Wednesday, November 6, 2013

பாலியல் கொடுமைகள்.....!

"அதிகரித்து வரும் பாலியல் 

கொடுமைகள்.....! தீர்வுதான் என்ன ? "



ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்....ஆசிரியர் கைது....

ஓடும் பேருந்தில் பெண்களிடம் குறும்பு....வாலிபருக்கு தர்ம அடி....

காரில் கடத்திச் சென்று இளம் பெண் கற்பழிப்பு....நான்கு பேர் கைது.....

இப்படி, பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் இன்றைய நாளிதழ்களை நாம் தற்போது படிக்க முடியாது..

தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...


டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள்.....கோப முழக்கங்கள்....எழுந்தன.


அந்த சம்பவத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்கள், சமூக அமைப்பு சேர்ந்தவர்கள் என பலர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூட, பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என குரல் எழுப்பினர்...


இப்படி, ஒட்டு மொத்த சமுதாயமும், பெண்களுக்கு ஆதரவாக திரண்டபோதும், பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நின்று விட்டதா என்றால் இல்லவே இல்லை எனலாம்...

செய்தி ஊடகங்களில் இப்போதுகூட நாள்தோறும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த தகவல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன...

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி...?

கடுமையான சட்டங்கள் மட்டும் மக்களின் மனங்களை மாற்றி விடுமா....


நாட்டில் தற்போது மது ஆறாக ஓடுகிறது...

மதுவை அருந்திவிட்டு, பெண்களை கொடுமைப்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்...

இது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு...உண்மைதான்...ஆய்வும் அது உண்மை என ஒப்புக் கொள்கிறது...

திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாசப் படங்கள், கதைகள் இவையெல்லாம் முக்கிய காரணம் என்பது மற்றவர்களின் புகார்...

நம் நாட்டில் சுதந்திரம் அதிகம்...சட்டங்களை யாரும் மதிப்பதில்லை...

பல நாடுகளில் சட்டங்களை மக்கள் மதிக்கிறார்கள்...அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், இந்தியாவை போன்று அதன் எண்ணிக்கை குறைவு என்பது சிலரின் வாதம்...


பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை அரபு நாடுகளில் உள்ளது போன்று கடுமையாக தண்டிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, ஒரு சமூக ஆர்வலர் வலியுறுத்தினார்...

இதனால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா....

பெண்ணை போதை பொருளாக மட்டும் பார்க்கும் சமூகம் எப்படி திருந்தும்...

பெண்ணை, தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக, பார்க்க பலருக்கு இன்னும் மனம் இல்லை....

அதுதான் பிரச்சினை....

மதங்கள், மார்க்கங்கள், பெண்களை கண்ணியப்படுத்துகின்றன....


ஆனால், நீதி நூல்களை படிக்கும் பலர், அவற்றை ஏனோ, தங்களது வாழ்வில் கடைப்பிடிப்பதில்லை...

படித்து, அத்தோடு விட்டுவிடுகின்றனர்....

இதனால், மதங்கள், மார்க்கங்களால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பது தெளிவாகிறது...

நமது செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நினைப்பு நம் ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும்...

எப்படி, ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஆடிட் செய்யப்படுகிறதோ, அதுபோன்று, நம்முடைய வாழ்வும், ஆடிட் செய்யப்படும் என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் செய்த நல்ல செயல்கள், பண்புகள், தீமைகள், ஆகியவற்றிற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்....

அப்போதுதான், நாம் உண்மை மனிதர்களாக வாழ முடியும்...

இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்...


எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்...

பெண்களை மதிக்க, நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்...

தன் தாய், தன் மகள், தன் சகோதரி, தன் மனைவி, தன் தோழி கற்பழிக்கப்பட்டால், எப்படி ஒருவன் துடிதுடித்து போவானோ, அப்படி, வேறு பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் கதறி அழ வேண்டும்.. துடிக்க வேண்டும்...




இப்படிப்பட்ட மனநிலை மனித மனங்களில் ஏற்பட்டால் ஒழிய பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரவே செய்யும்....

இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க....

இனியும் நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொள்வோம்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===================================

No comments: