Sunday, June 1, 2014

இருவர்...!

இருவர்............!


என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத இரண்டு பேர்...!

ஒருவர், என்னுடைய மூத்த சகோதரி....!

மற்றொருவர், என்னுடைய மூத்த சகோதரர்....!!

2014ஆம் ஆண்டின் தொடக்கம் நன்றாக இருககும் என எதிர்பார்ப்புகள், எல்லோரையும் போல எனக்கும் இருந்தது.

காரணம், கடந்த 2013ஆம் ஆண்டில் சந்தித்த தொழில் ரீதியான பிரச்சினைகளால் மனசு மிகவும் பாதிப்பு அடைந்திருந்தது.

அதற்கெல்லாம், 2014ஆம் ஆண்டு நல்ல தீனையை கொடுத்துவிடும் என நம்பினேன்.

ஆனால்,

தொடக்கமே மிகப் பெரிய இடியாக விழுந்தது.

ஆம்,

ஜனவரி மாதத்தின் 11ஆம் நாள் இரவு 10 மணி...

இரவு பணிக்கு முன்பு உணவு அருந்திவிட்டு வரலாம் என அலுவலத்தில் இருந்து வெளியே வந்தபோது, செல்பேசி சிணுங்கியது.

எடுத்து பார்த்தபோது, ஆப்ஜான் (என்னுடைய மூத்த சகோதரியை நாம் அப்படிதான் அழைப்போம்.) பேசினார்.


அஜீஸ், அதிர்ச்சியான தகவல்டா...தம்பி முனாப் காலாமாயிட்டான். ஹாட் அட்டாக்தான் காரணம் என்று பேசினார்...

எனக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.

வாழ்க்கையில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக என்னுடன் டிராவல் செய்த சகோதரர் முனாப் திடீரென மரணம் அடைந்தது என்னால் நம்பவே முடியவில்லை.

என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் இருந்து கல்லூரி நாட்கள் வரை, ஏன் கல்லூரி படிப்பு முடிந்த பிறகுகூட, சகோதரர் முனாப் செய்த சின்ன உதவிகள், கடமைகள், என்முன் வந்து நிழலாடின.

இன்று நான் ஒரு நல்ல நிலைக்கு இருப்பதற்கு காரணமே, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் செய்த உதவிகள் முக்கிய காரணம் எனலாம்....

எங்களுடைய குடும்பம் மிகப் பெரிய குடும்பம்....நிறைய அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள்...

அத்தனை பேரும் என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள்தான்.....

அப்படி அக்கறை கொண்டவர்களில் சகோதரர் முனாப்பும் ஒருவர். அவர் திடீரென மரணம் அடைந்தது. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை...

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாள் மீளவேயில்லை......

இப்படி, அதிர்ச்சியில் மீளாமல் தவிர்த்துக் கொண்டிருந்த என் மீது மீண்டும் ஓர் இடி வந்து விழுந்தது.

ஆம்,

சகோதரர் முனாப்பின் மரணம் செய்தியை சொன்ன என் மூத்த சகோதரரி ஆப்ஜான்,  கடந்த வாரம் (27.05.2014) இரவு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மீண்டும் அதே இரவு பணியின்போது என்முன் வந்து விழுந்து இடியாய் தாக்கியது...


ஒரு கணம் ஆடி போனேன்.

கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்து விழுந்தது.

பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

அதிகாலையில் ரயில் பிடித்து ஆற்காட்டிற்கு சென்று சேர்ந்து, சகோதரரின் உயிரற்ற உடலைப் பார்த்தபோது,  துக்கத்தால், தேம்பி தேம்பி அழுதேன்.

எனக்கு தாயாக இருந்தவர்...

நான் சில நேரங்களில் கோபப்பட்டால்கூட, தம்பிதான் கோபப்படுகிறான் என இயல்பாக நினைத்து என் மீது அன்பு பாராட்டியவர்..

சில நாட்கள் நான் போன் பேச மறந்தாலும், செல்பேசியில் என்னை அழைத்து என்னடா எப்படி இருக்கே. உடல்நலம் நன்றாகதானே இருக்கு...என நலம் விசாரிப்பார்.

அவரை பார்க்க வீட்டிற்கு சென்றால், அன்புடன் பேசி உணவு பரிமாறுவார்...

நல்ல சகோதரியாக, தாயாக என்னிடம் பழகியவர்...

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்மீது அன்பு செலுத்திய மூதத சகோதரி ஆப்ஜான், திடீரென ஹாட் அட்டாக்கில் உயிரிழந்தது என்னை நிலைத்தடுமாறி செய்து விட்டது.

எல்லாம் இறைவனுடைய நாட்டம்தான்.

ஆனால், நான்கு மாத காலத்திற்குள் இரண்டு நல்ல உள்ளங்கள், என்னைவிட்டு சென்றது எனக்கு மிகப் பெரிய இழப்பு...

அந்த இழப்புகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை...

சகோதரர் முனாப், சகோதரி ஆப்ஜான் ஆகிய இரண்டு பேரும் அடிக்கடி என் கண்முன் வந்து வந்து செல்கின்றனர்...

இருவரும் என்னிடம் அடிக்கடி பேசுகிறார்கள்...மனம் அப்படிதான் நினைக்கிறது...

அந்த இரண்டு இழப்புகளை இனி எப்படி தாங்கிக் கொள்ள போகிறேன் என்று எனக்கு புரியவில்லை... தெரியவில்லை...

நல்ல உள்ளங்கள் இருவருக்கும் இறைவன் சொர்க்கத்தில் அழகான இடத்தை அளிக்க பிரார்த்தனை செய்கிறேன்...

அவர்களுடைய குடும்பத்தாருக்கும், ஏன், எனக்கும் ஆறுதலை அமைதியை தர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: