Friday, January 18, 2013

ஏழைகளின் தன்மானம்....

ஏழைகளின் தன்மானம் என்ன 
கிள்ளுக்கீரையா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சுமையா பேகம்….
+2 தேர்வில் ஆயிரத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை எடுத்து பள்ளிக்கூடத்திலேயே முதலாவதாக வந்து, தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய மாணவி…

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவியின் தந்தை, சிறு தொழில் செய்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
படிப்பில் ஆர்வம்… இஸ்லாமிய ஒழுக்கம்… இப்படி அனைத்திலும் துடிப்புடன் இருக்கும் மகள் சுமையாவை, மேல்படிப்பில் சேர்க்க அவளது, அப்பாவுக்கு ஆசைதான்…

ஆனால், கல்வித்துறை, தற்போது வியாபாரமாக மாறிவிட்டதால், டோனேஷன், கல்விக்கட்டணம், என பல லட்சங்களை செலவழிக்க முடியாத நிலை அவருக்கு…

என்ன செய்வது என தெரியாமல், கவலையில் மூழ்கி இருந்தபோது, அவரை பார்க்க வந்த வந்தார் ஒரு சமூக ஆர்வலர்.

சுமையாவின் தந்தைக்கு தைரியம் ஊட்டினார். மகளை மருத்துவப் படிப்பில் சேர்க்க ஆலோசனைகளை கூறினார்.

உள்நாட்டில் மட்டுமல்லா, வெளிநாட்டிலும் நிறைய இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன… அவையெல்லாம் நன்றாக படிக்கும் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு உதவ முன் வருகின்றன என ஆசை வார்த்தை கூறினார். 


அதனால், எப்படியும் கல்வி உதவித் தொகை கிடைத்துவிடும். மகள் சுமையாவை மருத்துவப்படிப்பில் சேர்த்து விடலாம் என்ற ஆசையில் விண்ணப்பமும் வாங்கி வந்தார் அவரது தந்தை…

சமூக ஆர்வலர் அளித்த ஒருசில இஸ்லாமிய அமைப்புகளின் முகவரிகளுக்கு கடிதம் எழுதினார் சுமையாவின் தந்தை…

மகளை எப்படியும் உயர்கல்வியில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பி முயற்சி செய்தார்.

ஆனால், இவையெல்லாம் வீண் வேலை என்பது பிறகுதான், அவருக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது.

ஆம்…

கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புகள், ஏழை மாணவ மாணவியர்களை எந்தளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்த சிறிதும் தயங்குவதில்லை என்பது சுமையாவின் தந்தைக்கு பின்னர் புரிந்தது.

ஜமாத் சான்றிதழ்… மாணவர்களுக்கு நன்கு பழக்கமானவர்களின் சான்றிதழ்… வீட்டு நிலவரம்… வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்… அவர்களின் வருமானம் என்ன… அக்கம்பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்… அவர்களின் நிலை என்ன… இப்படி, பல கேள்விகளை கேட்டு துளைத்துவிடுகின்றன கல்வி உதவித் தொகை வழங்கும் பல இஸ்லாமிய அமைப்புகள்…


கல்லூரியில் சேருவதற்கு முன்பே, கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்று அளிக்கும்படியும் ஒருசில நேரங்களில் கேட்கப்படுகிறது.

ஒரு ஏழை முஸ்லிம், தன்னுடைய மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், யாருக்கும் தெரியாமல் கடன் வாங்க முற்படுகிறார். அல்லது, இஸ்லாமிய அமைப்புகளை நாடுகிறார்.

தான் கடன் வாங்குவதையோ, அல்லது உதவி பெற முயற்சிப்பதையோ யாரும் அறிந்துக் கொள்ளக் கூடாது குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில், மிகவும் உஷாராக இருக்கிறார் ஏழை முஸ்லிம் மாணவியின் தந்தை….

ஆனால், இவை பற்றியெல்லாம், சிறிதும் கவலைப்படாமல், கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகள், ஏழை முஸ்லிமின் தன்மானத்தை, கௌரவத்தை சுக்குநூறாக உடைத்து அவமானப்படுத்துகின்றன.


இதனால், ஏழை முஸ்லிம் மாணவ மாணவியர்களின் உயர்கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை வசதி படைத்த  மாணவர்களுக்கு சென்று சேர்ந்து விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இதுபோன்று நடந்து கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் காரணம் கூறுகின்றன..

ஆனால், உண்மையிலேயே, இஸ்லாமிய அமைப்புகளிடம் கல்வி உதவித் தொகை இன்று பெற்றுக் கொண்டிருப்பவர்கள், நல்ல வசதி படைத்த மாணவர்கள்தான்..

இஸ்லாமிய அமைப்புகளின் போக்கிற்கு ஏற்ப, கோல்மால் செய்து எப்படியும் இந்த மாணவர்கள் உதவித் தொகையை பெற்று மிக உயர்ந்து இடத்திற்கு சென்று விடுகின்றனர்.


ஆனால், படிப்பில் ஆர்வம் இருந்தும், சரியான வசதி இல்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர் சிலர், உண்மையாகவே கல்வி உதவித் தொகை பெறாமல், அல்லது, உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகளின் போக்கு காரணமாக,  உதவித் தொகை பெற முடியாமல், மேற்படிப்புகளை தொடர்வதில்லை….

மேலே குறிப்பிட்ட மாணவி சுமையா பேகம்,  ஒரு கற்பனை கதாபாத்திரம் இல்லை…

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று உண்மையிலேயே நாம் சந்திக்கும் நிஜம்…

மாணவர்களின் மேற்படிப்பிற்காக உதவி செய்கிறோம் என மார்தட்டிக் கொள்ளும் பல இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் அட்டகாசத்தை அடுக்கினால், நெஞ்சம் எரியும்….

இப்படிதான், வேலூரில் ஒரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பு உண்டு… உண்மையிலேயே அது செத்து விட்டது என்றே சொல்லலாம்…

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக பலர் இருந்தாலும், அவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், அதன் செயலாளர் செயல்பட்டு வருகிறார்.

இவர், கல்வி உதவித் தொகை பெற வரும் மாணவர்களை எப்படி அலைக்கழிகிறார் தெரியுமா…

இவரது சொந்த பணம் தருவதாக நினைத்துக் கொண்டு, பல நாட்கள் அலைய வைக்கிறார்…


இன்று வா…. நாளை மாலை 6 மணிக்கு மேல் வரவும்…. நான் இப்போதுதான் அலுவலகத்திற்கு வந்தேன்… பிறகு பார்க்கலாம்… என பல நாட்கள் அலைய வைப்பத்தில் இந்த யோக்கியருக்கு அவ்வளவு ஆனந்தனம்..

உதவித் தொகையை யாரும் பார்க்காமல் வாங்க வேண்டும் என நினைவில் வரும் மாணவ மாணவியர், இந்த இஸ்லாமிய அமைப்பின் செயலாளரின் போக்கும் அவர்  செய்யும் அட்டகாசம் ஆகியவற்றால் நிச்சயம், பலரின் பார்வையில் படவே செய்கின்றனர்.

உறவினர்கள்… நண்பர்கள் என பலர் உதவித் தொகை பெற வரும் மாணவ மாணவியரிடம் என்ன இங்கு வந்திருக்கிறீர்கள் என வினா எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், அவமானத்திற்கு தள்ளப்பட்டு, கல்வி உதவித் தொகையே வேண்டாம் என்ற நிலைக்கு பல இஸ்லாமிய மாணவர்கள் வந்துவிட்டு, உயர்கல்வியையும் தொடர விரும்புவதில்லை.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிட்டு கல்வி உதவித் தொகை வழங்குகிறோம்… படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள், உண்மையிலேயே, இஸ்லாமிய மாணவர்களின் கௌரவத்திற்கு வேட்டு வைக்கின்றன.

எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு அவமானப்படுத்துகின்றன…

இது, பல ரூபங்களில் இன்றும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


பல அவமானங்கள்.,, உள்ளத்தில் அடி….. ஏழ்மையை எள்ளி நகையாடும் போக்கு… ஆகியவற்றையெல்லாம், சகித்துக் கொண்டு, ஒருசில மாணவர்கள், கல்வி உதவித் தொகையை பெறவும் செய்கின்றனர்..

காரணம் எப்படியும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என துடிப்புதான்…ஆர்வம்தான்…

இதனால்தான், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்களின் ஏழ்மையை எள்ளி நகையாடுகின்றன.

‘ஒட்டகத்தில் வந்து தர்மம் கேட்டாலும் எந்த கேள்வியும் கேட்காமல் தர்மத்தை அளித்து விடு’ என்கிறது இஸ்லாம்…

ஆனால், இஸ்லாத்தின் பேரில் உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் பல இஸ்லாமிய அமைப்புகள், ஏனோ இதை மறந்துவிடுகின்றன.

கல்வியில் ஆர்வம் உள்ள மாணவ மாணவியரை அடையாளம் கொண்டு கௌரவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள், அவர்களின் உயர்கல்விக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும்..

அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறும் மாணவர்களின் நிலையை ஆராய்ந்து, எந்த கேள்வியும் கேட்காமல், உதவி புரிய முன்வர வேண்டும்.

இதன்மூலம், ஒருசில வசதி படைத்த மாணவர்கள்கூட பலன் அடைந்துவிடக் கூடும்.

அதைப்பற்றி கவலைப்பட கூடாது.  

ஆனால், ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவ மாணவியர்களின் தன்மானத்திற்கு, கௌரவத்திற்கு வேட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஜமாத் சான்றிதழ், கல்லூரியில் சேருவதற்கு முன்பே கல்லூரி சான்றிதழ்… சமூகத்தில் நன்கு தெரிந்து இரண்டு பேர்களின் சான்றிதழ்… வீட்டின் முகப்பு போட்டோ என பல கேள்விகளை கேட்பதை இனியும் தவிர்க்க வேண்டும்…

கல்வியில் ஆர்வம் உள்ள இஸ்லாமிய மாணவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் உதவி செய்ய முன் வர வேண்டும் இஸ்லாமிய அமைப்புகள்…
அதன்மூலம் மட்டுமே, உண்மையிலேயே ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவ மாணவியர் உயர்கல்வியில் ஆர்வம் செலுத்த முடியும்…

சமூதாயத்தில் உண்மையிலேயே கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும்…

கல்வி உதவித் தொகை வழங்கும் இஸ்லாமிய அமைப்புகள் இனியும் விழித்துக் கொள்வார்களா…
­­­­­­------------------------------------------------

சமரசம் நவம்பர் 1-15 (2012) இதழில் வெளியான கட்டுரைதான் மேலே நீங்கள் படித்தது. வெளியிட்ட சமரசம் இதழின் நிர்வாகிகளுக்கு நன்றி...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: