Friday, January 18, 2013

மணிச்சுடரின் முத்துக்கள்……!


மணிச்சுடரின் முத்துக்கள்……!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தபோது, காலை 10 மணியாகி விட்டது.

பீட்டர்ஸ் சாலையில் இருந்த மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்றபோது, மணி 10.30.

மணிச்சுடர் நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான தலைவர் சீராஜுல் மில்லத் அவர்கள், நல்ல வேளையாக அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என அங்கிருந்த ஊழியர்கள் சொன்னபோது, மனம் லேசானது.
11 மணி அளவுக்குதான் ஆசிரியர் வருவார் என்று ஊழியர்கள் சொன்னதால், ,  நானும், என்னுடன் வந்த வேலூர் மாலைமுரசு நாளிதழின் ஆசிரியருமான மசூத் அகமதும் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றோம். நல்ல சூடான தேனீர் அருந்தி, சிறிது நேரம் இளைப்பாறச் செய்தோம்..

மீண்டும், மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து, தலைவரின் வருகைக்காக காத்திருந்தோம்
சரியாக 11 மணிக்கு சிராஜுல் மில்லத் அவர்கள், அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் உடனே எழுந்து சலாம், சொன்னபோது, பதிலுக்கும் வலைக்கும் ஸலாம் என கூறிய தலைவர் அவர்கள், எங்களை செய்கையால் அமரச் சொன்னார்தனது அறைக்கு சென்று, கால் மணி நேரத்திற்குள் உள்ளே அழைத்தார்.


தலைவரின் அறைக்குள் நுழைந்தபோது, மீண்டும் சலாம் கூறிக் கொண்டே, சென்றோம்.. தனக்கு எதிரே இருந்து இருக்கையில் எங்களை உட்காரச் சொன்ன தலைவர் அவர்கள், நேராக விஷயத்திற்கு வந்தார்.
சமுதாயத்தின் நலனுக்காகவும், சமுதாயச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நேரம்

அது.  தமிழகம் முழுவதும் துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக நியமிக்க ஆர்வம் கொண்ட சிராஜுல் மில்லத் அவர்கள், அதுகுறித்து பலரிடம் ஆலோசனைகளையும் நடத்தினார். அந்த ஆலோசனைகளின் பேரில், வேலூர் மாவட்ட செய்தியாளராக என்னை நியமிக்க அழைத்தார். அதன்பேரில், நானும், மாலை முரசு மசூத் அகமது சென்றபோதுதான், எங்களிடம், வேலூர் நிலவரம், செய்திகளின் தன்மை, விளம்பரம்., உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக கேட்டார்.

பிறகு, வாழ்த்துக்களை சொன்னபடி என்னை வேலூர் மாவட்ட செய்தியாளராக நியமனம் செய்தார்.

இப்படித்தான், மணிச்சுடருக்கும் எனக்கும் முதன்முதலாக உறவு மலர்ந்தது. போராட்டங்கள், நெருக்கடிகள், என பல சிக்கல்களுக்கு இடையே வேலூர் மாவட்ட செய்திகளை, விளம்பரங்களை அனுப்பி வைத்தேன்அத்தோடு மணிச்சுடரை குறித்த நேரத்தில் வினியோகம் செய்யும் பணியும் செய்து வந்தேன்..

பிறகுடெல்லி ஜாமியா நகரில் இருக்கும் IOS  என்ற இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்த காரணத்தால், மணிச்சுடரின் வேலூர் மாவட்ட செய்தியாளர் பணியை இழக்க நேரிட்டது.

அப்போதுகூட, தலைவருடன் எனக்கு இருந்த தொடர்பு, நெருக்கம் ஆகியவைக்கு எந்த பிணக்கும் வரவில்லை.



1989ஆம் ஆண்டு, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள், டெல்லி வந்ததும், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன அலுவலக ஊழியர் எனக்கு தொலைபேசி வந்து இருப்பதாகவும், வேலூர் எம்.பி. பேசுவதாகவும் கூறியபோது எனக்கு இன்ப அதிர்ச்சி

உடனே, தொலைபேசியில் இணைப்பை பெற்று தலைவருக்கு சலாம் கூறினேன். வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

என்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த தலைவர் அவர்கள், உடனே தன்னை தமிழ்நாடு இல்லத்தில் வந்து பார்க்கும்படி பணித்தார்.
அன்று மாலையே, சிறிய பூச்செண்டோடு, தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று, தலைவர் தங்கிருந்த அறையை கண்டுபிடித்து, உள்ளே சென்றேன். பூச்செண்டை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்ட தலைவர் அவர்கள், என்னை அமரச் சொல்லி டீயை வரவழைத்து சாப்பிடச் சொன்னார்.

டெல்லியில் என்னுடைய பணிகள் குறித்து கேட்டறிந்தார். தன்னுடைய இல்லத்திலேயே இனி தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது.


பல்வேறு காரணங்களால் மணிச்சுடர் நாளிதழ் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது. அப்படிப்பட்ட நேரத்திலும், என்னை மறக்காமல் எனக்கு உதவி செய்தார் தலைவர் சிராஜுல் மில்லத்… டெல்லியில் ஜன்பத்தில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோது,  மணிச்சுடர் நாளிதழ் குறித்து அடிக்கடி பேசுவார்.  எப்படியும் மீண்டும் அதனை கொண்டுவர வேண்டும் என்று ஆவல் கலந்த துடிப்புடன் தெரிவிப்பார். பத்திரிக்கைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம், ஈடுபாடு, சமுதாயச் செய்திகளை எப்படியும் நம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற துடிப்பு இதுதான், மணிச்சுடரை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய நோக்கம் என்பது தலைவரின் பேச்சை கேட்கும்போது என்னால் உணர முடிந்தது.

1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு திடீரென தேர்தல் வந்ததால், டெல்லி வீட்டை காலி செய்தார் தலைவர். இருந்தும் நான் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் செய்தார்… பின்னர், 4 ஆண்டு கால டெல்லி பணிகளை முடித்துக் கொண்டு, வேலூர் திரும்பியபோது, மீண்டும் மணிச்சுடர் நாளிதழில்  எனக்கு வாய்ப்பு கிட்டியது.

ஆம். வாலஸ் கார்டனில் இருந்த மணிச்சுடர் நாளிதழின் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்த சிராஜுல் மில்லத் அவர்கள், உடனே பணியில் சேர கட்டளையிட்டார். மணிச்சுடர் அலுவலத்திலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.

இங்கேதான், முனிரூல் மில்லத் பேராசிரியர் கேம்.எம் காதர் மொகிதீன் அவர்களை நான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  மாநில பொதுச் செயலாளராக இருந்த நேரம் அது…


நானும் அவரும், இரவு நேர கொசுக்கடிகளுக்கு இடையே பல இரவுகள் தூங்காமல், மணிச்சுடருக்கு உழைத்த காலம் அது.. நெஞ்சை விட்டு மறக்க முடியாத காலங்களை எப்படி மறக்க முடியும்…

இந்த வாலஸ் கார்டன் அலுவலகத்தில்தான் தற்போது, விஷுவல் மீடியாக்களை கலக்கிக் கொண்டிருக்கும் பல ஜாம்பவான்களை நான் சந்தித்தேன்.

ஆம்..‘

திரு,டாயல் (சன் டிவி.. பிறகு கலைஞர் டி.வி.)
திரு.வில்லியம்ஸ் (பொதிகை, ஆல் இந்தியா ரேடியோ)
திரு.மேலப்பாளையம் ரசூல்கான் (சன் டி.வி.)
திரு.ஜலால் (சன் டி.வி.. பிறகு, ராஜ் மற்றும் ஜி டி.வி)
திரு.ராமதாஸ் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.ராஜராஜன் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.பெரியசாமி, (சன் டி.வி. பிறகு ஜெயா டி.வி.)
திரு.கப்பார் (ராஜ், சன் மற்றும் மூன் தொலைக்காட்சிகளில் பணி)
திரு.மீரா மொகிதீன் (பல பத்திரிக்கைகளில் பணி)
மற்றும்
திரு.எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் (சன் டி.வி., மக்கள் தொலைக்காட்சி. மற்றும்
ஜி.டி.வி.)

இப்படி பல துடிப்பான பத்திரிக்கை ஆர்வலர்கள் சங்கமித்த இடம்தான் மணிச்சுடர் நாளிதழ் அலுவலகம்..

நெருக்கடிகள்.,, இன்னல்கள்… குறைந்த ஊதியம்… என பல சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு, மேலே குறிப்பிட்ட அனைவரும் சமுதாயத்திற்காக உழைத்தவர்கள்…

சமுதாயச் செய்திகளை, எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்.. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்த அந்த பணிகளின் காரணமாகவே, தற்போது இறைவனின் அருளால், தமிழகத்தின் மிக முக்கிய  விஷுவல் மீடியாக்களை நாங்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறோம்…

மேலே குறிப்பிட்ட நாங்கள் அனைவரும் மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கிய நன்முத்துக்கள்.

சிராஜுல் மில்லத்தின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பத்திரிக்கை  வைரங்கள்….

மணிச்சுடரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முக்கிய சாதனையாளர்கள்…



மணிச்சுடர் இன்று பல சாதனைகளை குவிப்பதற்கும், பத்திரிக்கை துறையில் துடிப்புடன்  வலம் வருவதற்கு, மேலே குறிப்பட்ட இந்த  முத்துக்கள் செய்த சேவைகள், பணிகள்தான் முக்கிய அடிப்படை காரணம்… இந்த நன்முத்துக்களின் சேவைகளை யாரும் குறைந்து மதிப்பிட முடியாது… மறுக்கவும் முடியாது….

இப்படி பல நன்முத்துக்களை மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கி இருக்கிறது… இன்னும் உருவாக்கி கொண்டுதான் இருக்கிறது… தற்போது மணிச்சுடரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பேராசிரியர் கேம்.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மணிச்சுடரை எப்படியும் மிகச் சிறந்த முறையில் கொண்டு வர வேண்டும் என ஆவல் கொண்டுள்ளார். அவரது உயர்ந்த எண்ணம் நிறைவேற வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும். அதன்மூலம், மேலும் பல நன்முத்துக்கள் பத்திரிக்கை துறைக்கு கிடைக்க வேண்டும்….

---------------------------------------------------------------------

மணிச்சுடர் நாளிதழ் பொன்விழா மலரில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரைதான் நீங்கள் மேலே படித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மணிச்சுடரின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை கவுரவித்தனர். உண்மையிலேயே இது மகிழ்ச்சி அளிக்கும் செயல்..

கட்டுரையை படித்து கருத்து தெரிவியுங்கள் 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்








No comments: