Monday, February 23, 2026

முஸ்லிம் பெண்ணுக்கு போர்வையை தர மறுத்த முன்னாள் பாஜக எம்.பி.,..!

 

மதத்தின் பெயரால் அவமதிப்பு

முஸ்லிம் பெண்ணுக்கு போர்வையை தர மறுத்த முன்னாள் பாஜக எம்.பி., 

போர்வையை திரும்ப ஒப்படைத்து ஒற்றுமையை வெளிப்படுத்திய ராஜஸ்தான் மக்கள்

ஜெய்ப்பூர், பிப்.24- ராஜஸ்தான் மாநிலத்தில் போர்வை விநியோகம் செய்த பாஜக முன்னாள் எம்.பி., சுக்பீர் சிங் ஜானாபுரியா,போர்வை வாங்கியவர்களின்  பெயரைக் கேட்டு முஸ்லிம்கள் என்று தெரிந்ததும் கொடுத்த போர்வைகளை பிடுங்கி வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் போங்க் சவாய் மாதோபூர் தொகுதி பாஜக முன்னாள் எம்.பி சுக்பீர் சிங் ஜானாபுரியா அண்மையில் ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளை விநியோகம் செய்தார். அப்பொழுது போர்வை வாங்க வரிசையில் நின்ற பெண்களிடம் அவரது உதவியாளர்கள் பெயர் விபரங்களை கேட்டனர். சுஹரா ஜோராக்கான், ராஷியா, சுபைதா என முஸ்லிம் பெயர்களை பெண்கள் கூறியதை கேட்ட முன்னாள் எம்.பி உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் எம் பி யின் விளக்கம் :

பிரதமர் மோடியை அவமதிக்கும் முஸ்லிம்களுக்கு போர்வை பெற தகுதி இல்லை தனது செயலுக்கு அந்த பாஜக முன்னாள் எம்.பி நியாயம் கற்பித்தார்.மேலும் இது அரசு திட்டம் அல்ல என்றும் தனது சொந்த செயலில் செய்யும் உதவி என்பதால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தான் மட்டுமே  தீர்மானிப்பேன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.

மக்களின் போராட்டம் :

மணி நேர கணக்கில் வரிசையில் நின்ற முதியவர்களை மதத்தின் பெயரால் அவமானப்படுத்திய பாஜக முன்னாள் எம்.பிக்கு எதிராக அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?என்று கேள்வி எழுப்பினர். மேலும் முன்னாள் எம்.பி.யின் இந்த பாராபட்சமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போர்வையை பெற்ற இந்து சமூகத்தை சேர்ந்த சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை அவரிடமே திரும்ப ஒப்படைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இளைஞர் காங்கிரஸ் உதவி :

இதனிடையே பாஜகவினர் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக முன்னாள் எம்.பி. அவமரியாதை செய்த இஸ்லாமிய பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று போர்வையை வழங்கி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மனிதநேய உதவிகளில் கூட மதம் பார்க்கும் பாஜகவை மக்கள் புரிந்துகொண்டு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காணொளிகள் தற்போது நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் பாஜக முன்னாள் எம்.பி.யின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: