Saturday, March 8, 2014

"மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (71)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  

நாள் - 71


மதுவை ஒழிக்க மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.....!

பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்......!!

மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால், அதற்கான முதல்படியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
மகளிரின் முக்கியத்துவத்தையும், மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையிலான சர்வதேச மகளிர் நாள் (மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையை மாற்றி இவற்றை பெண்கள் எட்டிப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும்,  பெண்களுக்கு மரியாதை கொடுத்த வரலாற்றுக்கு சொந்தமான தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை இன்று மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான அடிப்படைக் காரணம் மதுதான் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இலக்கை நோக்கி அனைத்து வடிவங்களில் போராட மகளிர் தின நாளில் மகளிர் மட்டுமின்றி அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: