Sunday, August 2, 2015

இவர் போல யார்....!

இவர் போல யார்....!


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திடீர் மரணம் இந்திய மக்களை பெரும் அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது.

குறிப்பாக இளைஞர் சமுதாயம் மிகப் பெரிய இழப்பை சந்தித்து தவிக்கின்றனர்

முகநூல் டுவிட்டர் தொலைக்காட்சி செய்தித்தாள் ஆகிவற்றில் வந்துள்ள செய்திகளை பார்க்கும்போது கலாமின் மீது இளைய சமுதாயம் கொண்டிருந்த அளப்பரிய அன்பு பாசம் நம்பிக்கை கண்கூடாகக் காண முடிகிறது.

இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவே கலாம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

அந்த இலட்சியத்தை நோக்கியே பயணித்தார்.

இளைஞர் சமுதாயத்தை தயார்படுத்தினார்.

தமது வெளிநாட்டு பயணங்களின் போதுகூட அதன் முலம் இந்திய திருநாட்டிற்கு பலன் கிடைக்குமா எண்ணினார்.

தற்போதைய தலைவர்களைப் போன்று செல்பி போட்டோ எடுத்து டுவிட்டரில் போட்டு சுய விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை.

இருந்தாலும்
மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல
யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்

என்று ஒரு கவிஞர் பாடியது போல தமது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

அப்துல் கலாமை போன்ற எளிமையான தலைவரை இனி இந்திய நாடு காணுமா என்பது சந்தேகம்தான்.

அனைவரும் மரணத்தை சுவைத்துதான் ஆக வேண்டும் என்ற இயற்கையின் நியதிக்கு ஏற்ப கலாம் நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்த துன்ப நேரத்தில் கலாமின் மறு உலக நன்மைக்காக இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: