Sunday, August 24, 2014

சென்னையில் நான்........! (3)

சென்னையில் நான்........! (3)



மதராஸ்...... மெட்ராஸ்...... 

இப்படி பல பெயர்களில் சென்னை அழைககப்பட்ட காலம் அது.

ஏன் இன்றும் பலர் சென்னையை மதராஸ் என்றே அழைத்து வருகின்றனர்...

வடமாநிலங்களில், சென்னைவாசிகளை மதராஸி என அழைப்பது வழக்கமாகவே இருந்து வருகிறது.

நம்ம பையன் மெட்ராஸ்லே வேலை பார்க்கிறான்...

இப்படி பெருமையாக பேசும் தமிழகத்தின் பெற்றோர்களை இன்றும் காணலாம்...

இப்படி, பலருக்கு பெருமையை சேர்க்கும் சென்னை, எனக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் நான் பல ஊடக ஜாம்பவான்களை சந்தித்து இருக்கிறேன்.

ஏன் இன்றும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அவர்களில் ஒருசிலரின் பட்டியல் இதோ....



பொன்.மகேந்திரன் (ராஜ் டி.வி. தலைமை செய்தி ஆசிரியர்)
=======================================================

இவரை பற்றி நிறைய எழுதலாம்...

ஆனால் ஒருசில வரிகளில் மட்டும் சில தகவல்கள்,...

நல்ல பண்பாளர்...

பணி நேரத்தில், சில நேரங்களில் கடுமையாக நடந்து கொண்டாலும் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி, சகோதரத்துடன் பழகும் குணம் கொண்டவர்...

ஈகைத் திருநாள்... தியாகத் திருநாள் உள்ளிட்ட முக்கிய திருநாள்களில், நான் மறந்தாலும், தான் மறக்காமல்,  எனக்கு தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக வாழ்த்துச் செய்தியை அனுப்பி என் மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்து கொள்ளும் நல்ல சகோதரர்.

விஷுவல் மீடியாவில் செய்திகளை எப்படி சுருக்கமாக தர வேண்டும் என்பதை இவரிடம் இருந்து நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம்....

எந்த செய்தி இருந்தாலும், அதை நான்கு வரிகளில் தர வேண்டும் என கூறி, செய்திகளை அழகாக, நேர்த்தியாக நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை. பொன்.மகேந்திரனுக்கு நிறைய உண்டு.



ராஜா (சன் டி.வி.)
================

சன் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு மக்களிடம் இன்றும் ஒரு ஈர்ப்பு இருக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

செய்திகளில் வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சொல்லி,  விஷுவலை கண்முன் கொண்டு வந்து நிறுத்த இவர் படுத்தும்பாட்டால், பலர் சன் டி.வி.யின் வேலையே வேண்டாம் என கூறி நடையை கட்டியது உண்டு.

செய்தி அறையில் இவர் இருக்கும்போது, வீண் பேச்சுக்கே இடம் இருக்காது.

வெறும் அமைதி மயமாகதான் செய்தி அறை இருக்கும்...

பல காரணங்களால் நான் சன். டி.வியின் பணியில் இருந்து விலக முடிவு செய்து என்னுடைய பணி விலகல் கடிதத்தை ராஜாவிடம் அளித்தபோது, அதை வாங்கி தூக்கி எறிந்தவர்.

உங்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என கண்டிப்பாக கூறியவர்.

ராஜாவின் இந்த செயலே, சன் டி.வியில்  நான் உண்மையாக உழைத்ததற்கு அடையாளம்.

விஷுவல் மீடியா குறித்து இவரிடமும் நான் நிறைய பாடங்களை கற்று கொண்டேன்.



டாயல் (தலைமை செய்தி ஆசிரியர், கலைஞர் டி.வி.)
================================================

மணிச்சுடர் நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தபோதே, டாயல் எனக்கு அறிமுகமானவர்.

அன்று முதல் இன்று வரை அவரிடம் தொடர்ந்து பழகி வருகிறேன்.

தமிழக ஊடக வரலாற்றில் டாயலின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சன் டி.வி.யின் 24 மணி நேர செய்திப்பிரிவின் தலைமை செய்தி ஆசியராக இருந்து பல சாதனைகளை புரிந்த இவர், தற்போது, கலைஞர் டி.வி.யின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வரலாறு படைத்து வருகிறார்.





தில்லை (ஜெயா தொலைக்காட்சி + புதிய தலைமுறை தொலைக்காட்சி)
===================================================================

ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த தில்லை, தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் எனக்கு பணிபுரிய வாய்ப்பு அளிகக இவர், பல முறை முயற்சி செய்து இருக்கிறார்.

இவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது, இரண்டே நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்பார்.

நெகடிவ்வாக எதையும் பேசமாட்டார்.

இறுதியாக என்னை எப்படியும் ஜெயா டி.வி.யில் ஊழியனாக சேர்த்துவிட வேண்டும் என இவர் முடிவு செய்து,  அதற்காக முயற்சி செய்த நேரத்தில், இவரே, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனக்கு ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் சேரும் வாய்ப்பு பறிபோனது.



ஜலால் (ஜி தமிழ் தொலைக்காட்சி)
================================

ஜலாலும் எனக்கு மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் அறிமுகமானவர்தான்.

மிகச் சிறந்த பண்பாளர்.

சன் டி.வி. ராஜ் டி.வி. என பல ஊடகங்களில் பணிபுரிந்த இவர், பின்னர், ஜி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு ஏற்று, சாதனைகள் பல புரிந்தவர்.

தற்போது, ஊடக துறையில் இருந்து இவர் ஒதுங்கி இருந்தாலும், இவரை சுற்றி இன்னும் ஊடக துறை சுற்றிக் கொண்டே இருக்கிறது.



பாஸ்கர் சந்திரன் (தலைமை செய்தி ஆசிரியர் மக்கள் தொலைக்காட்சி)
=================================================================

மக்கள் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் ஊழியராக சேர்ந்த பாஸ்கர் சந்திரன், இன்று அதன் தலைமை செய்தி ஆசிரியராக உயர்ந்து இருக்கிறார்.

சன் டி.வி.யில் இருந்து மக்கள் தொலைக்காட்சிக்கு நான் இடம் மாறியபோது, என்னிடம் அன்பு பாராட்டி பழகியவர்.

இன்றும் அவருடன் எனக்கு நல்ல நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் மட்டுமல்ல,



ஜெயசீலன் (தந்தி டி.வி.)
ஜார்ஜ். (சன் டி.வி)
ஸ்ரீதர் (சன் டி.வி.)
ராஜராஜராஜன், (மெகா டி.வி.)
மதிவாணன் (ஜி தொலைக்காட்சி)
மதிவாணன் (ஜெயா தொலைக்காட்சி)
பார்த்திபன் (தந்தி தொலைக்காட்சி)

இப்படி பல ஊடக ஜாம்பவான்களை நான் சந்தித்தது இந்த சென்னையில்தான்.

ஊடக துறை குறித்து நிறைய அனுபவங்களை பெற்றதும் இந்த சென்னையில்தான்...

இன்னும் பல சுவையான அனுபவங்கள் பின்னர் பார்க்கலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: