Sunday, February 24, 2013

டிக்கெட்.........!


டிக்கெட்…..!

S.A.அப்துல் அஜீஸ்

சுலைமானுக்கு இரவெல்லாம் சரியாக தூக்கமே வரவில்லை…

காரணம்,  சென்னையில் நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிதான்.


அந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன், எப்படியும் முன்னதாகவே சென்று டிக்கெட்டை வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் சுலைமானுக்கு மேலோங்கியது.

சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, இப்படிதான், சுலைமானுக்கு ஆர்வம் பொங்கி எழும். இரவெல்லாம் தூக்கம் வராது.

மகன் சுலைமானின் ஆர்வத்திற்கு நன்றாகவே தீனி போட்டார் அவரது தந்தை நசீர்.


சென்னையில் மிகப் பெரிய இரும்பு வியாபாரி என்பதால், நசீரின் வசதிக்கு குறைவு இல்லை. வணிகத்தில் அல்லாஹ் நல்ல செல்வத்தை வாரி வழங்கி இருந்தான்.

எனவே, பணம் எப்போதுமே ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை நசீருக்கு. மகன் சுலைமான், கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் செலுத்துவதை கண்டு அவர் சிறிதும் கவலை அடையவில்லை.

மகனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய அவரது மனம் விரும்பவில்லை.


எனவேதான், டிக்கெட்டின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றாலும் கூட, அதைப் பற்றி கவலைப்படாமல், மகனுக்காக செலவிட தயாராக இருந்தார் நசீர்.

மூத்த மகன் சுலைமானுக்காக மட்டுமல்ல, இளைய மகள் நசீரா, கடைசி மகன் ஷாகுல் ஆகிய மூன்று பேருக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்ததால்,  அவர்களையும் போட்டியை காண ஒவ்வொரு முறையும் கூடவே அழைத்துச் செல்வது நசீரின் வழக்கம்.

அதுபோன்றுதான், இந்த முறையும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டிக்காக ஐந்து டிக்கெட்டுகளை வாங்கி விடும்படி, மகன் சுலைமானுக்கு  அன்பு கட்டளையிட்டார் நசீர்.

தன்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து டிக்கெட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சுலைமானிடம் கொடுத்தார் நசீர்.


டிக்கெட்டுக்கு 75 ஆயிரம், போக மீதி, பணம் செலவுக்கு என மகனிடம் சொல்லியிருந்தார் நசீர்.

தந்தை நசீர் கொடுத்த பணத்தை கையில் வாங்கியதில் இருந்து சுலைமானுக்கு இருப்பு கொள்ளவில்லை.

அதிகாலை நான்கு மணிக்கே சேப்பாக்கம் சென்றுவிட வேண்டும் என்பதால், காரில் பெட்ரோல் உள்ளதா என்று முன்கூட்டியே சோதனை செய்து பார்த்துக் கொண்டான் சுலைமான்.

குளிர் காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே, பஜர் தொழுகைக்கு எழுந்து சொல்லும் வழக்கம் இல்லாத சுலைமானுக்கு, நல்ல குளிர்காலத்திலும், கிரிக்கெட் டிக்கெட் வாங்க காரில் செல்வதில் சிரமம் எதுவும் தெரியவில்லை.


இஸ்லாமிய கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை தனது பிள்ளைகளுக்கு நல்ல முறையில் சொல்லி கொடுக்க ஏனோ நசீர் ஆரம்பத்திலேயே ஆர்வம் செலுத்த தவறிவிட்டார்.

எனவே, நேரம் கிடைக்கும்போது மட்டுமே,  இஸ்லாமிய கல்வியை பெற்றனர் நசீரின் குழந்தைகள். இதனால், மார்க்கக் கல்வி குறித்து முழுமையான ஞானம் அவர்களிடம் இருக்கவில்லை.

தொழுகை, நோன்பு ஆகியவற்றை அவ்வப்போது நிறைவேற்றினாலும், முழு மனதுடன் நிறைவேற்றுகிறோமா என்று அவர்கள் நினைத்து பார்க்கவில்லை.


வீண் விளையாட்டுகளில் நேரம் செலவழிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது நசீரின் குழந்தைகளுக்கு.உலக கல்வி நன்றாக கிடைத்தும், அவர்களுக்கு மார்க்க கல்வி முழுமையாக கிடைக்கவில்லை.

நசீரின் குழந்தைகள் இப்படி என்றால், அவரது தூரத்து உறவினர் கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா ஆகியோர் நன்றாகவே கல்வியில் ஆர்வம் செலுத்தி வந்தனர். மார்க்க கல்வி மட்டுமல்ல, உலக கல்வியிலும் இறைவன் அவர்களுக்கு ஆர்வத்தை வாரி வழங்கி இருந்தான்.

எனவே, கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா இருவரும் படிப்பில் உயர்ந்த இடத்தை பிடிக்க ஆர்வம் கொண்டனர்.  


ஆனால், சிறிய வியாபாரம் செய்யும் கரீம், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால், தனது குழந்தைகளுக்கு உயர்கல்வி அளிக்க முடியாத நிலையில் இருந்தார்.

தன்னுடைய தகுதிக்கு ஏற்ப, மகள்கள், சுமையா, அஸ்வியா ஆகியோரை உயர்கல்வியில் சேர்க்க ஆர்வமும் கொண்டார்.

ஆனால், நாட்டில் கல்வி தற்போது வியாபாரமாக  ஆகிவிட்டதால், அதற்கு கட்டாயம் அதிகளவு பணம் தேவை என்ற நிலை இருந்தது.

எனவே, தூரத்து உறவினர் நசீரிடம் அவ்வப்போது, சிறிது பணம் வாங்குவது கரீமின் வழக்கமாக இருந்தது.


இந்த முறை, சுமையாவின் மேற்படிப்புக்காக மிகப் பெரிய தொகையான 60 ஆயிரம் ரூபாய்  தேவைப்பட்டது.

அதுகுறித்து பலமுறை கேட்டும், அதற்கு, எந்த ஒரு உறுதிமொழியும் கரீமுக்கு அளிக்கவில்லை நசீர்.

கரீம் சொந்த உறவினர் கூட கிடையாது… தூரத்து உறவினர்தான். எனவே அவருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே நசீரின் உள்ளத்தில் அடிக்கடி தோன்றியது.

கல்வியில் ஆர்வம் உள்ள ஏழை பெண்களுக்கு, குறிப்பாக பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக கொடுக்கிறோமே என்ற எண்ணம் நசீருக்கு சிறிதும் ஏற்படவில்லை.

எனவே, கரீம் பணத்தை கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழித்தே வந்தார்.
ஒருநிலையில், வீட்டிற்கு வந்த கரீமிடம் “இதோ பார் கரீம், என்னிடம் நீ கேட்கும் அளவுக்கு தற்போது அவ்வளவு பணம் இல்லை. வேறு ஏதாவது வழியில் பணத்தை திரட்ட முயற்சி செய்” என்றார் நசீர்.  

கரீம் போசாமல் நின்றுக் கொண்டிருந்தார்.

“வியாபாரத்தில் போட்டி அதிகம் ஆகிவிட்டதால், லாபம் குறைந்துவிட்டது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே  போதும் போதும் என ஆகிவிடுகிறது” என்றார் நசீர்.


கரீமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கூடிய விரைவிலேயே கல்லூரியில் பணம் கட்டி ஆக வேண்டும். மகள் சுமையா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 60 ஆயிரம் ரூபாய்க்கு எங்கே போவது என அவருக்கு தெரியவில்லை.

இருந்தும், நசீரை மேலும் தொந்தரவு செய்ய மனம் இடம் தராததால், சலாம் கூறிவிட்டு வெறும் கையோடு வீட்டுக்கு திரும்பினார் கரீம்.

ஆனால், நசீர் சொன்னது எல்லாமே, பொய். இறைவன் அவருக்கு வியாபாரத்தில் நல்ல இலாபம் கொடுத்து கொண்டே இருந்ததால், செல்வம் பெருகி கொண்டே இருந்தது. 

இருந்தும், தனக்கே கல்வியில் ஆர்வம் இல்லாததால், பிறரின் கல்வி வளர்ச்சிக்கு அவருக்கு உதவி செய்யும் எண்ணம் பிறக்கவில்லை.

தன்னுடைய குழந்தைகளின் அற்ப சுகங்களுக்காக அதிகம் செலவழிக்க விரும்பினாறே தவிர, இஸ்லாமிய ஏழை குழந்தைகளின், ஏன் தூரத்து உறவினர்களின் குழந்தைகளுக்கு உதவிகரம் நீட்ட நசீர் முன்வரவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்க அவர் தயங்கவில்லை.


அதிகாலை நேரத்தில் விழிக்கும் பழக்கமே இல்லாத நசீர், போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக அதிகாலை 4 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து, மகன் சுலைமானுடன் சேர்ந்து காரில் சேப்பாக்கம் சென்றார்.

எதிர்பார்த்தது போன்று, அங்கு நீண்ட வரிசையில் கிரிக்கெட் ரசிகர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.

காரை சாலையின் அருகே நிறுத்திவிட்டு, மகனை சுலைமானை டிக்கெட் வாங்க அனுப்பி வைத்தார் நசீர்.

அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, ஐந்து டிக்கெட்டுக்களுடன் வந்தான் மகன் சுலைமான். முகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கான அறிகுறி.


மகனை வாரி அணைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் நசீர்.

நாளை நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு முன்கூட்டியே வந்துவிட வேண்டும் என்றும், கடைக்கு ஒருநாள் விடுமுறை விட்டுவிட வேண்டும் என்றும் இருவரும் காரில் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

மறுநாள் சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டத்தால் திண்டாடியது.

இரு அணி வீரர்களும் சிக்ஸ், போர் என ரன்களை விளாச, ரசிகர்கள் துள்ளி குதித்தனர்.

நசீர் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார். இசைக்கருவிகளை இசைத்து துள்ளி மகிழ்ந்தார்.

தூரத்து உறவினர் கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா ஆகியோரிடன் கல்விச் செலவுக்கு பணம் கொடுக்க மனம் இல்லாமல் சாக்குபோக்கு சொன்ன நசீர், நான்கு மணி நேரம் கிடைக்கும் அற்ப சுகாத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்தார்.

அங்கே, கரீமின் குழந்தைகள், சுமையா, அஸ்வியா ஆகியோர் மக்ரீப் தொழுகையை நிறைவேற்றி இறைவனிடம் மனம் உருகி துஆ கேட்டனர்.
இறைவா…. எங்களுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி வைப்பாயாக…
எங்கள் கல்விக்காக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவாயாக…


எங்கள் கல்விக்காக உதவி செய்யும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பாயாக…அவர்களின் செல்வத்தை மேலும் அதிகப்படுத்துவாயாக..

கல்வியில் ஆர்வம் உள்ள எங்களுக்கு உதவி செய்ய எங்கள் உறவினர்கள் மற்றும் நன்மக்களின் உள்ளங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவாயாக…

நாங்கள் பெறும்  கல்வி மூலம் பிறருக்கும் நலம் கிடைக்கும்படி செய்வாயாக…

மனம் உருகி, கண்ணீர் சிந்தி கரீமின் குழந்தைகள் கேட்ட பிரார்த்தனை நிறைவேற நாமும் துஆ செய்வோம்.....

________________________________________________________________

நல்ல கருத்துள்ள படைப்பு.... படியுங்கள்.... சிந்தியுங்கள்.... செயல்படுங்கள்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: