Tuesday, October 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (102)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 102

டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலி......!

முசிறி பழைய பஸ் ஸ்டாண்டில், டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூன்று பேர் பலியாயினர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கணபதி. இவர், ஆற்று பாதுகாப்பு உபகோட்டத்தில், தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 13.10.14 அன்று திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நண்பர்களான, ஆட்டோ டிரைவர் செல்வம், கணேசமுருகன், ஆகியோருடன், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள, டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.

மது அருந்தி விட்டு, மூவரும், செல்வத்தின் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, கணபதிக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவரை, முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், வழியில் கணபதி இறந்தார்.இதையடுத்து, செல்வம், கணேசமுருகன் ஆகியோர், கணபதி உடலை முசிறி அரசு மருத்துமனையிலேயே விட்டு விட்டு, மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஆட்டோவிலேயே படுத்து துங்கியுள்ளனர்.காலை, அவ்வழியாக சென்றவர்கள், செல்வம் மற்றும் கணேசமுருகன் ஆகிய இருவரும், ஆட்டோவில் தூங்குவது குறித்து, அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.



அவர்கள் வந்து பார்த்த போது, இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. உறவினர்கள், அவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

தகவலறிந்த, ஆர்.டி.ஓ., ஜெய்னுலாப்தீன், ஆட்டோவில் இறந்து கிடந்த கணேசமுருகன், செல்வம் ஆகியோரின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மது பழக்கம் எப்படியெல்லாம் மனிதர்களின் உயிர்களை கொல்கிறது பார்த்தீர்களா சகோதரர்களே..

இருந்தும் நம்முடைய இளைஞர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகி வருகிறது..

எனவேதான் அரசு முன் கோரிக்கை வைக்கிறோம்...

தமிழகத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (101)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 101

சென்னையில் போதை டிரைவரால் நடந்த விபரீதம்....! 

தறிகெட்டு ஓடிய கார் மோதி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி....!!

சென்னை வேளச்சேரி விஜயநகரில் நள்ளிரவில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் நடைபாதையில் படுத்திருந்த தம்பதியும் மூதாட்டியும் உயிரிழந்தனர்.

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது.

குடிபோதையில் காரை ஓட்டிய டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி செல்லும் சாலையில் பாரதி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதை ஒட்டியுள்ள நடைபாதையில் ஆறுமுகம் என்பவர், மனைவி ஐஸ்வர்யா  ஒரு வயது மகன் அன்பு ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஐஸ்வர்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தம்பதியர் இருவரும் தெருக்களில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பால் கவர், பேப்பர், இரும்பு போன்றவற்றை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இரவில் நடைபாதையிலேயே படுத்து தூங்குவர்.

இந்நிலையில், 12.10.14 அன்று இரவு குழந்தையுடன் நடைபாதையில் படுத்திருந்தனர். இவர்களின் அருகில் 63 வயது மூதாட்டி ஒருவரும் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து பயங்கர வேகத்தில் தாறுமாறாக வந்த கார், திடீரென நடைபாதையில் ஏறியது.

அங்கு படுத்திருந்த ஒரு மாடும் நாயும் கார் மோதி இறந்தன. அதன்பிறகும் வேகம் குறையாத கார் தாறுமாறாக சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யா மற்றும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. மூதாட்டியை சிறிது தூரம் இழுத்துச் சென்ற கார், பஸ் நிறுத்தத்தில் இருந்த போர்டை இடித்துத் தள்ளியபடி சாலையில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி, அதே இடத்திலேயே இறந்தார்.



சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகம், ஐஸ்வர்யாவை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஏறி இறங்கியதில் ஐஸ்வர்யா வயிற்றில் இருந்த 8 மாத சிசுவும் இறந்தது. ஆறுமுகத்தின் மகன் அன்பு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

விபத்து நடந்த இடத்துக்கு அருகில் அமெரிக்கன் பள்ளி மற்றும் ஐ.டி. கம்பெனி இருப்பதால், இரவில் எப்போதும் போலீஸ் ரோந்து வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். நள்ளிரவில் விபத்து நடந்ததும் விரைந்து வந்த போலீஸார், காரில் இருந்து தப்பியோட முயன்ற 3 பேரை விரட்டினர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர்.

பிடிபட்டவர், பெருங்குடி கல்லுக் குட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர் கள் சசிக்குமார் தேவா ஆகியோரும் மது குடித்துவிட்டு காரில் வந்துள்ளனர்.

காரை சிவக்குமார் ஓட்டியுள்ளார். போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, 3 பேரின் உயிரை பறித்து விட்டனர்.

தப்பியோடிய டிரைவர் சசிக்குமார், தேவாவை போலீஸார் கைது செய்தனர்.

தொடரும் நடைபாதை விபத்து சோகங்கள்: கடுமை காட்டாத போலீஸார்.

சென்னையில் 2007-ம் ஆண்டு பணக்கார வியாபாரி ஒருவரின் 14 வயது மகன் தாறுமாறாக ஓட்டிய சொகுசு கார், கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை நடைபாதையில் படுத்திருந்த 11 பேர் மீது ஏறியது. இதில் இருவர் பலியாயினர். இளையோர் நீதிமன்றத்தில் சரண டைந்த அந்த சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளி தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் மீது ஷாஜி என்ற பணக்கார இளைஞர் குடிபோதையில் ஓட்டி வந்த கார் மோதியது. இதில், சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஷாஜி வெளிநாடு தப்பிச்செல்ல, வேறொருவரை சரண் அடைய வைத்து வழக்கை முடிக்கப் பார்த்தனர்.

இதேபோல கடந்த ஜூன் மாதம் சென்னை சூளையில் கீதா என்பவர், நடைபாதையில் அமர்ந்து தனது 3 வயது மகன் ஹிருத்திக் ரோஷனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் மோதியதில் சிறுவனின் 2 கால்களும் துண்டாகின. அதை மருத்துவர்களால் இணைக்க முடியாத நிலையில், தற்போதும் அந்த குழந்தையின் நிலை பரிதாபமாகவே உள்ளது. கீதாவுக்கும் காலில் படுகாயம் ஏற்பட்டது.

மும்பையில் 2002-ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் போதையில் ஓட்டிச் சென்ற கார் நடைமேடையில் ஏறியதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரில் கடந்த ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று எம்.ஜி. சாலையில் ஆட்டோ மீது மோதினார். இதில் ஒருவர் இறந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 A (அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்) பிரிவின்படி கொடுக்கப்படும் 3 ஆண்டு சிறை தண்டனை, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மது போதையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்று தெரிந்தே இந்த தவறை செய்கின்றனர். அதனால் மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு 304(2) பிரிவின் படி (மரணம் விளைவிக்கும் குற்றம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற பயங்கரமான விபத்துகளின்போது போலீஸார் வழக்கு பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுகின்றன. போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களில் பலர், வசதியானவர்களாகவோ அல்லது அதிகார பின்புலம் கொண்டவர் களாகவோ உள்ளனர். அதனால், அவர்களிடம் போலீஸார் கடுமையை காட்டுவதில்லை. சில நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பணத்தின் மூலம் வழக்கை தீர்த்து வைக்கவே முயல்கின்றனர்.

எது எப்படியோ, மதுவால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவது தொடர்கதையாகவே இருக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (100)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!" 

நாள் - 100



தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும்? 

மது அருந்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.......!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு.....!

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி என். கிருபாகரன் விருப்பம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம் பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படங்கள் தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

தற்போது வெளியாகும் சினிமாக்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், காட்டுமிராண்டித்தனமான சண்டைக் காட்சிகள், பெண்களை கேவலமாக சித்தரித்தல், மது குடித்தல் மற்றும் புகைப் பிடித்தல், கெட்ட நடத்தை உள்ளவர்களை நல்லவர்களாக சித்தரிப்பது, குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியன தேவையற்றதாக உள்ளது.

சினிமாக்களுக்கு தவறான தலைப்புகள் வைக்கப்படுகின்றன. தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தவறான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.

தமிழ் சினிமாவில் இவற்றைத் தவிர்ப்பது குறித்து திரையுலகினர் ஆலோசிக்க வேண்டும்.

பழைய சினிமாக்களில் அன்பு, பாசம், குடும்ப உறவு முறைகள் வளர்க்கப்பட்டதுபோல், இப்போது தயாரிக்கப்படும் சினிமாக்களிலும் காட்சிகள், கருத்துகள் இடம்பெற வேண்டும்.

சினிமா பணம் பார்க்கும் தொழிலாக இருந்தாலும், சமூகம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வலிமை சினிமாவுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது.

சினிமா மூலம் அமெரிக்காவில் ரீகன், அர்னால்டு, ஆந்திராவில் என்.டி.ராம ராவ், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆகியோர் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

சமூக பிரச்சினைகள் அடிப் படையில் பராசக்தி, ரத்தத் திலகம், நாடோடி மன்னன், பாசமலர், பாலும் பழமும், நெஞ்சில் ஓர் ஆலயம், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, இந்தியன் போன்ற சினிமாக்கள் எடுக்கப்பட்டன. இப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆனால், தற்போது தயாரிக்கப்படும் எல்லா படங்களும் சமூகத்துக்கு எதிர் மறையான கருத்துகளை பரப்புவதாக எடுக்கப்படுகின்றன. சினிமா தொழிலில் ஈடுபடுபவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிக்கக்கூடாது.



சென்சார் போர்டு அனுமதி வழங்கிய சினிமாக்களில்கூட மிருகத்தனமான வன்முறை காட்சிகள், ஆயுத கலாசாரக் காட்சிகள், நடு ரோட்டில் கொலை செய்யும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சென்சார் போர்டு உறுப்பினர்களின் மீதான முறை கேடு புகாரை நிராகரிக்க முடியாது.

சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருப்பவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டில் நியமனம் செய்யப்படுபவர்கள் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு, நேர்மையாக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். சென்சார் போர்டு சான்று வழங்கிவிட்டால், மறுபரிசீ லனைக்கு அவசியம் இல்லை என்ற ரீதியில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஹீரோக்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் மற்றும் அதர்ம செயல்களில் வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் இருக்கக்கூடாது. எதிர்மறையான தலைப்புகள், எதிர்மறைவான கதாபாத்திரங்கள், கருத்துகள் இருக்கக்கூடாது, சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகளும் இருக்கக்கூடாது.

நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா இருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மதுவுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரனுக்கு எமது பாராட்டுக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (99)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள்- 99

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம்.....!

இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம்....!!

டாஸ்மாக் கடைகளால் நாள்தோறும் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 14.10.14 அன்று போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விருதுநகர் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் முன்புறம் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஸ்நிலையம், நீதிமன்றம் எதிரில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனை செய்வதை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டம்  நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மதுவிற்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பினர்.

நியாயமான அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமலுக்கு வர வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, October 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (98)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "

நாள் - 98


கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்படுவது உறுதி........!

முதலமைச்சர் உம்மன் சாண்டி திட்டவட்டம்.....!!

கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று  உம்மன் சாண்டி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உம்மன் சாண்டி கடந்த 7.10.14 அன்று திருவனந்தபுரத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய உம்மன் சாண்டி,  “மதுபானம் கிடைப்பதை படிப்படியாக குறைத்து, வரும் 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயன்று வருகிறது என்றார்.

அரசின் நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை நோக்கமாகக் கொண்ட தங்கள் செயல்பாடுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நோக்கத்தில் விரும்பிய பலனைப் பெற மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார் உம்மன் சாண்டி.

கேரளத்தில், காந்தி ஜயந்தி, ஸ்ரீநாராயண குரு பிறந்த நாள், நல்ல வெள்ளி போன்ற விடுமுறை நாள்களில் மதுக்கடைகளை மூடுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 5 நட்சத்திர ஹோட்டல்கள் தவிர பிற ஹோட்டல்களில் இயங்கிவந்த சுமார் 700 மதுக்கூடங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கையாக, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது

கேரளாவை போன்று தமிழகத்திலும் விரைவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வர வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆவல். எதிர்பார்ப்பு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, October 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (97)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! "

நாள் - 97


தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உண்ணா விரதப் போராட்டம்......! 

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டி.தனசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் எங்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக்கில் பணி புரியும் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்கக் கோரியும் காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியபோது, “டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பாக பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும், மதுக்கடைகளை மூடிவிட்டு அனைவருக்கும் மாற்றுப்பணியை வழங்க வேண்டும் என்ற டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை ள் நிறைவேறும் வகையில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் நடந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிஜேபி  தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உரையாற்றும் போது, “தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றும் பணியாளர்களே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது நல்ல தொடக்கம் என்றார்.  இக்கோரிக்கை வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம் என்றும்,  உங்களுக்கு மாற்றுப் பணி கிடைக்க பொதுமக்களோடு இணைந்து போராடுவோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.



போராட்டததிற்கு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டனர். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பேசினர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து பெருந்திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களே போராட்டம் நடத்தியது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, மாநிலத்தில் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================