Thursday, September 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (92)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 92



நாடு முழுவதும் பூரண மது விலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...

காந்தியவாதி சசிபெருமாள் அறிவிப்பு...


நாடு முழுவதும் பூரண மது விலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் விரைவில் பொது நல வழக்கு தொடரப்படும் என்று தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாள்களாக சசிபெருமாள் இருந்து வந்த உண்ணாவிரதத்தை, ஒடிஸா மாநிலங்களவை உறுப்பினர் ஏ.வி. சுவாமி பழரசம் கொடுத்து 4.9.14 அன்று முடித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து சசிபெருமாள் பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  அப்போது, பூரண மது விலக்கு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது மாநிலங்கள் தொடர்பான விவகாரம் என்றும் அவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசைப் போல நடவடிக்கை மேற்கொண்டால் பரவாயில்லை என்றும்,  இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகவும், தம்மை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அழைத்துச் சென்று இதுதொடப்பாக பேசுவதாகவும், உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் சசிபெருமாள் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு செய்ததாக கூறிய சசிபெருமாள், இந்திய அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், போதைப் பொருள்களுக்குத் தடை விதிக்கக் கோரியும் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஏ.வி. சுவாமி, காந்தியவாதி என்ற முறையில் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வந்தாகவும்,இந்த விவ காரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் பேசும்போது, நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், மத்திய, மாநில அரசுகளைத் தொடர்பு கொள்வதற்கும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிடவும் அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

மதுவுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

No comments: