Friday, November 10, 2023

என்ன வழி….?

 

மருத்துவம்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்ன வழி….? 

உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பாதிப்புக்கு ஆளாகும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கியமாக இருந்து வருகிறது. அத்துடன், உயர் இரத்த அழுத்தம் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாகவும் உள்ளது. இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் மக்கள், நாள்தோறும் மருத்துவர்களை சந்தித்து, தங்களது வாழ்க்கையில் ஈட்டிய பணத்தை அதற்காகவே செலவழித்து வருகிறார்கள். அப்படி, செய்தாலும் கூட, இந்த நோய்களில் இருந்து முழுமையான நிவாரணம் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால் நாள்தோறும் மன வேதனையில் வாழும் நிலை பலருக்கு உருவாகியுள்ளது. நீரிழிவு நோயை மட்டும் வைத்துக் கொண்டு, ஏராளமான மருத்துவ வணிக நிறுவனங்கள், தற்போது நல்ல வருவாய் ஈட்டி வருகின்றன. உலகம் முழுவதும் நீரிழிவு நோய் மையங்களும் நவீனமாக அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிக்சை அளித்து வருகின்றன. இருந்தும், நீரிழிவு நோய் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

நவீன வாழ்க்கை முறை:

உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் நோய்களுக்கு முக்கிய காரணம், மனிதனின் நவீன வாழ்க்கை முறையே ஆகும். இயற்கையை மீறி, மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு செயல்படுவது நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணமாகும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை விட்டுவிட்டு,இரசாயன உரங்கள் மூலம் பொருட்களை உற்பத்தி செய்வதால் அதன் பாதிப்பு, மக்களை அடைகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மக்கள் மருத்துவர்கள் தினமும் நாடிச் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல், மக்களின் வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பது இல்லை. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும், வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதையடுத்து, பல்வேறு மருத்துவ வல்லுநர்கள், புதிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அவர்கள் ஒருவகையில் வெற்றியும் கண்டு, மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பாதையை காட்டுகிறார்கள்.

இயற்கை மருத்துவம்:


நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறை மூலம் நல்ல தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அத்துடன் இயற்கை மருத்துவம் மற்றும் , மூலிகை மருந்துகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.  அந்த வகையில் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் அதிகரிப்புக்கு மத்தியில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம், நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய மூலிகை கலவைகளை கொண்டு, 14 நாட்களுக்குள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அரசு ஆயுர்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தியது. உதவிப் பேராசிரியர் பிரபாஸ் சந்திர பதக் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின் முடிவில், பிஜிஆர்-34, ஆரோக்யவர்த்தனி வதி, சந்திரபிரபாவதி மற்றும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் உள்ளிட்ட ஆராய்ச்சி அடிப்படையிலான பாரம்பரிய மருந்துகளின் கலவையை நோயாளிக்கு பரிந்துரைத்தது. ஒரு குறிப்பிட்ட உணவு மற்றும் தினசரி ஒரு மணிநேர நடைப்பயணம் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களையும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. .

14 நாட்களில் பலன்:

நீரிழிவு நோயாளிகளுக்கு 14 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் சிகிச்சை சிறிது மாற்றப்பட்டது. இந்த நேரத்தில், நோயாளிகளுக்கு  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  உதாரணமாக, சேர்க்கையின் போது 254 mg/dl ஆக இருந்த சர்க்கரை அளவு 124 mg/dl ஆகக் குறைந்தது. ஆராய்ச்சி மருந்தான பிஜிஆர்-34-இல் உள்ள தருஹரித்ரா, கிலோ, விஜய்சார், குட்மார், மெத்தி மற்றும் மஜிஷ்தா ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் காட்டியுள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவியது.

இந்த மருந்தை நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கிறது."இந்த மூலிகை தயாரிப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவை அதிகரிக்கும் கூறுகளும் உள்ளன" என்று ஆய்வுக்குழு தலைவர்  சர்மா கூறியுள்ளார்.

நோயாளியின் உண்ணாவிரத சர்க்கரை அளவு, சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு 254 mg/dl ஆக இருந்தது, 124 mg/dl ஆக குறைந்தது. அதேபோல, காலை உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவு 413லிருந்து 154 mg/dl ஆகக் குறைந்தது. இந்த அளவுருக்கள் அனைத்தும் இரத்த சர்க்கரை அளவுகளில் பயனுள்ள குறைப்பைக் குறிக்கின்றன. முன்னதாக, டெல்லி எய்ம்ஸ் நடத்திய ஆய்வில், பிஜிஆர்-34 சர்க்கரையைக் குறைப்பதில் மட்டுமல்ல, உடல் பருமனையும் குறைக்கும் என்று கண்டறியப்பட்டது.

உணவுப் பழக்கங்கள்:

உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திய ஆய்வின்படி, 2019 மற்றும் 2021 க்கு இடையில் 4 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. எனவே, நீரிழிவு நோய்க்கு மருந்துகள் மட்டுமே தீர்வாக இருக்காது. மக்களின் வாழ்க்கை முறையும் மாற வேண்டும். ஆரோக்கியமான எண்ணங்களுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும் நமக்கு இருக்க வேண்டும். ஆரோக்கியமான எண்ணங்கள், உடலை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைக்க உதவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் இருக்கும். எனவே, நவீனக் கால நோய்களில் இருந்து நாம் விடுபட்டு, ஆரோக்கியமாக வாழ, நமது செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு, ஆரோக்கிய எண்ணங்கள், ஆரோக்கிய உணவுகள், அத்துடன் உணவுக் கட்டுப்பாடு, நல்ல உடற்பயிற்சி, நல்ல ஆன்மீக சிந்தனை என நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், பல நோய்களில் இருந்து நமக்கும் ஏக இறைவன் விரும்பினால் நிச்சயம் விடுதலை கிடைக்கும்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

No comments: