Sunday, September 7, 2025

முஸ்லிம் மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்....!

முஸ்லிம் மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பில் அறிமுகம்....!

ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கிடைக்கும்.....!!

சென்னை, செப்.07- ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகம் பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு ஒரு புதிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர உதவும். இதன் மூலம் ஒரு முஸ்லிம் மாணவருக்கு 36 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும்.

ஒன்றிய அரசு திடீர் நிறுத்தம் :

முஸ்லிம் மாணவர்களுக்கு ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்  நிறுத்தப்பட்டது. இதனால் , ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்களின் வெளிநாட்டு கல்விக் கனவு சிதைந்து போனது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சென்று சேர்ந்து உயர்கல்வி பெறும் மாணவர்களின் கனவும் சிதைந்ததால், பல மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர். இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அதன்மூலம் தங்களுடைய உயர்கல்வி கனவு நிறைவேறும் என்றும் முஸ்லிம் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

தமிழக அரசு அறிமுகம் :

இந்நிலையில், தமிழ்நாடு அரசு முஸ்லிம் முதுகலை மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்குகிறது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்த அரசு உத்தரவின்படி, வெளிநாடுகளில் முதுகலை படிப்பைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் பத்து முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயனாளியும் ஆண்டுதோறும் 36 லட்சம் ரூபாய் வரை பெற தகுதியுடையவர்கள். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதுகலை படிப்பை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு அரசு இந்த புதிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அனுமதித்துள்ளது. இது மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய வெளிப்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

அரசாணை வெளியீடு :

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஆண்டுதோறும் பத்து முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடரத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய்  வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.  தமிழ்நாடு வக்பு வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு, 2025-26 நிதியாண்டிற்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய தகவல்கள் :

உலக அளவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் 250க்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதுகலைப் படிப்பு, பொறியியல் மற்றும் நிர்வாகம், வேளாண் அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், கணக்கு நிதியியல், சமூக அறிவியல், சட்டம் உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர இந்த உதவித் தொகை வழங்கப்படும்.  கல்வி உதவித்தொகைப் பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், மாணவர்களின் மதிப்பெண்கள் 60 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். மாணவர்களின் வயது 30 க்கு மேல் இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நான்கு தவணைகளின் படி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முஸ்லிம் மாணவர்கள் சார்பில் அளிக்கப்படும் மனுக்களை தமிழ்நாடு அரசின் உயர்நிலைக்கு குழு பரிசீலனை செய்து, தகுதியான மாணவர்களின் பெயரை தேர்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.

 - சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, September 6, 2025

தாயிஃப் ஒட்டகப் பந்தய விழா....!

 " தாயிஃப் ஒட்டகப் பந்தய விழா "

 சவூதி அரேபியாவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஒட்டகப் பந்தயம் விழா மற்றும் அழகுப் போட்டிகளைக் கொண்ட ஒரு பெரிய கலாச்சார நிகழ்வாகும். இந்த விழா, மன்னர் அப்துல்அஜிஸ் ஒட்டக விழா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து ஒட்டகப் பிரியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் பந்தயங்கள், ஒட்டகங்களின் அழகு மதிப்பிடல், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகள் என பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. 

மேலும், ஒட்டகங்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பந்தயத்தில் ஈடுபடும். பாரம்பரியமாக, ஜாக்கிகள் ஒட்டகங்களின் மீது சவாரி செய்வர்.  இதேபோன்று, ஒட்டகங்களின் அழகை நடுவர் குழுக்கள் மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள்.  இந்த விழாவில் ஒட்டக அக்ரோபாட்டிக்ஸ், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.  இங்கு ஒட்டகப் பந்தயம் தொடர்பான பல பிரத்தியேகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்த விழா முக்கியமாக ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் ரேஸ்ட்ராக்கில் நடைபெறுகிறது. தாயிஃப் மற்றும் அல்உலா போன்ற பிற இடங்களிலும் இதுபோன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஒட்டகப் பந்தயம் என்பது சவூதி கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகும். இந்த விழாவானது நாட்டுப்புற பாரம்பரியத்தை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை பெட்ரோலியத்தை சார்ந்திருப்பதில் இருந்து மாற்றி, உலகளவில் ஒட்டகப் பந்தயத்தை பிரபலப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் உள்ளது.

தாயிஃப் ஒட்டகப் பந்தய விழா :


சவூதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற தாயிஃப் நகரில் நடைபெறும் ஒட்டகப் பந்தய விழா ஒரு பாரம்பரிய விழாவாகும். இது பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழா ஒட்டகப் பந்தயங்கள், ஒட்டக அழகுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கியது. இதன் மூலம் ஒட்டகங்களின் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடுகிறது. இதில், ஒட்டகங்களுக்கு லட்சக்கணக்கான சவுதி ரியால்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.   இந்த விழாவின் முக்கிய அம்சம் ஒட்டகப் பந்தயங்கள் ஆகும். இதில் பல்வேறு பிரிவுகளில் ஒட்டகங்கள் போட்டியிடுகின்றன. 

கலாச்சார நிகழ்வுகள்:

தாயி ஃப் சவூதி அரேபியாவின் கோடைகால தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உயர்ந்த மலைப்பகுதி காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.  இங்கே உள்ள ஒட்டகப் பந்தய மைதானம் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான ஒட்டகப் பந்தய விழா செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  வரலாற்று சிறப்புமிக்க தாயிஃப் ஒட்டக சதுக்கத்தில் நடைபெறும் இந்த ஒட்டகப் பந்தய விழாவின் ஆறாவது நாளின் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டகப் பந்தயம் நடைபெற்றது. 

சவூதி கேமல் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் ஏழாவது பதிப்பில், எட்டு நாடுகளைச் சேர்ந்த 78 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஐந்து ஒட்டகப் பந்தயங்கள் உட்பட 249 பந்தயங்கள் இடம்பெறுகின்றன. மொத்த பரிசுத் தொகை 50 மில்லியனுக்கும் அதிகமான சவூதி ரியாலாகும். 

தலா ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் ஆண்களுக்கு மூன்று பந்தயங்களும், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பெண்களுக்கு இரண்டு பந்தயங்களும் இருக்கும். ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றி பெறுபவர் ஆயிரம் சவூதி ரியால் ரொக்கப் பரிசைப் பெறுவார், பத்தாவது இடத்தைப் பிடிக்கும் போட்டியாளருக்கு 5 ஆயிரம் சவூதி ரியால் வரை விருதுகள் வழங்கப்படும். இந்தாண்டு நடைபெறும் ஒட்டகப் பந்தய விழாவில்  சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், குவைத், ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒட்டகப் பந்தய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். 

ஒரு லட்சம் ஒட்டங்கள் பங்கேற்பு :

தாயிஃப் ஒட்டகப் பந்தய விழாவில், சாதனை எண்ணிக்கையுடன் ஒரு லட்சம் ஒட்டகங்கள் பங்கேற்றதுடன், அதிக பந்தயங்களும் நடைபெற்றதால், இந்த விழா ஒட்டக உரிமையாளர்களை வெகுவாக ஈர்த்தது. அவர்களில் ஹெயிலைச் சேர்ந்த அனுபவமிக்க போட்டியாளரும் உள்ளூர் பந்தயப் பாதையின் இயக்குநருமான ஃபஹத் பென் ஜூரோவும் ஒருவர் ஆவார். இரண்டு முதல் ஆறு வயது வரையிலான 50க்கும் மேற்பட்ட ஒட்டகங்களைக் கொண்ட தனது மந்தையின் மீது அவர் அதிக முதலீடு செய்துள்ளார். மேலும் அவை பந்தயத்தில் சிறப்பாகச் செயல்படும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். "ஒட்டகப் பந்தயத்திற்கு அதன் சொந்த சூழல் உள்ளது. மேலும் இந்த நிகழ்வுகளில் போட்டியின் உணர்வு உண்மையிலேயே தனித்துவமானது" என்று ஃபஹத் பென் ஜூரோ தெரிவித்துள்ளார். 

மேலும், தாயிஃப் பாதையில் உள்ள வசதிகளைப் பாராட்டிய அவர், இது "ஒட்டகப் பந்தயத்திற்கு ஏற்றது" என்றும், விளையாட்டின் வளர்ந்து வரும் போட்டித்தன்மை மற்றும் அதிகரித்து வரும் பரிசு மதிப்புகளை எடுத்துரைத்தார். இந்த ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் விழாவில் பங்கேற்க உள்ளன. இது முந்தைய ஆறு பதிப்புகளை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இந்த விழா கின்னஸ் உலக சாதனைகளால் ஒரு பந்தய விழாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான ஒட்டகங்களைக் கொண்டிருந்ததற்காக அங்கீகரிக்கப்பட்டது.  இந்த நிகழ்வு 2023 இல் மக்கா பொருளாதார சிறப்பு விருதையும் வென்றது. இது பாரம்பரியத்தைக் கொண்டாடுவதிலும் கலாச்சார மற்றும் பொருளாதார ஈடுபாட்டை அதிகரிப்பதிலும் அதன் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Thursday, September 4, 2025

வேண்டாம் பயம்....!

 வேண்டாம் பயம்....!

உலகில் மனிதர்கள்  சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக அவனிடம் உருவாகும் தேவையில்லாத பயம் இருந்து வருகிறது.  பயம் கொள்ளும் மனிதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறான். பயம் என்ற சுபாவம் அல்லது மனிதனக்கு ஓரளவுக்கு தேவை என்றாலும், எப்போதும் ஒருவித பயத்துடன் வாழ்வது அவனுடைய வாழ்க்கையை நரகமாக்கிவிடும். 

ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதன், நோய் ஏற்பட்ட ஒரு மனிதனைக் கண்டு, தமக்கு அந்த நோய் வந்துவிடுமோ என்று பயப்படும் நிலை தற்போது இருந்து வருகிறது. அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் மருத்துவர் ஆற்றிய உரை ஒன்றை கேட்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அந்த பெண் மருத்துவர் ஒரு மனிதனை பயம் எப்படி, நோய்களுக்கு ஆளாகி அவனுடைய வாழ்க்கையை வீணடித்துவிடுகிறது என்பதை மிகவும் சிறப்பான முறையில் எடுத்து கூறியிருந்தார். 

பெண் மருத்துவரின் அந்த உரையில்,  பயம் என்ற ஒரு குணமே நிறைய பிரச்சினைகள்,மனிதர்களுக்கு உருவாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டார். ஒரு மனிதன் பயப்பட்டால் உடம்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் விளக்கமாக கூறியிருந்தார். இரத்த அழுத்தம், நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய், ஹார்ட் அட்டாக், தூக்கமின்மை போன்ற எல்லா நோய்களுக்கான மூலக்காரணமாக பயம் இருந்து வருகிறது. 

தேவையில்லாத பயம் :

ஒருவர் தேவையில்லாமல் பயம் அடைந்தால், முதலில் அவரது வயிறு படபடக்கும். ஒருவரின் பயம் காரணமாக முதலில் பாதிப்பு அடைவது அவரது குடல் தான். பயத்தால் முதலில் பாதிப்பு அடைவது நம்முடைய ஜீரண மண்டலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக அஜீரண கோளாறு ஏற்படும். ஒரு மனிதன் தொடர்ந்து பயத்தில் வாழ்ந்தால், இரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்டவை நாள்பட்ட உபாதைகள் அவனிடம் குடிபுகுந்துவிடும். கடைசியாக இதய நோய்கள் ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும்.  பயத்தால் முதலில் பாதிக்கப்படுவது வயிறு தான். பயம் ஏற்பட்டால் வயிற்றில் தான் முதலில் பிரச்சினைகள் உருவாகும். பசி எடுக்காது. வாந்தி வரும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். 

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் பயம் தான் அடிப்படையாக உள்ளது. அத்துடன் தேவையில்லாத கவலை கொள்வதும் மனித ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்துவிடும். மேலும் பயம் என்பது தோலில் தன்னுடைய வேலையை காண்பித்துவிடும். தோலில் கட்டி வருவது, தோல் கருப்பு நிறமாக மாறுவது., தோல் அலர்ஜி ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் பயத்தால் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு மூலக்காரணம் பயம் தான். பல நோய்களுக்கு ஆரம்பப்புள்ளி பயம் மற்றும் கவலை என்றே கூறலாம்.

மனிதர்களுக்கு பொதுவாக இருக்கும் பல பிரச்சினைகள் எங்கு இருந்து ஆரம்பிக்கும் என்ற கேள்வியை எழுப்பினால், அவனது மனநிலையில் இருந்து ஆரம்பிக்கும் என்ற பதில் கிடைக்கும். எனவே ஒரு மனிதன் தன்னுடைய மனநிலையை நல்ல முறையில் பேண வேண்டும். தேவையில்லாத பயம் கொள்ள வேண்டியதே இல்லை.

மருத்துவப் பரிசோனைக்கு முன்பே பயம் : 

ஒருசிலருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு முன்பே நோய்கள் குறித்த தேவையில்லாத பயம் ஏற்பட்டுவிடும். மருத்துவர் ஒருவர் ஒரு மருத்துவப் பரிசோனைக்கு பரிந்துரை செய்தால், ஏன் அதை பரிந்துரை செய்கிறீர்கள். எனக்கு அந்த நோய் இருக்கும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விகளை எழுப்பும் நோயாளிகள் தற்போது அதிகரித்துவிட்டார்கள். ஒரு பெண் நோயாளிக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அந்த சோதனைகள் எடுத்தபிறகு, அந்த பெண்ணுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. எனினும் அந்த பெண்ணுக்கு திருப்தியே ஏற்படவில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு கூட எனக்கு எந்தவித நோய் பாதிப்பும் இல்லையா என்ற கேள்வியே அந்த பெண்ணிடம் இருந்துகொண்டே இருந்தது. மருத்துவர் எவ்வளவு சொல்லியும் கூட அந்த பெண்ணுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. இத்தகைய மனநிலையில் தான் தற்போது மனிதர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். 

மருத்துவப் பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அதை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பயம் அடையக் கூடாது. தேவையில்லாத குழப்பங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை எடுக்கும்போது பயம் கொள்ளக் கூடாது. நூறு பேருக்கு மருத்துவப் பரிசோதனை எடுத்தால், ரிசல்ட் 95 பேருக்கு நர்மலாக இருக்கும். பின்னர் ஏன் மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றால், நமக்கு நோய் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளதான் டெஸ்ட் எடுக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.  எல்லாமே நர்மலா இருந்தால், நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். எனவே தேவையில்லாமல் பயம் அடைந்துகொண்டு எப்போதும் ஒருவித கவலையுடன் வாழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி அந்த பெண் மருத்துவர் கூறியபோது உண்மையில் பயம் எந்தளவுக்கு மனித வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது என்பதை உணர முடிந்தது. 

ஏக இறைவனுக்கு மட்டுமே பயப்பட வேண்டும் :

நம்முடைய வாழ்க்கையில் நாம் பயப்பட வேண்டிய ஒருவன் யார் எனில் அது ஏக இறைவன் மட்டுமே. ஏக இறைவனின் வழிகாட்டுதலின் படி வாழ்ந்தால் அந்த பயம் கூட நமக்கு ஏற்படாது. இறைவன் அமைந்து தந்த அழகிய வாழ்க்கை நெறியின்படி, நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நாம் வாழ்ந்தால், தேவையில்லாத பயம் நமக்கு நிச்சயம் ஏற்படாது. நல்ல வாழ்க்கை நெறிமுறைகள் நம்மிடம் உருவாகிவிடும். வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், ஏக இறைவனுக்கு பயந்து அவன் தந்த வாழ்க்கையை முறைப்படி வாழ்ந்து, தேவையில்லாத பயங்களை தவிரித்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை தான் அந்த பெண் மருத்துவரும் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, September 2, 2025

உதவிக்கரம்....!

 Madrasa Students are preparing relief materials for the flood victims in Punjab.

- PunjabFloods



Monday, September 1, 2025

ஹப்பு ரசூல் மாநாடு.....!

புங்கனூர் தாருல் ஹுதாவில் நடைபெற்ற ஹப்பு ரசூல் மாநாடு...!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் பங்கேற்று உரை...!!

புங்கனூர், செப்.2- உலகப் புகழ்பெற்ற தாருல் ஹுதா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் புங்கனூர் வளாகத்தில், ஹப்பு ரசூல் எனப்பபடும் மீலாது விழா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், பங்கேற்று உரையாற்றினார். 

புங்கனூர் தாருல் ஹுதா வளாகம் :

கேரளாவிற்கு வெளியே நிறுவப்பட்ட தாருல் ஹுதா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முதல் வளாகம் தாருல் ஹுதா புங்கனூர் ஆகும். தாருல் ஹுதா முன்னாள் மாணவர்கள் ஆந்திர வளாகத்திற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த நிறுவனம் ஆகஸ்ட் 20, 2007 அன்று நிறுவப்பட்டது. ஜூன் 10, 2009 அன்று ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் மன்ஹாஜுல் ஹுதா இஸ்லாமியக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. பின்னர் அது தாய் நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப தாருல் ஹுதா புங்கனூர் என மறுபெயரிடப்பட்டது. வளாகம் ஹைதராபாத் நகரத்திலிருந்து 562 கிமீ தொலைவிலும், அதன் கேரள வளாகத்திலிருந்து 550 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தாருல் ஹுதா புங்கனூர் ஆந்திரப் பிரதேச மாணவர்களுக்கு ஆங்கிலம், அரபு மற்றும் உர்தூ மொழிகளுடன் தெலுங்கு மொழி மற்றும் இலக்கியம் கற்பிப்பதன் மூலம் சேவை செய்கிறது. இப்போது தாருல் ஹுதா புங்கனூர் மத மற்றும் பொருள் அறிவியல் இரண்டிலிருந்தும் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக தேசிய மாணவர்களுக்கும் அதன் கதவுகளைத் திறந்துள்ளது. தாருல் ஹுதா புங்கனூர் மாணவர்களுக்கு ஒரு அழகிய சூழலை வழங்குகிறது. இது மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளையும் மறைக்கப்பட்ட திறன்களையும் துலக்குகிறது. ஸ்மார்ட் வகுப்பறை, ஜைனுல் உலமா நூலகம், நான்கு மொழி செய்தித்தாள்கள் கொண்ட வாசிப்பு அறை, கணினி ஆய்வகம், கிராண்ட் மஸ்ஜித் மற்றும் பரந்த விளையாட்டு மைதானம் போன்ற முழுமையான தானியங்கி நூலகம் வளாகத்தில் வசதிகள் மற்றும் வசதிகள் உள்ளன.

பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட மாணவர்கள், முறையான பள்ளிகளில் ஐந்தாண்டு தொடக்கக் கல்வியை முடித்தவர்கள், ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்த நிறுவனத்தில் சேர தகுதியுடையவர்கள். 10 முதல் 12 வயது வரையிலான மாணவர்களுக்கு வாய்மொழி மற்றும் எழுத்துத் தேர்விற்குப் பிறகு சேர்க்கை வழங்கப்படுகிறது. தாருல் ஹுதா புங்கனூர் அதன் கல்வி நடவடிக்கைகளை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கல்வி அடிமட்டத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் அருகிலுள்ள கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் ஆரம்ப மதரசாக்களை அமைக்க நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் அங்குள்ள குழந்தைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள முடியும். தாருல் ஹுதா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கமான ஹாடியாவின் மேற்பார்வையின் கீழ் 50க்கும் மேற்பட்ட இதுபோன்ற மதரஸாக்கள் இயங்கி வருகின்றன.

ஹப்பு ரசூல் மாநாடு :

இப்படி சிறப்புமிக்க இந்த தாருல் ஹுதா புங்கனூரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹப்பு ரசூல் மாநாடு நடைபெற்றது. இறைத்தூதர் அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து மார்க்க அறிஞர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அப்துல் பாசித் உரை :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய செயலாளர் வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. எச்.அப்துல் பாசித் கலந்துகொண்டு, விழாவில் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தாருல் ஹுதா புங்கனூர் வளாகம் ஆற்றிவரும் மிகப்பெரிய சேவையை மிகச் சிறந்த முறையில் எடுத்துரைத்தார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரப்பும் வகையில் அழகிய சேவை ஆற்றிவரும் தாருல் ஹுதா, சமய நல்லிணக்கத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்று அவர் புகழாரம் சூட்டினார். 

இதைத் தொடர்ந்து அன்பிற்குரிய நபிகள் நாயகத்தின் (ஸல்) அன்பில் ஆத்மார்த்தமான உர்தூ ஷாயாரி எனப்படும் உர்தூ கவிதை அரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்துல் பாசித், அழகிய உர்தூ மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழை எடுத்துரைக்கும் வகையில் மொழிந்த உர்தூ கவிதை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. 

இந்த சிறப்புமிக்க ஹப்பு ரசூல் மாநாட்டை, தாருல் ஹுதா புங்கனூர் நிர்வாகிகள் மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். மாநாட்டில், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டு, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய வாழ்க்கை முறை குறித்தும், அவர்களின் மனிதகுல தொண்டு குறித்தும் அறிஞர் பெருமக்கள் ஆற்றிய உரைகளை கேட்டு பயன் அடைந்தனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


உரை....!

 வாக்காளர் உரிமை பேரணி...!

பாட்னா - பீகார்...!!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை...!



உரை....!

 வாக்காளர் உரிமை பேரணி....!

பாட்னா - பீகார்...!!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை..!