Sunday, December 6, 2015

மனித நேய பணிக்கு ஒரு சல்வூட்.....!

மகத்தான மனித நேய பணிக்கு ஒரு சல்வூட்.....!


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களின் துயரங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை.

இப்படி, துயரங்களில் சிக்கிய அனைத்து தரப்பு மக்களை தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும். அன்பு கரம் நீட்டி அனைத்துக் கொண்டன.


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
இந்திய தவ்ஹீத் ஜமாத்,
மனித நேய மக்கள் கட்சி
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
முஸ்லிம் தொண்டு இயக்கம்


என

இப்படி பல முஸ்லிம் கட்சிகள், இயக்கங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கின்றன.

(இங்கு பல முஸ்லிம் அமைப்புகளின் பெயர்கள் விட்டு போய் இருக்கலாம்)

சென்னையில் உள்ள பல பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு அங்கு மழை, வெள்ளத்தில் சிக்கிய அனைத்து தரப்பு மக்களும் தங்கிக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


பள்ளிவாசல்களில் தங்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு, மருந்து உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வெள்ள நீரில் சிக்கிய மக்களை முஸ்லிம் இளைஞர்கள் வீரதீர செயல்களின் மூலம் காப்பாற்றி வருகிறார்கள்.

மக்களை மட்டுமல்லாமல், விலங்குகள் மீது அன்பு காட்டி அவற்றையும் மீட்டு வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள்.


தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் செய்து வரும் வெள்ள நிவாரணப் பணிகள் மாற்று மத தோழர்கள் மிகவும் வியப்பு அடையச் செய்துள்ளது.

சாதி, மதம், மொழி, இனம், குலம் என எதையும் பார்க்காமல், இஸ்லாமிய அமைப்புகள் செய்து வரும் வெள்ளப் பணிகளை, இந்து மத தோழர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் உண்மையிலேயே பாராட்டி வருகிறார்கள்.

மனித நேய பணிகளை யார்தான் பாராட்டாமல் இருக்க முடியும்.

பேருந்துகளில் பயணம் செய்தபோது, சக பயணிகள் பலர் பேசிக் கொண்டதைக் கேட்டபோது, மனம் மகிழ்ச்சி அடைந்தது.

பாய்மார்கள் என்னமாய் பம்பரமாய் சுற்றி சுற்றி வெள்ளப் பணிகளை செய்து வருகிறார்கள் மச்சா என ஒரு இளைஞர் சொன்னதைக் கேட்டபோது, மனத்திற்குள் ஆனந்தம் பொங்கியது.


மக்கள் மட்டுமல்ல, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூட இஸ்லாமிய அமைப்புகள் செய்து வரும் பணிகளை பார்த்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

மனித நேயப் பணிகள் உண்மையிலேயே மக்களை மகிழ்ச்சி அடையவே செய்யும்.

மக்களின் மனங்களை திறக்கவே செய்யும்.

இஸ்லாமியர்களை குறித்து சிலர் தவறாக சித்திரத்து வரும் நிலையில், அந்த சித்திரங்கள் எல்லாம், இஸ்லாமிய அமைப்புகள் செய்து வரும் மனித நேயப் பணிகள் மூலம் காணாமல் போய் விட்டன.

இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துக் கொண்டிருந்த மாற்று மத தோழர்கள் பலர், தற்போது உண்மையிலேயே தங்களது கருத்துக்கு வெட்கி தலைகுனிந்து வருகிறார்கள்.

வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இறைவனுக்காக மட்டுமே செய்யும் இத்தகைய மனித நேயப் பணிகள், என்றுமே வீணாக போகாது.

இனியும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் போக்கை ஊடகங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உண்மையான மனித நேயம் இஸ்லாமியர்களிடத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

பரபரப்பிற்காக இஸ்லாமியர்கள் குறித்து பொய்யான செய்திகளை ஒளிபரப்புவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களிடையே பிளவுப்படுத்தும் போக்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழும் வழியை தமிழகம் நாட்டிற்கே தற்போது எடுத்துக் காட்டி இருக்கிறது.

இதனை இனி யாரும் சீர்குலைக்க கூடாது.

அப்படி யாராவது மீண்டும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால் உண்மைலேயே சொல்கிறேன்

செருப்பு பிச்சிடும்.

தமிழக வெள்ளப் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் செய்து வரும் மகத்தான மனித நேய பணிக்கு ஒரு சல்வூட்.....!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: