Wednesday, September 13, 2023

தினமும் மறக்காமல்....!

 

தினமும் மறக்காமல் அவசியம் தண்ணீர் சாப்பிடுங்கள்….!


இயற்கை மனித சமுதாயத்திற்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடை தண்ணீர் என உறுதியாக சொல்லலாம். மனிதன் உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் குடிக்காமல் வாழவே முடியாது. அத்துடன் மனிதனின் பிற தேவைகளுக்கு தண்ணீர் மிகமிக கட்டாயம் தேவை. இதன் காரணமாகவேதான், தண்ணீருக்காக மனிதர்கள் அடித்துக் கொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டனர். உலகின் பல நாடுகளில் தண்ணீர் பிரச்சினையால் மோதல்கள் வெடிக்கின்றன.

இந்தியாவில் கூட, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அதிகரித்து வரும் குடிநீர் தேவை உள்ளிட்ட காரணங்களால், பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இதனால், தமிழக, கர்நாடகா விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக அவ்வவ்போது ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தண்ணீர் வணிகம்:

ஒரு காலத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. தற்போதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருந்தும் தற்போதைய நவீன காலத்தில் தண்ணீர் ஒரு வணிகப் பொருளாக மாறிவிட்டது. நாம் எங்கு சென்றாலும் மினரல் வாட்டர் பாட்டீல்கள் மூலம் தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த புதிய பழக்கத்திற்கு தற்போதைய மக்கள் அடிமையாகிவிட்டார்கள். குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை அருந்துவது கேவலம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. இதனால், தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தினமும், புதிது புதிதாக உருவாகி வருகின்றன. மக்களை கவரும் வகையில் விளம்பரங்களை செய்து தண்ணீரை பாட்டில்களில் விற்பனை செய்து வரும் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள், அதன்மூலம் நாள்தோறும், லட்சக்கணக்கில் வருவாயை ஈட்டி வருகின்றன.

மினரல் வாட்டர் நல்லதா…?


திருமணம், பொதுக்கூட்டம், திருவிழா, கருத்தரங்கம் என நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மினரல் வாட்டர் பாட்டில் கொடுக்கப்படுகிறது. சரி, இந்த மினரல் வாட்டர் உடம்புக்கு நல்லதா என்றால், பெரும்பாலான மருத்துவர்கள் இல்லை என்றே கருத்து தெரிவிக்கிறார்கள். மினரல் வாட்டரில், ஒருவித கெமிக்கல் சேர்க்கப்படுவதாகவும், அது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதை அறிந்துகொள்ளாமல், அனைத்துத் தரப்பு மக்களும் மினரல் வாட்டர் குடிப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். மேலும், சாதாரண நிலத்தடி நீர் சாப்பிடும் மக்களை கேவலமாக பார்ககும் மனநிலை தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. கிராமங்களில் நிலத்தடி நீரை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்த மக்கள் குறித்தும் தற்போதும் கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி, நல்ல ஆரோக்கியமாக வாழும் மக்களை குறித்தும் ஏனோ இந்த நவீன கால மக்கள் மறந்துவிடுகிறார்கள்,. மினரல் வாட்டரில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை மறந்துவிட்டு, மக்கள் அதை சாசு கொடுத்து வாங்கி அருந்துகிறார்கள். இதனால் மிகப்பெரிய உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

நிலத்தடி நீர் நல்லது:


மினரல் வாட்டர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட மக்கள்,, அதில் இருந்து விடுபட்டு, நம் முன்னோர்கள் வழக்கமாக பயன்படுத்திய குழாய் நீர், நிலத்தடி நீர், மழை நீர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருந்து வருகிறது.

குழாய்கள் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் தண்ணீரில் கிருமிகள் இருக்க வாய்ப்பு உண்டு என சிலர் நினைக்கிறார்கள். அப்படியே கிருமி இருந்தாலும், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, அந்த கிருமிகளை அழித்துவிட்டு, தண்ணீரை சுத்தப்படுத்திவிடும் என மருத்துவர்கள் உறுதியாக கூறுகிறார்கள். எனவே, குழய்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர், நிலத்தடி நீர், மழை நீர் ஆகியவற்றை இனி நாம் பயன்படுத்தினால், மிகப்பெரிய நோய் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

வெந்நீர் மிகவும் அவசியம்:

ஒரு மனிதன், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் சாப்பிட வேண்டும். தண்ணீர் குடிப்பதை நிறுத்தக் கூடாது. அதிகளவு தண்ணீர் சாப்பிடுவதால், கிட்னியில் உருவாகும் கல், தானாகவே, உடைந்து வெளியேறிவிடும் என மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். அதிகளவு தண்ணீர் சாப்பிடுவதால், கிட்னியில் கல் உருவாகுவது தவிர்க்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நாள்தோறும் தேவையான அளவுக்கு தண்ணீர் சாப்பிடுவதை நாம் நிறுத்தக் கூடாது.

குறிப்பாக, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காண, நாள்தோறும், மூன்று டம்ளர் வெந்நீர் அவசியம் சாப்பிட வேண்டும் என்றும் இதன்மூலம் உடலில் உருவாகும் நச்சு கிருமிகள் அழிந்துவிடும் என்றும், மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறிகிறார்கள்.

மருத்துவர்களின் இந்த ஆலோசனையின்படி, வெந்நீர் அருந்தும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

ஆய்வில் தகவல்:

சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை மட்டுமே உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும் என்றும், ஆனால் அது எவ்வளவு காலம் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளில், தண்ணீர் உண்ணாவிரதம் என்ற பழக்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்பாளர்கள், உண்ணாவிரதம் முடிந்ததும் ஐந்து நாள் தண்ணீர் உண்ணாவிரதத்தில் இழந்த அனைத்தையும் மூன்று மாதங்களுக்குள் திரும்பப் பெற்றனர் என்றும் மற்ற இரண்டு ஆய்வுகளில், இழந்த எடையில் ஒரு சிறிய அளவு மட்டுமே திரும்பியது என்றும் தெரியவந்துள்ளது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நீர் உண்ணாவிரதத்தின் பிற வளர்சிதை மாற்ற நன்மைகள் விரதத்திற்குப் பிறகு விரைவில் மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தண்ணீர் உண்ணாவிரதத்தில் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் முன்னேற்றங்கள் குறுகிய காலமாக இருந்தன என்றும், இதில் பங்கேற்பாளர்கள் மீண்டும் தண்ணீர் சாப்பிடத் தொடங்கிய பிறகு விரைவாக அடிப்படை நிலைக்குத் திரும்பியதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


தண்ணீர், தண்ணீர்:

ஏக இறைவனின் அருட்கொடையான தண்ணீரின் உண்மையான மதிப்பை அறிந்து அதை நாம் முறையாக, சரியாக பயன்படுத்த வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் தேவையான தண்ணீரை இயற்கை ஒவ்வொரு ஆண்டும் மழை மூலம் கொடுத்துக் கொண்டே வருகிறது. ஆனால், மனித சமுதாயம் அதை சரியான வகையில் பயன்படுத்தாமல் வீணடித்து விடுகிறது. இதனால் பல நாடுகளில் தண்ணீர் பிரச்சினை உருவாகிறது. மழை நீரை சரியாக சேமிக்காமல் இருக்கும் மனித சமுதாயம், வறட்சி காலங்களில், மிகப்பெரிய அளவுக்கு தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்கிறது. எனவே, தண்ணீர் பிரச்சினையில் மனித சமுதாயம் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டால், நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: