Sunday, June 1, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (85)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 85


மதுவின் பிடியில் பெண்கள்–சிறுவர்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை....!

மதுவுக்கு எதிராக போராடும் தமிழக தலைவர்களின் முதலிடம் பிடிப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். போராட்டஙகளையும் அடிக்கடி நடத்தி வருகிறார்.

ஆனால், அரசோ எதுவும் கண்டுக் கொள்வதில்லை.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கையை சுட்டிக் காட்டி

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (01.06.2014)

அந்த அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு....

மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

மதுக் குடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

"ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை –2014" என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, மது குடிப்பதால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அப்போது மதுவால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது.

மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கூறப்பட்ட நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று சுகாதார நிறுவன அறிக்கை எச்சரித்துள்ளது.


மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்குட்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 32% அதிகமாகும்.

அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 41 லிட்டர் மது அருந்துகிறார்கள். பெண்களில் 10.60 விழுக்காட்டினர் மது அருந்துகிறார்கள் என்பதும், 12 வயதிலேயே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கவலையளிக்கிறது.

மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவில் அதிக விழுக்காடு ஆண்களும், பெண்களும் மது அருந்துகின்றனர் என்பதிலிருந்தே மது அரக்கன் இந்தியர்களை எப்படி வளைத்துப் பிடித்திருகிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

மதுவின் தீமை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, மதுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இப்போது அத்தகைய கொள்கையை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலோ நிலைமை மேலும் மோசமாக உள்ளது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.

எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மகளிர் நடமாட முடியாத பகுதியாக மாற்றிவரும் அரசு அடுத்த கட்டமாக அனைத்து மாநக ராட்சிகளிலும் பீர் விற்பனைக்கென தனிக் கடைகளை திறந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அடித்துள்ள எச்சரிக்கை மணிக்கு பிறகாவது மதுக்கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் வழக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தமிழக அரசு முயல வேண்டும்.

குடியால் குடும்பங்கள் சீரழிவதையும், உயிர்கள் பறி போவதையும் தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை நியாயமான கோரிக்கை.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் அறிக்கையை கவனத்தில் கொண்டாவது அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: