து அதன் அருமை குறித்து கேட்டால், நீங்கள் ஆச்சரியம் அடையும் வகையில் உங்களுக்கு பல நல்ல  தகவல்கள் கிடைக்கும். அதன்மூலம், கல்வி மீது உங்களுக்கே புதிய ஆர்வம் பிறந்துவிடும். அத்தகைய செல்வம்தான் கல்வி செல்வமாகும். 

வயது ஆகிவிட்டது எனவே ஒதுங்கிவிடலாம் என்று நினைக்காமல், ஓய்வு நேரங்களில், ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழ் தெரிந்தவர்கள் உர்தூ, அரபி, ஆங்கிலம் என பல மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தியா உட்பட உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள், ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல், தபால் மூலம் கூட மொழி குறித்த படிப்புகளை சொல்லித் தருகின்றன. இந்த படிப்புகளில் சேர்ந்து புதிய மொழிகளை அறிந்துகொள்வதுடன், அந்த மொழியில் சிறப்பு பெற்று பட்டங்களை பெறலாம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் பாடங்கள் மூலம் நமது அறிவு விசாலமாகி வாழ்க்கை மேன்மை அடையும். அதன்மூலம், உலகம் குறித்த நம்முடையே பார்வை, எண்ணங்கள் ஆகியவற்றில் நல்ல புரிதல் ஏற்பட்டு, மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் உருவாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Thoughts - சிந்தனைகள்...!

அன்பு என்பது நெல் மாதிரி. போட்டாதான் முளைக்கும். வம்பு என்பது புல் மாதிரி. எதுவும் போடாமலே முளைக்கும்.

================================

Instead of day dreaming, spend your day working on your dream.

==============================

Do not over think. Let it go. You cannot control everything.

==========================

Be Positive With Your Own Thoughts.

========================

There is always a chance to start again and to succeed again.

===========================

நாம் எல்லோரும் செய்யும் ஓரே தவறு, நம்மை விட்டுவிட்டு பிறரை திருத்த முயல்வதுதான்.

===========================

Take responsibility of your own happiness, never put it in other people's hands.

===========================

Small steps lead to big results.

=============================

Enjoy the results of your hard work.

=======================

If you want to fly, give up everything that weighs you down.

======================

Right attitude never takes you to wrong direction.

==========================

விரிக்காத வரை சிறகுகள் கூட பாரம்தான். விரித்து பறந்தால் வானம் கூட தொட்டு விடும் தூரம் தான்.

==========================

Noting belongs to us, even the air we breathe must be exhaled.

======================

Since everything is a reflection of our minds. Everything can be changed by our minds.

======================

Wasted time is worse than wasted money.

======================

நீங்கள் நிற்பது பயிற்சி தளம். கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துவிட்டால் பின்பு எல்லாமே இங்கு பாடம் தான்.

===========================

Life is continuous process of learning from experiences, both the good and the bad.

======================

கனமழை....!

சென்னையில் 29.11.2023 அன்று மாலை முதல் கனமழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.



எழுத்துகள்....!

சமூக உணர்வுடன் கூடிய எழுத்துக்கள். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே....!




ராகுல் காந்தி உறுதி....!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு....!



Tuesday, November 28, 2023

பழைய சோறு.....!

 

பழைய சோறு எனும் அமிர்தம்…..!

இந்திய கூட்டுக் குடும்பங்களில் பழைய சோறு என்ற உணவு உண்ணும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்து வந்தது. மிகப்பெரிய கூட்டுக் குடும்பங்களில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் பழைய சோற்றுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் நிலையும் இருந்து வந்தது. முதல் நாள் இரவுவே பழைய சோறுக்காக முன்பதிவு நடைபெறும் வழக்கமும் இருந்தது. ஆனால், தற்போது நவீன நாகரிக உலகில், பழைய சோற்றின் அருமை ஏனோ இளம் தலைமுறையினருக்கு சரியாக தெரியவில்லை. பழைய சோறு சாப்பிடுவது கவுரவக் குறைச்சல் என்ற மனப்பான்மை இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால், பழைய சோற்றின் பக்கம் அவர்கள் கவனம் சிறிதும் செல்வதில்லை. மாறிவரும் உணவுப் பழக்கங்களால், உடலுக்கு தீமை விளைவிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு, பின்னர் அதன்மூலம் பல்வேறு உடல் நோய்களுக்கு இன்றைய இளைஞர் சமுதாயம் ஆளாகி பாதிக்கப்பட்டு வருகிறது. உடலுக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியம் என்பதை ஏனோ இளைஞர்கள் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். வேகவேகமாக சாப்பிட்டு, விரைவு விரைவாக பணிகளுக்கு செல்லும் பழக்கம் இருப்பதால், எப்போதும் ஒருவித மன உளைச்சலுக்கு இன்றைய இளைஞர் சமுதாயம் ஆளாகி வருகிறது.

சரி பழஞ்சோறு அதாவது பழைய சோறு என்பது என்ன? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்ன? என்பதை கொஞ்சம் தெரிந்துக் கொள்வோமா!

பழைய சோறு ஒரு அமிர்தம்:

பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். குடும்பங்களில் சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்யும் வழக்கம் இருந்து வந்தது. தற்போதும் ஒருசில குடும்பங்களில் இந்த வழக்கம் இருக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் பழைய சோறு உண்ணும் பழக்கத்தை இன்னும் கைவிடவில்லை. இதனால், அவர்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும், தெம்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறார்கள். பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாக பழைய சோறு இருந்து வருகிறது. நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சோற்றில் அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டு வந்தால், அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். `பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமை குணப்படுத்தலாம் என்று மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நன்மையோ நன்மை:


இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருக்கும் உணவுதான் பழைய சாதம். பழைய சோறு ஒரு எளிய உணவுதான். ஆனால், இதிலுள்ள சத்துகள் ஏராளம். பழைய சோற்றில் உள்ள சத்துகள் நமக்கு முழுவதும் கிடைக்க வேண்டுமானால், அதற்காக நாம் சில முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பழைய சோற்றில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். இப்படி கிடைக்கும். சத்துக்கள் மூலம், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உருவாகும். சிலர் பழைய சோற்றை எடுத்துக் கொள்கிறேன் என்ற பெயரில், காலையில் வடிக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, பின்னர் மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி சாப்பிடுவது அதிக பலனை தராது என பழைய சோறு குறித்து ஆய்வு செய்த சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது, பழைய சோறு என்பது, தண்ணீர் ஊற்றிவைக்கும் சாதம் நொதித்தலுக்கு உட்பட வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். வடித்த சாதத்தை மண் பானையில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைக்க வேண்டும். பானையை முழுவதுமாக மூடிவிடாமல் சிறிது காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். . சாதம் நொதிக்க வெயில் காலத்தில் 8 முதல் 10 மணிநேரமும், மழைக்காலத்தில் 10 முதல் 12 மணிநேரமும் எடுத்துக்கொள்ளும். பழைய சோற்றை நொதிக்க வைக்க மண்பாண்டமே சிறந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது மண்பாண்டங்களை பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவது வேறு விஷயம். ஆனால், மண்பாண்டங்கள் மூலம் உணவுகளை தயாரித்து சாப்பிடுவது எப்போதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனை தரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மண் பானையில் நொதிக்க வைத்த பழைய சாதத்தைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மேலும் நொதித்தலுக்கு உட்பட்ட சோற்றில் லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. தவிர இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.

உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு:

பழைய சோறு நம் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்குச் சிறந்த உணவாக இருந்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குகிறது. தினமும் காலையில் ஏழு மணி முதல் எட்டரை மணிக்குள் காலை உணவாகப் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என சித்த மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். அத்துடன் பழைய சோற்றில் தான் பி6, பி12 ஏராளமாக இருப்பதால், கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகும் என நாட்டு வைத்தியர்கள் சொல்வதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

காலையில் உணவாக இந்த பழைய சோற்றை சாப்பிட்டு வந்தால்,  உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத்  தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். இதேபோன்று,, பழைய சோற்றுத் தண்ணீ‘ரை அதாவது நீராகாரம் என்று அழைக்கப்படும் இந்த நீரை தினமும் குடித்துவந்தால், அது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.  குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பழைய சோற்றில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுகிறது. அத்துடன் உடலை சீராக இயங்கச் செய்கிறது. பழைய சோற்றை நாள் தோறும் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுவதும் சோர்வின்றி வேலை செய்ய பழைய சோறு மிகவும் உதவியாக இருக்கும் என்றும், .அலர்ஜி,  அரிப்பு போன்ற பிரச்சினைகள் கூட பழைய சோற்றை சாப்பிடுவதால் சரியாகி விடும் என்றும் இந்திய பாரம்பரிய மருத்துவ உலகம் சொல்கிறது.

இனி கவுரவம் பார்க்க வேண்டாம்:

நாள்தோறும் காலையில் பழைய சோற்றை சாப்பிட்டு வந்தால்,  வயிறு தொடர்பான நோய்கள்  குணமாகும். உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும் தன்மை பழைய சோற்றுக்கு உண்டும். அலர்ஜி, ஒவ்வாமை போன்றப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும் உணவாக பழைய சோறு இருந்து வருகிறது.

இப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த அமிர்தமான பழைய சோற்றை உண்ணதான் தற்போது மேற்கிந்திய நாடுகளின் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அங்குள்ள சில பிரபல உணவு விடுதிகளின் உணவுப் பட்டியலில் பழைய சோறும் ஒன்றாக இருந்து வருகிறது. நம் நாட்டில் கூட ஒருசில நகரங்களில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் பழைய சோறு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் சாலையோர உணவு கடைகளில் கூட, பழைய சோறு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டு, தங்களது உடல்நலனை பாதுகாப்பதுடன், பொருளாதார நிலையையும் சீர் செய்துக் கொள்கிறார்கள். சமூகத்தின் அடித்தள மக்கள், தொழிலாளர்கள், உடல் உழைப்பாளிகள் சாப்பிடும் உணவு பழைய சோறு என்ற மனப்பான்மையில் இருந்து உடனடியாக விலகி, இந்த உணவை சாப்பிடுவதில் நாம் கவனத்தை திருப்ப வேண்டும். சில விஷயங்களில் நாம் சிறிதும் கவுரவம் பார்க்கவே கூடாது. அதில் ஒன்று தான் பழைய சோறாகும். பழைய சாதத்தை சாப்பிடும் விஷயத்தில் சிறிதும், கவுரவம் பார்க்கக் கூடாது என்பதை எப்போதும் மனதில் நிலைநிறுத்துக் கொண்டு, இனி நாம் செயல்பட வேண்டும். பழைய சோறு சாப்பிடுவதை கேவலமாக நினைத்தால், பின்னர் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகி, சிகிச்சைக்காகவே மருத்துவமனைகளுக்கு ஏராளமான பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும் என்பதை மறந்துவிடாமல் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன இனி சிறிதும் கவுரவம் பார்க்காமல், பழைய சோற்றை சாப்பிடும் பழக்கதை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக வாழ்வோமா…!

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

வாழ்க்கையில்....!

வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்....!




 

உங்களுக்கு விருப்பமா....?

இதய நோய்கள் வராமல் தடுக்க உங்களுக்கு விருப்பமா....?

அப்படியெனில் இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்...!!


உலகம் முழுவதும் மக்களிடையே தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் முன்னிலையில் இருந்து வருகின்றன. தினசரி நாளிதழ்களை திருப்பினால், இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இளைஞன் பலி என்ற செய்தி நம் கண்ணில் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்ட் அட்டாக் என்ற சொல் மிகமிக குறைவாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் மத்தியில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க, அதிகரிக்க, இதய மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் இதய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதய நோயாளிகளால், இந்த மருத்துவமனைகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. 

சரி, இதயம் ஆரோக்கியமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் வாழ வேண்டும்? மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இதய நோய்களில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நம்முடைய பழக்க வழக்கங்கள் மூலம் இதய நோய்களில் இருந்து ஓரளவுக்கு நிச்சயம்  தப்பிக்க முடியும். அத்துடன் ஆரோக்கிய எண்ணங்கள் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். 

எண்ணங்களின் தாக்கம்:

ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனது எண்ணங்களை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. எண்ணமே வாழ்வு என்ற சொல்லை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அது உண்மைதான். மனிதன் எதை எண்ணுகிறானோ, அதன்படியே அவனது வாழ்க்கை அமைகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும். எனவே தான் எப்போதும் ஆரோக்கியமான எண்ணங்களின் மத்தியில் நாம் இருக்க வேண்டும். வாழ வேண்டும்.  ஆரோக்கியமான, நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், மனிதனை எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் வாழ வைக்கும். 

அதேநேரத்தில், ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்கள் மனிதனின் வாழ்க்கையை சிதைத்துவிடும். இதனை பலரது வாழ்க்கையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். நல்ல செல்வ வசதியுடன் வாழும் பலர், ஆரோக்கியமற்ற எண்ணங்கள் மூலம் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் உணராமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். கொடூர எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கையில்  ஒருபோதும் ஆனந்தத்தை கொடுக்காது. ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்களால், இதயம் தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகும். இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள் என்பது அறிவார்ந்த உண்மையாகும். 

மருத்துவர்கள் கருத்து: 


இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன என மனநல மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்  உள்ளது. ஹார்ட் அட்டாக் வர மனிதர்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், அதிகளவு உடற்பயிற்சி என பல காரணங்களை மருத்துவர்கள் அடுக்கினாலும், எதிர்மறை எண்ணங்கள் உடல்நலத்தை மிகவும் பாதிக்கிறது என்றும் இதய சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் இதய நோய்ப் பிரிவு மையங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும், எதிர்மறை எண்ணங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், இது இதயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. 

நாள்தோறும் எதிர்மறை எண்ணங்களுடன் நாம் வாழ்ந்தால், உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள இதய நிபுணர்கள், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்க்களில் அடைப்பு ஏற்பட, ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்களே முக்கிய காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்மறை எண்ணங்களால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாகவும், அது இதயத்தை மிகவும் பாதிக்கிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். 

எதிர்மறை எண்ணங்களால், பயம், படபடப்பு, பதற்றம், உருவாகி உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் என்றும், இதன் காரணமாக, நீரழிவு நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் உருவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுவே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வர முக்கிய காரணம் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  எதிர்மறை எண்ணங்களால், சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி, பின்னர், அவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்க தொடங்கி விடுகிறது என்றும் மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, எதிர்மறை எண்ணங்களில் இருந்து நாம் உடனடியாக விடுதலை பெற வேண்டும். 

ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்கள்:


ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணங்கள் மனிதனுக்கு எப்போதும் உற்சாகத்தை தந்துக் கொண்டே இருக்கும். நேர்மறையான எண்ணங்களை கொண்ட மனிதனின் வாழ்க்கையில் நாள்தோறும் மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வீட்டில் ஆனந்தம் குடி புகுந்து, அது எப்போதும் நிலைத்து நிற்கும். கடினமாக சூழ்நிலையிலும் எதையும் சமாளிக்கும் சக்தியை ஒருவருக்கு நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் தரும். ஒருவரை பற்றி நீங்கள் நினைக்கும் நேர்மறையான எண்ணங்கள் உங்களை நேர்மறையான செயல்களை அதாவது நல்ல அழகான செயல்களை செய்ய தூண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நல்ல செயல்களை செய்துக் கொண்டே இருந்தால், அதன் தாக்கம் நம் உடலிலும் பிரதிபலிக்கும்.  அத்துடன், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். 

எனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உருவாகாது. இதன் காரணமாகதான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சென்றதற்கு, அவர்களின் நேர்மறை எண்ணங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குரோத எண்ணங்கள் ஒருபோதும் உடல் ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்காது. நல்ல ஆரோக்கியமான உணவு, நல்ல ஆழ்ந்த உறக்கம், நல்ல உடற்பயிற்சி ஆகியவை எப்படி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் தேவையாக உள்ளதோ, அதுபோன்று, ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். 

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:

ஆரோக்கியமான நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் மட்டுமே போதும், இதய நோய்கள் வராமல், அல்லது இல்லாமல் நாம் வாழ்ந்துவிடலாம் என்று நினைப்பது, அல்லது எண்ணுவது மிகவும் ஆபத்தானது. நல்ல எண்ணங்களுடன் நம்மிடையே நல்ல பழக்க வழக்கங்களும் தொடர்ந்து இருக்க வேண்டும். சரியான அளவுக்கு உணவு, நல்ல தூக்கம், முறையான ஓய்வு, போன்ற பழக்க வழக்கங்களை நாம் வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்துடன்,   அனைத்துத் தரப்பு மக்களையும் அன்புடன் நேசிக்கும் பண்பு நம்மிடம் இருக்க வேண்டும். பிறருக்கு உதவும் குணம் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு அன்புக்கரம் நீட்டி, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். 

"உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் (புன்னகை) செய்வதும் கூட ஒரு தர்மமே"  என்ற நபிமொழியை நாம் கவனத்தில் கொண்டு, எல்லோரையும் நேசிக்கும் உயர்ந்து குணத்துடன் வாழ்ந்தால், இதய நோய் பிரச்சினைகள் நம்மை அண்டாது என உறுதியாக கூறலாம்.

வாருங்கள்...இனி வரும் நாட்களில்,  நம்முடைய வாழ்க்கையை நேர்மறை எண்ணங்கள் மூலம் நிரப்பி மகிழ்ச்சியமான வாழ்க்கையாக மாற்றுவோம். அதன்மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற்று எந்தவித இதய நோய்களும் வராமல், பாதுகாப்புடன் வாழுவோம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சோனியா காந்தி வேண்டுகோள்...!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெலுங்கானா மக்களுக்கு வேண்டுகோள்.....!



Monday, November 27, 2023

பறவைகள....!

பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்...!

அழகிய பறவைகளின் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்...!!



தெலங்கானாவில் முழக்கம்...!

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்:

ஹைதராபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மது அசாருத்தீனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம்பூர் எச். அப்துல் பாசித், உர்தூ மொழியில் வீர முழக்கம்.



தமிழர்கள்.....!

தமிழர்களின் பெருமைகளை கொஞ்சம் அறிந்து கொள்வோமா....!



அசாருத்தீனுக்கு ஆதரவாக...!

காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மது அசாருத்தீனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம்பூர் எச்.அப்துல் பாசித், ஹீப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரம்.



அப்துல் பாசித் பிரச்சாரம்...!

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம்....!

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ள இ.யூ.மு.லீக். தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம்பூர் எச்.அப்துல் பாசித் இன்று ஹைதராபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.



Sunday, November 26, 2023

இப்ராஹிம் பாய்....!

" வெற்றிக்கு தேவைப்படும் துணைக் காரணங்கள்.....!"

இப்ராஹிம் பாய்...!

என் சகோதரர்கள் நடத்தி வந்த பீடி கம்பெனியில் பணிபுரிந்து ஊழியர்...

என் பள்ளி பருவத்தில், நான் கம்பெனிக்கு செல்லும்போது அவரை அடிக்கடி சந்திப்பது உண்டு...

குறிப்பாக, அதிகாலை நேரங்களில் செல்லும்போது, தினமணி நாளிதழை மிகவும் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருப்பார் இப்ராஹிம் பாய்...

அவர் படித்து முடித்த பிறகுதான், தினமணியை நாங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும்...

அதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்...

அதனால் சில நேரங்களில் இப்ராஹிம் பாய் மீது கோபம் ஏற்படும்...

கம்பெனிக்காக தினமணி நாளிதழை கடையில் இருந்து வாங்கி வரும் இப்ராஹிம் பாய் ஒவ்வொரு செய்தியின் ஆழத்திற்கு சென்று வருவார்...

தலையங்கம் முதல் விளையாட்டு செய்திகள் வரை ஒன்றை விட மாட்டார்...

பள்ளி பருவத்தில் எங்களுக்கு தினமணியில் வரும் சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை படிக்க ஆர்வம் இருக்கும்...

ஏன், சினிமா செய்திகள் பக்கமும் கவனம் செல்லும்...

ஆனால், இப்ராஹிம் பாய் வெகுநேரம் தினமணியை எடுத்துக் கொள்வதால், பொறுமை இழந்து நாங்கள் வீட்டிற்கு திரும்பி விடுவோம்...

இதனால், மறுநாள், பழைய செய்தித்தாளை எடுத்து படிக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும்...

ஆனால், ஒரு விஷயம் மட்டும் இப்ராஹிம் பாய் எங்களுக்கு சொல்லித் தருவார்... 

எந்த செய்திகளை அவசியம் படிக்க வேண்டும்...

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன...தினமணி எப்படி தலையங்கம் தீட்டியுள்ளது..

வகுப்புவாத கட்சிகள் எவை... 

இப்படி பல செய்திகள் குறித்து சிறு பாடம் நடத்துவார் இப்ராஹிம் பாய்...

அப்போதெல்லாம், அது எனக்கு பெரிதாக தென்படவில்லை...

ஆனால்,  இன்று பல்வேறு ஊடகங்களில் நான் பணிபுரிய வாய்ப்பு கிட்டியபோது, இப்ராஹிம் பாயின் நினைவுதான் அடிக்கடி வந்து செல்லும்...

என் வளர்ச்சிக்கு என் குடும்பம்,

என் தாய்,

என் சகோதரர்கள்

என் சகோதரிகள் 

என பலர் காரணமாக இருக்கிறார்கள்...

ஏன், உறவினர்கள் கூட என் வளர்ச்சியில் அக்கறை கொண்டார்கள்...

அதனால் நான்,

மணிச்சுடர் நாளிதழ்,

சன் தொலைக்காட்சி, 

மக்கள் தொலைக்காட்சி

ஜி தமிழ் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ஜி செய்தி தொலைக்காட்சி

இமயம் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ராஜ் தொலைக்காட்சி

என பல ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன்...

இவற்றிற்கு எல்லாம் காரணம் என்னுடைய உழைப்பு, என்னுடைய அறிவு, என்னுடைய திறமை என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை...

ஒரு முறை ஆனந்த விகடன் இதழில் கவிபேரரசு வைரமுத்து எழுதியிருந்தார்.

" ஒரு மரத்தின் பலம் 

 மரத்தில் இல்லை..

 அது மண்ணைச் சார்ந்து,

 நீரைச் சார்ந்து, 

 காற்றைச் சார்ந்து, 

 வெளிச்சத்தைச் சார்ந்து,  

 இருக்கிறது....

 மரம், 

 நானாக வளர்ந்தேன்

 என்று சொல்வது

 அறியாமை...

 எல்லா மனிதர்களின்

 வெற்றிக்கும்

 துணைக் காரணங்கள் 

 தேவைப்படுகின்றன...

 எனக்குக் கிடைத்த 

 துணைக் காரணங்கள்

 என்னைவிட

 வலிமையானவை

 என்பதால்

 நான் நிமிர்ந்து

 நிற்கிறேன்...

 அவர்களுக்கு 

 நன்றி பாராட்டுவது

 என் கடமை....."

இவ்வாறு தனது வெற்றிக்கு காரணமானவர்கள் குறித்து கவிபேரரசு வைரமுத்து மிக அழகாக குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்றுதான், என்னுடைய வாழ்விலும் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்...

என் வளர்ச்சிக்காக என்னை சுற்றியுள்ளவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்...

அதில் ஒருவர்தான் இப்ராஹிம் பாய்...

எனக்காக அவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை என நீங்கள் நினைக்கலாம்...

ஆனால், என்னுள் இருந்த ஊடக திறமையை வெளிச்சத்திற்கு வர அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது...

செய்திகள் குறித்து ஒன்றும் அறியாத பள்ளி பருவத்தில், பல விஷயங்களை கூறியவர் இப்ராஹிம் பாய்...

அப்போது எனக்கு அது புரியாமல் இருந்திருக்கலாம்...

ஆனால், தற்போது நான் செய்தி ஊடகங்களில் நல்ல திறமையை வெளிப்படுத்துவதற்கு அவரும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது...

அதன் காரணமாகவேதான், இப்போது, டீம் ஒர்க் (ஒன்று கூடி குழுவாக பணிபுரிதல்)

மூலம் நல்ல பலனை பெறலாம் என உறுதியாக நம்பி அப்படியே பணிபுரிந்து வருகிறேன்.

என்னால்தான் அனைத்தும் என்ற நினைப்பு என் உள்ளத்தில் சிறிதும் ஏற்படுவதில்லை...

ஊடகமே ஒரு டீம் ஒர்க்தான்... அப்படி பணி புரிந்தால்தான் நல்ல வெற்றியை நல்ல ரிசல்ட்டை சுவைக்க முடியும்....

சிலர் நினைப்பதுபோன்று அல்லாமல், டீம் ஸ்பிரிட்டோடு பணிபுரிய என் பள்ளி பருவத்தில், ஒன்றும் அறியாத பருவத்தில் இப்ராஹிம் பாய் சொல்லிய பல செய்திகள் இன்று எனக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றன...

திடீரென இப்ராஹிம் பாயின் நினைவு வந்தது....

எனவே, எழுதிவிட்டேன் சில வார்த்தைகளை...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குறுகிய தூக்கம்.....!

 

குறுகிய தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்…!


உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே தற்போது இந்த  பழக்கம் இருந்து வருகிறது. அதாவது, சிறிய தூக்கம் என்ற பழக்கத்திற்கு அவர்கள் ஆளாகியுள்ளார்கள். வாழ்க்கையில் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை கொண்டு, இயங்கி வரும் மனிதன், தன்னுடையே, உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல்வேறு நிலைகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். இத்தகையை நிலையில் இருந்து மீண்டு வர மனிதன் தன்னுடையே பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதன்மூலம், தனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும்.

குறுகிய தூக்கம் ஆபத்து:

ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு சுமார் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். அது அவசியம் மட்டுமல்ல கட்டாயமும் கூட. ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்துள்ள பல வரங்களில் தூக்கமும் ஒன்றாகும். அழகிய ஆழ்ந்த உறக்கம், மனிதனுக்கு உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். அத்துடன் சிறப்பான தூக்கம் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பணிகளில் ஈடுபட ஆர்வத்தை கொடுக்கும்.  இந்த உண்மையை தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால், தங்கள் வழக்கம் போல தூங்குவதை பழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் சிறிதும் உணர்ந்துகொள்ளவில்லை என்றே கூறலாம். குறுகிய தூக்கம் போட்டு, மீண்டும் பணியில் ஈடுபடுவது சரியான அணுகுமுறை இல்லை. ஆரோக்கியமான உணவு எப்படி உடல்நலத்திற்கு முக்கியமாக உள்ளதோ, அதுபோன்று, ஆரோக்கியமான தூக்கமும் மிகமிக அவசியம். தூக்கம் விவகாரத்தில் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அப்படி அலட்சியமாக இருந்தால், பின்னர் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆய்வில் தகவல்:


ஆஸ்திரேலியாவில் தூக்கம் குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, குறுகிய தூக்கம், பகல்நேரத் தூக்கம், ஷிப்ட் வேலை மற்றும் நீண்ட தூக்கம் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு விவரங்களில், வயது, பாலினம் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), சர்க்காடியன் ரிதம்-சீர்குலைக்கும் நடத்தைகள், ஷிப்ட் வேலை உட்பட, இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருப்பதை நிரூபிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சமரசம் செய்யப்பட்ட தூக்க ஆரோக்கியம் அல்லது இரவு ஷிப்ட் வேலை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் அனைத்து வயதினருக்கும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது என்பதை தாங்கள் கண்டறிந்ததாக மெல்போர்னில் உள்ள பேக்கர் ஹார்ட் மற்றும் நீரிழிவு நிறுவனத்தின் இணை பேராசிரியர் மோராக் யங் கூறியுள்ளார். சர்க்காடியன் தாளங்கள் ஒத்திசைவு இல்லாமல் இருப்பது இரத்த அழுத்தத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றும் யங் மேலும் தெரிவித்துள்ளார்.

தூக்கம் மிகமிக அவசியம்:


ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நிரந்தர இரவு ஷிப்ட் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கலப்பு ஷிப்டுகளில் வேலை செய்பவர்களும் உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் காட்டியுள்ளனர். சுவாரஸ்யமாக, அதிக நேரம் தூங்குவது சர்க்காடியன் தாளங்களில் இடையூறு விளைவிக்கும் விளைவைக் கொண்டிருந்தது, யங் கூறியுள்ளார்.

"ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க ஏழு மணிநேர தூக்கம் உகந்த தூக்கம் என்று கண்டறியப்பட்டது,"என்றும் யங் தெரிவித்துள்ளார்.  "பெரியவர்களுக்கு மிகக் குறைந்த தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது) மற்றும் அதிக தூக்கம் (ஏழு மணிநேரத்திற்கு மேல்) எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

"நிரந்தர இரவு ஷிப்ட் பணியாளர்கள் இரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய உயர்வைக் காட்டினர், ஆனால் சுழலும் ஷிப்டுகளில் பணிபுரியும் நபர்களும் உயர்ந்த நிலைகளைக் காட்டினர், இருப்பினும் நிரந்தர இரவு ஷிப்ட் தொழிலாளர்களைப் போல குறிப்பிடத்தக்கதாக இல்லை. "குறுகிய தூக்கம் மற்றும் ஷிப்ட் வேலை இரத்த அழுத்தத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது என்பதையும் தங்கள் தரவு காட்டுகிறது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை தந்த வரம்:

உடலின் சர்க்காடியன் கடிகாரம் மனித உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாடு, அறிவாற்றல், இதய துடிப்பு மற்றும் தூக்கத்தில் விழித்திருக்கும் நடத்தை உட்பட கிட்டத்தட்ட அனைத்து செயல்முறைகளையும் நிர்வகிக்கிறது. உடலின் இயல்பான உயிரியல் தாளங்களில் ஏற்படும் இடையூறுகள் உடலை ஒத்திசைக்காமல் விட்டு, சர்க்காடியன் திரிபுகளை உருவாக்கி, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். "தினசரி ஒளி-இருண்ட சுழற்சிகள், உணவு உட்கொள்ளல் மற்றும் ஷிப்ட் வேலை போன்ற பாரம்பரியமற்ற நடத்தை மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் தூண்டப்படும் செயல்பாட்டு குறிப்புகள் ஆகியவற்றிற்கான எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் சவால்கள், முறையான மற்றும் செல்லுலார் மட்டத்தில் சாதாரண உயிரியல் தாளங்களின் பராமரிப்பை மோசமாக பாதிக்கலாம் என்று யங் எச்சரித்துள்ளார்.

எனவே, குறுகிய தூக்கம் அல்லது எப்போது பார்த்தாலும் தூக்கம் என்ற பழக்கங்களை நாம் விட்டுவிட வேண்டும். இயற்கை தந்த அழகிய வரத்தை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தூக்கம் விவகாரத்தில் மனிதர்கள் செயல்பட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. என்ன, தூக்கம் தொடர்பான விவகாரத்தில் இனி சரியான அணுகுமுறையை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தயாராகி விடுவோமா?

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நல்ல மாற்றத்திற்கு.....!

 

நல்ல மாற்றத்திற்கு தயாராகிவிட்ட இந்திய மக்கள்....!


இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழவே விரும்புகிறார்கள். அதன்மூலம் நாடு வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பது 140 கோடி இந்திய மக்களின் ஆசை.  ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக,  நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. நல்ல நாட்களை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக, ஒன்றியத்தில் பதவி ஏற்றப் பிறகு, நல்ல நாட்களை, வளர்ச்சியான நாட்களை, அமைதியான நாட்களை, பெண்களுக்கு பாதுகாப்பான நாட்களை வழங்கியதா அல்லது கிடைத்ததா என வினா எழுப்பினால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரே சமயத்தில் இல்லை, இல்லவே இல்லை என்றே ஒருமித்த குரலில் பதில் கூறுவார்கள்.

குறிப்பிட்ட ஒற்றை கலாச்சாரத்தை அனைத்து தரப்பு மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகள் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என பாசிச அமைப்புகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றன. இதற்கு மக்களிடையே ஆதரவு இல்லாத போதும், அதை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல தரப்பட்ட மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் கொண்ட இந்திய நாட்டில், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கம் நிச்சயம் வெற்றி பெறாது என்பதை நன்கு தெரிந்துக் கொண்டும், இல்லை நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும். பின்பற்ற வேண்டும். இல்லையெனில் நீங்கள் இந்தியர்கள் இல்லை என ஒரு பாசிச கும்பல் தொடர்ந்து மிரட்டி வருகிறது.

முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்:


இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பில், அவர்கள் மீதான வன்மம் பாசிச கும்பல்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஹலால் உணவு உண்ணக் கூடாது., ஹலால் இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என தற்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை நாடு இன்னும் மறக்கவில்லை. இதேபோன்று ஒரே சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம் என தொடர்ந்து முஸ்லிம்களை குறி வைத்தே ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் தரப்பட்டு வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் முஸ்லிம் மாணவ மாணவிகள், மத ரீதியாக புண்படுத்தப்படுகிறார்கள். உளவியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவியை பார்த்து நீ மாட்டுக்கறி சாப்பிடும் பெண் தானே என பள்ளி ஆசிரியை கேவலமாக அவமானப்படுத்தியதை எப்படி மறக்க முடியும். இப்படி சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். தங்களுடைய முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள், அவமானங்கள் ஆகியவை இனி தொடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கிலும் ஓர் இறைக் கொள்கை என்ற உயர்ந்த நெறி தங்களுக்கு பிடித்த காரணத்தாலும், இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள். இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்தபிறகும், நாட்டின் மீது உண்மையான பற்றுகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், சீக்கியர் என பாகுபாடு காட்டாமல், அனைத்து தரப்பு மக்களையும் நேசித்து, அன்பு செலுத்தி இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல மக்களை பார்த்து, நீ பாகிஸ்தானுக்கு ஓடு என பாசிச அமைப்புகள் எப்படி கூறலாம்.

மக்கள் மனங்களில் மாற்றம்:

இத்தகையை நெருக்கடியான சூழ்நிலையில் தற்போது நாட்டு மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கி இருப்பதை நாம் உணர முடிகிறது. இரு சமூகங்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பாசிச அமைப்புகள் திட்டம் திட்டி வரும் நிலையில், அதனால் நாட்டிற்கும் தங்களுக்கும் எந்த பலன் இல்லை என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக வட மாநில மக்களிடையே தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.



அண்மையில் நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் இந்த மாற்றத்தை நாம் காணலாம். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநில மக்கள், பாசிச அமைப்புகளை பார்த்து கேள்வி கேட்டதை சமூக வலைத்தளங்கள் மூலம் நன்கு அறிய முடிந்தது. இந்து-முஸ்லிம் பிரச்சினையை தவிர நாட்டில் வேறு பிரச்சினைகளே இல்லையா என மக்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாசிச அமைப்புகளின் வேட்பாளர்கள் திணறினர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதார முன்னேற்றம் என வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து நீங்கள் ஏன் வாக்குகளை கேட்பதில்லை என பாஜகவை பார்த்து இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் வினா எழுப்பினார்கள். தற்போதும் எழுப்பி வருகிறார்கள். இதன்மூலம் நாட்டு மக்கள் மனங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவே நாம் உறுதியாக நம்பலாம்.

மாற்றத்தை நோக்கி மக்கள்:


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜக, மிகப்பெரிய அளவுக்கு சாதனைகள் எதுவும் செய்யவில்லை. மாறாக, வெற்று முழக்கங்கள் மூலம் மட்டுமே நாட்டு மக்கள் அக்கட்சி ஏமாற்றி வருகிறது. அத்துடன் வரும் தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் சாதனை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு, வாக்குகளை பெற்று விடலாம் என அக்கட்சி நினைத்துக் கொண்டு இருக்கிறது. மேலும்,  சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பிரித்து அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள் திட்டம் போட்டு வருகின்றன.

ஆனால், பாசிச அமைப்புகளின் இந்த திட்டங்களை பெரும்பான்மையின மக்கள் தற்போது நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். மக்களை பிரித்து அதன்மூலம் லாபம் பெறும் இந்த முயற்சிக்கு வரும் நாட்களில் மக்களிடையே ஆதரவு சிறிதும் கிடைக்காது என்பதை நாம் உறுதியாக கூறலாம். அதற்கு முக்கிய காரணம், மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மை பண்பாட்டை விரும்புகிறார்கள். மதசார்பற்ற கொள்கையை விரும்புகிறார்கள். சகோரத்துவத்தை நேசிக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களும்  அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில், இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு அவர்களின் மனங்களில் மாற்றதை உருவாக்கி வருகிறது. எனவே தான் இந்திய மக்கள் தற்போது நல்ல மாற்றதை நோக்கி பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துவிட்டார்கள் என உறுதியாக கூற முடியும். இந்திய மக்களின் இந்த மாற்றம், நாட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நிச்சயமாக கூறலாம். மக்களை குழப்பும் திட்டங்கள் இனி எடுபடாது என்பதை தற்போதைய நாட்டு நடப்புகள் மூலம் அறிந்துகொண்டுள்ள பாசிச அமைப்புகள், மிகப்பெரிய திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பதை ஏற்படுத்தலாம். எனவே, நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, இனி வரும் காலங்களில் நாட்டில் எப்போதும் அமைதி நிலவ, தங்களது உண்மையான பங்களிப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் இந்திய நாடு அனைத்து துறைகளிலும்  உலக அரங்கில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேறிய நாடாக மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி மக்கள் பயணம் தொடங்கி விட்டதால், நிச்சயம் இந்தியாவிலும் நல்ல மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பலாம்.

- எஸ்..அப்துல் அஜீஸ்