Saturday, July 29, 2023

பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் ஆபத்து...!

 பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள்  அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும்....!


நாம் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். ஆனால், அதற்கான சரியான முறைகளை நாம் பின்பற்றுகிறோமா என்றால், அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. உணவுப்பழக்க வழக்கங்கள், மக்கள் மத்தியில் சரியாக இருப்பதில்லை. உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பும், மக்கள், தங்கள் உணவு முறைகளில் சரியான முறைகளை எப்போதும் பின்பற்றுவதில்லை. சரியான நேரத்தில், சத்தான உணவு சாப்பிடும் பழக்கம் மக்களிடையே தற்போது இல்லை. 

நமது முன்னோர்கள் நூறு வயதை தாண்டி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள். நம்மிடையே நூறு வயதை எட்டி தற்போது வாழ்ந்து வரும்  பல முதியோர்களை சந்தித்து, அவர்களின் இந்த ஆரோக்கியமான நிலைக்கு என்ன காரணம் என வினா எழுப்பினால், ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு, நல்ல எண்ணங்கள், சரியான தூக்கம் என்றே பதில் வரும். இன்றைய நவீன யுகத்தில், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் முறைகளில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதன் காரணமாக இளமை காலத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து சில இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள். இத்தகைய நிலை, தற்போது அதிகமாக கொண்டே செல்கிறது. 

உணவே மருந்து:

கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவரிடம் சென்றால், அவர், நல்ல தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறி, உணவே மருந்து என்ற  கொள்கையின்படி, அதற்கு ஏற்ப ஆலோசனைகளை தருவார். நல்ல சத்தான உணவுகளை, குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுங்கள், மருந்து மாத்திரைகளால், மிகப்பெரிய அளவுக்கு பயன் கிடைக்காது. ஆனால், சத்தான உணவை சாப்பிடுவதால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பு விரைவில் குணம் அடைந்து விடும். எப்போதும் ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வாழுங்கள் என ஆலோசனைகளை தருவார். இதை கேட்கும், நோயாளிக்கு அப்போதே, உடல் நன்றாக மாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 

உலகில் தற்போது மருத்துவத்துறை மிகப்பெரிய வியாபாரத்துறையாக மாறிவிட்டது. சின்ன பிரச்சினைக்குக் கூட மருத்துவரிடம் சொன்றால், உடனடியாக ஓர் டெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விடுகிறார்கள். ஒரு சின்ன டெஸ்ட்க்கு கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், நோயாளி மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதன்மூலம், அவரது சின்ன பிரச்சினை கூட மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, உடல்நிலை மேலும் மோசம் அடைந்து விடுகிறது. 

நம்பிக்கை தரும் வார்த்தைகள் கூறுவது தற்போது மருத்துவர்கள் மத்தியில் மிகவும் குறைந்துவிட்டது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, மருத்துவப் படிப்பு படித்துவரும் இளம் மருத்துவர்கள், அதை திருப்பி எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே மருத்துவப் பணியை செய்கிறார்கள். எனினும், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒருசில நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. உணவு முறைகள் குறித்தும், அதை எப்படி சரியான அளவுக்கு பயன்படுத்துவது குறித்தும் தற்போதைய மருத்துவ உலகம் அறிந்து இருந்தாலும், அதை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளுக்கு எடுத்துக் கூறுவது இல்லை. நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறுவதில்லை. நோயாளிகள் மேலும் அதிர்ச்சி அடையும் வகையில் எதிர்மறை வார்த்தைகளை தற்போதைய மருத்துவர்களில் பெரும்பாலானோர் கூறிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பதை ஏனோ அவர்கள் அறிந்து கொள்வதில்லை. 

பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் ஆபத்து:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மத்தியில் பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. இப்படி அடிக்கடி சாப்பிடுவதல் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள் குறித்து அவர்கள் அறிந்துகொள்வதில்லை. பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் சாப்பிடுவதல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்துமா ஒரு அழற்சி நோய். யாரேனும் சில தூண்டுதல்களுக்கு (சுவாச வைரஸ்கள், தூசி அல்லது உடற்பயிற்சி போன்றவை) வெளிப்படும்போது, நுரையீரலுக்குச் செல்லும் காற்றுப்பாதைகள் வீக்கமடைந்து குறுகியதாக மாறும். இது பொதுவாக ஆஸ்துமா தாக்குதல் (அல்லது தீவிரமடைதல்) எனப்படும் போது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. ஆஸ்திரேலியர்களில் பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் நான்காவது பொதுவான நாள்பட்ட நோயாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. 

ஒருவரின் உணவுமுறை அவர்களின் ஆஸ்துமா அறிகுறிகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து  மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சி தரும் தகவல்களை தருகின்றன.  அதில், பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் உணவு நேரங்களில் சேர்த்துகொள்வது ஆபத்தை தரும் என தெரியவந்துள்ளது.  ஒருவரின் நுரையீரல் எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறது, ஒருவருக்கு எவ்வளவு அடிக்கடி ஆஸ்துமா தாக்குதல்கள் உள்ளன  என்பதற்கு உணவு முறைகள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. 

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

ஆஸ்துமா உள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்ணும்படி அறிவுறுத்தப்பட்ட பெரியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது என்றும், குறைந்த அளவுக்கு சாப்பிட்டவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு மோசமாக இருந்தது என்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

எனினும், எண்ணெய் மீன், ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை. இது இதய நோய் அபாயத்தைக் குறைப்பது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பிஸ்கட், சாசேஜ்கள், பேஸ்ட்ரிகள் மற்றும் சாக்லேட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், துரித உணவுகளிலும் நிறைவுற்ற கொழுப்புகள் காணப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் சிவப்பு இறைச்சி, ஒருவரின் ஆஸ்துமா அறிகுறிகளை  மேலும் மோசமாக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் எப்போதாவது ஒரு பர்கர் அல்லது சில சூடான சிப்ஸ் சாப்பிடுவது சரி. ஆனால் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆஸ்துமாவை மேலும் பாதிக்கும் என்பதை அறிவது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய  முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

ஆஸ்துமா உள்ளவர்கள் பால் சாப்பிடுவதால் ஆஸ்துமா மோசமடைகிறது என்று கூறினாலும், இது உண்மையல்ல என்று சான்றுகள் காட்டுகின்றன. உண்மையில், ஆஸ்துமா உள்ள பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பால் குடிப்பது சிறந்த நுரையீரல் செயல்பாட்டுக்கு உதவும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அடிக்கடி கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சரியல்ல என்றும் இதன்மூலம் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

எனவே, நவீன நாகரீக உலகத்தில் வாழும் இளைஞர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இதன்மூலம், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: