Friday, January 18, 2013

சிகரெட்டா ! மூளை அழுகிவிடும்…..!


சிகரெட்டா !  மூளை அழுகிவிடும்…..!

லண்டன் ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




மனிதன் விலை கொடுத்து வாங்கும் ஆபத்துக்களில் முதன்மையானது புகைப்பிடிக்கும் பழக்கம். மனிதர்களின் வேண்டாத பழக்கவழக்கங்களில் புகைப்பிடிப்பது... அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துவது  ஆகியவை அதிக இடம் பிடிக்கின்றன. புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், ஏனோ, அதில் இருந்து மீளுவதில்லை... புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் வரும் ஆபத்துக்கள் ஏராளம்... புகையிலை பொருட்கள் மூலம், புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள், மனிதனை  தாக்கி, அவனது உயிருக்கு உலை வைத்து விடுகின்றன

இந்த  ஆபத்துக்கள் குறித்து நன்றாக தெரிந்தும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், ஏனோ அதை விட்டொழிப்பதில்லை... புகைப்பிடித்தலுக்கு எதிராக நடக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் முழுமையான  வெற்றி  இன்னும்  கிடைக்கவில்லை...

லண்டன் நிறுவனம் ஆய்வு:

புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதுபோன்று ஓர் ஆய்வைதான்  லண்டனை சேர்ந்த கிங்ஸ் காலேஜ் ஆப் லண்டன் என்ற கல்லூரி ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர்.



டாக்டர் அலெக்ஸ் டிரிகான் (Dr.Alex Dregan) என்பவர் தலைமையில் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டது. இங்கிலாந்து முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,  புகைப்பிடிக்கும் 8 ஆயிரத்து 800 பேர் உட்படுத்தப்பட்டனர். புகைப்பிடிக்கும் இவர்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஆய்வாளர்கள் சோதனை செய்தனர்.

புகைப்பிடிப்பதால் மனிதர்களின் உடல்களில் என்னென்ன பாதிப்புகள் உருவாகின்றன…. உடல்நிலையில் ஏற்படும் மாற்றம்…. மூளையின் செயல்பாடு… ரத்த அழுத்தம்… உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது,  பல திடுக்கிடும் தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சியூட்டும் அந்த ஆய்வு அறிக்கையை  லண்டன் கிங்ஸ் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.. ஆய்வில் புகைப்பிடிக்கும் பழக்கம் தொடர்ந்தால், மூளை மெல்ல மெல்ல அழுகிவிடும் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தம்.., ஒவ்வாமை,  மராடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள்  எச்சரித்துள்ளனர்.


உடல்நலத்தை கருத்தில் கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்களது வாழ்க்கை முறையை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதையும் மீறி, புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மூளை பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம்  ஏற்படும் என்றும்  ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆலோசனைகள்:

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது, உடல் எடையை சரியாக பராமரிப்பது., நாள்தோறும் நல்ல உடற்பயிற்சி செய்வது... போன்ற தொடர் பழக்கங்களின் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுதலை பெற முடியும் என்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்களை யோசிக்க வைத்துள்ள நிலையில், தற்போது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசுக்கு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

புகைப்பிடிக்க உரிமம்:

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதால், இனி, ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற சட்டம் இயற்ற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. நாட்டு மக்களின் நலன், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் சிட்னி பல்கலைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய சட்டத்தின் மூலம், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும்,  உரிமம் பெற கட்டணம் வசூலிப்பதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



புகையிலை பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு வெளிப்படையான, தைரியமான முடிவை எடுக்க வேண்டும் என்றும்  ஆராய்ச்சியாளர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை போன்று நம் நாட்டிலும் இதுபோன்ற ஒரு சட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…

--------------------------------------------------------

சமரசம் இஸ்லாமிய பத்திரிகையில் கடந்த டிசம்பர் 16-31 இதழில் வெளிவந்த கட்டுரை... உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: