Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு - ஓர் பார்வை !

தமிழனின் பெருமையை உலகத்திற்கு தெரிவிக்கும் படம் ஏழாம் அறிவு !

கஜினியை மிஞ்சியப் படமாக இது இருக்கும் !

இப்படி, ஏழாம் அறிவு படம் குறித்து, அது வெளியாவதற்கு முன்பு பெருமைப்பட கூறினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்திய திரைப்படத்துறையில் நல்ல ஒரு திறமையான இளம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

நல்ல ஒரு கருத்தை உள்வாங்கி, தமிழனின் பெருமையை, வரலாற்றை பதிவுச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏழாம் அறிவு படத்தை எடுத்து முடித்துள்ளார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்க்கும் முன்பு, பல கற்பனைகள், பல எண்ணங்கள் என்னுள் வந்து வந்துச் சென்றன.

இது போன்ற எண்ணங்கள் இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இருந்தன.

ஆனால், படம் பார்த்த பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நல்ல ஒரு கருத்தை, டாகுமெண்டரி படம் போல் எடுத்து விட்டாரே என்றே எண்ணத் தோன்றியது.

ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்து,  படத்தை பார்த்தால்,  ஆரம்பமே சொதப்பி விட்டார் முருகதாஸ்.

சரி. என்னதான் செய்து இருக்கிறார் என மெனக் கெட்டு படம் பார்த்தேன்.

சூரியா சர்க்கஸ் கலைஞராக வருகிறார். ஒருசில வித்தைகள் செய்கிறார்.

திடீரென பாட்டு பாடுகிறார்.  சாலைகளில், சந்தைகளில் கூட்டத்தின் நடுவில் ஆடுகிறார்.

எல்லாம் சரி. படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா, என்றால் சிறிதும் இல்லை.

காட்சிகள் மனத்தில் ஒட்டவே மறுக்கின்றன.

கஜினியை மிஞ்சிய படமாக இருக்கும் என்ற ஏ.ஆர்.முருகதாசின் வார்த்தைகள், ஏழாம் அறிவில் சிறிதும் மெய்பிக்கப்படவில்லை.

கஜினி. கஜினிதான்.

அந்த பாடத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

அப்படி ஒரு விறுவிறுப்பை, காட்சி நகர்த்தலை, எடிட்டிங்கை செய்திருப்பார் முருகதாஸ்.

இது ஏழாம் அறிவில் மிஸ்சிங்.

போதி தர்மர். ஒரு வித்தகர். மருத்துவர். அவர் களறிக்கலையை சீனர்களுக்கு கற்று தந்து அங்கே தெய்வமாக மதிக்கப்படுகிறார்.

இதனை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை. அறிந்துக் கொள்ளவில்லை. தமிழரின் பெருமைகளை மறந்து விட்டோம்.

எல்லாம் சரி அய்யா. அதை எப்படி தமிழக, இந்திய இளைஞர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

ஆரம்ப காட்சிகளே விறுவிறுப்பாக அமைத்து இருக்க வேண்டும் அல்லவா.

இளைஞர்களை சீட்டின் நுணிக்கு கொண்டு வந்து, சுண்டி இழுக்க வேண்டும் அல்லவா.

இதையெல்லாம் செய்ய தவறி விட்டீர்களே முருகதாஸ்.

சரி வில்லன் ஜானி ட்ரை ஙயென் (Johnny Tri Nguyen)வரும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்றால், அவை அதிர்ச்சியைதான் ஏற்படுத்துகின்றன.

ஹிப்னாடிஸம் மூலமாகவும், நோக்குவர்மர் கலை மூலம் அவர் செய்யும் அட்டகாசங்கள், நம்பும்படியாகவா உள்ளது.

சாலைகளில் செல்லும் கார்களையும் மனிதர்களையும் தன்வசம் படுத்தி, சூர்யாவை வில்லன் ஜானி பந்து ஆடுகிறார்.

ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் சிரிப்பைதான் வரவழைக்கின்றன.

குழந்தைத்தனமாகதான் உள்ளன.

அதில் சிறிதும் லாசிக் இல்லை. நம்பும்படியாக இல்லை.

போதி தர்மர் குறித்து ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன செய்திகளை, காட்சிகளை ப்ளாஷ்பேக்கில் சொல்லி இருந்தால், படத்தில் ஒரு சுவை கிடைத்திருக்கும்.

இளைஞர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆரம்பமே, போதி தர்மர் குறித்து சொல்லிவிட்டு, படத்தை பாருங்கள் என்றால் யாருக்கு சார் படத்தின் மீது கவனம் செல்லும்.

உங்களுக்கு தமிழரின் பெருமையை எப்படியும் மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

நம் மண்ணின் பெருமையை சொல்லி ஆக வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருக்கிறது.

அதனால், கதை சொல்லும் பாணியில் சிறிது தவறு ஏற்பட்டு இருக்கிறது.

இசையிலும் இந்த முறை நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

ஓ ரிங்கா ரிங்கா பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.

அதேநேரத்தில் படத்தில் ஒருசில சிறப்பு அம்சங்கள் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

காட்சிகளை மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.
படம் பிடித்துள்ளீர்கள்.

பின்னணி இசையில் ஹாரீஸ் ஜெயராஜ், தனது வழக்கமான பாணியில் கலக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் கஜினியை மிஞ்சும் பாடமாக ஏழாம் அறிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

கடைசியாக முருகதாசுக்கு ஒருசில கேள்விகள்:

காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர் ஏன் அய்யா சீனாவிற்கு சென்றார்.

இங்கேயே இருந்து தமிழர்களுக்கு தன்னுடைய கலைகளை சொல்லி தந்து இருக்கலாம் அல்லவா.

தன்னுடைய மருத்துவச் சிகிச்சை முறைகளை தமிழக மக்களுக்கு சொல்லி தந்து இருந்தால், இங்குள்ள தமிழர்கள் இன்னும் பலன் அடைந்து இருப்பார்கள்.

போதி தர்மரை கொண்டாடி இருப்பார்கள்.

அவரது மருத்துவக் குறிப்புகள் இன்றைய இளம் மருத்துவர்களுக்கு பயன் அளித்து இருக்கும்.

ஆனால், கால்நடையாகவே சீனாவுக்கு சென்று சீன மக்களுக்கு போதி தர்மர் கலைகளை சொல்லித் தருகிறார். மருத்துவச் சேவை செய்கிறார்.

அதனால் அந்த மக்கள் அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படிதான் செய்ய வேண்டும்.

ஆனால், தமிழர்களாகிய நாம், போதி தர்மரை மறந்து விட்டோம், அவரது பெருமையை அறிய தவறி விட்டோம் என நீங்கள் கேள்வி எழுப்பி ஆதங்கப்படுவதில் சிறிது நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்திய மண்ணில் பிறந்து விட்டு, இந்திய காசில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் இளைஞர்களை போன்றுதான், போதி தர்மரும், சீனாவிற்கு சென்று இருக்கிறார்.
அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

சரி. சீனர்களுக்கு தற்காப்பு கலைகளையும், மருத்துவத்தையும் சொல்லித்தந்த அந்த உத்தமரை ஏன் அய்யா சீனர்கள் விஷம் வைத்து கொள்ள வேண்டும்.

அது எவ்வளவு பெரிய அநீதி.

தமிழருக்கு கிடைத்த அநியாயம்.

உங்கள் படத்தை பார்த்தபோது, போதி தர்மர் குறித்து நீங்கள் கூறிய கருத்துகள் குறித்து அறிந்தபோது, மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் உதிர்த்தன.

எது எப்படியோ, தமிழரின் பெருமைகளை அறிய வேண்டும். வரலாற்றை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் நீங்கள் செய்த முயற்சிக்கு தமிழர்களாகிய எங்கள் தரப்பில் உங்களுக்கு பாராட்டுகள் உண்டு.

அடுத்த படத்திலாவது, கதை சொல்லும் பாணியில் சிறிது கவனம் செலுத்துங்கள்.

கஜினி, ரமணா  போன்ற சுவையான படங்களை கருத்துடன் படைக்க முயற்சி செய்யுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

1 comment:

Unknown said...

Sir i cant accept this artical. i can understand one think by your statement that you could not observe the film as the way its flow.
its a good film sir