Thursday, November 30, 2023

எள்ளும், அதன் பலன்களும் ....!

 

எள்ளும், அதன் பலன்களும் – ஒரு தகவல்….!


இயற்கை மனித சமுதாயத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் உயிரினங்களுக்கு பல அற்புதமான உணவுப் பொருட்களை வாரி வழங்கியுள்ளது. சிலர் சாதாரணமாக நினைக்கும் உணவு வகைகளில், அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதை அறிந்தால், உண்மையிலேயே நாம் வியப்பு அடைவோம். அந்த வகையில் எள்ளும் ஒரு சாதாரண உணவாக மக்கள் மத்தியில் கருதப்பட்டு வருகிறது. ஆனால், சாதாரண இந்த எள்ளில், மிகப்பெரிய பலன்கள் குவிந்து கிடக்கின்றன.

எள்ளின் மருத்துவ குணங்கள்:

அதிக சத்துக்கள் நிறைந்த எள் பழங்காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வகை நோய்களுக்கு நாட்டு வைத்தியர்கள் எள்ளை மருந்தாக பயன்படுத்தி அதை பலவித நோய்களுக்கு ஆளான தங்களது நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அதன்மூலம் அந்த நோயாளிகளும் குணம் அடைந்து வருகிறார்கள்.

தற்போது குளிர்காலம் தொடங்கி இருப்பதால், எள்ளைப் பயன்படுத்துவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளை எள்ளில் அதிக கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. கருப்பு எள் விதைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க சிறந்தது.

எள் விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். இது மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது, சேதமடைந்த முடியை சரிசெய்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள எண்ணெய் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. எள் விதைகள் வீக்கம் காரணமாக தோல் மீது வலி தடிப்புகள் மற்றும் சிவத்தல் சிகிச்சை உதவும். ஆற்றலை வழங்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

எள் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது..

கருப்பு மற்றும் வெள்ளை எள்:


எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைளை அள்ளித்தருகின்றது. எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள்.

போதை பழக்கத்தை மறக்க:

தற்போது, இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் குடும்பங்களில் அமைதி சீர்குலைந்து கொண்டே போகிறது.. இளைஞர்களின் போதைப் பழக்கம் காரணமாக, பெண்களின் வாழ்வில் நிம்மதி அடியோடு போய்விட்டது. போதைப் பழக்கம் காரணமாக இளம் தம்பதிகளிடையே விவகாரத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த போதைப் பழக்கத்தை கைவிட அல்லது மறக்க எள் மிகவும் பயன் அளிக்கும் உணவாக உள்ளது. எனவே போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்.

அத்துடன், தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும். சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

இதேபோன்று, சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிமோனியா மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் தீரும். இவை செரிமான அமைப்புக்கு சிறந்தவை. அவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலை நீக்குகிறது. இது ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

மறக்க வேண்டாம்:


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களில் எள்ளு உருண்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறிய கடைகளில், எள்ளு உருண்டை அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சாலையோர கடைகளிலும், தள்ளு வண்டிகளிலும் எள்ளு உருண்டை விற்பனை செய்வதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மிகவும் குறைந்த விலை கொண்ட இந்த எள்ளு உருண்டையை, சிறிதும் கவுரவம் பார்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள். சாதாரண எள்ளு உருண்டை தானே என எண்ண வேண்டாம். ஏற்கனவே நாம் மேலே குறிப்பிட்டது போல, எள்ளில் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் ஏராளமாக இருப்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். சாதாரண உணவுப் பொருட்களில் தான் சக்திகள் அதிகம் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நாள்தோறும் அவற்றைப் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள். அந்த வகையில் எள்ளையும் இனி தினமும் ஒரு உணவாக நாம் எடுத்துக் கொள்வோமா…!

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: