Friday, January 18, 2013

மணிச்சுடரின் முத்துக்கள்……!


மணிச்சுடரின் முத்துக்கள்……!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தபோது, காலை 10 மணியாகி விட்டது.

பீட்டர்ஸ் சாலையில் இருந்த மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்றபோது, மணி 10.30.

மணிச்சுடர் நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான தலைவர் சீராஜுல் மில்லத் அவர்கள், நல்ல வேளையாக அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என அங்கிருந்த ஊழியர்கள் சொன்னபோது, மனம் லேசானது.
11 மணி அளவுக்குதான் ஆசிரியர் வருவார் என்று ஊழியர்கள் சொன்னதால், ,  நானும், என்னுடன் வந்த வேலூர் மாலைமுரசு நாளிதழின் ஆசிரியருமான மசூத் அகமதும் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றோம். நல்ல சூடான தேனீர் அருந்தி, சிறிது நேரம் இளைப்பாறச் செய்தோம்..

மீண்டும், மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து, தலைவரின் வருகைக்காக காத்திருந்தோம்
சரியாக 11 மணிக்கு சிராஜுல் மில்லத் அவர்கள், அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் உடனே எழுந்து சலாம், சொன்னபோது, பதிலுக்கும் வலைக்கும் ஸலாம் என கூறிய தலைவர் அவர்கள், எங்களை செய்கையால் அமரச் சொன்னார்தனது அறைக்கு சென்று, கால் மணி நேரத்திற்குள் உள்ளே அழைத்தார்.


தலைவரின் அறைக்குள் நுழைந்தபோது, மீண்டும் சலாம் கூறிக் கொண்டே, சென்றோம்.. தனக்கு எதிரே இருந்து இருக்கையில் எங்களை உட்காரச் சொன்ன தலைவர் அவர்கள், நேராக விஷயத்திற்கு வந்தார்.
சமுதாயத்தின் நலனுக்காகவும், சமுதாயச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நேரம்

அது.  தமிழகம் முழுவதும் துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக நியமிக்க ஆர்வம் கொண்ட சிராஜுல் மில்லத் அவர்கள், அதுகுறித்து பலரிடம் ஆலோசனைகளையும் நடத்தினார். அந்த ஆலோசனைகளின் பேரில், வேலூர் மாவட்ட செய்தியாளராக என்னை நியமிக்க அழைத்தார். அதன்பேரில், நானும், மாலை முரசு மசூத் அகமது சென்றபோதுதான், எங்களிடம், வேலூர் நிலவரம், செய்திகளின் தன்மை, விளம்பரம்., உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக கேட்டார்.

பிறகு, வாழ்த்துக்களை சொன்னபடி என்னை வேலூர் மாவட்ட செய்தியாளராக நியமனம் செய்தார்.

இப்படித்தான், மணிச்சுடருக்கும் எனக்கும் முதன்முதலாக உறவு மலர்ந்தது. போராட்டங்கள், நெருக்கடிகள், என பல சிக்கல்களுக்கு இடையே வேலூர் மாவட்ட செய்திகளை, விளம்பரங்களை அனுப்பி வைத்தேன்அத்தோடு மணிச்சுடரை குறித்த நேரத்தில் வினியோகம் செய்யும் பணியும் செய்து வந்தேன்..

பிறகுடெல்லி ஜாமியா நகரில் இருக்கும் IOS  என்ற இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்த காரணத்தால், மணிச்சுடரின் வேலூர் மாவட்ட செய்தியாளர் பணியை இழக்க நேரிட்டது.

அப்போதுகூட, தலைவருடன் எனக்கு இருந்த தொடர்பு, நெருக்கம் ஆகியவைக்கு எந்த பிணக்கும் வரவில்லை.



1989ஆம் ஆண்டு, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள், டெல்லி வந்ததும், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன அலுவலக ஊழியர் எனக்கு தொலைபேசி வந்து இருப்பதாகவும், வேலூர் எம்.பி. பேசுவதாகவும் கூறியபோது எனக்கு இன்ப அதிர்ச்சி

உடனே, தொலைபேசியில் இணைப்பை பெற்று தலைவருக்கு சலாம் கூறினேன். வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

என்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த தலைவர் அவர்கள், உடனே தன்னை தமிழ்நாடு இல்லத்தில் வந்து பார்க்கும்படி பணித்தார்.
அன்று மாலையே, சிறிய பூச்செண்டோடு, தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று, தலைவர் தங்கிருந்த அறையை கண்டுபிடித்து, உள்ளே சென்றேன். பூச்செண்டை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்ட தலைவர் அவர்கள், என்னை அமரச் சொல்லி டீயை வரவழைத்து சாப்பிடச் சொன்னார்.

டெல்லியில் என்னுடைய பணிகள் குறித்து கேட்டறிந்தார். தன்னுடைய இல்லத்திலேயே இனி தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது.


பல்வேறு காரணங்களால் மணிச்சுடர் நாளிதழ் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது. அப்படிப்பட்ட நேரத்திலும், என்னை மறக்காமல் எனக்கு உதவி செய்தார் தலைவர் சிராஜுல் மில்லத்… டெல்லியில் ஜன்பத்தில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோது,  மணிச்சுடர் நாளிதழ் குறித்து அடிக்கடி பேசுவார்.  எப்படியும் மீண்டும் அதனை கொண்டுவர வேண்டும் என்று ஆவல் கலந்த துடிப்புடன் தெரிவிப்பார். பத்திரிக்கைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம், ஈடுபாடு, சமுதாயச் செய்திகளை எப்படியும் நம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற துடிப்பு இதுதான், மணிச்சுடரை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய நோக்கம் என்பது தலைவரின் பேச்சை கேட்கும்போது என்னால் உணர முடிந்தது.

1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு திடீரென தேர்தல் வந்ததால், டெல்லி வீட்டை காலி செய்தார் தலைவர். இருந்தும் நான் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் செய்தார்… பின்னர், 4 ஆண்டு கால டெல்லி பணிகளை முடித்துக் கொண்டு, வேலூர் திரும்பியபோது, மீண்டும் மணிச்சுடர் நாளிதழில்  எனக்கு வாய்ப்பு கிட்டியது.

ஆம். வாலஸ் கார்டனில் இருந்த மணிச்சுடர் நாளிதழின் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்த சிராஜுல் மில்லத் அவர்கள், உடனே பணியில் சேர கட்டளையிட்டார். மணிச்சுடர் அலுவலத்திலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.

இங்கேதான், முனிரூல் மில்லத் பேராசிரியர் கேம்.எம் காதர் மொகிதீன் அவர்களை நான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  மாநில பொதுச் செயலாளராக இருந்த நேரம் அது…


நானும் அவரும், இரவு நேர கொசுக்கடிகளுக்கு இடையே பல இரவுகள் தூங்காமல், மணிச்சுடருக்கு உழைத்த காலம் அது.. நெஞ்சை விட்டு மறக்க முடியாத காலங்களை எப்படி மறக்க முடியும்…

இந்த வாலஸ் கார்டன் அலுவலகத்தில்தான் தற்போது, விஷுவல் மீடியாக்களை கலக்கிக் கொண்டிருக்கும் பல ஜாம்பவான்களை நான் சந்தித்தேன்.

ஆம்..‘

திரு,டாயல் (சன் டிவி.. பிறகு கலைஞர் டி.வி.)
திரு.வில்லியம்ஸ் (பொதிகை, ஆல் இந்தியா ரேடியோ)
திரு.மேலப்பாளையம் ரசூல்கான் (சன் டி.வி.)
திரு.ஜலால் (சன் டி.வி.. பிறகு, ராஜ் மற்றும் ஜி டி.வி)
திரு.ராமதாஸ் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.ராஜராஜன் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.பெரியசாமி, (சன் டி.வி. பிறகு ஜெயா டி.வி.)
திரு.கப்பார் (ராஜ், சன் மற்றும் மூன் தொலைக்காட்சிகளில் பணி)
திரு.மீரா மொகிதீன் (பல பத்திரிக்கைகளில் பணி)
மற்றும்
திரு.எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் (சன் டி.வி., மக்கள் தொலைக்காட்சி. மற்றும்
ஜி.டி.வி.)

இப்படி பல துடிப்பான பத்திரிக்கை ஆர்வலர்கள் சங்கமித்த இடம்தான் மணிச்சுடர் நாளிதழ் அலுவலகம்..

நெருக்கடிகள்.,, இன்னல்கள்… குறைந்த ஊதியம்… என பல சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு, மேலே குறிப்பிட்ட அனைவரும் சமுதாயத்திற்காக உழைத்தவர்கள்…

சமுதாயச் செய்திகளை, எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்.. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்த அந்த பணிகளின் காரணமாகவே, தற்போது இறைவனின் அருளால், தமிழகத்தின் மிக முக்கிய  விஷுவல் மீடியாக்களை நாங்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறோம்…

மேலே குறிப்பிட்ட நாங்கள் அனைவரும் மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கிய நன்முத்துக்கள்.

சிராஜுல் மில்லத்தின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பத்திரிக்கை  வைரங்கள்….

மணிச்சுடரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முக்கிய சாதனையாளர்கள்…



மணிச்சுடர் இன்று பல சாதனைகளை குவிப்பதற்கும், பத்திரிக்கை துறையில் துடிப்புடன்  வலம் வருவதற்கு, மேலே குறிப்பட்ட இந்த  முத்துக்கள் செய்த சேவைகள், பணிகள்தான் முக்கிய அடிப்படை காரணம்… இந்த நன்முத்துக்களின் சேவைகளை யாரும் குறைந்து மதிப்பிட முடியாது… மறுக்கவும் முடியாது….

இப்படி பல நன்முத்துக்களை மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கி இருக்கிறது… இன்னும் உருவாக்கி கொண்டுதான் இருக்கிறது… தற்போது மணிச்சுடரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பேராசிரியர் கேம்.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மணிச்சுடரை எப்படியும் மிகச் சிறந்த முறையில் கொண்டு வர வேண்டும் என ஆவல் கொண்டுள்ளார். அவரது உயர்ந்த எண்ணம் நிறைவேற வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும். அதன்மூலம், மேலும் பல நன்முத்துக்கள் பத்திரிக்கை துறைக்கு கிடைக்க வேண்டும்….

---------------------------------------------------------------------

மணிச்சுடர் நாளிதழ் பொன்விழா மலரில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரைதான் நீங்கள் மேலே படித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மணிச்சுடரின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை கவுரவித்தனர். உண்மையிலேயே இது மகிழ்ச்சி அளிக்கும் செயல்..

கட்டுரையை படித்து கருத்து தெரிவியுங்கள் 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்








சிகரெட்டா ! மூளை அழுகிவிடும்…..!


சிகரெட்டா !  மூளை அழுகிவிடும்…..!

லண்டன் ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




மனிதன் விலை கொடுத்து வாங்கும் ஆபத்துக்களில் முதன்மையானது புகைப்பிடிக்கும் பழக்கம். மனிதர்களின் வேண்டாத பழக்கவழக்கங்களில் புகைப்பிடிப்பது... அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துவது  ஆகியவை அதிக இடம் பிடிக்கின்றன. புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், ஏனோ, அதில் இருந்து மீளுவதில்லை... புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் வரும் ஆபத்துக்கள் ஏராளம்... புகையிலை பொருட்கள் மூலம், புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள், மனிதனை  தாக்கி, அவனது உயிருக்கு உலை வைத்து விடுகின்றன

இந்த  ஆபத்துக்கள் குறித்து நன்றாக தெரிந்தும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், ஏனோ அதை விட்டொழிப்பதில்லை... புகைப்பிடித்தலுக்கு எதிராக நடக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் முழுமையான  வெற்றி  இன்னும்  கிடைக்கவில்லை...

லண்டன் நிறுவனம் ஆய்வு:

புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதுபோன்று ஓர் ஆய்வைதான்  லண்டனை சேர்ந்த கிங்ஸ் காலேஜ் ஆப் லண்டன் என்ற கல்லூரி ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர்.



டாக்டர் அலெக்ஸ் டிரிகான் (Dr.Alex Dregan) என்பவர் தலைமையில் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டது. இங்கிலாந்து முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,  புகைப்பிடிக்கும் 8 ஆயிரத்து 800 பேர் உட்படுத்தப்பட்டனர். புகைப்பிடிக்கும் இவர்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஆய்வாளர்கள் சோதனை செய்தனர்.

புகைப்பிடிப்பதால் மனிதர்களின் உடல்களில் என்னென்ன பாதிப்புகள் உருவாகின்றன…. உடல்நிலையில் ஏற்படும் மாற்றம்…. மூளையின் செயல்பாடு… ரத்த அழுத்தம்… உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது,  பல திடுக்கிடும் தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சியூட்டும் அந்த ஆய்வு அறிக்கையை  லண்டன் கிங்ஸ் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.. ஆய்வில் புகைப்பிடிக்கும் பழக்கம் தொடர்ந்தால், மூளை மெல்ல மெல்ல அழுகிவிடும் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, உயர் ரத்த அழுத்தம்.., ஒவ்வாமை,  மராடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள்  எச்சரித்துள்ளனர்.


உடல்நலத்தை கருத்தில் கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்களது வாழ்க்கை முறையை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதையும் மீறி, புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மூளை பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம்  ஏற்படும் என்றும்  ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆலோசனைகள்:

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது, உடல் எடையை சரியாக பராமரிப்பது., நாள்தோறும் நல்ல உடற்பயிற்சி செய்வது... போன்ற தொடர் பழக்கங்களின் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுதலை பெற முடியும் என்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்களை யோசிக்க வைத்துள்ள நிலையில், தற்போது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசுக்கு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

புகைப்பிடிக்க உரிமம்:

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதால், இனி, ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற சட்டம் இயற்ற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. நாட்டு மக்களின் நலன், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் சிட்னி பல்கலைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய சட்டத்தின் மூலம், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும்,  உரிமம் பெற கட்டணம் வசூலிப்பதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



புகையிலை பொருட்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு வெளிப்படையான, தைரியமான முடிவை எடுக்க வேண்டும் என்றும்  ஆராய்ச்சியாளர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை போன்று நம் நாட்டிலும் இதுபோன்ற ஒரு சட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…

--------------------------------------------------------

சமரசம் இஸ்லாமிய பத்திரிகையில் கடந்த டிசம்பர் 16-31 இதழில் வெளிவந்த கட்டுரை... உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்