Tuesday, September 30, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (96)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 96

தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...!

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி வலியுறுத்தல்.....!!

கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அதற்காக அங்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் அரசின் இந்த நல்ல திட்டத்திற்கு அம்மாநில மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்..

குறிப்பாக பெண்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்...

இந்நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 30.09.2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பங்கேற்று பேசினார்.


அப்போது, பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கியதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

உண்மையான, சிறந்த தலைவர் என்றும், அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர் என்றும் உம்மன் சாண்டி கூறினார்.

கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர் காமராஜர் என்று கூறிய அவர், பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.


அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டார்.

அத்துடன் கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் மதுவிலக்கு குறித்தும் தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் உம்மன் சாண்டி.

மேலும், தமிழகத்திலும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்.

கேரளவை போன்று அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தும் என்று நம்புவதாகவும் உம்மன் சாண்டி நம்பிக்கை தெரிவித்தார்.

கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தியது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உம்மன் சாண்டி வேண்டுகோள் விடுத்து இருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று.



அவரது வேண்டுகோளை அதிமுக அரசு ஏற்று, தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதான், தமிழக மக்களின் ஆசை. எதிர்பார்ப்பு...

நல்ல நாள், விரைவில் மலரும் என நம்புவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, September 28, 2014

தீர்ப்பு.....!

தீர்ப்பு.....!  

சில சந்தேகங்கள்.....!!

சில கேள்விகள்.....!!!



அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

நான்கு ஆண்டுகள் சிறை....! 100 கோடி ரூபாய் அபராதம்....!!

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்...

இப்படி, ஜெயலலிதாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பு குறித்து தற்போது பல சந்தேகங்களையும் சில கேள்விகளையும் அதிமுக தரப்பு எழுப்பியுள்ளது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா...

இதனால், கர்நாடக மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.

இதேபோன்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

வழக்கு நடந்த இடம் கர்நாடகா..

நீதிபதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

அரசு தரப்பு வழக்கறிஞர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

இப்படி, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நடைபெற்ற வழக்கில், எப்படி நியாயம் கிடைத்து இருக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் அதிமுகவினர்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக போராடி, வெற்றியை கண்டு தமிழத்திற்கு பெருமையை சேர்த்த ஜெயலலிதாவை எப்படியும் பழி வாங்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார்கள் கர்நாடக மக்கள்...



அதற்கு சொத்துக் குவிப்பு வழக்கு சாதகமாக அமைந்து விட்டது என்பது அதிமுக தரப்பு வாதம்...

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், கோபத்தின் வெளிப்பாடாகவே அவரது தீர்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிமுகவினர்..

தீர்ப்பு நாளான 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாலை வரை நேரத்தை நீட்டி, பிறகு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி..

இதன்மூலம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது நிலையை குன்ஹா ஏற்படுத்தி விட்டதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.



காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவு இல்லாமல், தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த பொய்யான வழக்கிற்கு, திமுக ஆதரவு அளித்தது என்றும் குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு.

கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்ற ஆசையில், வழக்கை நடத்தி அதன்மூலம், தண்டனை பெற வைத்ததாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார்கள் அதிமுகவினர்.

இதனால், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு, தமிழகத்திற்கு திமுக துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு...



இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த தீர்ப்பை மேன்மைமிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, நீதிபதி குன்ஹா தீர்ப்பை வழங்கவில்லை என்றும் ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறியச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி குன்ஹா, நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டதாகவும், அபராதம் விதித்ததில் நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மாலனி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாகவும் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

ஆக, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவில்லை என்பது மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது.

நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை நீதிபதி குன்ஹா ஏற்படுத்திவிட்டதாகவும், நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மலானி கூறி இருப்பதில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது...

எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதிமுக தரப்பு எழுப்பும் சந்தேகங்களில், கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது...



மேலும் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி தெரிவித்த கருத்தால், அதிமுவின் வாதத்திற்கு மேலும் வலு சேர்ந்து இருக்கிறது.

இதன்மூலம், தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் ஓரு புதிய ஆதரவு, செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதற்கு இந்த தீர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================


Tuesday, September 23, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (95)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! "

நாள் - 95



சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சல்....!

டாஸ்மாக் கடை முன் நூதன போராட்டம்......!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுவுக்கு எதிராக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்கள்....

நூதன போராட்டங்கள்

உண்ணாவிரதங்கள்...

சாலை மறியல்...

பேரணிகள்....

என, மதுவிற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் கடந்த 21.09.2014 அன்று நடைபெற்ற நூதன போராட்டம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஆம்,

தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி சென்னை புது வாண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடைமுன் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்க தலைவர் ராமதாசன் தலைமையில் 10 பெண்கள் உட்பட 40 பேர் புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு  திரண்டனர்.

அங்கு சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து மது பானம் குடிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் பதறிப்போய் விலகி  ஓடினர்.

ஆனாலும் விரட்டி விரட்டி சென்று காலில் விழுந்தனர்.



குடிகாரர்களை பார்த்து சில பெண்கள் கைகூப்பி அழுது குடிக்காதீங்க அண்ணே..என்று வேண்டுகோள்  விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் திண்டாடினர்.

காலில் விழுந்து கெஞ்சியதாலும் அழுது கும்பிட்டு கேட்டதாலும் சில  குடிமகன்கள் சரக்கு வாங்காமல் திரும்பி சென்றனர்.

பலர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், பாட்டில்களை வாங்கினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மது பானங்களை வாங்கி சாலையில் போட்டு உடைத்தனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

மதுவிலக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டமும் இந்த  இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

மதுவுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டம் மக்களிடையே, குறிப்பாக மகா குடிகாரர்களிடையே விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இதுபோன்ற நூதன போராட்டங்கள் தொடர வாழ்த்துகிறோம்.

தமிழகம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மாற நாமும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

(நன்றி...தினகரன் நாளிதழ் (22.09.2014)
==================================

Sunday, September 14, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (94)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள் -94


சுற்றுலா முன்னேற்றத்துக்கு மது முக்கியத் தேவையல்ல....!

சுற்றுலாத்துறை வல்லுநர்கள் கருத்து....!!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுக் கொள்கையால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்கு மது ஒரு முக்கியத் தேவையல்ல என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு விடுதி நடத்தும் சிலர், "மது பானங்கள் கிடைப்பதைக் குறைப்பது, ஆரம்பத்தில் சுற்றுலாத் துறையை சற்று பாதிக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளனர்.



ஆனால், தகுந்த விழிப்புணர்வின் மூலம் அந்தத் தாக்கம் குறைந்துவிடும் என்றும், மதுவுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநில சுற்றுலாத் துறையின் வெற்றி, கேரளத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து சர்வதேச வான்போக்குவரத்து கூட்டமைப்பு முகவர்களின் இந்தியச் சங்கத்தின் தேசிய இயக்குநர் பி.பி. போஸ் கூறுகையில், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுவின் மீது ஆர்வமாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தங்களது உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் அதை கடைபிடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது மது அருந்துவதற்காக அல்ல என்றும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றைக் காணவே அவர்கள் வருவதாகவும் போஸ் கருத்து கூறியுள்ளார்.

எனவே, மது விற்பனைக்குக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தை சுற்றுலாப் பயணிகள் மதிப்பார்கள் என்றும் பி.பி.போஸ் தெரிவித்துள்ளார்.

மதுவை தடை செய்வதால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் எவ்வளவு பொய்யானது என்பதை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களே மறுத்துள்ளனர்.

சுற்றுலாச் செல்லும் அனைவரும் மதுவை விரும்பி அருந்துவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.




கேரள அரசின் புதிய மதுக் கொள்கை சரியானது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

தமிழகத்திலும் இதுபோன்ற புதிய மதுக் கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் கொண்டு வருவார்கள் என நாம் நம்புகிறோம்.



மதுவால் பெண்களுக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க உறுதியான நடவடிக்கையை, பெண்கள் மீது இரக்கம் காட்டும் முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுப்பார்கள் என நாம் உறுதியாக நினைக்கிறோம்.

மது இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மலருட்டும்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.
======================

சென்னையில் நான்.....! (16)

சென்னையில் நான்.....! (16)




ரயில் பயணங்களில்.....!

என்ன...சினிமா தலைப்பு போன்று இருக்கிறது என நினைக்கிறீர்களா...!

சினிமா தலைப்புதான்..

ஆனால்,

என்னுடைய சென்னை வாழ்க்கையில், புறநகர் ரயில்சேவை முக்கிய இடம் பிடித்துக் கொண்டிருப்பதால், அந்த ரயில் பயணங்களில்போது, எனக்கு ஏற்பட்ட பல சுவையான, கசப்பான அனுபவங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

மின்சார ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை என எப்படி நாம் அழைத்துக் கொண்டாலும்,
என்னை போன்று, சென்னையில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மின்சார ரயில் சேவை மிகவும் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

சென்னையின் முக்கிய அம்சமாக, அடையாளமாக விளங்கும்  மின்சார ரயில் சேவை, மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்..



மின்சார ரயிலில் பயணிப்பது ஒரு தனிச்சுகம்தான்.

அலுவலகம்,
வீடு,
சுற்றுலா,

என பல்வேறு இடங்களுக்கு, குறைந்த கட்டணத்தில், நம்மை விரைந்து சென்று சேர்க்கின்றன இந்த மின்சார ரயில்கள்.

எனவே, என்னை போன்று நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர், சென்னையில் மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கிறோம்.



சென்னையில், கடந்த 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முதல்முதலாக, மின்சார ரயில் சேவை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டபோது, குறைந்த அளவு மக்களே மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால்,

தற்போதே, நிலைமையோ அப்படி இல்லை.

தினமும் லட்சக்கணக்கான மக்கள், மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கின்றனர்.

சென்னை பாரி முனை பகுதியில் என்னுடைய ஊடக அலுவலகம் இருந்தபோது, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நான் தினமும் புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்வது வழக்கம்.

அப்போது, ரயிலில் பயணம் செய்யும்போது, பல விதமான மனிதர்கள், அவர்களில் சிலரின்  வினோத பழக்கங்கள் ஆகியவற்றை கண்டு வியப்பது உண்டு.

பயணச் சீட்டு வாங்காமல் தைரியாக வரும் மனிதர்கள்....

பெண்ணை சீண்டுவதற்காகவே வரும் இளைஞர்கள்...



நல்ல ஆடைகளை அணிந்துக் கொண்டு குடும்ப விளக்காக வரும் பெண்கள்...

ஏமாறும் மனிதர்களிடம், பொருட்களை, பணத்தை ஆட்டையை போடும் ஏமாற்று பேர்வழிகள்

என பலவிதமான மனிதர்களை, மின்சார ரயில் பயணங்களின்போது, நான் கண்டு இருக்கிறேன்.

நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் வந்து சென்றாலும், அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஆசைப்பட்டு, விபத்தில் சிக்கிக் கொள்ளும் பயணிகளை கண்டு கோபம் அடைந்தது உண்டு.

செல்போன்களில் பேசிக் கொண்டு, கடவுப் பாதையை கடந்து, மின்சார ரயிலில் அடிப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்கள், பெண்கள் என பலரை கண்டு நொந்தது உண்டு.



ரயில் பயணங்களின்போது, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி வரும் சிலர், பின்னர் நம்முடைய பொருட்களை, நமக்கே தெரியாமல் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது உண்டு.

சில நேரங்களில் பிறரை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மனித கூட்டங்களையும் நாம் மின்சார ரயில் பயணங்களின்போது பார்க்கலாம்.

இதுபோன்ற, பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது உண்டு.

எனவே, மின்சார ரயிலில் மட்டுமல்ல, பொதுவாக, ரயில் பயணத்தின்போது, பக்கத்தில் உட்காரும் நபர் குறித்து மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பேன்.

அதிகம் பேச்சு கொடுக்க மாட்டேன்.

பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதியில் அமருவதை தவிர்ப்பேன்.

இதற்கு முக்கிய காரணம், மின்சார ரயிலில் பயணித்தபோது எனக்கு கிடைத்த சில கசப்பான அனுபவங்கள்தான்.

சரி..

முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

நம்முடைய நண்பர்களில் சிலர், பயணச்சீட்டு வாங்காமலேயே ரயிலில் பயணம் செய்ததை கண்டு, ஒருநாள் எனக்கும் அந்த விபரீத ஆசை வந்தது.

ஏன் நாமும் பயணச்சீட்டு வாங்காமல் ஒருநாள் பயணம் செய்தே பார்க்கலாமே என நினைத்தேன்.

அப்படி, ஒருநாள் சென்றபோது, எப்போதும் வராத டிக்கெட் பரிசோதகர், நான் பயணம் செய்த அந்த நாள் மட்டும் ஏனோ வந்து, என்னை பிடித்துக் கொண்டார்.



டிக்கெட் கேட்டார்.

விழித்தேன். முழித்தேன்.

அபராதம் கட்டு என்றார்.

வேறு வழியில்லாமல், அபாரதம் கட்டி, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

அவமானமாக இருந்தது.

டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த தவறுக்காக, பின்னர் நான் வருந்தியது உண்டு...

இப்போது, டிக்கெட் வாங்கினாலும், அது பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்து வருகிறேன்.

எல்லாம் அனுபவம் தரும் பாடங்கள்தான்.

சில நேரங்களில் அறையில் தனிமையாக இருக்கும்போது, வெளியே செல்ல மனம் ஆசை கொள்ளும்.

அப்போது,


சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணம் செய்து, பின்னர் மீண்டும் திரும்பி வருவது உண்டு..

இதனால், மனம் லேசுபடும்.

மனிதக் கூட்டத்தைக் காணும்போது, சில கவலைகள் மறந்து போகும்...

இப்படி, பல நேரங்களில் கவலை மறக்க, சிரிக்க, சந்தோஷமாக இருக்க, மனித இனங்களை கண்டு ரசிக்க

மின்சார ரயிலில் பயணிப்பது உண்டு.

அதற்காக மின்சார ரயில் சேவை எனக்கு உதவி செய்து வருகிறது.

என்னுடைய சென்னை வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் பயணம், மின்சார ரயில் பயணம் என்றால் அது மிகையாகாது.

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, September 13, 2014

சென்னையில் நான்.....! (15)

சென்னையில் நான்.....! (15)


சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிதான்.

ஆம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை காண, எப்போதும் நான் ஆவலுடன் இருப்பதும் வழக்கம்.

சென்னை இசை விழா

சென்னை சங்கமம்



போன்ற நிகழ்ச்சிகளை போன்று, முதன்மையான பண்ப்பாட்டு திருவிழாவாக இந்த புத்தகக் கண்காட்சி இருந்து வருகிறது.

ஆனால்,

மற்ற நிகழ்ச்சிகளை போன்று இல்லாமல், அறிவு பசிக்கு விருந்தாக இந்த புத்தகத் திருவிழா அமைந்து இருப்பதால், மற்றவர்களை போன்று நானும், புத்தகக் கண்காட்சிக்கு சென்று, அங்கு அமைக்கப்படும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை கண்டு வியப்பது உண்டு.



என்னுடைய நிதி சக்திக்கு ஏற்ப, பல புத்தகங்களை வாங்கி வருவதும் உண்டு.

முதன்முதலாக கடந்த 1977ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலை பகுதியில் இருக்கும் மதரசா இ ஆசாம் பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.

அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.



ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானம்,

சென்னை டிரைவ் இன் ரெஸ்டாரண்ட்,

காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகம்

பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் மேனிலைப்பள்ளி வளாகம்

என பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழா, தற்போது, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.



புத்தகத் திருவிழாவில், புத்தகங்கள் மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான சி,டி.க்களும் விற்பனை செய்யப்படுவதால், அவற்றையும் மக்களை வாங்கிச் செல்வது உண்டு.

அத்துடன் தினமும் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அறிவு பசிக்கு நல்ல தீனி கிடைக்கிறது.

இந்த புத்தகத் திருவிழாவில், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மட்டுமல்லாமல், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், பதிப்பகங்களும் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கின்றன.



எனவே, இஸ்லாம் தொடர்பான பல அரிய புத்தகங்கள் இங்கு கிடைப்பதால், நான் மட்டுமல்ல, மாற்று மத சகோதரர்களும் அவற்றை ஆர்வத்துடன் அள்ளிச் செல்கின்றனர்.

இதனால்தான், சென்னையில் எனக்கு பிடித்த நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா (கண்காட்சி) இருந்து வருகிறது.



குறைந்த நாட்களே புத்தகத் திருவிழா நடத்தப்படுவதால், மீண்டும் அந்த திருவிழாவை காண எப்போதும் மனம் ஆவல் கொள்ளும்.

வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை காண, மனம் இப்போதே ஏங்கித் தவிக்கிறது.

இறைவன் விரும்பினால், நிச்சயம் அந்த திருவிழாவை கண்டு ரசிப்பேன்.



புத்தகங்களை வாங்கி வருவேன்.

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, September 11, 2014

சென்னையில் நான்......! (14)

சென்னையில் நான்......! (14)


சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா பீச் (கடற்கரை).

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து, அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை நீண்டுள்ள இந்த கடற்கரையின் நீளம் சுமார் 13 கிலோ மீட்டராகும்.

இதனால்தான், உலகில் உள்ள  மிக நீளமான கடற்கரைகளில், மெரினாவுக்கு 2வது இடம் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் மிகவும் தூய்மையாக இருந்ததால் புகழின் உச்சியில் இருந்த மெரினா கடற்கரை, தற்போது தூய்மை கெட்டு, மாசுபட்டு காட்சி அளிக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.



மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவுத்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரையை ஒட்டிய சாலையில், உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, திருவள்ளுவர் சிலை, அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல தலைவர்களின் சிலைகள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

அத்துடன் பாரம்பரியம் மிக்க ஒருசில கல்லூரிகளும் இந்த பகுதியில் நாம் காணலாம்..


கலங்கரை விளக்கம், மீன் அருங்காட்சியாகம், நீச்சல் குளம் ஆகியவையும் மெரினாவின் அழகிற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

இப்படி,

பல சிறப்புகளை கொண்ட மெரினா கடற்கரைக்கு நான் அடிக்கடி சென்று வருவது உண்டு.

திருவல்லிக்கேணி பகுதியில் தங்கி இருப்பதால், இந்த வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்து விடுகிறது.


காலை நேரங்களில் மெரினாவுக்கு சென்று நடைபயிற்சி செய்வது உண்டு.

அப்போது, அரசியல், சினிமா, சமூகம் என  பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை பார்க்கவும், சந்திக்கவும் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது உண்டு.

அதிகாலை நேரத்தில், மெரினாவில் நடைபயிற்சி செய்வர்களை காணும்போது, உள்ளத்தில் இயற்கையாகவே மகிழ்ச்சி பிறக்கும்.

மனிதர்களின் விதவிதமான முகங்கள், விதவிதமான பழக்கங்கள், வினோதமான செயல்பாடுகள் ஆகியவற்றை காணும்போது, இறைவனின் படைப்பு ஆற்றலை கண்டு வியப்பது உண்டு.


மாலை நேரங்களில் மட்டுமல்லாமல், காலை நேரத்திலும் மெரினாவில் காதல் ஜோடிகளை காணலாம்..

காதலர்கள் கொஞ்சி பேசும் அழகு,  சண்டையிட்டு பின்னர் இருவரும் சமாதானமாக செல்லும் காட்சி, சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்ளும் காட்சி, ஆகியவற்றை காணும்போது சிரிப்பு வரும். வேதனையும் பிறக்கும்.

மெரினாவில் சிறுவர்கள் விற்கும் தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, சுடான பஜ்ஜி, பேல் பூரி போன்ற உணவு பொருட்களை வாங்கி ருசித்து இருக்கிறேன்.



இன்றும் அவற்றை ருசிக்க மெரினாவுக்கு செல்வது உண்டு...

காந்தி சிலைக்கு பின்புறம், சிறுவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் ஸ்கேடிங் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

திருவல்லிக்கேணி பகுதியில் சகோதரர் எஸ்.ஆர்.கே. இருந்தபோது, மாலை நேரத்தில் அவருடன் சேர்ந்து அடிக்கடி மெரினாவுக்கு சென்று ஊடக விஷயங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்து  நீண்ட நேரம் விவாதித்தது உண்டு.



ஊடகத்துறையில் உள்ள பல நண்பர்களின் பிறந்த நாட்களை, கேக் வெட்டி மெரினாவில் கொண்டாடி மகிழ்ச்சி அடையும் நிகழ்ச்சிகள் இன்றும் என்னுடைய வாழ்வில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மாதம் ஒருமுறை கலந்துரையாடல்...

வாரம் ஒருமுறை கவிதை வாசிப்பு...

விரும்பும்போது அவசர ஆலோசனை

சமூக ஆர்வலர்களின் சந்திப்பு

என இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய வாழ்வில், மெரினா கடற்கரை ஒரு நல்ல இடமாக  இருந்து வருகிறது.



அத்துடன், மெரினாவின் இயற்கை அழகை எப்போதும் கண்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

மெரினா கடற்கரை இன்று மாசு அடைந்து இருக்கலாம்...

அதற்கு முக்கிய காரணம் மக்கள்தான்.

பொறுப்பு உணர்வு இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதால்தான், மெரினா மாசு அடைந்துள்ளது.

மாசு அடைந்த மெரினாவாக இருக்கட்டும்...

அழகான மெரினாவாக இருக்கட்டும்...

சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் இந்த மெரினா கடற்கரை, என்னுடைய வாழ்க்கையிலும் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.

மெரினாவை எப்படி என்னால் மறக்க முடியும்...?

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

வாழ்க்கையில் ஓர் இனிய நாள்.....!

வாழ்க்கையில் ஓர் இனிய நாள்.....!


எஸ்.ஆர்.கே.

செந்தில் ராஜ்குமாரை, இப்படிதான் நாங்கள் செல்லமாக அழைப்பது வழக்கம்.

கலகலப்பான இளைஞர்.

துடிப்பான வாலிபர்...

ஊடகத்துறையின் நல்முத்து...

இப்படி, அவரைப் பற்றி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம்...

சரி...

விஷயத்திற்கு வருகிறேன்.

எஸ்.ஆர்.கே. மற்றும் அவரது குடும்பத்தின் அன்பான அழைப்பின் பேரில், அண்மையில் சமயபுரம் சென்று இருந்தேன்.

என்னுடன் சகோதரர்கள் முருகேசன், தஷ்ணாமூர்த்தி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

எஸ்.ஆர்.கே.வின் வாழ்க்கையில் அது ஒரு இனிய தருணம்..

ஆம்...

அவரது வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் பங்கேற்க எஸ்.ஆர்.கே.வுடன், மற்றொரு ஜீவன் இணைந்த நாள் அது.

எஸ்.ஆர்.கே.வின் இனிய திருமணம் நடந்த நாள் அது.



07.09.2014 அன்று சமயபுரத்தில் எளிமையாக நடந்த எஸ்.ஆர்.கேவின் திருமணத்தில் நான் பங்கேற்று மணமக்கள் இருவரையும் வாழ்த்தியது எனக்கும் வாழ்க்கையில் ஓர் இனிய நாளாகவே இருந்தது.

என் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

மனம் ஆனந்தம் கொண்டது.



திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்தி திருமண அன்பளிப்பு வழங்குவது நமது மரபு.

தமிழ் கலாச்சாரம்.

இந்திய பண்பாடு...

அதன்மூலம், குடும்பங்களில், நண்பர்கள் வட்டத்தில் அன்பு மேலும் வளரும்...

பாசம் பிணைக்கும்..

அதன்படி,


நானும் மணமக்களை வாழ்த்தினேன்.

எஸ்.ஆர்.கே.விற்கு அழகிய பொன்னாடையை போர்த்தி, அவரை வாழ்த்தி, மகிழ்ச்சி அடைந்தேன்.

அத்துடன்,

மணமக்கள் இருவருக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த அழகிய (நூலை) புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தேன்.


அந்த இனிய தருணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்தான் இவை.

இந்த அழகிய புகைப்படங்களை நீங்களும் பார்த்து, மணமக்கள் இருவரையும் உங்கள் இருப்பிடத்தில் இருந்தே மனதார வாழ்த்துக்கள்.


அதன்மூலம் எஸ்.ஆர்.கே.வின் மண வாழ்க்கை இனிக்கட்டும்.



அவர் குடும்பத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.



எஸ்.ஆர்.கே. மற்றும் அவரது துணைவியாருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

சென்னையில் நான்......! (13)

சென்னையில் நான்......! (13)


சென்னைக்கு அழகு சேர்க்கும் பள்ளிவாசல்கள்....!

ஆம்.

இது உண்மைதான்.

சென்னை மாநகரில், என்னுடைய கண்கள் அதிகமாக தேடுவது பள்ளிவாசல்களைதான்.

சென்னையில் கிட்டதட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

மனிதனை புனிதனாக மாற்ற வழிவகை செய்யும் இத்தகைய, பள்ளிவாசல்களுக்கு சென்று  தொழுவது, மனதிற்கு அமைதியை, பெரும் நிம்மதியை தரும்.


சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழு வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

ஆனால், பணிச்சுமை, நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் என்னால் அது முடிவதில்லை.

எனவே, நான் தங்கியிருக்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களுக்கு அடிக்கடி, சென்று தொழுகையில் கலந்து கொண்டு வருகிறேன்.



குறிப்பாக,

திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல்
ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல்
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இருக்கும் மஸ்ஜித்தே குத்தூஸியா பள்ளிவாசல்,
கோஷா மருத்துவமனை அருகே இருக்கும் பள்ளிவாசல்,
ரத்னா கேப் அருகே இருக்கும் பழைய பள்ளிவாசல்,
ஜாம்பஜார் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்



என திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளும்போது, எனக்கு மனதில் அமைதி கிடைக்கும்.

தொழுகை முடித்து விட்டு, பள்ளிவாசலில் தனியாக அமர்ந்து இறைவனிடம் நேரில் பேசும்போது, பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

எனவே, சென்னையில் உள்ள பள்ளிவாசல்களை எப்போதும் என்னுடைய கண்கள் தேடிக் கொண்டே இருக்கும்.


சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது, (அண்ணா அறிவாலயத்தில் சன் டி.வி. அலுவலகம் இருந்த நேரம்) தி.நகர் பகுதியில் இருக்கும் அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்று தொழுகையில் கலந்து கொண்டது உண்டு.

அமைதியான, இயற்கையான சூழலில், அந்த பள்ளிவாசலில் தொழுவது தனிச்சுகம்தான்.



குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று, அந்த பள்ளிவாசலில் மவுலவி அவர்கள் எளிமையான உர்தூ மொழியில் செய்யும் பயான் (பிரச்சாரம்) உள்ளத்தில் அழமாக பதிந்து விடும்.

குறிப்பிட்ட ஒரு தலைப்பை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு, திருக்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி, நபி மொழிகளை கூறி, எளிமையான வார்த்தைகள், எளிமையான நடையில் மவுலவி அவர்கள், செய்யும் இந்த பயானை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...

எனவே, அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு செல்வதில் ஆர்வம் பிறக்கும்.



இப்போதும் நேரம் கிடைக்கும்போது, அஞ்சமன் பள்ளிவாசலுக்கு சென்று வருவது உண்டு.

இதேபோன்று, சென்னை அண்ணாசாலை பகுதியில் இருக்கும் மக்கா பள்ளிவாசலை குறிப்பிடலாம்..

சென்னை, மண்ணடி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களில் தொழுத அனுபவம் எனக்கு உண்டு.



பெரம்பூர் ஜமாலியா பள்ளிவாசல்...

என பள்ளிவாசல்களின் பட்டியல் நீளுகிறது...

சென்னையில் உள்ள  பல பள்ளிவாசல்களில் தொழுவதுடன், அந்த பள்ளிவாசல்களின் கட்டிட அழகை கண்டு ரசித்து வியப்பது உண்டு.

பல ஆண்டுகள் புகழுடன் விளங்கி வரும் சித்திக்சராய் பள்ளிவாசலின் கட்டிட அழகு என்னை மிகவும் கவரும்.



இதேபோன்று, பெரியமேட் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட பள்ளிவாசலின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

இங்கெல்லாம் தொழும்போது, உள்ளத்தில் இயற்கையாகவே உற்சாகம் பிறந்துவிடும்.



தேனாம்பேட்டை பள்ளிவாசல்,
அசோக்நகர் பள்ளிவாசல்,
கோடம்பாக்கம் பள்ளிவாசல்

என பல பள்ளிவாசல்களை சொல்லிக் கொண்டே போகலாம்...

இங்கு நான் குறிப்பிட்டது ஒருசில பள்ளிவாசல்கள் மட்டும்தான்...



சென்னையின் அழகு மேலும் கூடுவதற்கு, இங்குள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், மாற்று மத சகோதரர்களும்  சென்னையில் உள்ள அழகான பள்ளிவாசல்களை கண்டு வியப்பு அடைவது உண்டு...

மனம் அமைதி கொள்வது உண்டு...



எனக்கு மன நிம்மதியை கொடுக்கும் சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான  பள்ளிவாசல்களை, என் கண்கள் தேடிக் கொண்டே இருக்கும்...

சென்னையில் நான் இருக்கும் வரை...

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================