Wednesday, January 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (42)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் -  42


மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து இதை கொஞ்சம் படியுங்கள்.

தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் மது அருந்துகிறார்கள்.

அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.

குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும்.

குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது.

நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற்போது இதற்கு அடிமையாகிவிட்டனர்.

குடியால் பல ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இதனால் காலப்போக்கில், உயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்றுவிடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.


இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்..

மனநல ஆலோசகரை அணுகுதல்......

குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.

திகதியை குறித்துக் கொள்ளுதல்......

குடியை விட சில முக்கிய திகதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.

மது பாட்டில்களை தூக்கி எறிதல்......


குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்.....

டியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.

உணவு மூலம் தவிர்த்தல்......

குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.

வைட்டமின் பி மாத்திரைகள்.....

குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மனநிலையை உணர்தல்.....

உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.


குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்.....

குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.

தண்ணீர் குடித்தல்.....

சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.

மதுவை படிப்படியாக நிறுத்துவது குறித்து இணையதள நூல் ஒன்றில் படித்த பல குறிப்புகள்தான் இவை...

நல்ல யோசனைகள், ஆலோசனைகள்....

மதுப்பிரியர்கள் படித்து பயன் பெற வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: