Friday, July 5, 2024

ஒரு அழகிய கலை....!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகிய கலை....!

உலகில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆனந்தமும், மகிழ்ச்சியும் தவழ வேண்டுமானால், அங்கு குழந்தைகளின் சத்தங்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளின் அழகிய முறுவல், ஆனந்த புன்சிரிப்பு, கோபமான அழகை என ஒவ்வொரு அசைவுகளும், அந்த குழந்தையை பெற்ற தாய் தந்தையை மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். அதனால் தான், 'குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள், மழலைச்சொல் கேளாதவர்' என திருவள்ளுவர் மிக அழகச் சொல்லி சென்றுள்ளார்.  

ஏக இறைவனின் மிகப்பெரிய அருட்கொடையாக குழந்தைகள் இருந்து வருகிறார்கள். திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களிடம் கேட்டால், குழந்தைகளின் அருமை நமக்கு நன்கு தெரியவரும். தற்போது நவீன விஞ்ஞான யுகத்தில், குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய அளவுக்கு அக்கறை செலுத்தப்படுவதில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக தாய், தந்தை ஆகிய இரண்டு பேரும், பணிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. எனவே, அவர்கள் இருவரும் குழந்தை வளர்ப்பில் தனிக் கவனம் செலுத்த மறந்துவிடுகிறார்கள். இதனால், குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிப்பு அடைந்துவிடுகிறது என்பதை அவர்கள் நன்கு அறிந்தும், அறியாமல் இருப்பதைப் போன்று இருந்துவிட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பு சுமை இல்லை:

கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு, ஐந்து ஏன் பத்து குழந்தைகள் கூட இருந்தன. அந்த குழந்தைகள் அனைவரிடமும் ஒரே விதமான அன்பையும், பாசத்தையும் செலுத்தி, பெற்றோர்கள் வளர்த்தார்கள். அனைத்து உறவினர்களும் பாச மழையை பொழிந்தார்கள். இதனால், அனைத்துக் குடும்பங்களிலும், மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி குடிக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஒரு குழந்தை இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். மேலும், குழந்தை வளர்ப்பை மிகப்பெரிய சுமையாக அவர்கள் கருதுகிறார்கள். இப்படி சுமையாக கருதுவதால் தான், குழந்தைகளின் வளர்ப்பில் தனி அக்கறை செலுத்தாமல், மற்றப் பணிகளில் கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள். இத்தகைய போக்கு நல்ல சமுதாயம் உருவாக தடையாக இருக்கிறது என்றே கூறலாம். 

உலகம் முழுவதும் தற்போது குற்றச்செயல்கள் அதிகரிக்க 'குழந்தை வளர்ப்பில் அவர்களின் பெற்றோர்கள், முழு ஈடுபாடுடன் செயல்படுவதில்லை' என்பதே முக்கிய காரணம் என உளவியல் மருத்துவர்கள் கருத்து கூறுகிறார்கள். ஒரு நல்ல குழந்தை, தீய குழந்தையாக மாற, சுற்றுச்சூழல் மட்டுமே, காரணம் என ஒருபோதும் கூற முடியாது. பெற்றோர்களும், குழந்தைகளின் குணம், செய்கை, அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றில் தனி அக்கறை செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இதனால், தங்களைக் கேட்க ஆளே இல்லை என்ற மனப்பான்மையுடன் வளரும் குழந்தை, எதிர்க்காலத்தில், தீயச் செயல்களில் ஈடுபடுகிறது. 

குழந்தை வளர்ப்பு ஒரு கலை:

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகிய கலை என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொண்டால், குழந்தை வளர்ப்பு சுமையாக இருக்காது. ஒருபோதும் பாரமாக இருக்காது. அது, அற்புதமான கலையாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போது, உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கும், ஆனந்தம் உருவாகும். பல தாய்மார்கள் தங்கள் குழந்தை சாப்பிடுவதில்லை அல்லது சாப்பிட்டால் வயிறு நிரம்பாமல் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறது என்று புகார் கூறுகின்றனர்.

தாய்மார்கள் தங்கள் குழந்தை சரியாக சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். இதேபோன்று, பல தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருப்பதாகவும் புரிந்துகொள்வதாகவும் உணர்கிறார்கள், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை.

உணவின் அடிப்படையில் குழந்தையின் வயது மிகவும் முக்கியமானது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்து, காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றால், அவர் தனது நிலையை விவரிக்கும் நிலையில் இல்லை என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு எப்பொழுதும் முழு கிண்ணத்தையும் ஊட்ட வேண்டும் என்று தாய்மார்கள் நினைக்கக்கூடாது. சிறிது கூட சாப்பிட்டால், கவலைப்பட வேண்டாம். சில சமயங்களில் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்திருப்பார்கள். சில சமயங்களில் உடல்நிலை சரியில்லாமல் அல்லது உணவு செரிக்கவில்லை என்ற காரணத்தால் குறைவாக உண்ணுவார்கள்.

வலுக்கட்டாயம் வேண்டாம்:

அதேநேரத்தில், குழந்தை தினமும் எவ்வளவு சாப்பிடுகிறது என்பதையும் தற்போது, அதைவிட குறைவாகவோ சாப்பிடுகிறதா என்பதையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் செயல்களை கண்டு, அமைதியாக இருப்பது நல்லது. சில சமயங்களில் குழந்தை சாப்பிட மனதளவில் தயாராக இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்படும் எந்த உணவும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருந்தால், மூவரின் உளவியல் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு சவாலை கொண்டுவருகிறது. பண்புகளுடன் இருக்கிறது. குழந்தை தாயின் மனதுடன் சிந்திக்காது. தாய்தான்,  பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தையின் உணவில் சத்துக்கள் நிரம்பவில்லை என்றால், குழந்தையின் உணவை மூன்றாவது நாளில் மாற்றுவது முக்கியம்.

தனிக் கவனம் செலுத்துவோம்:

உலகில் ஒவ்வொரு குடும்பங்களிலும் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களே இல்லை என உறுதியாக கூறலாம். இத்தகைய பிரச்சினைகளுக்கு நடுவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள், தங்களுக்கு பாரம் என ஒருபோதும் நினைக்காமல், அவர்களின் நலனில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு, செயல்பட வேண்டும். ஒரு நல்ல குடும்பம், ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமானால், ஆரோக்கியமான சிந்தனைகளுடன் கூடிய குழந்தைகள் மிகமிக அவசியம். இதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் மீது பாசத்தைப் பொழிந்து, அதேநேரத்தில் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்துகொண்டு, குழந்தைகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்பதையும், அதன்மூலம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: