Wednesday, April 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....!(75)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!. 

நாள்  -75


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்....!.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.....!

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் வைகோ, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகுசுந்தரத்தை ஆதரித்து தேனி இலட்சுமிபுரத்தில் வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு ஏதுவாக, வாக்குப்பதிவையொட்டி, மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பூத் செலவுக்கு என்று முதல் கட்டமாகப் பணத்தை வாரி இறைத்து இருப்பதாக குற்றம் சாட்டிய வைகோ, இதன் காரணமாக அவர்களுடைய கைகளில் மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக அவர் கூறினார்.

டாஸ்மாக் கடைகளால், பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அனைத்திற்கும் மூல காரணமே மதுக்கடைகள்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் என்பது தங்களது கொள்கை என குறிப்பிட்ட வைகோ, அதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ததையும் நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என விருப்பம் தெரிவித்த வைகோ, வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்காக, குறைந்தது இரு வார காலம், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே வைகோவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா...பொறுத்து இருந்து பார்ப்போம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: