Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு - ஓர் பார்வை !

தமிழனின் பெருமையை உலகத்திற்கு தெரிவிக்கும் படம் ஏழாம் அறிவு !

கஜினியை மிஞ்சியப் படமாக இது இருக்கும் !

இப்படி, ஏழாம் அறிவு படம் குறித்து, அது வெளியாவதற்கு முன்பு பெருமைப்பட கூறினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்திய திரைப்படத்துறையில் நல்ல ஒரு திறமையான இளம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

நல்ல ஒரு கருத்தை உள்வாங்கி, தமிழனின் பெருமையை, வரலாற்றை பதிவுச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏழாம் அறிவு படத்தை எடுத்து முடித்துள்ளார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்க்கும் முன்பு, பல கற்பனைகள், பல எண்ணங்கள் என்னுள் வந்து வந்துச் சென்றன.

இது போன்ற எண்ணங்கள் இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இருந்தன.

ஆனால், படம் பார்த்த பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நல்ல ஒரு கருத்தை, டாகுமெண்டரி படம் போல் எடுத்து விட்டாரே என்றே எண்ணத் தோன்றியது.

ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்து,  படத்தை பார்த்தால்,  ஆரம்பமே சொதப்பி விட்டார் முருகதாஸ்.

சரி. என்னதான் செய்து இருக்கிறார் என மெனக் கெட்டு படம் பார்த்தேன்.

சூரியா சர்க்கஸ் கலைஞராக வருகிறார். ஒருசில வித்தைகள் செய்கிறார்.

திடீரென பாட்டு பாடுகிறார்.  சாலைகளில், சந்தைகளில் கூட்டத்தின் நடுவில் ஆடுகிறார்.

எல்லாம் சரி. படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா, என்றால் சிறிதும் இல்லை.

காட்சிகள் மனத்தில் ஒட்டவே மறுக்கின்றன.

கஜினியை மிஞ்சிய படமாக இருக்கும் என்ற ஏ.ஆர்.முருகதாசின் வார்த்தைகள், ஏழாம் அறிவில் சிறிதும் மெய்பிக்கப்படவில்லை.

கஜினி. கஜினிதான்.

அந்த பாடத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

அப்படி ஒரு விறுவிறுப்பை, காட்சி நகர்த்தலை, எடிட்டிங்கை செய்திருப்பார் முருகதாஸ்.

இது ஏழாம் அறிவில் மிஸ்சிங்.

போதி தர்மர். ஒரு வித்தகர். மருத்துவர். அவர் களறிக்கலையை சீனர்களுக்கு கற்று தந்து அங்கே தெய்வமாக மதிக்கப்படுகிறார்.

இதனை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை. அறிந்துக் கொள்ளவில்லை. தமிழரின் பெருமைகளை மறந்து விட்டோம்.

எல்லாம் சரி அய்யா. அதை எப்படி தமிழக, இந்திய இளைஞர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

ஆரம்ப காட்சிகளே விறுவிறுப்பாக அமைத்து இருக்க வேண்டும் அல்லவா.

இளைஞர்களை சீட்டின் நுணிக்கு கொண்டு வந்து, சுண்டி இழுக்க வேண்டும் அல்லவா.

இதையெல்லாம் செய்ய தவறி விட்டீர்களே முருகதாஸ்.

சரி வில்லன் ஜானி ட்ரை ஙயென் (Johnny Tri Nguyen)வரும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்றால், அவை அதிர்ச்சியைதான் ஏற்படுத்துகின்றன.

ஹிப்னாடிஸம் மூலமாகவும், நோக்குவர்மர் கலை மூலம் அவர் செய்யும் அட்டகாசங்கள், நம்பும்படியாகவா உள்ளது.

சாலைகளில் செல்லும் கார்களையும் மனிதர்களையும் தன்வசம் படுத்தி, சூர்யாவை வில்லன் ஜானி பந்து ஆடுகிறார்.

ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் சிரிப்பைதான் வரவழைக்கின்றன.

குழந்தைத்தனமாகதான் உள்ளன.

அதில் சிறிதும் லாசிக் இல்லை. நம்பும்படியாக இல்லை.

போதி தர்மர் குறித்து ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன செய்திகளை, காட்சிகளை ப்ளாஷ்பேக்கில் சொல்லி இருந்தால், படத்தில் ஒரு சுவை கிடைத்திருக்கும்.

இளைஞர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆரம்பமே, போதி தர்மர் குறித்து சொல்லிவிட்டு, படத்தை பாருங்கள் என்றால் யாருக்கு சார் படத்தின் மீது கவனம் செல்லும்.

உங்களுக்கு தமிழரின் பெருமையை எப்படியும் மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

நம் மண்ணின் பெருமையை சொல்லி ஆக வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருக்கிறது.

அதனால், கதை சொல்லும் பாணியில் சிறிது தவறு ஏற்பட்டு இருக்கிறது.

இசையிலும் இந்த முறை நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

ஓ ரிங்கா ரிங்கா பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.

அதேநேரத்தில் படத்தில் ஒருசில சிறப்பு அம்சங்கள் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

காட்சிகளை மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.
படம் பிடித்துள்ளீர்கள்.

பின்னணி இசையில் ஹாரீஸ் ஜெயராஜ், தனது வழக்கமான பாணியில் கலக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் கஜினியை மிஞ்சும் பாடமாக ஏழாம் அறிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

கடைசியாக முருகதாசுக்கு ஒருசில கேள்விகள்:

காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர் ஏன் அய்யா சீனாவிற்கு சென்றார்.

இங்கேயே இருந்து தமிழர்களுக்கு தன்னுடைய கலைகளை சொல்லி தந்து இருக்கலாம் அல்லவா.

தன்னுடைய மருத்துவச் சிகிச்சை முறைகளை தமிழக மக்களுக்கு சொல்லி தந்து இருந்தால், இங்குள்ள தமிழர்கள் இன்னும் பலன் அடைந்து இருப்பார்கள்.

போதி தர்மரை கொண்டாடி இருப்பார்கள்.

அவரது மருத்துவக் குறிப்புகள் இன்றைய இளம் மருத்துவர்களுக்கு பயன் அளித்து இருக்கும்.

ஆனால், கால்நடையாகவே சீனாவுக்கு சென்று சீன மக்களுக்கு போதி தர்மர் கலைகளை சொல்லித் தருகிறார். மருத்துவச் சேவை செய்கிறார்.

அதனால் அந்த மக்கள் அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படிதான் செய்ய வேண்டும்.

ஆனால், தமிழர்களாகிய நாம், போதி தர்மரை மறந்து விட்டோம், அவரது பெருமையை அறிய தவறி விட்டோம் என நீங்கள் கேள்வி எழுப்பி ஆதங்கப்படுவதில் சிறிது நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்திய மண்ணில் பிறந்து விட்டு, இந்திய காசில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் இளைஞர்களை போன்றுதான், போதி தர்மரும், சீனாவிற்கு சென்று இருக்கிறார்.
அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

சரி. சீனர்களுக்கு தற்காப்பு கலைகளையும், மருத்துவத்தையும் சொல்லித்தந்த அந்த உத்தமரை ஏன் அய்யா சீனர்கள் விஷம் வைத்து கொள்ள வேண்டும்.

அது எவ்வளவு பெரிய அநீதி.

தமிழருக்கு கிடைத்த அநியாயம்.

உங்கள் படத்தை பார்த்தபோது, போதி தர்மர் குறித்து நீங்கள் கூறிய கருத்துகள் குறித்து அறிந்தபோது, மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் உதிர்த்தன.

எது எப்படியோ, தமிழரின் பெருமைகளை அறிய வேண்டும். வரலாற்றை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் நீங்கள் செய்த முயற்சிக்கு தமிழர்களாகிய எங்கள் தரப்பில் உங்களுக்கு பாராட்டுகள் உண்டு.

அடுத்த படத்திலாவது, கதை சொல்லும் பாணியில் சிறிது கவனம் செலுத்துங்கள்.

கஜினி, ரமணா  போன்ற சுவையான படங்களை கருத்துடன் படைக்க முயற்சி செய்யுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, October 24, 2011

லிபிய முட்டாள்கள் !

லிபியாவை 42  ஆண்டுகள் வழி நடத்திச் சென்ற மம்மர் முஹம்மது அபு மின்யார் அல் கடாஃபி,  கடந்த 20 ஆம் தேதி புரட்சிப்டை என அழைக்கப்பட்ட அமெரிக்காவின் கூலிப்படையால், மிக கொடூரமாக, சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்.

சாத்தான் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கிய லிபிய மடையர்கள்,  பிசாசு இங்கிலாந்தின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளனர்.

42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கடாஃபி, அரேபிய நாடுகளின் ஒற்றுமைக்காவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும்  தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

லிபியாவில் மேலாதிக்க சக்திகள் கோலோச்சுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

மேலாதிக்க மற்றும் மேலை நாடுகளின் கலாச்சாரம்,  லிபியாவில் பரவுவதை கடாஃபி அனுமதிக்கவில்லை.

அரபு மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

வணிக நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு செய்து வந்த பிறமொழிகள் அகற்றப்பட்டு, அரேபிய மொழி அலங்கரிக்க தொடங்கியது கடாஃபியின் ஆட்சி காலத்தில்தான்.

அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு கடாஃபி கொஞ்சம் கூட அடங்கவில்லை.

அதனால்தான், லிபியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதற்கும் கடாஃபி கவலைப்படவில்லை.

தனது ராணுவ பலத்தை அணு ஆயுத சக்தி மூலம் அதிகரிக்க முயற்சி செய்தார்.

இது, ஓநாய் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாய் இங்கிலாந்திற்கு கலக்கத்தை உருவாக்கியது.

எப்படியும் கடாஃபியை வீழ்த்த வேண்டும் என இந்த இரு பிசாசுகளும் ரகசிய ஒப்பந்தங்களை செய்துக் கொண்டன.

அதற்காக சதி வலையை விரித்தன.


லிபியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும்.

விடுதலை என்ற பெயரில் அந்த நாட்டு மக்களை அடிமைகளாக மாற்ற வேண்டும்.

இது அமெரிக்காவின் எண்ணம்.

இதற்காக நீண்ட, நெடிய திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது அமெரிக்கா.

இங்கிலாந்துடன் கைகோர்த்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில மேலாதிக்க நாடுகளை இணைத்துக் கொண்டு,   விரிவான திட்டத்தை செயல்வடிவில் கொண்டு வந்தது.

இந்த சதிகளை புரிந்துக் கொள்ளாத கடாஃபி,  அமெரிக்காவின் வலையில் எப்படியோ சிக்கிக் கொண்டார்.

அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசியங்கள் தெரிவிக்க முன்வந்தார்.

லிபியா வளம் பெறும் என நம்பினார். நட்பு நாடுகளை உதாசீனம் செய்தார்.

இப்படிதான் அமெரிக்கா ஆசை வார்த்தை கூறியது.

இங்கிலாந்தும் அதைதான் கூறியதால், லிபியாவின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக தன்னை மறந்து, அணு ஆயுதங்கள் குறித்து விவரங்களை அளித்தார்.

லிபியாவில் இருந்த அணு ஆயுதங்களை ஒழிக்கப்பட்டன.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் திருப்தி அடைந்தன.

மீண்டும் புதிய திட்டம் தீட்டின.

 அது லிபிய அதிபர் கடாஃபியை கொல்வது என்பதுதான்.

அதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்த பிசாசு நாடுகள், எகிப்து உள்ளிட்ட ஒருசில அரபு நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டன.

லிபிய முட்டாள்கள் சிலரை வலைவீசி தேடி, தங்களுக்கு நண்பர்களாக மாற்றிக் கொண்டன இந்த பிசாசுகள்.

ஆசை வார்த்தைகளை அள்ளி வீசின.

இதில் மயங்கிய விழுந்த லிபிய முட்டாள்கள், அதிபர் கடாஃபிக்கு எதிராக புரட்சிப்படை என்ற பெயரில் புதிய படையை உருவாக்கி போராட ஆரம்பித்தன.

அதற்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளித்தன.

இதன்மூலம், 42 ஆண்டுகள் லிபியாவை வழிநடத்திச் சென்ற மாவீரன் கடாஃபிக்கு எதிராக கலவரங்கள், வன்முறைகள் தலை விரித்தாடின.

திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தன.

ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விரோதிகள் இருப்பது மறுக்க முடியாது.

அதுபோன்று, கடாஃபிக்கும் விரோதிகள் இருக்கவே செய்தனர்.

அந்த விரோதிகள், இந்தமுறை எப்படியும் கடாஃபியை வீழ்த்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டன.

கடாஃபிக்கு எதிராக மக்களை திரட்ட இந்த கயவர்கள் முயற்சி செய்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றன.

நல்ல ஆட்சியில் மக்கள் சில துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுத முடியாத ஒரு சட்டம்.

இதனை ஏற்றுக் கொள்ள லிபிய மக்களில் சிலர் விரும்பவில்லை.

சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமிய கட்டுபாடுகளை நவீன லிபிய மக்கள் சிலர் விரும்பவில்லை.

இதனால், கடாஃபிக்கு எதிராக எழுந்த கலவரத்திற்கு ஆதரவு அளித்தனர்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்றும் பிறநாடுகளும் லிபியாவின் எண்ணெய் வளத்தை சுருண்ட திட்டமிட்டு இருப்பதை இந்த மக்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை.

சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளவில்லை.

இதனால், எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றியது போன்று, அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த சூழ்ச்சிக்கு பலியாகி, எப்படியும் கடாஃபியை கொன்ற தீருவது முடிவு கட்டிக் கொண்டு, லிபிய மடையர்கள் தங்களது கொலை வெறியை வேகப்படுத்தினர்.

அணு ஆயுதங்கள் அனைத்து ஒப்படைத்த பிறகு, தமக்கு எதிராக எழுந்த தொடர் போராட்டங்கள், கலவரங்களை கடாஃபியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதாலும், லிபிய முட்டாள்களை  கொண்டே, கடாஃபியை கொல்ல திட்டமிட்டதாலும், எப்படியும் தப்பிக்க நினைத்தார் கடாஃபி.

தனது சொந்த ஊரான சிர்டேவிற்கு பறந்தார்.

தமக்கு எதிராக புரட்சிகள், வன்முறைகள், கலவரங்கள் வெடித்தபோதும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை.

என்னுடைய உயிர் லிபியாவில்தான் பறிபோகுமே தவிர, வெளிநாட்டிற்கு நான் தப்பி ஓட மாட்டேன் என்றார் அந்த மாவீரன்.

இப்படிப்பட்ட மாவீரனை, நேட்டோ படை என்ற கூலிப்படையின் உதவியுடன் புரட்சிப்படை என்று அறிவிக்கப்பட்ட லிபிய முட்டாள் படைகள், எப்படியோ பிடித்துவிட்டன.


42 ஆண்டுகளாக லிபியாவை வழிநடத்திச் சென்ற அந்த மாவீரனை, அமெரிக்காவிற்கு அஞ்சாத அந்த வரலாற்று நாயகனை, கொடூரமாக, சித்தரவதை செய்து கொலை செய்தன.

அந்த காட்சிகளை ராய்டரில் பார்த்தபோது, கண் கலங்கி போனது.

உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இப்படியும் நடக்குமா என ஒவ்வொருவரின் உள்ளம் கேட்டுக் கொண்டது.

லிபியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு நாயகனை, லிபிய மடையர்கள், முட்டாள்கள், அமெரிக்காவின் வஞ்சத்தில் வீழ்ந்து சித்தரவதை செய்து கொலை செய்தது எவ்வளவு பெரிய போர்க்குற்றம்.

துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அந்த மாவீரன் கதறுகிறார். வலியால் துடிக்கிறார்.

ஆனால், கூலிப்படைகள் அவர் மீது மீண்டும் தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.

ஈவு, இரக்கம் இன்றி சித்தரவதை செய்கின்றனர்.

இப்படி கொடூரமாக கொலை செய்த அந்த கயவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும்.

நேட்டோ படையின் மூலம் லிபியாவில் அட்டகாசம் செய்த அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் போர்க்குற்றவாளிகளாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்.

42 ஆண்டுகளின் ஆட்சியின்போது, கடாஃபி ஒருசில குற்றங்களை செய்து இருக்கலாம்.

அரசியல் விரோதிகளை கொலை செய்து இருக்கலாம்.

ஆனால், லிபியாவின் வளர்ச்சிக்கு கடாஃபி ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

அரபுலக ஒற்றுமைக்காகவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும் அவர் செய்த முயற்சிகளை வரலாறு மறக்காது.

அப்படிப்பட்ட வரலாற்று நாயகனை, கூலிப்படைகள், லிபிய முட்டாள்கள் கொலை செய்துள்ளனர்.


லிபியா சுதந்திரம் அடைந்து விட்டதாக இன்று பிரகடனம் செய்து உள்ளனர்.

அட, லிபிய முட்டாள்களே, இப்போதுதான் நீங்கள் அடிமைகளாக மாறியுள்ளீர்கள்.

அமெரிக்காவின், இங்கிலாந்தின், பிரான்சின் கைகூலிகளாக மாறியுள்ளீர்கள்.

சிறிது காலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். விடுதலை கிடைத்து விட்டதாக கூடி, ஆடிப்பாடலாம்.

ஆனால், மேற்கித்திய கலாச்சாரம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

அப்போது கடாஃபியின் அருமை உங்களுக்கு தெரிய வரும்.

லிபியாவின் எண்ணெய் வளம் சுரண்டப்படும்போது, கடாஃபியின் சேவை உங்கள் முன்வந்து செல்லும்.

லிபியாவின் ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் கடாஃபி ஆற்றிய பணிகளை நீங்கள் கட்டாயம் நினைத்து பார்க்ககூடிய நேரம் வரும்.

அப்போது, சாத்தான் அமெரிக்காவையும், பிசாசு இங்கிலாந்தையும் லிபிய முட்டாள்களாகிய நீங்கள் நீச்சயம் தூற்றுவீர்கள்.

மீண்டும் ஒருமுறை விடுதலைக்காக போராடுவீர்கள்.

அப்போது, கடாஃபி போன்ற ஒரு மாவீரன், அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்த ஒரு மாவீரன் நமக்கு  கிடைக்க மாட்டானா என நீங்கள் நிச்சயம் எதிர்பார்ப்பீர்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை.

மாவீரன் கடாஃபி குறித்து ஊடகங்கள் பரப்பும் தவறான பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவையெல்லாம் மேற்கித்திய நாடுகளின் சூழ்ச்சியால் பரப்பப்படும் செய்திகள்.

உலக மக்களை மடையர்களாக மாற்ற வெளியிடப்படும் வதந்திகள்.

இதுபோன்ற செய்திகளால், கடாஃபி போன்ற மாவீரனின் புகழ் அழிக்க முடியாது. 


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, October 23, 2011

இசை மனிதர் !

A.R.ரஹ்மான் !

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

வ்வொரு வெற்றியை சுவைக்கும்போதும்,  அல்லாஹ் ரக்கா ரஹ்மான் வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் இவை.

அல்லாஹ் ரக்கா ரஹ்மான்,  தனது இசையால் புகழின் உச்சியை தொட்ட இந்தியர். தமிழர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனித நேயர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போதும் தனது இசையின் மூலம்  உச்சியைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

புகழின் உச்சிக்கு சென்றாலும், அவரிடத்தில் சிறிதளவு கூட கர்வம் இல்லை.

பந்தா இல்லை.

எதுவும் என்னால் வந்தது இல்லை. எல்லாமே இறைவன் கொடுத்த சக்தி.

இறைவன் கொடுத்த ஆற்றலின்  மூலம்தான் நான் பயணிக்கிறேன்.

எனக்கு கிடைக்கும் அனைத்து வெற்றிகளுக்கும், புகழுக்கும்,  இறைவன் ஒருவன்தான் காரணம்.

ஒருசிறிய பொறி கிடைக்கும். அது இசையாக மாறி விடும். இது இறைவனால் கிடைக்கப் பெற்ற வரம்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் தனது மனத்தில் நினைக்கும் ரஹ்மான், எதுவும் என்னால் இல்லை என்கிறார்.

அதனால்தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே ! என சொல்லி கொள்கிறேன் என்கிறார்.

சென்னையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின்  இயற்பெயர் திலிப்குமார்.

இஸ்லாத்தை தழுவியதன் மூலம் அல்லாஹ் ரக்கா ரஹ்மானாக மாறினார்.

தனது 9வது வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரிடம் சில காலம் பணியாற்றினார்.

பின்னர், விளம்பர படங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் மக்களின் கவனத்தை ரஹ்மான் கவர்ந்தார்.

இதனால், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப்பில்,  இயக்குநர் மணிரத்னம் இயக்கி, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்திற்கு, முதல்முறையாக இசை அமைக்கும் வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்தது.

சின்னச் சின்ன ஆசை,  போன்ற  மனதை வருடும் பாடல்களை தமது முதல் படத்திலேயே தந்ததன் மூலம் தேசிய விருது,  ரஹ்மானின்  வீட்டுக் கதவைத் தட்டியது.

இதனால்தான், தான் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் தன்னை மிகவும் கவர்ந்த தமிழர், இளைஞர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் என பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

குட்டிப் பையன் போன்று இருந்த, இந்த இளைஞனிடம் இவ்வளவு திறமைகள் ஒளிந்து இருப்பது ஆச்சிரியம்தான்  என்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

எனவேதான் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கே வந்து சேருகிறது.

தில்சே,
குரு,
பம்பாய்,
ராவணன்,
ஆயுத எழுத்து

என இந்த பட்டியல் நீளுகிறது.

ஆயுத எழுத்து படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை.

அதில், நெஞ்சமெல்லாம்.... என்ற  ஒரு பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானை கட்டித்தழுவி பாராட்ட உங்கள் மனம் துள்ளும்.


குரு படத்தில் வரும் ஆயிருரே..... பாடலை கேளுங்கள்.

உடனே எழுந்து நடனம் ஆட ஆசை பிறக்கும்.

ரங்கீலா என்ற ஹிந்திப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்து வட இந்தியக் கலைஞர்களின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

டால் என்ற இந்திப்படத்தின் இசை, அவரது இந்திய இசைப் பயணத்தில் ஒரு மகுடம். மைல்கல்.

இசைக்காகவே ஓடி,  பல கோடிகளை அள்ளிக்குவித்தப்  படம் அது.


இயக்குநர் சுபாஷ் கை போன்ற இசைப்பிரியர்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை டால் படத்தின் இசை மூலம் பூர்த்தி செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அமீர்கானின் லகான் படம், இந்திய கலாசத்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

இந்திய கிராமிங்களில்  இசை எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த படத்தின் பாடல் அமைந்து இருக்கும்.

அதனால்தான், அந்த இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.

சுவதேஷ். இது ஷாருக்கான் நடித்த ஒரு இந்திப்படம்.

இதற்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். 

இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையை கேட்கும்போது, உண்மையிலேயே கண்களில் கண்ணீர் வரும்.

இந்திய கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல், மக்கள் வறுமையிலும், வேதனையிலும் வாழ்வதை இந்தப்படம் படம் பிடித்துக் காட்டும்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, மனதை நெருடச் செய்யும்.

படத்தை பார்த்துவிட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, மனதில் இனம் புரியாத ஒரு பிரிதல் ஏற்படும்.

இப்படி இதயங்களை கவரும் பாடல்களை இசையில் கோர்த்ததால், ஜாவீத் அக்தர், குல்சார் போன்ற ஜாம்பவான் கவிஞர்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தங்கள் பாடல்கள் வருமா என எதிர்பார்க்கும் நிலை உருவானது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய  ஜென்டில்மேன், சீன்ஸ், காதலன், இந்தியன், பாய்ஸ்., முதல்வன், நாயக்., சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள், கதைக்காகவும் இசைக்காகவும் ஓடிய படங்கள்.

இந்த படங்களில் வரும் அனைத்துப் பாடல்களும் இன்றும் காதுகளில்  ரீங்காரம் செய்துக் கொண்டே இருக்கின்றன. 

ரோஜா படத்திற்கு பிறகு, ரஹ்மானின் வளர்ச்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேலாதிக்க சக்திகள், ஒரு தமிழன், அதுவும் ஒரு இஸ்லாமியன் இப்படி அபார வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை.

மறைமுகமாக தடைகளை ஏற்படுத்தினர்.

அப்போதுதான் வந்தது இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மென்.

ஜென்டில்மென் படத்தில் வரும் சிக்கு புக்கு ரயிலே, உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்,   இளைஞர்களை சுண்டி இழுத்தன.

இசைப்புயலின் இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இதனால், மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போயின.

பொறாமைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தை, வளர்ச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனால்தான் காவியக் கவிஞர் வாலி ஒருமுறை சொன்னார்,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ருக்கு பிறகு, தமிழக மக்களின், ஏன் உலக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் காரணமாக அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு வௌளம் போன்று மக்கள் கூடுகின்றனர்.

இது கவிஞர் வாலியின் புகழாரம்.

மின்சார கனவு ! இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம்.


இந்த படத்தில் வரும் தங்க தாமரை மகளே.... பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

இதைக்குறித்து கருத்து தெரிவித்த பாலசுப்ரமணியம், இதற்கு எல்லாமே ரஹ்மான்தான் காரணம் என்றார்.

ரஹ்மான் சொல்லிக் கொடுத்ததைதான் நான் பாடினேன். இந்த விருதுக்கு உரியவர் ரஹ்மான்தான் என்றும் எஸ்.பி.பி. தெரிவித்தார்.

இந்த பாடலை கேட்பவர்கள் மீண்டும் ஒருமுறை அதனை கேட்காமல் இருப்பதில்லை.

அப்படி ஒரு தாக்கம் இந்த பாடலில் இருக்கும்.

இசையில் புது புது நடையை புகுத்துவதில் ரஹ்மானுக்கு என்றும் தணியாத ஆசை.

அதனால்தான், புது புது டெக்னிக்குகளை தனது இசையில் புகுத்திக் கொண்டே இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயோ படத்தில் வரும் ஓசானா பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தாயின் மீது என்றும் அன்பு கொண்ட ரஹ்மான், நியூ படத்தில் காலையில் எழுந்ததும்.... என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலில், தாயின் பெருமைகளை மனதில் பதியும் வண்ணம் இசையமைத்து, கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவார்.

இசை ஒரு கடல். அதில் புதையல்கள் குவிந்து கிடக்கின்றன.

இதை நன்றாக புரிந்துக் கொண்டுள்ள, ஏ.ஆர்.ரஹ்மான், அந்த புதையல்களை தேடிக் கொண்டே இருக்கிறார்.

அந்த தேடல்தான், அவரின் இசைக்கு வெற்றியாக அமைந்துக் கொண்டு இருக்கிறது.

அதனால்தான், உலக இசை ஜாம்பான்களான Ron Fair, Baz Luhrmann, உள்ளிடடோர், உலகில்   தற்போது உலகில் வாழும் இசைக்கலைஞர்களில்,  எல்லா மொழிகளிலும் இசையமைக்கும் திறமை  ஏ.ஆர்.ரஹ்மானிடம் மட்டுமே உள்ளது  என புகழ்ந்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைத்து விரைவில் வெளிவர இருக்கும் இந்திப்படம் ராக்ஸ்.

அதில் பல புதிய தேடல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஹ்மான்.

கவாலி இசைப்பாடல்கள் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலையில், அதற்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளார் ரஹ்மான்.

ராக்ஸ் படத்தில் வரும் கவாலி பாடலை கேட்டுப் பாருங்கள்.

உங்களை நீங்கள் மறந்து போவீர்கள்.

அதன் இசையில் லயித்து போய் விடுவீர்கள்.

தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள ரஹ்மான்,   தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு இசை அமைத்து நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் தேசிய ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

தமிழ், ஹிந்தி என நான்கு முறை தேசிய விருதுகளும், ஐந்து முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ரஹ்மான்.  

திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக அவருக்கு கடந்த 2009 ஆம் பிரப்ரவரி மாதம் 23 ஆம் தேதி இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இதன்மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றளவும்  வாழ்த்துகள் குவிந்தக் கொண்டே இருக்கின்றன.

இரண்டு விருதுகளை பெற்றபோது, ரஹ்மான் சொன்ன வார்த்தைகள், எல்லாப் புகழும் இறைவனுக்கே !

என்னுடன் என் தாய் இருக்கிறார்.

இதுவே எனது வெற்றிக்கு காரணம் என எந்த துள்ளளும் இல்லாமல் அமைதியாக சொன்னார் ரஹ்மான்.

இப்படி, இந்திய இசையை உலகத்திற்கு கொண்டு சேர்த்த இந்த இளைஞனின் இசைக்கு மயங்காதவர்கள் உலகில் தற்போது இருக்க முடியாது.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் மனிதனாக இருக்க முடியாது.

தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்து அதில் வெற்றி பெற்றாலேயே, பலர் துள்ளி குதிக்கின்றனர்.

பெரிய ஜாம்பவான்கள் போன்று பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

பல வெற்றிகளை குவித்து ரஹ்மானோ, இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லை. இறைவனுக்கு கிடைத்த வெற்றி.

எனவே, புகழ் அனைத்தும் இறைவனுக்கே என சொல்லி, அமைதியாக தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது இசைப்பயணம் தன்னுடன் மட்டுமே நிறைவு பெற்றுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் சர்வேத அளவில் புகழ் பெறும் வகையில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பன்னாட்டு அளவில் பல சமூக சேவைகளிலும் இசைப்புயலின் கவனம் திரும்பி இருப்பது பலரது புருவங்களை உயர்த்த செய்கின்றன.

இசையில் பல வெற்றிகளை குவித்து வரும் இசைப்யுல் ஏ.ஆர்.ரஹ்மான், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இஸ்லாத்தை தழுவிய அவர், உண்மையான இஸ்லாமியராகவே வாழ்ந்து வருகிறார்.

ஐந்து வேளை தொழுகை, ரமலான் நோன்பு, ஹஜ் பயணம், என இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் சரியாக நிறைவேற்றி வருகிறார் ரஹ்மான்.

இந்த சாதனை இளைஞனின் வாழ்க்கையில் இருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன.

அது,

மனதை ஒருநிலைப்படுத்தி ஓயாமல் உண்மையாகவே உழைக்கும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வெற்றிகள் குவியும்போது, கர்வம் கொள்ளாமல், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்.

வெற்றிகளை கண்டு பொறாமை கொள்பவர்களின் வசை மொழிகளை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது.

அதற்கு பதில் கூறிக் கொண்டு,  நேரத்தை வீணடிக்கக் கூடாது.
ஒரு புன்சிரிப்பு மட்டும் உதிர்த்துவிட்டு, நமது பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றிகளை குவிக்கும்போதும், இந்த புன்சிரிப்பு மட்டுமே போதும்.

இவை, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு,  வெற்றியாளர், சாதனையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கற்றுத்தரும் பாடங்கள். 

இவற்றை இளைஞர்கள் தங்களது மனதில் உள்வாங்கிக் கொண்டால், வெற்றிகளை குவிக்கலாம்.

வெற்றிகளை குவிக்கும்போது, அமைதியாக வாழலாம்.

வெற்றிகளை சுவைக்கும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும்  வார்த்தைகளை,  இளைஞர்களும்  வெளிப்படுத்தாலம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, October 18, 2011

மனிதம் ? !

இளம் செய்தியாளர்களின் மனிதம் ? !

தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரியும் இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 

துடிப்புடன் பணியில் சேரும் இளம் செய்தியாளர்கள், முதன்மை செய்தி ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என ஆர்வத்தில், மிக வேகமாக செயல்படுவது வழக்கம். 

ஆரம்பத்தில் பணி நேரத்திற்கு முன்பாக அலுவலத்திற்கு வரும் இவர்கள், பணி முடிந்த பின்பும், வீட்டிற்கு வெகு நேரம் கழித்தே செல்கின்றனர்.

சுவையான, பரபரப்பான செய்திகளை எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறால், இளம் செய்தியாளர்கள் செய்யும் சில செயல்கள், மனித நேயத்திற்கு நேர் எதிராக அமைந்து விடுகின்றன.

செய்தி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், மனிதம் குறித்து இவர்கள்,  சிறிதும்  கவலைப்படுவதாக தெரிவதில்லை. அக்கறை கொள்வதில்லை.

இதற்கு பல எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

ஆனால், ஒருசிலவற்றை மட்டுமே, இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 12.10.2011 ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்களின் சேம்பரில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சேம்பரில் இருக்கும் தனது அறையில் அமர்ந்து கொண்டு, தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளர் ஒருவருக்கு, நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தார் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண்.

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், நாடு முழுவதும உள்ள வழக்குரைஞர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்.

நல்ல திறமைச்சாலி. கருத்துகளை நேர்மையாக, அச்சமின்றி சொல்லும் குணம் கொண்டவர்.

இப்படிப்பட்ட பிரசாந்த் பூஷண், தனியார் தொலைக்காட்சியின் இளம் செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, அத்துமீறி அவரது அறைக்குள் நுழைகின்றனர்  ராம்சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர்.

அவர்களில் ஒருவர், பிரசாந்த் பூஷண் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்து விடுகிறார்.

பூஷணை சரமாரியாக அடிக்கிறார். இதனால் நாற்காலியில்  அமர்ந்துக் கொண்டிருந்த பூஷண் நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

அப்போதும், அவரை அந்த இளைஞர் விடவில்லை. பூஷணின் கால்களை இழுத்தப்படியே, அவரை பலமாக தாக்குகிறார். 

இந்த காட்சிகள் அனைத்தையும் தமது கேமிராவில் பதிவு செய்கிறார் நேர்காணல் எடுக்க வந்த இளம் செய்தியாளர். இளம் ஒளிப்பதிவாளர். 

பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை நிறுத்த இருவரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

பேட்டியை நிறுத்திவிட்டு, கேமிராவை ஓரமாக வைத்துவிட்டு, உடனே, பூஷணை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. 

பூஷண் நன்றாக அடிப்பட்ட பிறகு, அது கேமிராவில் நன்கு பதிவு ஆகிவிட்ட பிறகே அவரை காப்பாற்ற ஓடோடி வருகிறார் அந்த இளம் செய்தியாளர்.

என்ன ஒரு அநியாயம்? பாருங்கள்.

வழக்குரைஞர் பூஷண் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நன்கு படம் பிடித்து அதன் மூலம் செய்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறே, அந்த இளம் செய்தியாளரிடம் மிகுந்து இருந்தது.

அதனால், மனிதம் குறித்து அக்கறை
கொள்ளாமல், பூஷணை காப்பாற்ற அந்த தனியார் தொலைக்காட்சி இளம் செய்தியாளர், சிறிதும்  முயற்சிக்கவில்லை.

இந்த தாக்குதல் காட்சி நாடு முழுவதும்  உடனே ஒளிபரப்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த தனியார் தொலைக்காட்சி.

இதன்மூலம், அந்த தனியார் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் சிறிது நேரத்திலேயே உயர்ந்தது உண்மைதான்.

ஆனால்....மனிதம் ? 

காணாமல் போனது.

இதேபோன்று, தமிழகத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அவற்றில் ஒன்று. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த குழு மோதல்.

இந்த மோதல் காட்சிகளை, பல தொலைக்காட்சிகளின் இளம் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் சுற்றி சுற்றி படம் பிடித்தனர்.

காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்ததை ஆர்வமாக படம் பிடித்தனர்.

ஆனால், உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, வன்முறையை, மோதலை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் செய்யவில்லை.

காரணம். பரபரப்பான அந்த காட்சிகள் முதலில் தங்களது தொலைக்காட்சியில் வர வேண்டும் என்ற ஆர்வம்தான்.

அதன்மூலம், முதன்மை செய்தி ஆசிரியர், நிர்வாகம் தரப்பில் நன்மதிப்பை பெற வேண்டும் என்பது இளம் செய்தியாளர்களின் நோக்கமாக இருந்தது.

அதேநேரத்தில,  மக்கள் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்த இளம் பெண் செய்தியாளர் அருணா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

மோதலின்போது பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் ஒடோடி சென்றார்.

சார். அநியாயம் நடக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே. இது நியாயமா? என தட்டிக் கேட்டார்.

ஆனால், அந்த இளம் பெண் செய்தியாளரின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஆனது.

மாணவர்கள் மோதிக் கொண்டனர். கலவரம், வன்முறை படம் பிடிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.

ஒரு இளம் பெண் செய்தியாளருக்கு இருந்த தைரியம், மனிதம், மற்ற செய்தியாளர்களுக்கு உடனே ஏன் ஏற்படவில்லை?

இதற்கு காரணம், செய்திகளை பரபரப்பாக, முதலில் தர வேண்டும் என்ற ஆர்வமே ஆகும். 

இதேபோன்று மற்றொரு கசப்பான நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடந்தது.

தென் மாவட்டத்தில், ஒரு காவல்துறை அதிகாரியை குண்டர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர்.

உயிருக்கு போராடிய அந்த அதிகாரி, தண்ணீர் கேட்டு கூச்சலிடுகிறார்.


ஆனால், அவரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு துளிக்கூட ஏற்படவில்லை.

ஏன் அங்கிருந்த மக்களுக்கும் ஏற்படவில்லை. காவல் அதிகாரி உயிருக்கு போராடிய காட்சியை எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.

காவல் அதிகாரி, துடித்துக் கொண்டிருந்த அந்த காட்சியை, தங்கள் கேமிராவில் வேக வேகமாக படம் பிடிப்பதில் மட்டுமே இந்த இளம் செய்தியாளர்கள் கவனம் செலுத்தினர்.


அந்த அதிகாரி துடி துடித்து உயிரிழந்த காட்சி, கல் மனதையும் உருகச் செய்தது.

ஆனால், இளம் செய்தியார்களை மட்டும் ஏன் உருகச் செய்யவில்லை என தெரியவில்லை?

இப்படிப்பட்ட, சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இளம் செய்தியாளர்கள் தங்கள் பணியை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சென்னையில் வயதான மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்.

மூதாட்டியை இழந்து வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.


அங்கு ஓடோடி செல்லும் இளம் செய்தியாளர்கள், கொலை எப்படி நடந்தது? நீங்கள் எங்கே இருந்தீர்கள்? கொலைக்கு யார் காரணம் ?

என இப்படி வேண்டாத கேள்விகளை, காவல்துறையினர் கேட்க வேண்டிய வினாக்களை கேட்டு, மூதாட்டியின் பிள்ளைகளை, உறவினர்களை படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா,  அதை சொல்ல வார்த்தைகளே இல்லை.

தற்போது, தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் இப்படிப்பட்ட இளம் செய்தியாளர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது.

பரபரப்பான செய்திகளை அளிப்பதில் தவறு இல்லை.

இப்படிப்பட்ட செய்திகள் தங்களது தொலைக்காட்சியில் முதலில் வர வேண்டும் என்று நினைப்பதில் குற்றம் இல்லை.

ஆனால், மனிதம், மனித நேயம் ஆகியவற்றை இளம் செய்தியாளர்கள் தங்களது  இதயத்தில் புகுத்திக் கொண்டு செயல்பட்டால், வன்முறைகளை, தாக்குதல்களை சிறிதாவது தடுக்க முடியும் அல்லவா !

கொலை செய்யப்பட்டு, வீடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அங்கு சென்று விசாரணைகளை நடத்துவதை தவிர்த்து, அவர்களின் சோகத்தில் பங்கேற்கலாம்.

நாசுக்காக பேசி விஷயங்களை வாங்கலாம். செய்திகளை சேகரிக்கலாம்.

இதன்மூலம், மனிதம் மலரும். இளம் செய்தியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் மறையும்.

செய்தி ஊடகங்கள் மீதான புகார்கள் குறையும்.

செய்தி ஊடகங்கள் மீது மக்களுக்கு நன்மதிப்பு ஏற்படும்.

இவற்றையெல்லாம், இளம் செய்தியாளர்கள் சிந்திப்பார்களா ? !

கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா ? !

இனிவரும் நாட்களில், இளம் செய்தியாளர்களின் நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இதற்கு விடை  தெரியவரும். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, October 13, 2011

கவிஞர் முரளி !

சன் தொலைக்காட்சியில் புதிதாக சேர்ந்தபோது, ஆரம்பத்தில் பல விஷயங்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின.

பல புரியாத புதிர்கள் வியப்படைய செய்தன.

செய்தி தயாரிப்பு பிரிவில் இருந்த ஜாம்பவான்களின் ஒரு குழு, செய்தி ஆசிரியருக்கு இணையாக செயல்பட்டு வந்தது.

பணியில் சேரும் புதியவர்களிடம், இந்த ஜாம்பவான்கள் அதிகம் பேச மாட்டார்கள்.

அவர்களிடம் இருந்து ஒரிரு வார்த்தைகள் மட்டுமே வெளியே வந்து விழும். 

அதிலும்,  அதிகாரத் தோரணை அதிகமாக இருக்கும்.

இதனால் செய்திப்பிரிவில் இருக்கும் இந்த ஜாம்பவான்களிடம் பேச, தயக்கம், கலந்து ஒரு பயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து வந்தது.

ஆனால், ஜாம்பவான்களின் குழுவில் இருந்த நண்பர் முரளி மட்டும்,  இதற்கு விதிவிலக்கு.


செய்தித் தயாரிப்பாளர்.

வழக்குரைஞர்.

கவிஞர்.

நகைச்சுவையாளர்.

என முரளிக்கு  பல முகங்கள் உண்டு.

அவரை நான் எப்போதும் கவிஞர் என்றே அழைப்பது வழக்கம்.

ஜாம்பவான்களின் குழுவிலிருந்து  சற்று விலகி நின்று, அனைத்து பணியாளர்களிடம் முரளி, சகஜமமாக பழகி, நட்பை ஏற்படுத்தி விடுவார்.

ஒவ்வொருவரை குறித்து ஆழமாக அலசி ஆராய்ந்து, சிந்தித்து, எளிய வார்த்தைகளில் ஐந்தாறு வரிகளில்  அழகாக கவிதை எழுதி விடுவார்.

இப்படி, பல திறமைகளை கொண்ட கவிஞர் முரளி,  என்னிடம் எந்த பந்தாவும் காட்டாமல் பழக ஆரம்பித்தார்.

இரவு நேரப்பணிகளின்போதுதான், அவரிடம் அதிகமாக பேச வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, நகைச்சுவையுடன் அவர் சொல்லும் சில ஜோக்குகள், வயிற்றை குலுங்கச் செய்யும்.

உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் என ஆரம்பத்தில் அதிகமாக எழுதியபோது, அதற்கான விஷுவல்களை பார்க்க, தயாரிப்பு அறைக்கு செல்லும்போது, ஜாம்பவான்களின் குழு, என்னை பார்த்து முறைக்கும்போது, கவிஞர் முரளி மட்டும், சார் வாங்க. என்னை விஷுவல் பார்க்கணும் சார் என கேட்டுக் கொண்டே,  பொறுமையாக அனைத்தையும் போட்டு காண்பிப்பார்.

இதனால்,  முரளி மீது எனக்குள் ஒரு மதிப்பு வளர்ந்தது.

அவரை சாதாரண நபர் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரில் பல பன்முகங்கள் மறைந்து இருப்பது, பின்னர் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது.

செய்தி ஆசிரியர்கள், முத்து முத்தாக செய்திகளை எழுதிவிட்டாலும், அதற்கு சரியான விஷுவல் போடாவிட்டால், அந்த செய்தி அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் முரளி ஒரு கில்லாடி.

எந்த இடத்தில், எந்த விஷுவலை போட்டால், செய்திக்கு சரியாக இருக்கும் என்பதை நொடிப்பொழுதில் கணித்துவிட்டு, அற்புதமாக விஷுவலை போடுவதில் அவர் திறமைச்சாலி.

செய்தி தயாரிப்பு அறையில், முரளி பணிபுரியும் விதமே, தனியாக இருக்கும்.

இந்த விஷுவலை இங்கு போடு. அதை அங்கு வை. என சொல்லி எடிட்டர்களிடம் அழகாக வேலை வாங்கி விடுவார் முரளி.

இப்படி, முரளி போட்ட பல விஷுவல்கள், செய்திகள், பின்னர் அனைவராலும் பேசப்பட்டன.

அதில் ஒன்றுதான் சொன்னதும்! செய்ததும்!

ஆரம்பத்திலேயே,  சொன்னதுபோன்று, வழக்குரைஞர், கவிஞர் என பல முகங்களை கொண்ட முரளி,

சிறிது சிறிதாக கவிதைகளை எழுதியபோது, அதனை வாசித்து ரசிக்க முடிந்தது.

கவிஞரே நல்ல ஒரு கவிதையை எடுத்து விடுங்க என இரவு நேரப்பணியின்போது, சக உதவி ஆசிரியர்கள், கேட்கும்போது, அவர் உடனே வரிந்துக் கட்டிக் கொண்டு, கவிதையை வாசிக்கும்போது, நான் வாய் பிளந்து கேட்டு ரசிப்பேன்.

செய்தி அறையில்,  சிறிது நேரம் கவிதை அரங்கம் களைக்கட்டும்.

எல்லோரும் முரளியை பாராட்டும்போது, அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு வெளிவரும்.

அப்போதெல்லாம், அசைந்து அசைந்து நடக்கும் இந்த குள்ள மனிதரா, அழகழகாக கவிதை எழுதுகிறார் என,  எனக்கு வியப்பு ஏற்படும்.

இப்படி, கவிதை மூலம் எங்களுக்குள் நட்பு, மெல்ல மெல்ல வளர்ந்தது.

இப்போது,  முரளியை கவிஞரே என்றே அழைத்து வருகிறேன்.

ஒருநாள் செல்பேசியில் தொடர்பு கொண்ட கவிஞர் முரளி, சார் எங்கே இருக்கீங்க ?  என்றார்.

அறையில்தான் இருக்குகிறேன் என்றபோது, உடனே வருவதாக கூறி, அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்.


சார், உங்களைப் பற்றி ஒரு கவிதையை எழுதி இருக்கிறேன்.  படித்து பாருங்கள் சார் என கூறிப்படி, ஒரு வௌ¢ளை நேர தாளை நீட்டினார்.
அதை வாங்கிப் படித்தபோது,  கவிஞரின் வார்த்தைகள்  மணி மணியாக வந்து விழுந்து இருந்தன.


நபி வழியில்
நில்லாது நடக்கும் நண்பர்தாம் !
ஹலிம் சுவைக்க வைத்த
அப்துல் அஜீஸ்-ன்
அருங்குணம் என்னை எழுத வைத்தது.

எழுத்துலகில் ஒரு நட்சத்திரத்தை
இந்த அகல் விளக்கு
அண்ணார்ந்து பார்த்தது
எண்ணெய் தீரும் வரை
என் எண்ணம் தீரும் வரை !
உள்ளம் உள்ள வரை
என் உயிரும் உள்ளவரை
உன் நட்பு தொடர்ந்திடவே…..

நாம் பழகிய
நாட்களை அசை போடுகிறேன்!
துறை ஒன்றாய்
ஆனாலும்
பிரிவு வேறாய் இருந்ததால்
நெருக்கம் சிறிது குறைவுதான்.

தேயாத சூரியனில்
நாம் உயர்வுக்கு 
தெளிவற்று இருந்த நாட்கள்
நீங்கள் மக்களோடு
அய்க்கியம் ஆன போது,
நான் கலைஞரோடு
கை கோர்த்தேன் !

புண் ஆன மனசு
பண்பட வில்லை.
செம்மைபட சென்ற
இடம் எனக்கு
சிறப்பு சேர்க்கவில்லை.
வளைந்து கொடுக்கா
தன்மையால் நான்
வாழை மரம் ஆனேன்.
வெட்ட வெட்ட
வளர்ந்தாலும்
சூழ்ச்சி புயலில்
வீழ்கின்றேன்.

காசு வந்து சேர்ந்தது
என் கனவு கலைந்து போனது
உம்மை போன்ற
நண்பரை
பார்க்கும் போதுதான்
மனதில்
பசுமை வந்து சேருது.

அதை எழுதும் போது
மனதில் மகிழ்வு ஏறுது
நன்றி மறவா
நாட்கள் தொடர
நட்புக்கு பலமாய்
எழுத்தால்
ஏணி அமைப்போம்

என சிறிய சிறிய வரிகளில், மிக அழகாய் இருந்த கவிஞர் முரளியின் வார்த்தைகள், என் மனதிற்கு மிகவும் பிடித்து போனது.

கவிஞரே மிக அற்புதமாய் கவிதை வடித்து இருக்கிறீர்கள் என பாராட்டு தெரிவித்தேன்.

இப்படி, ஒவ்வொருவரைப் பற்றியும் எளிய நடையில் கவிதை எழுதுவதில் கவிஞர் முரளி ஒரு கில்லாடி பேர்வழி. 

வாணியம்பாடி தொகுதி  எம்.எம்.ஏ.வாக இருந்த அப்துல் பாசித் அவர்களைப் பற்றி முரளி எழுதிய கவிதை, அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பல இளைஞர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிபவர் எழுதிய கவிதை அருமை என பாராட்டு தெரிவித்தனர்.

பாரதியை போன்று கவிஞர்களுக்கு எப்போதும்,  கொஞ்சம் கோபம் அதிகம் என சொல்வது உண்டு.

கவிஞர் முரளிக்கும் கொஞ்சம் அதிகமாகவே வரும்.

அது அநீதியை காணும்போது மட்டும்தான்.

நண்பர்களின் இன்பம், துன்பங்களில் ஓடோடி வந்து பங்கு கொள்வதில் கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.

வழக்குரைஞராக பணி புரிய வேண்டும் என்ற அவரது ஆர்வம் விரைவில் நிறைவேற இருப்பது  மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி.

அவர், வழக்குரைஞராக வலம், வந்தாலும், அவரது கவிதை ஆர்வம் என்றும் குறையாது.

எனவே, எப்போதுமே அவர்,  எனக்கு கவிஞர்தான்.

என்ன கவிஞரே, நான் சொல்வது  சரிதானே!


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்