" உலகின் கவனத்தை ஈர்த்த இரண்டு இப்தார் விருந்துகள் "
புனித ரமளான் மாதத்தில் ஏக இறைவனின் கட்டளையை ஏற்று நோன்பு வைக்கும் இஸ்லாமியர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பேரீச்சம்பழம் அல்லது தண்ணீர் அருந்தி நோன்பை முறைப்படி நிறைவு செய்கின்றனர். இந்த நோன்பு திறத்தலே இப்தார் என்று அழகாக அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பேச்சு வழக்கில் "நோன்பு துறப்பு" என்றும், சரியான பயன்பாடாக "நோன்பு திறப்பு" என்றும் இது அழைக்கப்படுகிறது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொள்ளும் வகையில் பிரமாண்ட இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் சர்வ சமய மக்களை அழைத்து சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் மூலம் நடத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டும் இப்தார் நிகழ்ச்சிகள் ஆன்மீன ஈடுபாடுடன் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும், இந்தாண்டு சவூதி அரேபியாவின் ஆன்மீக நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் நடைபெற்ற இரண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாதுகாப்புப் படையினருடன் இப்தார் விருந்து :
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் காண விரும்பும் இரண்டு நகரங்களில் ஒன்று மக்கா மாநகரமாகும். புனித காபா என்ற இறையில்லம் அமைந்துள்ள இந்த நகரம் எப்போதும் பாதுகாப்புடன் இருந்து வருகிறது. ஆன்மீன அமைதியை தேடிவரும் இஸ்லாமியர்களுக்கு மன நிம்மதியை தந்து வாழ்க்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இத்தகைய புனித நகருக்கு வரும், வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் பாதுகாப்புப் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த பணியாளர்களை சவூதி அரசு எப்போதும் கண்ணியத்துடன் நடத்தி வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித ரமளான் மாதம் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் நோன்புடன் தங்களது பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். இவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் செவ்வாய்க்கிழமை (24.02.2026) அன்று மக்காவின் பிரமாண்ட மஸ்ஜித்தான மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் இப்தார் விருந்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் பங்கேற்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இப்தார் விருந்தில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் வழிபாட்டாளர்களுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ள பல அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.
இப்தார் விருந்தின்போது, துணை அமீர், இரண்டு புனித மஸ்ஜித்துகளின் பாதுகாவலரின் ஆலோசகரும் மக்காவின் இளவரசர் காலித் அல்-ஃபைசலின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்புக்கு வருகை தருபவர்களுக்கு சேவை செய்வதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இளவரசர் சவுத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
=====================
"மக்கா, மதீனாவில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து, மனித சமுதாயத்திற்கு ஒரு அழகிய கருத்தை சொல்லி தந்திருக்கின்றன. ஏக இறைவன் முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் கிடையாது. நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதேயாகும்"
=====================
சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு அர்ப்பணிப்புடன், வழிபாட்டாளர்களுக்கு சேவை செய்வதிலும், ஞானமான தலைமையின் அபிலாஷைகள் மற்றும் உத்தரவுகளை நிறைவேற்றுவதிலும் மிகுந்த முயற்சிகளைச் செய்து, அவர்களின் பணியைத் தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் பணியாளர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், கூட்டத்தை நிர்வகிக்கவும், வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்-பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விளக்கத்தையும் துணை அமீர் கேட்டறிந்தார். இப்தார் விருந்தில், பாதுகாப்புப் பணியாளர்களுடன் மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் கலந்துகொண்ட அற்புதமான நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதீனாவில் உலகளாவிய இப்தார் விருந்து :
மக்காவில் இப்படி அருமையான இப்தார் விருந்து நடைபெற்ற நிலையில், மற்றொரு புனித நகரமான மதீனாவில் உலகளாவிய இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அண்மையில், அதன் மூன்றாவது "உலகம் முழுவதும் இப்தார்" என்ற நிகழ்வை, சவூதி இராச்சியத்தின் நிறுவன தின கொண்டாட்டங்களுடன் இணைந்து கொண்டாடியது. பல்கலைக்கழகத் தலைவர் சலே அலக்லா முன்னிலையில் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இப்தார் மேஜையில் கூடி, பல்கலைக்கழகத்தின் கலாச்சார பன்முகத்தன்மையையும் அதன் சகவாழ்வு மற்றும் பரஸ்பர புரிதலின் மதிப்புகளையும் பிரதிபலித்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்கும் நாடுகளின் பாரம்பரிய ரமளான் உணவுகள் இடம்பெற்றன. இது மாணவர்கள் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஆராயவும், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்கவும் அனுமதித்தது.
கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும், கல்வி அனுபவத்தை வளப்படுத்துவதற்கும், நாகரிக பாலங்களை கட்டியெழுப்புவதற்கான அதன் உலகளாவிய நோக்கத்தை வலுப்படுத்துவதற்கும், சவூதி இராச்சியத்தின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச மாணவர் ஆதரவுக்கான அர்ப்பணிப்புடன் இணைவதற்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
மக்கா மற்றும் மதீனா நகரங்களில் நடைபெற்ற இந்த இரண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சிகளும், உலக மக்களின் கவனத்தை ஈர்த்து, மனித சமுதாயத்திற்கு ஒரு அழகிய கருத்தை சொல்லி தந்திருக்கின்றன. ஏக இறைவன் முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் கிடையாது. நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வில் கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதை இந்த இப்தார் நிகழ்ச்சிகள் அமைந்தன என உறுதிப்பட கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment